அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/047-383

விக்கிமூலம் இலிருந்து

43. செங்கல்பட்டு ஜில்லா மதுராந்தகம் தாலுகா 96-வது நெம்பர் ஓரத்தூர் கிராமம்

ஓரத்தூர் அக்கிராரவாசிகளுக்குள் சிலர் ஏழைக்குடிகளை ஏரிகளில் ஜலம் மொள்ளப்படாதென்றும், மாடுகளுக்குப் புல்லுகள் அறுக்கப்படாதென்றும், அவர்கள் ஆடுமாடுகளை மேய்வுகாட்டில் மேயப்படாதென்றும், புறம்போக்குக் காடுகளில் விழுந்துள்ள விறகுசுள்ளிகளைப் பொருக்கப்படா தென்றும் தடுப்பதற்கு யாதாமோர் அதிகாரமும் கிடையாது.

சிலர்கள் அவர்களிடம் பண்ணையாட்களாயிருக்கின்றபடியால் தங்கள் அதிகாரத்தை செலுத்தியிருப்பார்கள்.

அவ்வதிகாரம் அவர்கள் வேலைக்கு மட்டுமேயன்றி மற்ற விஷயங்களில் நடத்தப்படாது. இத்தகைய விரோதந் தோன்றியுள்ள காரணங்களை ஆலோசிக்குங்கால் ஏழைக்குடிகள் நாளுக்குநாள் விருத்தியடைந்து சொந்த பூமிகளும், ஆடுமாடுகளும் சேகரித்து சீர்பெற்றுவருவது அக்கிராமத்துப் பாப்பார் கண்ணுக்குப் பொருக்காமல் ஏழை குடிகளை இடுக்கஞ்செய்து வருகின்றார்கள் என்பது ஓர் காரணமாகும்.

இரண்டாவது காரணத்தை ஆலோசிக்குங்கால் ஏழைக்குடிகள் கிஸ்தியாகும் நிலவரிகளைக் கொண்டுபோய் கட்டுதற்கும், ஏதோ தங்கள் பிரசாதுகளைக் கொண்டுபோய் முறையிடுவதற்கும் பொதுவாகிய ஓர் இடமில்லாமல் அக்கிராரத்தில் வாசஞ்செய்யும் ஐயர்வீட்டிற்கே போகவேண்டுமானால் அவருக்குத் தக்க சாதியாள் தேடி அந்த ஆளின்மூலமாக ஐயரிடமுஞ் சேர்ப்பது ஒரு கஷ்டம்.

(போஸ்ட் பில்லர் பாக்ஸாகும்) காகிதம் போடவேண்டிய பெட்டியை பொதுவானவிடத்தில் வைக்காமல் அக்கிராரத்திற்கு உள்ளாக வைத்து ஏழைக்குடிகள் தங்கள் அவசரக் காகிதங்களைப் (பில்லர் பாக்ஸில்) போடுவதற்கு சாத்தியப்படாமல் ஐயமாருக்குப் பிரியமான சாதி ஆள் ஒருவனைத் தேடி அவனிடம் தங்கள் காகிதங்களைக் கொடுத்து (பில்லர் பாக்ஸில்) போடவேண்டியது ஒரு கஷ்டம். அவ்வகையாகக் கொடுத்த காகிதத்தை அவன் (பில்லரில்) போட்டானோ போடவில்லையோ என்று கலங்கிநிற்பது பின்னோர் கஷ்டம்.

இத்தியாதி கஷ்டங்களினால் ஏழைக்குடிகள் ஏதோ தங்களுக்குள்ள மனத்தாங்கலை வெளியிட்டிருக்கலாம்.

இதன் காரணங்களைக்கொண்டும் சில பார்ப்பார்கள் ஏழைக்குடிகளை இடுக்கஞ் செய்துவருவதாக விளங்குகின்றது.

இத்தகைய இடுக்கங்களை அவ்விடமுள்ள பெரியோர்களும் கவனிப்பதில்லைபோலும். அக்கிராமவாசிகள் இவற்றை செய்யலாமா செய்யக்கூடாதா என்று உணராமல் ஏழைக்குடிகளுக்குத் துன்பத்தை உண்டு செய்வார்களாயின் சென்னை சாதிபேதமற்ற திராவிட ஜன மகாசபையோரால் இராஜாங்கத்தோரிடம் விசாரிணைக்கே வந்து தீரும்.

- 2:34; பிப்ரவரி 3, 1909 -