அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/008-383

விக்கிமூலம் இலிருந்து


4. முநிசியில் ரோட்டுகளும் கமிஷனர் ஓட்டுகளும்

சென்றவாரம் ஓர் காலைப்பொழுதில், ரோட்டுகளிலும் வீதிகளிலும் பலவகை வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதாவது புரும்வண்டிகளும், பல்லக்கின் கோச்சு வண்டிகளும், பீட்டன் வண்டிகளுமேயாம். சிலநேரத்திற்குள் இங்குள்ள கனவான்கள் ஒவ்வொருவர் ஒவ்வோர் வண்டிகளிலேறிப்போகக் கண்டோம். மறுபடியும் அவர்கள் திரும்பிவருங்கால் ஐயா, எங்கு போயிருந்தீரென்றோம். ஓட்டு கொடுக்க என்றார், ஓட்டென்றால் என்ன என்றோம். ஓட்டுதான் என்றார். ஐயா, ஓட்டுதான் என்றால் அஃது ஆங்கில மொழியா தென்மொழியா என்றோம். நமது டிவிஷனுக்கு ஓர் கமிஷனர் நியமிக்க வேண்டியது. அதற்காக என் கையெழுத்தைக் கொடுத்துவிட்டு வந்தேன் என்றார். யாரை நீர் கமிஷனராக நியமித்தீர் என்றோம். ஐயரும் நமக்கு வேண்டியவர், முதலியாரும் நமக்கு வேண்டியவர். இவ்விருதிரத்தாரில் ஐயருக்கே கொடுத்தேன் என்றார். ஐயரவர்களை சிலகாலமாக சுவாமி சுவாமி என்று அழைத்துக்கொண்டு வருகின்றீர்களே அந்தப் பயத்திற்காகக் கொடுத்தீர்களா அன்றேல் அவரை நியமித்துக்கொண்ட விஷயத்தில் உங்கள் வீட்டுவரி முதலிய விஷயங்களுக்கு ஏதேனும் நன்மெய் செய்வாரா என்றோம்.

எங்கள் வீடுகளுக்கும் பூமிகளுக்கும் வருஷத்திற்கு வருஷம் வரியை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறார்கள் என்றார்.

அப்படி அதிகப்படுத்தும் படியானவர்களை நீங்கள் கமிஷனர்களாக ஏன் நியமித்துக் கொள்ளுகிறீர்கள் என்றோம்.

எல்லாம் கவர்ன்மென்றார் செய்கிறார்கள் என்றார். உங்கள் தேச மனிதர்களை நீங்கள் தெரிந்தெடுத்து தேச சீர்திருத்தங்களைச் செய்துக் கொள்ளுங்கோளென்று விட்டிருக்க அவைகளை நீங்கள் தெரிந்தெடுத்துக் காரியாதிகளை நடத்திக்கொள்ளாமல் கவர்ன்மென்றார்மேல் பழிக் கூறலாகாது என்றோம்.

என்ன செய்கிறது, ஐயரும் வீட்டண்டை வண்டியைக் கொண்டு வருகிறார் முதலியாருங் கொண்டுவருகிறார். யார் முதலில் கொண்டுவருகிறார்களோ அவர்கள் வண்டியில் ஏறிப்போய் கையெழுத்துக் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாய் விட்டது என்றார்.

தாங்கள் வழக்கம் வழக்கம் என்று சொல்லுவதை நிறுத்தி இக்கிராமத்தில் வாசஞ்செய்யும் மக்களில் இங்கிலீஷ் வாசித்தவர்களும் வாசிக்காதவர்களும் ஒன்றுகூடி குடிகள் விஷயத்தில் பரிந்து பாடுபடும் ஒரு கமிஷனரை தெரிந்தெடுத்து அவரை ஏன் நியமித்துக் கொள்ளக் கூடாது என்றோம். எல்லாம் அப்படிதான் இருக்கின்றார்கள் என்றார். எல்லாம் அப்படித்தான் என்றால் அஃதென்னை என்றோம்.

எப்போதுங் கமிஷனர்களை நியமிக்குங்கால் எங்கள் வீடுகளண்டை வண்டி கொண்டுவருங் கமிஷனர்களை மறுவருஷங் கமிஷனர்களை நியமிக்கும் போதுதான் காண்கின்றோம். மற்ற காலத்தில் எங்கள் வீடுகளைப்பற்றியேனும் ரோட்டுகளைப் பற்றியேனும் அவர்கள் கவனிப்பதுங் கிடையாது, வருவதுங் கிடையாது என்றார்.

நீங்கள் அவர்களை கமிஷனர்களாக நியமித்துக் கொள்ளுவதால் உங்களுக்கு யாதொரு பயனும் இல்லை என்பது விளங்குகின்றது. அவர்களை நீங்கள் நியமிப்பதால் அவர்களுக்கு ஏதேனும் பயனுண்டோ என்றோம்.

அவர்கள் வீட்டுக்கு வரியில்லை என்றும், ரோட்டுக்கு வரியில்லை என்றும் சொல்லக் கேள்விப்படுகிறேன் என்றார்.

அப்போது இந்த கமிஷனர்கள் முயற்சி யாவும் சுயனலங்கருதி வீடுகடோரும் வண்டிகொண்டுவருகின்றார்களா பிறர் நலம் கருதியா என்றோம்.

நமது தேசத்தில் பிறர்நலன் கருதி பாடுபடும்படியானவர்களை யான் கண்டதில்லையே என்றார்.

இத்தகைய குணமுடையோர்பால் சுயராட்சியங் கொடுத்தால் என்ன செய்வார்கள் என்றோம்.

வாயாடிகளுக்கு வீடும் வாயிளைத்தவர்களுக்கு பிச்சையேற்கும் ஓடுங் கொடுப்பார்கள் என்று சொல்லிப்போய்விட்டார்.

- 1:28; டிசம்பர் 25, 1907 -