அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/முயற்சியே திருவினை

விக்கிமூலம் இலிருந்து


(90) முயற்சியே திருவினை


ஹென்றி எவ்பர்க் என்பவன் வாலிப ஓவியக் கலைஞன்.

அவனுக்குத் திடீரென நரம்பு வியாதியால் கைகளும் கால்களும் முடங்கிச் செயலற்று விட்டன.

மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல நாட்கள் மருத்துவம் பார்த்தும் அவன் குணம் பெறவில்லை.

கையும் காலும் செயலற்று அவன் சித்திர வேலையை எப்படிச் செய்வது என்று சிந்தித்தான்.

வாயினாலேயே சித்திரம் வரையலாம் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

அவன் படுத்திருக்கும் கட்டிலில் அவன் வாய்க்கு நேராக ஒரு பலகையின் மீது காகிதத்தைப் பொருத்திக் கொடுத்து விட வேண்டும். அவன் வாய்க்கு எட்டும் படியாக பிரஷையும், வர்ணங்களையும் வைத்துவிட வேண்டும். அதன்பின் அவன் பிரஷை வாயில் பிடித்துக் கொண்டே சித்திரம் வரையத் தொடங்கினான்.

அவ்வாறு, அவன் வரைந்த சித்திரங்கள் மிக அற்புதமானவை என்று புகழ் பரவியது.