அன்பு வெள்ளம்/என் அளவுக்கு

விக்கிமூலம் இலிருந்து

"என் அளவுக்கு ஒப்பாக, நான் அன்புவைத்தது போல்"

புதிய உடன்படிக்கையின் புதிய சட்டத்தில் உள்ள இரண்டு சிறிய சொற்கள் நமக்கு அறை கூவல் விடுக்கின்றன. அவற்றின் மென்மைக் கைகளை நீண்டு நம்மைப் பற்றிக் கொண்டனவோ எனும்படி நம் நெஞ்சங்களைப் பற்றின. அவ் இரண்டு சொற்கள்.

நயத்தக்க நாகரிகம் வாய்ந்த மென்மையான உயர்ந்து தாவிப் படரும் கொடிமுந்திரிக் கொடியின் தொட்டால் துவண்டு விழும் தன்மையும் மென்மையும் வாய்ந்த தளிர்க்கை கரடுமுரடான பாறையினைப் பற்றியது; பற்றிய தளிர்க் கொடி அப் பாறையிலேயே ஒட்டிக் கொண்டது. நாம் கண்ட இப்படியொரு காட்சியைப் போலவே, அவ் இரு சொற்களும் உயர்ந்து தாவிப் படரும் அந்தக் கொடிமுந்திரிக் கொடியின் இரு தளிர்க் கரங்கள் போன்றே தோன்றுகின்றன.

நீங்கள் கேட்கலாம் 'அவ் இரு சொற்கள் யாவை’ என்று?

"நான் உங்களை எப்படி விரும்பினேனோ அப்படியே நீங்களும் உங்களில் ஒருவர் மற்றொருவரை விரும்புங்கள்" முதலில் என் உணர்வினில் ஒன்றிவிட்ட அவ் இரு சொற்களையும் உதறிவிட எண்ணினேன்; இயலவில்லை. நெஞ்சத்தைப் பற்றிய நேயம் விலகுமா? அதுபோன்றுதான் அவ் இரு சொற்களும் என்னைப் பற்றி ஆட்கொண்டன.

என் உள்ளுயிரில் அவ் இரு சொற்களும் ஒலிப்பதைக் கேட்கிறேன்: அஃதும் எப்படி? நீண்ட நெடுநாள்களுக்கு முன்பு என் நினைவிலிருந்து சென்றுவிட்ட இறையின் புகழ்பாடும் பாசுரம், மீண்டும் வந்து என் நெஞ்சக் கதவினைத் தட்டி உள்ளே வந்து இசைத்தலைக் கேட்பது போன்று.

"நான் விரும்பினாற்போல" என்று தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது; கேட்டுக் கொண்டேயிருந்தேன். சற்றே விழிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த அச் சொற்கள் இரண்டினுக்கும் விள்க்கம் தேவை என்பதுபோல "நான் விரும்பினாற்போல என்றால் என்ன?" என்று கேட்டேன்.

"நான் உன்னை விரும்பினாற்போல" இதை கேட்டதும், "ஆண்டவரே! அதுதான் முடியாது” என்றேன். தங்களை விரும்ப என்னால் ஆகாது என்றேன். "தாங்கள் என்னை விரும்பியது போல, நான் தங்களை விரும்பினேயானால், என்னுடையவை என்று நான் கொண்ட அத்துணையும் கைவிட வேண்டி வருமே” என்றேன்.

"எதனை நீ கைவிடவேண்டுமென்று சொல்லினை?" என்று மென் நயமுடன் கேட்கிறார்.

ஆண்டவர் என்னை விரும்புவது போல நான் அவரை விரும்பிட முனைந்தால் நான் எதை எதைக் கைவிட வேண்டுமென்று சொன்னேனோ அவற்றின் பட்டியலைப் போட்டேன்.

பட்டியல் போட்டபின், "இதோ! இப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள என்னுடைய பல்வளம் செறிந்த செல்வத்திற்கு மாறாக - ஈடாக நான் வேறு எவற்றைப் பெற இயலும்?' என்று வினவினேன்.

அதுவரை காணாத செல்வ வளத்தினை எனக்கு ஆண்டவர் சுட்டிக் காட்டினார். அப்படிப்பட்ட செல்வ வளம் எது? இயேசு என்னை விரும்பியதுபோல நான் அவரை விரும்புவதால் எனக்குக் கிடைக்கும் அந்தச் செல்வ வளம், அவரது தோழமை.

அவரிடம் மிகுந்துள்ள தெய்வீக வலிமை, அவரிடமிருந்து பொங்கிப் பெருகும் இரக்கம், மென்னயம், அவரிடம் ஒன்றி யுள்ள எதையும் தாங்கும் பொறையுடைமை என்பவைதாம். ஆகவே புலன்களின் வயப்படும் வேடிக்கைப் பொருளான உலகியல் பொருள் அனைத்தினையும் கைவிட்டுத், தூய ஆவியின் அருளாகிய நிலைத்த பொருளைக் கைக்கொள்ள முனைந்து விட்டேன். -