அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/009-383

விக்கிமூலம் இலிருந்து


5. எதிர்க்காமல் அடங்கினவன் ஈனசாதியாமோ

நிகழ்ந்த டிசம்பர் மாதம் 31உ செவ்வாய்க்கிழமை வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகை 3-ம் பக்கம் முதற் கலத்தில் கோவிந்ததாஸ் என்னும் ஓரன்பர் எழுதியிருக்குங் கடிதத்தைக் கண்டு மிக்க வியப்புற்றோம்.

அதாவது சீரங்கப் பறையனென்னும் ஒருவனை ஒரு மகமதியன் செருப்பினாலடிக்க அவ்வடிப்பட்டுகொண்டு ஓடிவிட்டானாம் ஏன் ஓடினானென்றால் அவன் ஈனசாதி யானதினாலேயாம். அந்தோ, ஒருவனடிக்க மற்றொருவனடங்கிவிடுவது ஈனசாதிச் செயலா அன்றேல் மோனசாதிச் செயலா என்றுணராது கூறுவது உத்தமமன்று.

அடக்கமென்னுஞ் செயல் மேலோர்களுக்குண்டா, யீனர்களுக்கு உண்டா என்பவை கலை நூற்களில் கல்லாராயினும் தற்காலக் காங்கிரசில் நடந்த கலகத்தையும் அவ்விடமுள்ள மேன்மக்கள் ஒடுங்கிய ஒடுக்கங்களையும் அன்பர் உணர்ந்திரார் போலும், ஈனசாதிகள் ரென்பதையும் மோனசாதிகள் யாரென்பதையும் அன்பர் இனியேனும் அறிந்துக்கொள்ளுவராக,

குறுந்திரட்டு

யீனர்கள் யாவரென்னிலிடுக்கணும் வடுக்கண்செய்வோர்
யீனர்கள் யாவரென்னி லிதயத்தில் வஞ்சமுள்ளோர்
யீனர்கள் கள்ளுஞ் சூது மினவிப சாரமுள்ளோர்
யீனர்க ளினரே யாவரிகனியுதிட்டி ரவ மன்னே
மோனர்கள் யாவரென்னில் மொழிமுதல் மூன்று மாய்ந்தோர்
மோனர்கள் யாரென்னில் முக்குற்றங் கடிந்து நின்றோர்
மோனர்கள் பிணியுமூப்பு மரணமுஞ் செயித்த மேலோர்
மோனர்கள் முனிந்த வாய்மெய், முத்தியு முடையோராமே,

- 1:30; சனவரி 8, 1908 -