அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/048-383

விக்கிமூலம் இலிருந்து

44. நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜரீகம் உலகிலுள்ள சகல ராஜரீகத்திற்கும் மேலான பாதுகாப்புற்ற ராஜரீகமென்று கொண்டாடப்பெற்ற தாயிருந்தும் சிற்சில கிராமக்குடிகள் மட்டிலும் வருத்தமடைகின்றார்கள்

அதாவது - பயிரிடுந் தொழிலாளிகளாகும் ஏழை கிராமவாசிகளுக்கு கணக்கர்களாலும், முனிஷீப்புகளாலும், தாசில்களாலும், நேரிடுங் குறைகளை அந்த ஜில்லாக் கலைக்ட்டரிடம் எழுதிக் கொடுப்பார்களானால் அக்குடிகளின் மநுவை கலைக்ட்டர் நேரில் வந்து ஒவ்வோர் சங்கதிகளையும் கண்ணினால் பார்வையிட்டு விசாரிணைக்குக் கொண்டுவந்து நீதி செலுத்திவிடுவார்களாயின் குடிகளும் சுகவாழ்க்கையில் நிலைப்பார்கள். கிராம உத்தியோகஸ்தர்களும் அதிகாரத்திற்கு பயந்து தங்கள் காரியாதிகளை செவ்வனே நடத்திவருவார்கள்.

அங்ஙனமின்றி குடிகள் சேர்ந்து கலைக்ட்டருக்கு எழுதும் மநுவை கலைக்டர், தாசில்தாரருக்கு அனுப்புவதும், தாசில்தார் முனிஷிப்புக்கு அனுப்புவது முனிஷிப்புக் கணக்கனைத் தருவித்து சகல சங்கதிகளையும் ஒன்றுகூடி பேசிக்கொண்டு சகல குற்றங்களையும் குடிகளின் பேரில் சுமத்தி தங்களைக் குற்றமற்றவர்களாகக் கலைக்ட்டர்களுக்கு எழுதி அனுப்பிவிட்டு தங்கள் குறைகளை கலைக்ட்டர்களுக்குத் தெரிவித்த குடிகளை சமயம்பார்த்து

கெடுத்து பாழாக்கிவிடுகின்றார்கள். சில கிராமங்கள் விளைவுகுன்றி பாழடைவதற்கும் இதுவே காரணமாகும்.

இவ்வகையாகத் தங்கள் சுதேசிகளின் இடுக்கத்தால் பாழடையும் குடிகள் நமது சுதேசிகளால் கஷ்டமடைகின்றோமென்று உணராமல் இராஜாங்கத்தோரை நோக்கி துக்கிக்கின்றார்கள்.

இவற்றுள் பெரும்பாலும் நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோர் ஏழைக்குடிகளின் குறைகளை நேரில் விசாரித்து செய்யவேண்டிய காரியங்களும் சிலதுண்டு.

அதாவது - இத்தேசத்தில் வாசஞ்செய்யும் சில சாதியோர் தங்களிடம் 10,000 ரூபாய் கையிருப்பிருப்பினும் பத்துகாத தூரத்தில் ஓர் பிரபு ஆளொன்றுக்கு ஓரணா தானங்கொடுக்கின்றாரென்று கேழ்விப்பட்டவுடன் பணத்தின் பேரிலுள்ளப் பேராசையால் தூரத்தைக் கவனிக்காமல் ஓடி யாசகம்பெறுவது வழக்கம்.

இத்தகையப் பேராசை கொண்ட சாதியோருக்கு இராஜாங்க உத்தியோகங்களைக் கொடுத்து விடுவதினால் ஆயிரங்குடிகள் அர்த்தநாசமானாலும் ஆகட்டும் ஆனவரையில் பணத்தை சம்பாதிக்கும் சமயம் இதுதான் என்று எண்ணி தங்கள் வரவைப் பார்த்துக் கொண்டு இராஜாங்கத்தோரை நிந்தனைக்கு ஆளாக்கிவிடுகின்றார்கள்.

இதுபோன்ற விஷயங்கள் யாவற்றின்மீதும் நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோர் கண்ணோக்கம் வைத்துக் கார்ப்பதே ஏழைக்குடிகளுக்கு ஈடேற்றமாகும்.

அந்தந்த கிராமங்களிலுள்ள தாசில்தாரர்களுக்கும், முனிஷிப்புகளுக்கும், கணக்கர்களுக்கும் அங்கு சொந்தபூமிகள் இருக்கப்படாது.

அவ்வகைச் சொந்தபூமிகள் உத்தியோகஸ்தர்களுக்கு இருப்பதினால்தான் ஏழைக்குடிகளை இலவசமாக வேலைவாங்குதலும், அவ்வேலைச் செய்யாதவர்களின் பூமிகளையும், ஆடுமாடுகளையும் அலக்கழிக்கச் செய்து அடியோடும் பாழாக்கி விடுகின்றார்கள்.

போலீசு உத்தியோகஸ்தர்களின் மேல்பார்வைக்கென்று ஒவ்வோர் ஐரோப்பியர்களை சூப்பிரின்டென்டாக நியமித்திருப்பதுபோல் இரெவின்யூ இலாக்காவில் குடிகளுக்கு நேரிட்டுவருங் கஷ்டநஷ்டங்களை நேரிலறிந்து கலைக்ட்டரவர்களுக்குத் தெரிவிக்கும்படியான யூரோப்பிய ரெவின்யூ சூப்பிரின்டென்டென்ட் ஒருவரை நியமிப்பதானால் ஏழைக்குடிகளும் ஆனந்தமாகத் தங்கட் குறைகளை முறையிட்டு சீர்பெறுவதுடன் கிராம உத்தியோகஸ்தர்களும் நீதியில் நடப்பார்கள். பிரிட்டிஷ் இராஜரீக செங்கோலும் பிரகாசிக்கும்.

- 2:35; பிப்ரவரி 10, 1909 -