அன்பு வெள்ளம்/இயேசுவிடம் விளங்கிய

விக்கிமூலம் இலிருந்து

இயேசுவிடம் விளங்கிய அன்பு

ம்மில் ஒங்கும் அன்பின் அளவினைப் பொறுத்துத்தான்் நம் சமூகத்தில் நமக்குள்ள இடமும் மதிப்பும். இந்த நிலையில் நாம் நமது அன்பினைப் பற்றிய மதிப்பீடு செய்யும் எண்ணம் நமக்கு இல்லாமலே இருந்திருக்கிறோம்.

இன்றைய நிலையில் சமுதாயத்தில் மதிக்கப்படுகின்ற ஒருவர், அவருடைய செல்வம் அல்லது அரசியல் செல்வாக்கின் நிலையைப் பொறுத்துத்தான்் மதிக்கப்படுகிறது. அதுவும் ஒருவருடைய செல்வம் - அரசியல் செல்வாக்கினைப் பொறுத்தே, அவரை மதிக்கப்படும் அளவும் இருக்கும் என்கிற சிக்கலும் இல்லாமல் இல்லை. கடைசியாக ஆய்ந்து பார்க்கும்போது, செல்வம் உள்ளவர்களோ அரசியல் செல்வாக்கு உள்ளவர்களோ பெறும் மதிப்பு, வெறும் மதிப்பு, வீண் மதிப்பு, பயன் விளையா மதிப்பு. ஆனால் மாந்தருள் எவர் மற்றவரை அன்புடன் நேசிக்கின்றாரோ அந்த மாந்தர்தாம் சமுதாயத்திற்கு உதவிபுரிந்து வருபவராக மதித்துப் போற்றப் படுகின்றனர்.

எல்லாம் வல்ல கடவுளின் உள்ளொலி கேட்டு, அதன்படி மன்னுயிர்க்கு அன்பு செய்து வாழும் பொருட்டுத்தான்் அன்பின் வழி மாந்தர் படைக்கப் பெற்றனர்.

அன்புக்குப் புறம்பே உள்ளவர் எத்தகையவராயினும், அவர்கள் வாழ்வில் எத்தகைய வெற்றியும் பெறாதவர்கள் என்றே உறுதியாகச் சொல்லலாம்

தன்னலம் என்பது மாந்தனை அழிக்கும் பழிப்புக்கேடு. மாந்தரின் தன்னலத்தைத் துடைத்தெறிகிறது அன்பு.

மாந்தர் வாழும் இல்லத்தையும், இல்லறம் ஒங்கும் அவ் இல்லத்தை விளங்க வைக்கும் திருச்சபையினையும் அழிவு ஏற்படாவண்ணம் பேணிக் காக்கிறது அன்பு.

அன்புடையவர், துருப்பிடிக்காத எஃகினைப் போன்றவர். எஃகின் பெரும்பகுதி துருபிடித்தே தேய்ந்தழிந்து போகிறது என்பது நமக்குத் தெரியும். அதே போன்று இந்திய நாட்டிலும் வேறுநாடுகளிலும் பெரும்பான்மை மக்களின் வாழ்வறம் - இல்லற வாழ்வோங்கும் இல்லங்கள் எல்லாம் தன்னலத்தாலேயே அழிந்து போகின்றன. இருவர்க்கிடையே நடைபெற வேண்டிய திருமணம் கூட நடைபெறாமல், சீர்குலைந்து போவதற்கும் தன்னலமே காரணம். இல்லற வாழ்க்கையில் ஒற்றுமையின்றிப் பிளவு ஏற்பட்டுத் தனித் தனியே பிரிந்து சென்று வருவதும் கண்கூடு. என்ன காரண்ம்? கணவனின் தன்னலம். அதனால் மனைவியும் அத் தன்னலத்தையே கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே சூழ் நிலையில்தான் அந்தக் குடும்பத்தில் பிறக்கின்ற குழந்தைகளும் வளர்கின்றன. வளர்ந்த பின் அவர்கள் வாழ்க்கையும் வாழ்வகை வாய்ப்புக் கூறுகள் அற்றும் இடை யூறுகள் நிறைந்ததுமாகவே அமைகிறது.

ஒயாத சண்டையும் உள்ளக் கசப்பும் உடைய வீடுகளில் பிறந்து தவழ்ந்து வளர்ந்துவரும் குழந்தைகளைவிட 'ஏலாதவர் பேணகம்' எனப்படும் சின்னஞ் சிறார் காப்பிடங்களில் வளர்ந்து வரும் குழந்தைகளே நல்லமுறையில் நல்ல சூழ்நிலையில் வளர்ந்து வருகின்றனர் என்பது நாம் அறிந்த உண்மையாகும்.

எழுபத்தைந்து விழுக்காட்டிற்கு மேலாகச் சிறுவர்களும் சிறுமிகளும் இளம் குற்றவாளிகளாக எண்ணப்படுபவர்கள் எல்லாம், சிதைந்துபோன - சீர்குலைந்து போன குடும்பங்களிலே இருந்து வெளியேறியவர்கள்தாம் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளைத் திருத்தி அறநெறிப்படுத்தும் காப்பகங்களில் உள்ள இளைய தலைமுறை எனப்படும் இளம் வயது ஆண்கள் - பெண்களைப் பெற்றோர் அவர்களை ஈன்றெடுத்த போதும், அவர்கள் பின்னர் வளர்ந்துவரும் போதும், கையோடு கை சேர்த்தும் கோர்த்தும் புதிய அன்புடன் நடந்திருப்பார்களா என்று எண்ண இடமே இல்லை.

'அன்பு' என்பது நம்மை ஒன்று சேர்த்து வைக்கவல்ல தெய்விகப் பிணைப்பாற்றல் ஆகும்.