அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/017

விக்கிமூலம் இலிருந்து

‘மங்கையராகப் பிறக்க மாதவம்
செய்திட’ வேண்டுமம்மா!

பெண்ணின் பெருந்தக்க யாவுள?' என்று வள்ளுவர் பெருமான் கேள்வி எழுப்பினார் பெண்ணின் பெருமை அவ்வளவு சிறப்புமிக்கது.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அய்யன் திருவள்ளுவனாரின் கேள்வியோடு கொஞ்சம் ஆன்மிக தத்துவத்தைக் கலந்து, "மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்றார்.

கஸ்தூரி பாயின் உடல் தனது நாட்டுக்காகவும், வீட்டுக்காகவும் அரும் பணிகளாற்றி ஓடாய் தேய்ந்து நோய்களால் பலவீனமானது.

ஆனால் அவர், ஒரு நாளும் இந்த நோய் நொடித் தண்டனைகளுக்காக அஞ்சி வாழ்ந்தது இல்லை. தனது கணவர் வாழ்வே தனது உயிர் வாழ்வு என்று வாழ்ந்து காட்டியவர் கஸ்தூரி பாய்.

அவர் சுபாவம் மென்மையானது, பணியாற்றும் பாங்கு மெதுவானது; நடப்பதோ அன்னத்தின் வேகம்; சுறுசுறுப்பு சிற்றெறும்பு ஓட்டம்! இத்தகைய பண்பாடுகள் பூண்ட கஸ்தூரிபாய், ஆன்மீக வழிபாடுகளில் மயில் போன்றவர்!

சபர்மதி ஆசிரமமானாலும் சரி, சேவாகிராம ஆசிரமமானாலும் சரி, அவர் அதிகாலை நான்கு மணிக்கே எழுவார், காலைக் கடனோடு நீராடலும் புரிந்து விட்டு ஆசிரமப் பிரார்த்தனைக் கூட்ட வழிபாடுகளிலே கலந்து கொண்டு, மீண்டுமோர் கோழி உறக்கம் செய்து சிலிர்த் தெழுவார்

ஆசிரம வாசிகளுடன் கலந்து பணிகளைப் பகிர்ந்து செய்வார்; சமையல் வேலைகளை மேற் பார்வையிடுவார்; அடிகளுக்குரிய சிற்றுண்டி தயாரானதும், உடனே தனது அறைக்கு அதைக் கொண்டு போய் பாதுகாப்புடன் வைத்து, அடிகள் உண்ணும் நேரம் வந்ததும் அவருக்குப் பரிமாறி விட்டு அவர் அருகிலேயே அமர்ந்து இவரும் உண்பார்.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ ராமாயணம், கீதை போன்ற நூல்களைப் படிப்பார். மறுபடியும் மகாத்மாவின் மதிய உணவுக்கு வேண்டியவற்றைக் கண்காணித்து, அடிகளுக்கு அமுது படைத்து, தானும் உண்பார்.

கணவர் மீது ஓர் ஈ கூட அமரக் கூடாது. ஒருவுேளை ஈ அமர்வதை அவர் பார்த்து விட்டால் போதும், உடனே கைக் குட்டையாலோ, விசிறியாலோ அதை ஒட்டுவார். காந்தியடிகள் காலடியில் அமர்ந்து கால்களை வருடுவார். அதற்குப் பிறகுதான் தனக்கு கிரமப்பரிகாரம் செய்து கொள்வார்.

காலையில் எழுந்தவுடன் ராட்டையில் நூல் நூற்பார்; எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அதை மட்டும் நிறுத்த மாட்டார் கஸ்தூரிபாய், ஏனென்றால் தான் நூல் நூற்பு வேலையை தவறாமல் ஒழுங்காகச் செய்தால், கணவரின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்; நூல் நூற்றலின் நுனியில்தான் இந்திய நாட்டின் விடுதலை இருப்பதாகக் அடிகள் அடிக்கடி மக்களுக்கு அறிவிப்பதால், அதனைக் கஸ்தூரிபாய் தவறாமல் செய்து வந்தார்.

மாலை நேரமா? மீண்டும் மகாத்மாவுக்கு உணவுத் தயாரிப்பு மேற்பார்வை; ஆசிரம வாசிகளுக்குத் தயாராகும் உணவு மேற்பார்வை; வருவோர் போவோர், தங்குவோர் விருந்தினர் உபசரிப்புக்களின் கண்காணிப்பு ஆகிய வேலைகளைத் திட்டமிட்டு, அங்கங்கே தேனீ போலப் பறந்து, சரியாக நடக்கின்றதா வேலைகள் என்பதை நோக்குவார்.

அவர் மாலை உணவு உண்பதை நிறுத்தி விட்டார்; வெறும் காப்பிமட்டும் அருந்துவார்; அதையும் சில மாதங்கள் கழித்து நிறுத்தி விட்டார்.

அடிகள் மாலை வேளைகளில் உலாவச் சென்றதும், இவர் ஆசிரம நோயாளிகளைப் பார்த்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவார்.

உலாவி விட்டு அடிகள் வந்ததும், ஆசிர்ம வழிபாடுகள் நடக்கும்; அந்தப் பிரார்த்தனை வழிபாடுகளில் கஸ்தூரி பாய் முழுப் பங்கேற்றுக் கலந்து கொள்வார் இராமாயணம், கீதையின் கருத்துகளை அந்த வழிபாடுகளிலே ஆசிரம மக்களுக்கு எடுத்துக் காட்டி நெறிப்படுத்துவார். மாலை நேர பிரார்த் தனைகளில் பெரும்பாலும் கஸ்தூரி பாயின் ஆன்மீக தர்பார்தான், அமர்க்களமாக, கோலாகலமாக தினசரி நடைபெறும்.

ஆசிரமப் பெண்கள், சேவா கிராமத்தில் வசிக்கும் பெண்கள் எல்லாரும் கஸ்தூரி பாய் அருகே உட்கார்ந்து பஜனை பாடுவார்கள்.

ஆன்மீக வழிபாடுகள் முடிந்ததும், இரவு உணவு வகைகள் எல்லாருக்கும். பொதுவாக நடைபெறும். இறுதியாக காந்தியடிகளது படுக்கைக்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து விட்ட பின்பு, தனது அறையிலே வந்து உறக்கம் கொள்வார். பேரப்பிள்ளைகள் மீது அடிகளுக்கும் அன்னைக்கும் அளவிலா அன்பும் பற்றும் உண்டு.

1939-ம் ஆண்டு கஸ்தூரி பாய் ராஜ்கோட் சமஸ்தானப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். தனது பேரன் கனுவை அந்த சமஸ்தான அதிகாரிகள் கைது செய்து விட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்ட அடுத்த விநாடியே, கஸ்தூரிபாய் தனது உடல் நலிவு, மெலிவு, நோய்களது கொடுமைகள், இருதயக் கோளாறுகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு, பேரன் சிறுவனாயிற்றே என்ற பாசம் மேலிட்டதால் உடனே போராட்டத்தில் கலந்து கொண்டார். இச்சம்பவத்தை காந்தியடிகளும் தனது ராஜ் கோட் போராட்ட அறிக்கையில் குறிப்பிட்டு விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னை கஸ்துரிபாய் 'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற கவிமணியின் கருத்துக்கும்.

'பெண்ணின் பெருந்தக்கயாவுள' என்ற திருவள்ளுவர் பெருமானின் பெருமைக்குரிய கருத்துக்கும் இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர். என்றால் அது மிகையல்ல.