அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/033-383

விக்கிமூலம் இலிருந்து

29. சாதிகளில் 1008-சாதி அடுக்கடுக்காய் பிரிவதுபோல் காங்கிரசும்

காலத்திற்குக் காலம் பிரியவேண்டும் போலும் இவ்வருஷத்திய காங்கிரஸ் நாகப்பூரில் ஒன்றும், சென்னையிலொன்றுங் கூடப்போவதாய் வதந்தி.

அவ்வதந்தி வாஸ்தவமாயின் நாஷெனல் காங்கிரசென்னும் பெயரை மாற்றிவிட்டு நாகப்பூரில் கூடுவோர் தங்கள் கூட்டத்தின் பெயரை வங்காளியர் காங்கிரசென்றும், சென்னையில் கூடுவோர் தங்கள் கூட்டத்தின் பெயரை பிராமண காங்கிரசென்றும் வைத்துக் கொள்வதே நலம்போலும்.

வங்காளத்தை இரண்டுபிரிவாக கர்ஜன் பிரபு பிரித்து விட்டடியால் இராஜ துவேஷம் ஏற்பட்டதென்று கூறும் கனவான்கள் காங்கிரஸ் கமிட்டி இரண்டுபட்டதற்குக் காரண துவேஷம் யாது கூறுவார்களோ காணவில்லை. நமக்குள்ள ஊழலையும், ஒற்றுமெய்க் கேட்டையும் சீர்திருத்திக் கொள்ள சக்த்தியற்ற நாம் இராஜாங்க சீர்திருத்தங்களை எடுத்துப் பேசுவது வீண் கலபைகளேயாம். கணக்கெழுதுவோன் கணக்கசாதி, பணிக்கு செய்வோன் பணிக்கசாதி எனப் பரவுதல் போல் மிதவாதத்துள் மிதவாதமும், அமித வாதத்துள் அமித வாதமுந் தோன்றும் போலும்.

இத்தகைய இரண்டுபட்ட காங்கிரசின் சென்னை காங்கிரஸ் கூட்டத்துள் சீர்திருத்த வகுப்பாருட் சிலர் பறையர்களைப்பற்றி பரிந்துபேசி அவர்களை முன்னுக்குக் கொண்டுவருவதாக யோசிக்கின்றார்களாம்.

இவ்வகைப்பரிந்த பேச்சுகள் பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும் பேசக்கண்டுள்ளோமன்றி அநுபவத்தில் அவர்களுக்குள்ள குறைகளை நீக்கியவர்கள் ஒருவருமில்லை.

ஆதலின் நமது காங்கிரஸ் கமிட்டியாரும், உள்சீர்திருத்த சங்கத்தோருஞ் சற்று சீர்தூக்கி நிதானித்து பறையர்களுக்காய் பரிந்துசெய்யும் உபகாரத்தை நிறுத்தி அவர்களுக்குச் செய்துவரும் இடுக்கங்களை மட்டிலும் செய்யாமலிருக்கச் செய்வீர்களாயின் அவ்வுபகாரமே போதுமாகும்.

அதாவது சென்னை ராஜதானியைச் சார்ந்த கிராமங்களில் சகலருக்கும் பொதுவாயுள்ள கிணறு, குளங்களில் சுத்தஜலங்களை மொண்டு குடிக்கவிடாமல் சேறும் நீரும் அருந்தி சாகச்செய்யும் இடுக்கங்களை நீக்கும்படிச் செய்யுங்கள். கிராமங்களிலுள்ள அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமல் தடுத்து ரோமரிஷிகளாக்கிவிடும், இடுக்கங்களைத் தவிர்த்து குடிம்பிகளாக்கி வையுங்கள்.

கிராமங்களிலுள்ள வண்ணார்களை வஸ்திரமெடுக்கவிடாமல் செய்து தங்களைப்போல் அவர்கள் சுத்தமாகவும், நாகரீகமாகவும் வரவிடாமல் செய்யும் இடுக்கங்களைத் தவிர்த்து சுதேசிகளாக உலாவச் செய்யுங்கள்.

அடிமைகளாக அடக்கி வைத்துக் கொண்டு அரைவயிற்றுக் கஞ்சேனுங் கொடாமல் அழிக்கும் இடுக்கங்களைத் தவிர்த்து வயிறாறப் புசிப்பளிக்கச் செய்யுங்கள்.

இத்தேசத்து தன்மத்திற்குப் பராய தீன்மம், புத்ததன்மமென்றும், இத்தேசத்து சாதிகளுக்குப் பராயசாதி பறைசாதியென்றும் வகுத்துக் கொண்டு புத்ததன்மத்தைப் பராயதன்மமென்றும் பௌத்தர்களைப் பறையர்கள் என்றும் தாழ்த்தி தலையெடுக்கா இடுக்கஞ்செய்வதைத் தவிர்த்து புத்ததன்மந்தான் இத்தேசத்தின் யதார்த்த பூர்வதன்மமென்றும், பறையர்கள் என்று அழைக்கப்படுவோர்கள்தான் இத்தேசத்தின் பூர்வ பெளத்த குருக்களும், பௌத்த அரசர்களும், பௌத்த குடிகளுமாக விளங்கினோரென விளக்கிவிடுவீர்களாயின் இதுவே பேருபகாரமுமாகும். இதுவே விவேகமிகுத்தக் கூட்டத்தார் செய்யாமல் செய்த உதவியுமாகும்.

2:27; டிசம்பர் 18, 1908 -