அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/015-383

விக்கிமூலம் இலிருந்து

11. பதங்கெட்ட சோற்றுக்குப் பஞ்சமன் போவனோ

1908 ஆம் வருஷம் ஏப்பிரல்மீ 17உ சுக்கிரவாரம் வெளிவந்த “'சுதேசமித்திரன்” பத்திரிகையில் சத்தியவாசகனெனக் கையொப்பமிட்டு வரைந்துள்ளக் கடிதத்தைக் கண்டு மிக்க வியப்புற்றோம்.

அதாவது, சாதி ஆசாரங்களென்னும் அநாச்சாரக் கதைகள் யாவும் கட்டுக்கதைகளாம் பொய்யென்று வரைந்திருக்க இவர் சத்தியவாசகனென வெளிவந்து பொய்யைப் பலப்படுத்தும் பரிதாபத்தினாலேயாம். தற்காலத் தோன்றியிருக்குஞ் சுதேச சீர்திருத்தக்காரருள் இவரையே முதற்சீர்திருத்தக்காரராக ஏற்றுக் கொள்ளல் வேண்டும். ஏனென்பீரேல் பஞ்சமர்களுக்குப் பக்கத்து வோட்டல் வைக்க வேண்டும் என்பதினாலேயாம்.

அந்தோ பி.ஏ, எம்.ஏ. வாசித்த மேன்மக்களும் கலைக்ட்டர், ஜட்ஜிகள் முதலிய அந்தஸ்துள்ள உத்தியோகஸ்தர்களும் தங்கள் சுதேசிகளின் சோற்றுக் கடைகளில் சுத்தமில்லாமலும் பதார்த்தங்கள் சுவையில்லாமலும் இருப்பதைக் கண்டு நீக்கிவிட்டு பஞ்சமர்கள் சுத்தமாகவும் சுகமாகவுஞ் சுவையாகவும் வைத்திருக்கும் (ரிப்பிரஷ்மென்ட்) ரூம்களிலும் ஓட்டல்களிலும் வந்து சந்தோஷமாக சாப்பிட்டுப்போவது சகலரும் அறிந்திருக்க, சத்தியவாசகர் அவற்றை நோக்காது பஞ்சமர்களுக்காய் பரிந்து வேறு ஓட்டல் வைக்க விருப்பங்கொண்ட காரணம் விரோத சித்த விருத்தரென்றே விளங்குகின்றது. இத்தகைய விரோத சித்தவிருத்தியால் வீணே இவரழிவதுமன்றி ஏதோ சாப்பாட்டுக் கடைவைத்து சீவிக்கும் ஏழைகளின் சொற்ப சீவனங்களையும் கெடுக்க ஆரம்பிக்கின்றார். ஆதலின் சாப்பாட்டுக் கடைவைத்து சீவிக்கும் அன்பர்காள்! நமது சத்தியவாசகர் வார்த்தையை நித்தியமென்று எண்ணி பஞ்சமர்களுக்கென்று வேறுபக்கத்து வோட்டல் வைக்காதீர்கள்.

காரணம் - பஞ்சமர்களென்பவர்களோ சுத்தமான இடங்களில் சுத்த ஆசனம் விரித்து சுத்த பாத்திரங்களில் சுத்தமான சோற்றுடன் சுவையுள்ள பதார்த்தங்கள் வைத்துப் புசிப்பார்களாதலின் தங்களுடைய ஓட்டல்களில் மறந்தும் வந்து புசிக்கமாட்டார்கள். சத்தியவாசகருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்குமே அஃதினியதாகும். சத்தியவாசகர் மட்டிலும் மனித வகுப்பைச் சார்ந்தவர். பஞ்சமர்கள் யாவரும் மாட்டுவகுப்பைச் சார்ந்தவர்களென்று எண்ணி உள்ளார் போலும். அங்ஙனம் எண்ணி இருப்பாராயின் மனிதனுக்கும் மாட்டுக்கும் உள்ள உருவ பேதாபேதங்களைக் கண்டுக் கொள்ளுவாரே. அவ்வகைக் கண்டுகொள்ளாமல் எல்லோரும் மனித உருவமாகக் காணுகிறபடியால் பஞ்சமர் உருவம் பகலில் தோன்றாமல் பக்கத்து ஓட்டல் வைக்க முக்கிய ஏது செய்கின்றார். இவ்வகையாகப் பகலிலேயே பஞ்சமர்கள் உருவு தெரியாது பரிதவிப்பவர் இரவில் எச்சாதியைக் கண்டு ஏங்கி நிற்பரோ விளங்கவில்லை.

சாப்பாட்டுக் கடைக்கு சாதி வகுத்துக்கொண்ட சத்தியவாசகர், சாராயக்கடை கிளாசுகளுக்கும் கள்ளுக்கடைக் கப்பரைகளுக்கும் கலப்பு நேரிடாமல் காப்பாற்றிக்கொள்ளுவாராயின் இவர் பஞ்சமர்களுக்கென்று நியமிக்கும் பக்கத்து வோட்டல் பறக்க நிலைக்கும். கிளாசுகளையும் கப்பரைகளையும் கவனிக்காது பொத்தை இல்லையிற்போடும் மொத்தைசோற்று வியாபாரத்தைக் கெடுப்பது முழுமோசமேயாம்.

- 1:46: ஏப்ரல் 29, 1908 -