அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/கிழவி சொன்ன யோசனை

விக்கிமூலம் இலிருந்து

(32) கிழவி சொன்ன யோசனை


அந்தச் சிடுமூஞ்சிக் கிழவி அன்பாகப் பேசி எவரும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.

அக்பர் சக்கரவர்த்தி கிழவியைப்பற்றி கேள்வியுற்றார். கிழவியின் கிடுமூஞ்சித் தனத்தை மாற்றக் கருதி, மாறுவேடத்தில் கிழவியைக் காணச் சென்றார்.

கிழவியோ ஆற்றைக் கடப்பதற்காகக் கரையிலே காத்திருந்தாள். படகு இருந்தது; ஆனால், படகோட்டியைத் தான் காணவில்லை. கிழவி சுற்று முற்றும் பார்த்துவிட்டுச் சிடுசிடு வென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

மாறுவேடத்தோடு தன் அருகில் வந்த அக்பரைக் கிழவி, "நீ எங்கே போக வேண்டும்? என்று கடுகடுப்போடு கேட்டாள்.

"அக்கரைக்கு” என்றார் மாறுவேட அக்பர்.

"உனக்குப் படகு ஒட்டத் தெரியுமா?” என்று கிழவி கேட்டாள்.

“தெரியுமே”என்றார் அக்பர்.

‘தெரியும் என்றால், நீயே படகை ஒட்டித் தொலை; பாவிப் படகுக்காரனைக் காணவில்லையே” என்றாள் கிழவி.

அக்பர் படகைச் செலுத்த, கிழவி அதிலே உட்கார்ந்திருந்தாள். -

படகு ஆற்றில் போய்க் கொண்டிருந்தபோது, "இந்த நாட்டை ஆட்சி புரிகின்ற மன்னனுக்குப் புத்தியே இல்லை. இருந்தால், ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டச் சொல்லி இருக்க மாட்டாரா?” என்று கடுகடுத்தாள் கிழவி.

உடனே, மாறுவேடத்தைக் களைந்துவிட்டு, "அம்மையே நான்தான் இந்த நாட்டின் அரசன்! இப்பொழுதே பாலம் கட்டுவதற்கு உத்தரவிடுகிறேன்” என்றார்.

அந்த வினாடி முதல் கிழவியின் சிடுமூஞ்சித்தனம் போன இடம் தெரியவில்லை.