அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/011-383

விக்கிமூலம் இலிருந்து

7. தாழ்ந்த ஜாதியோருக்குத் தொழுக்கட்டையாம்

உயர்ந்த சாதியென்று சொல்லிக்கொள்ளுவோர்கள் தங்களுக்கு எதிரிகளாகவும் விரோதிகளாகவும் உள்ளோர்களை தாழ்ந்த சாதியென்று வகுத்து நிலைகுலையச் செய்துவருங்காலத்தில் ஈஸ்ட்டிண்டியன் கம்பனியார் வந்து தோன்ற அவர்கள் காலமாகிய 1816-ம் வருஷத்தில் தாழ்ந்த சாதி என்போருக்கு தொழுக்கட்டை தண்டனையும், உயர்ந்த சாதி என்போர்களுக்கு சாதாரணக் காவல் தண்டனையும் உண்டாக்கிவிட்டு உயர்ந்த சாதிகள் என்போர் ஏழைக்குடிகளைப் பலதேசங்களுக்கும் சிதறி ஓடிப்போம்படி செய்து விட்டார்கள். அதன்பின் குயின் விக்டோரியாளம்மன் அரசாட்சியில் அதே சட்டத்திலுள்ள தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்னும் வரம்பின்றி குரூரச்செய்கை யுள்ளவனை தொழுக்கட்டையில் போடலாமென்று மாற்றிவிட்டார்கள். இவ்வகை நீதிக்கு வழுவான சட்டங்களை மாற்றியதுமன்றி தாசில்தாரர்களுக்கு மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுத்திருந்ததினால் குடிகளை அதிக அக்கிரம் செய்கின்றார்கள் என்று அறிந்து தாசில்தார் அதிகாரத்தை வேறாகவும் மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை வேறாகவும் மாற்றிவிட்டார். அதினால் ஏழைக் குடிகள் யாவரும் கிராமங்களில் கவலையற்றிருக்கின்றார்கள்.

இவ்வகை விசாரிணை மிகுத்த நமது கருணை தங்கிய ராஜாங்கத்தார் தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்னும் பேதத்தையும் தொழுக்கட்டை சத்திரமென்னுஞ் சட்டத்தையும் ஆலோசனைக்குக் கொண்டுவந்திருப்பது ஆச்சரியமாயிருக்கின்றது. அதேனென்றால் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் நீதியானது தன்னவர் அன்னியர் என்னும் பட்சபாதம் இல்லாமல் இருந்து தங்கள் ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கு ஒருக்கண்ணிற் சுண்ணாம்பும் ஒருக்கண்ணில் வெண்ணெயையும் தடவுவதுபோல் தாழ்ந்த சாதியோருக்குத் தொழுக்கட்டையும், உயர்ந்த சாதியோருக்கு வெறுங்காவலுமாகிய பட்சபாத தண்டனையை ஆலோசிப்பது ஆச்சரியமாகக் காணப்படுகின்றது.

இத்தகைய உயர்ந்த சாதி தாழ்ந்தசாதி என்று ஏற்பட்டக் காரணம், தங்களுக்கு எதிரிகளாயுள்ளவர் மீதுள்ளப் பொறாமெயினால் சிலரைத் தாழ்ந்த சாதியென்றும் சோம்பேரிகளாய் வயிறு வளர்ப்பதற்குப் பெரியசாதிகள் என்றும் எற்படுத்திக் கொண்டார்களேயன்றி எதார்த்தத்தில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது.

அங்ஙனமிருக்குமாயின் உயர்ந்த சாதியான் யார். தாழ்ந்த சாதியான் யார், எச்செயலால் உயர்ந்த சாதியானான், எச்செயலால் தாழ்ந்த சாதியானான். பிச்சை ஏற்பவன் பெரியசாதியும் பயிரிடுபவன் சின்னசாதியானக் காரணம் யாதென, உயர்ந்த சாதி என்போர்களையும் தாழ்ந்த சாதி என்போர்களையும் ராஜாங்கத்தோர் நேரில் நிறுத்தி விசாரிணைச்செய்து இன்னாரென்றுந் தெரிந்துக்கொண்டபின்பு உயர்ந்த சாதி தாழ்ந்த சாதிச் சட்டத்தை ஆலோசிக்கவேண்டியது அவசியமாகும்.

தாழ்ந்தசாதியோர் யாரென்றும் உயர்ந்த சாதியோர் யாரென்றும் கண்டறியாமல் சட்டத்தை நிருமிப்பார்களாயின் தாசில்தார்களுக்கு மாஜிஸ்டிரேட்டு அதிகாரங் கொடுத்திருந்த காலத்தில் குடிகளுக்கு உண்டாயிருந்த இடுக்கங்களைப் பார்க்கினும் வில்லேஜ் முநிசிப்புகளுக்கு சொற்ப மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுத்து விட்டாலோ குரங்குக்கையில் வாளைக்கொடுத்து காவல்வைத்தக்கதைபோல் முடிவதுமன்றி முநிசிப்புவீட்டுக் கோழிமுட்டை குடித்தினக்காரர்கள். அம்மியை உடைக்குமென்னும் பழமொழியும் பலிதமாகும். நன்கு வாசித்த தாசில்தாரர்களிடங் கொடுத்திருந்த மாஜிஸ்டிரேட் அதிகாரத்தை மாற்றிவிட்ட ராஜாங்கத்தார் அவரினும் அந்தஸ்துக் குறைந்த முநிசிப்புகளிடம் மாஜிஸ்டிரேட் அதிகாரங் கொடுப்பது நியாயமாகக் காணவில்லை.

தற்காலம் ஏழைக்குடிகளுக்குள்ள சில இடுக்கண்கள் நீங்கி தங்கள் தங்கள் பூமிகளை சீர்ப்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். இத்தகைய காலத்தில் தாழ்ந்தசாதிக்குத் தொழுவும் உயர்ந்தசாதிக்கு வெறுங்காவலும் ஏற்படுமாயின் ஏழைக்குடிகள் உள்ள பூமிகளையும் விட்டுவிட்டு ஓட வேண்டியதேயாம். பி.ஏ., எம்.ஏ வாசித்தவர்களுடைய ஆலோசனைச் செய்கையை ஓர் (லோயர் செக்கன்றி) பையன் நிறைவேற்றுவானென்றால் அது பொருந்துமோ, ஒருக்காலும் பொருந்தா. சாதியையே பெருமெய் பாராட்டித் திரிபவர்களும் சொற்பக் கல்வியுள்ளவர்களுமாகிய முநிசிப்புகளிடம் மாஜிஸ்டிரேட் அதிகாரங்கொடுப்பது ஆபத்தாகவே முடியும்.

அதாவது விவேகமிகுத்த நியாயாதிபதிகளே தங்கள் நியாயங்களில் எவ்வளவோ தவறுதல் செய்துவிடுகின்றார்கள். அங்ஙனமிருக்க விவேகமும் கல்வியும் குறைந்த முநிசிப்புகளிடம் சாதிபேதத்தை ஒட்டிய மாஜிஸ்டிரேட் அதிகாரத்தைக் கொடுப்பதனால் இஃது கிராமக்குடிகளை சீர்திருத்துஞ் சட்டம் என்று ஆலோசிப்பதைவிடுத்து கிராமங்களிலுள்ள ஏழைக்குடிகளை ஊரைவிட்டு ஓட்டுஞ் சட்டமென்றே ஆலோசிக்கவேண்டிவரும். இதன் பகரமாய் சிலகாலங்களுக்குமுன்பு கிராமங்களிலுள்ள பெரியசாதிகள் என்போர் ஏழைக்குடிகளில் ஒருவனுக்கு அரையணா ஒரணா விலைபெறுந் தானியங்களைக் கொடுத்துவிட்டு ஒருநாள் முழுமையும் வேலைவாங்கிக்கொள்ளும் வழக்கமாயிருந்தது. தற்காலமோ அவ்வகைக்கில்லாமல் தக்கக் கூலிகேட்டு வாங்கிக் கொண்டு சீவித்து வருகின்றார்கள். இவ்வகையாக ஏழைக்குடிகள் சீர்பெற்று வருங்காலத்தில், தாழ்ந்த வகுப்பாருக்குத் தொழுக்கட்டை என்று ஏற்படுத்திவிட்டாலோ பெரிய சாதி என்ற முநிசிப்பும் பெரியசாதிகள் என்ற கிராமவாசிகளும் ஒன்றுகூடிக்கொண்டு ஏழைக்குடிகளுக்கு இடுக்கண் செய்துவிடுவார்கள்.

எவ்வகையில் என்றால் ஏழைக்குடிகளில் ஒருவனை கிராமவாசி ஒருவன் தருவித்து தகாத வேலையொன்றை செய்யச்சொல்லுவான். அவ்வேலையை செய்யாவிட்டாலோ முநிசிப்பும் அவனும் ஒன்று கூடிக்கொண்டு ஏழையைத் தொழுவில் மாட்டித் துன்பஞ்செய்துவிடுவார்கள்.

இவ்வகைத் தொழுவிற்படும் கஷ்டமான பயம் ஏழைக்குடிகளும் விவேகமற்றவர்களுமாகியவர்கள் மனதிற் பதிந்துவிடுமானால் தொழுவில் வாதைப்படும் பயத்தினாலேயே அவர் சொன்னவேலை யாவையுஞ் செய்யமுயலுவார்கள். அவ்வகைச் சொல்லும் ஏவல்களில் கிராமவாசிகளுக்கும் முநிசீப்புக்கும் விரோதியாயுள்ள தாசில்தாரையேனும் கலைக்ட்டரையேனுந் துன்பஞ்செய்யும்படி ஏவலிடுவார்களாயின் ஏழைக்குடிகள் அந்த ஏவலை நிராகரிப்பார்களானால் வேறுவேறு குற்றங்களைச்சாட்டி தொழுவில் மாட்டித் துன்பஞ் செய்துவிடுவார்கள். ஆதலின் நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் இதுவிஷயத்தை நன்காலோசித்து உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்னுஞ் சட்டங்களை வகுக்காமலும் சிவில் வியாஜயத்தை நடத்தும் முநிசீப்புகளிடம் கிரிமினல் அதிகாரங்களைக் கொடாமலும், கிராமாதிகாரச் சட்டங்களைப் புதுப்பிப்பார்கள் என்று நம்புகிறோம்.

- 1:44; ஏப்ரல் 15, 1908 -