அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/023-383

விக்கிமூலம் இலிருந்து

19. முநிசிபல் சங்கமும், ம-அ-அ-ஸ்ரீ சேஷாச்சாரியவர்களும்.

சென்ற மங்களவாரம் கூடிய நகர சீர்திருத்த சங்கத்தாருள் மயிலாப்பூரின் சுடலை விஷயமாக நடந்த ஆலோசனையில் ம-அ-அ-ஸ்ரீ சேஷாச்சாரியாரவர்கள் ஓர் மறுப்புக் கூறியிருக்கின்றனர்.

அதாவது - மேற்கண்டபடி சுடலைக்குப் போகும் வழியில் பறைச்சேரி இருக்கின்றபடியால் அவ்வழியாய் உயர்ந்தசாதியோர் போக அஞ்சுவார்கள் என்பதே.

இதில் உயர்ந்த சாதியோர் என்பது தற்கால பிராமணர்களைத் தான் சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.

இப்பிராமணர்கள் என்போர் பறையர்கள் என்று அழைக்கப்படுவோர் வாசஞ்செய்யும் இடங்களுக்குப் போவார்களானால் அடித்துத் துரத்தி சாணசட்டியை உடைப்பது பூர்வ வழக்கமாயிருந்தது. அப்பயத்தைக் கொண்ட உயர்ந்தசாதியார் பறைச்சேரியின் வழியாகப் போவதற்கு அஞ்சுகின்றார்கள் என்றார் போலும்.

அத்தகைய சாணச்சட்டி உடைக்குஞ் செயலும் அவ்வளவாக தற்காலம் நிறைவேறுகிறதில்லை.

தாழ்ந்த சாதியோர் வாசஞ் செய்யும் இடத்தில் உயர்ந்த சாதிகள் போவதில் சாதி கெடும் என்பது அவரது அபிப்பிராயமாய் இருக்குமாயின் சக்கிலிப்பிணம், தோட்டிப் பிணங்களை அறுத்து சோதிப்பதைவிட பறைச்சேரியின் வழியாகப் போவதால் சாதி கெடமாட்டாது.

ஈதன்றி பறைச்சேரி மத்தியில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியானவர்களே உபாத்தியாயர்களாக இருந்து அப்பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிப்பதும் சேரிக்குள் போக்குவருத்தாயிருப்பதும் ம-அ-அ-ஸ்ரீ சேஷாச்சாரி அவர்களுக்குத் தெரிந்தும் இருக்கலாம்.

இத்தியாதி காரியங்களைத் தெரிந்தவரும், பி.ஏ.பி.எல், கெளரதா பட்டம் பெற்றவரும், தத்துவ ஆராய்ச்சியில் மிகுத்தவருமாகிய இவருக்கே பறைச்சேரி மீதுள்ள பழய பொறாமெய் விடாமல் இருக்குமாயின் மற்றும் கல்வி அற்றவர்களுக்கு எத்தகைய பொறாமெய் இருக்கும் என்பதை எளிதில் அறிந்துக் கொள்ள வேண்டியதேயாம்.

சொற்ப முநிசிபல் அதிகாரம் கொடுத்தவுடன் பறைச்சேரி மீதுள்ள பொறாமெய் விடாதவர்கள் வசம் சுயராட்சியம் கொடுத்துவிட்டால் பறைச்சேரிகளும், பறையர்கள் என அழைக்கப்படுகிறவர்களும் பெயர் ஊரில்லாமல் பரக்கவேண்டியதேயாகும்.

ஆதலின் சாதிபேதமற்ற திராவிடர்களே அதிசீக்கிரம் உங்களுடைய சீர்திருத்தக் கூட்டத்தை வலு செய்து கிராமங்கள் தோரும் வியாபாரக் கூட்டங்களை நிலைநாட்டுங்கள். கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனமே இவ்விடம் நீடித்து நிலைக்க வழிதேடுங்கள், வழிதேடுங்கள்.

உன்சாமிப் பெரிது என்சாமிப் பெரிதென்னும் மதகர்வங்கொண்டு சுஜாதி அபிமானத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

தற்காலம் நம்மை ஆண்டுவரும் பிரிட்டிஷ் இராஜாங்க துரைசாமிகள் இருக்கும் வரையில் தான் நிரைசாமி தாண்டவமாடும். துரைசாமிகள் போய்விட்டாலோ பழய ப-சாமி-ப-சாமி என்று பதம் குலைந்து பல்லிளிக்க நேரிடும். அக்காலத்தில் குறுக்குப்பூச்கவோரெல்லாம் அரகரா அரிசி போடுங்கோள் என்றும், நெடுக்குப் பூச்சுவோர் எல்லாம் கோவிந்தா கோபாளம் போடுங்கோள் என்றும் வெளிவருவீர்களாயின் உங்களுக்கும் விஷ்ணுவுண்டோ, உங்களுக்கும் சிவனுண்டோ என்று ஊருக்குப் புறம்பே தள்ளி உள்ளதையும் ஓட்டிவிடுவார்கள் உறுதியாய் நம்புங்கள். நாகர்கோவில் புராடெஸ்டாண்ட கிறிஸ்தவக் கூட்டத்தாருக்கு நன்றியறிந்த வந்தனம் கூறுங்கள், வந்தனம் கூறுங்கள். அவர்கள் விடாமுயற்சியாகக் கூடிவரும் இராஜவிசுவாசக் கூட்டத்தைப் பாருங்கள்.

- 2:15; செப்டம்பர் 23 -