அம்புலிப் பயணம்/அப்போலோ - 13

விக்கிமூலம் இலிருந்து
15. அப்போலோ-13

ப்போலோ-13 பயணம் திட்டமிட்டபடி பத்து நாள் நடைபெற்ற பயணமாகும்.[1] இப் பயணத்தின் நோக்கம் இரண்டு விண்வெளி வீரர்கள் அம்புலியில் இறங்கி மேடு பள்ளங்கள் நிறைந்த சந்திரனின் பாழ்வெளியில் 331 மணி நேரம் தங்க வேண்டும். சந்திரனின் தோற்றத்திலிருந்து ஐந்து இலட்சம் கோடி ஆண்டுகட்கு முன் இருந்துவரும் பல்வேறு கற்களைத் தேடி எடுத்தல் வேண்டும் ; அணுவாற்றலால் இயங்கக்கூடிய அறிவியல் நிலையம் ஒன்றை நிறுவுதல் வேண்டும்; மூன்று மீட்டர் ஆழம் நிலவுத் தரையைத் துளைத்து அந்த ஆழத்திலிருந்து மாதிரி மண்களை எடுத்துவருதல் வேண்டும். இவற்றைத் தவிர அம்புலியின் சுற்று வழியில் பல்வேறு புதிய சோதனைகளை நிறைவேற்றும் திட்டமும் இருந்தது.

இப் பயணத்திலும் பங்கு கொண்ட விண்வெளி வீரர்கள் மூவர். இவர்களுள் 42 வயதுள்ள ஜேப்ஸ் ஏ. லவல் குழுத் தலைவரசக இருந்து கொண்டு அம்புலி ஊர்தியை இயக்குபவர். 34 வயதுள்ள ஃபிரட் டபிள்யூ. ஹெய்ஸ் இந்த விண்வெளிப் பயணத்திற்கே புதியவர். மூன்றாவது வீரராக இருக்க வேண்டியவர் தாமஸ் மாட்டிங்க்லி என்பார்; இவருக்குப் பயணம் தொடங்குவதற்கு முன்பு ஜெர்மன் தட்டம்மை ஏற்பட்டதால் இப் பயணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இவருக்குப் பதிலாக 40 வயதுள்ள ஜான் சுவிகொட் என்பார் இப் பயணத்தின் வீரராகச் சேர்க்கப்பெற்றார். இவரும் விண்வெளிப் பயணத்திற்குப் புதியவரே.

இவர்களுள் முதலாவதாகக் குறிப்பிட்ட லவர் என்பாருக்கு எட்டு ஆண்டுகளில் இது நாலாவது விண் வெளிப் பயணமாகும்; அம்புலிக்குச் செல்வது இவருக்கு இசண்டாவது பயணமாகும். இவரைப்போல் எவரும் அதிகமான தடவைகள் விண்வெளிக்குச் சென்றதும் இல்லை ; அங்கு அதிககாலம் தங்கியதும் இல்லை. அப்போலோ 8 இல் இவர் கட்டளைப் பகுதியினை இயக்கியவர், ஜெமினி-7 இல் இவர் விண்வெளியில் அதிககாலம் தங்கியவர். இவரும் ஃபிராங்க் போர்மனும் பதினான்கு நாட்கள் தொடர்ந்து பூமியை வட்டமிட்டவர்கள். ஜெமினி வரிசையில் இறுதிப் பயணமாகிய ஜெமினி-12 இல் தலைவராகப் பணியாற்றியவரும் இவரே.

மூன்று நாள் பயணத்திற்குப் பிறகு அப்போலோ-13 விண்கலம் பூமியிலிருந்து 2,88,800 கி.மீ. தொலைவில் பறந்து சென்று கொண்டிருந்தபொழுது (அஃதாவது பூமியின் ஈர்ப்பு எல்லையையும் கடந்து அம்புலியின் ஈர்ப்பு எல்லையில் சென்று கொண்டிருந்த பொழுது) விண்கலத்தின் முக்கியப் பகுதியில் உயிரிய (Oxygen) ஒழுக்கு ஏற்பட்டதைக் கண்டனர் விண்வெளி வீரர்கள். இதனால் மின்சாரக் கெடுதல் ஏற்பட்டது.

கோளாறுக்குக் காரணம் இதுதான் : இராக்கெட்டில் உருளைவடிவம் போன்ற கட்டளைப்பகுதியில் மூன்று மின்சார அமைப்புகள் பொருத்தப்பெற்றிருந்தன. இவையே விண்கலத்திற்குத் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்வன, உயிரியத்திற்கும் நீரியத்திற்கும் (Hydrogen) இடையே நேரிடும் வேதியியல் வினைகளால் இவ் வுற்பத்தி நடைபெறுகின்றது. அதே சமயத்தில் விண்வெளி வீரர்களுக்குச் சேமிப்பாகக் குடிநீரும் உற்பத்தி ஆகின்றது. இச் செயலில் ஏராளமான வெப்பமும் வெளிப்படுகின்றது. வெப்பத்தின் ஒரு பகுதி மின்சார அமைப்புகளினுள்ளே அனுப்பப் பெறுகின்றது; எஞ்சிய அதிகமான வெப்பம் அகண்ட விண் வெளியில் கரைந்து கலக்கின்றது. இங்ஙனம் பணியாற்றும் மின்கல அமைப்புகளில் இரண்டு செயற்படாமல் நின்று போயின.

இச் செய்தி பூமியிலிருந்த 'கண்ணினைக் காக்கின்ற இமைகள்' போன்ற விண்வெளி ஆய்வு நிபுணர்கட்கு அனுப்பப் பெற்றது. அந்திபுணர்கள் நிலையினை ஆய்ந்து அம்புலியில் இறங்கும் திட்டத்தைக் கைவிட்டு மூன்று விண்வெளி வீரர்களையும் பாதுகாப்பாகப் பூமிக்குக் கொண்டுவர முடிவு செய்தனர். அம் முடிவின்படி மூன்று விண்வெளி வீரர்களும் அம்புலியைச் சுற்றிக் கொண்டு பூமிக்குத் திரும்புதல் வேண்டும். நாம் நினைப்பது போல் இஃது அவ்வளவு எளிதான செயலன்று. எத்தனையோ ஆபத்தான கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். பூமியின் ஈர்ப்பு ஆற்றல் உள்ள பகுதிக்குள் இராக்கெட்டு நுழைவது தான் பேராபத்தான கட்டம் ஆகும். அது செங்குத்தாக நுழையுமாயின் அஃது எரிமீன் போல் எரிந்து சாம்பராகிவிடும். அது மிக அதிகமான தட்டைக் கோணத்தில் இறங்கினால் திரும்பவும் எழும்பி அகண்ட வெளிக்குள் துழைந்து விடும்; பின்னர் அது பூமிக்குத். திரும்பியே வராது. தெய்வாதீனமாக அது நுழையவேண்டிய கோணத்தில் நுழைந்தது. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடைபெற்றன. விண்வெளி வீரர்களும் பசிபிக் மாகடலில் பாதுகாப்பாக வந்திறங்கினர்.[2] வழிமேல் விழி வைத்துக் கவலையுடன் காத்திருந்த விண்வெளி நிபுணர்களும் பிறரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர். உலகமக்கள் அனைவரின் மனத்திலிருந்த கவலை அகன்று களிப்பெய்தினர். பூமியிலிருந்த விண்வெளி ஆய்வாளர்களின் துணிவும் திறமையும் இவ் வெற்றி மீட்புக்குக் கைகொடுத்து உதவின ; அங்ஙனமே மூன்று விண்வெளி வீரர்களின் மனத்திட்பமும் செயல் திறனும் இணைந்து அவர்களை வெற்றிப் பாதையில் கொண்டு செலுத்தின.

விண்வெளி வீரர்கள் அம்புலியைச் சுற்றி வந்து கொண்டிருந்தபொழுது தங்கள் கலத்தை விண்வெளிக்குக் கொண்டு வந்த சாட்டர்ன்-5 இன் இராக்கெட்டுப் பகுதியைக் கழற்றி விட்டனர். 13 டன் எடையுள்ள அப்பகுதி அம்புலித் தரையில் விழுந்து. பேரொலியுடன் நொறுங்கியிருத்தல் வேண்டும். இந்த ஒலி 11 டன் எடையுள்ள வெடிபொருள் (Dynamite) வெடித்தலால் ஏற்படும் ஒலிக்குச் சமமானது என்று கணக்கிடப்பெற்றுள்ளது. இதன் விளைவினை அப்போலோ -12 விண் வெளி வீரர்கள் அம்புலியில் நிறுவி வந்த அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவி அளந்து காட்டும். அப்போலோ-12 விண் வெளி வீரர்கள் தாம் அம்புலியினின்று திரும்பிய பொழுது தமக்கு இனி வேண்டாத ஆம்புலி ஊர்தியைக் கழற்றி விட்டதும், அது சந்திரனில் விழுந்து நொறுங்கிய பொழுது ஏற்பட்ட ஒலியும் அதிர்ச்சியும் ஈண்டு நினைவுகூரத்தக்கன. இவற்றால் அம்புலியில் ஏற்பட்ட அதிர்ச்சி அங்குள்ள மணி யொன்றினை. ஒரு மணி நேரம் தொடர்ந்து அடிக்கச் செய்ததாம்.

இந்த அம்புலிப் பயணத்திற்குத் தொடக்கத்திலிருந்தே பல தடங்கல்கள் நேரிட்டன. முதன் முதலாக ஹீலியம் வாயுத் தொட்டியில் கெடுதல் ஏற்பட்டு அது சரிசெய்யப் பெற்றது. அடுத்து, விண்வெளிப் பயணத்திற்குத் தயாராக இருந்த மாட்டிங்கிலி என்ற விண்வெளி வீரர் ஜெர்மன் தட்டம்மைத் தாக்குதலால் உடல் நலக் குறைவுற்றார்; அதனால் அவருக்குப் பதிலாக சுவிகார்ட் அனுப்பப்பெற்றார். மூன்றாவதாக மின்சாரக் கெடுதல் ஏற்பட்டதன் காரணமாக அம்புலியில் இறங்கும் திட்டமே கைவிடப்பெற்றது.

மூடப்பழக்கமுள்ள சில அமெரிக்கப் பார்வையாளர்கள் தீயபலனை விளைவிக்கக்கூடிய 13 என்ற எண்ணே இத்தனைக்கும் காரணம் என்று கருதுகின்றனர். விண்வெளிக் கலத்தின் எண், 13 மின்சாரச் சீர்குலைவு ஏப்ரல் 13 அன்று ஏற்பட்டது. விண்கலம் ஏவப் பெற்றது அமெரிக்க நேரப்படி 13-13 மணி. . விண்வெளிக்கலம் இறங்கும் நேரத்தை 17-13 மணிக்குப் பதிலாக 17-18 மணி என்று அமெரிக்கப் பொறி. நுட்ப வல்லுநர்கள் அறிவித்ததற்குக் காரணம் அவர்களும் எண் 13 பயக்கும் தீங்கினைக் கருதியதேயாகும் என்று கூறுகின்றனர்.


  1. 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 12இல் தொடங்கி ஏப்ரல் 20இல் நிறைவு பெற்றது.
  2. 1969 ஏப்ரல் 17இல்.