அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/064-383

விக்கிமூலம் இலிருந்து

60. இந்தியரைப்பற்றி கனம் லார்ட் மார்லிபிரபு அவர்கள் அறியவேண்டியவை இன்னும் அனந்தமாம்

ஐரோப்பா தேசத்தில் வாழுங் குடிகள் யாவரும் ஆங்கிலேயர்களே. அவர்கள் பேசுவதும் ஆங்கிலேயம்.

குணங்களோ, தங்களிருப்பில் பணங்களிருக்குமாயின் அவற்றைப் பெட்டியில் இருத்திப்பூட்டிட்டாமல் விருத்தி பெரும் (லிமிடெட்) கம்பனிகளிற் சேர்த்து மேலு மேலும் பாக்கியம் பெருகி சகலருக்கும் உபகாரிகளாக விளங்கிவருவதுமன்றி வித்தியா விருத்தியுள்ள விவேகிகளுக்கும் வேணப் பொருளளித்துப் பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

இந்துதேயத்திலோ இன்ன பாஷைக்குடிகள்தான் இந்தியரென்று கூறதற்கியலாது, இன்னசாதிதான் இந்தியர்களென்று வகுக்க இயலாது.

இத்தகையோர் சொற்பப் பணம் சேர்த்துவிடிலோ வீட்டைவிட்டு வெளிப்படாது. அப்பணப்பெட்டியின் சாவியோ, அரைஞாண் கயிற்றைவிட்டு அப்புறப்படாது. ஓர்வகை துணிபுகொண்டு பணம் வெளிவரினும் லிமிடெட் கம்பனிகளிற் சேர்க்கவோ மனத்துணிவுபடாது. துணிந்து சேர்த்தும் இலாபம் பெறுமோ பெறாதோ என்னுஞ் சந்தேகத்தில் நஷ்டம் வந்துவிடுமாயின் அவர்கள் பிராணனோ நிலைப்படாது.

இவ்விருதிரத்தாருள் ஐரோப்பியர் செயல்களையுங் குணாகுணங்களையும் நன்காராய்ந்துள்ளவர் இந்தியர்களின் செயல்களையுங் குணாகுணங்களையும் நன்காராயாது எண்ணிய கன்மங்களில் துணிவது இழுக்கேயாம்.

அதாவது, ஐரோப்பியர்களில் பாக்கிய வந்தர்களிருப்பார்களாயின் பலருக்கு உபகாரிகளாயிருப்பது இயல்பாகும். இந்துக்களோ வட்டியாலும், வாடகையாலும் பலர் பணங்களையுங்கொண்டு ஒவ்வோர் பாக்கிய வந்தர்களாகத் தோன்றுவதியல்பாகும்.

அவ்வகைத் தோன்றிய பாக்கியவான் வித்தியாவிருத்தியையும் தேச க்ஷேமத்தையும் குடிகளின் சுகத்தையுங்கருதி அவற்றிற்கு சிலவிட மனம்வராது மடிந்தபின் விதரணையற்ற விதவைகளிடஞ் சேர, வீணே அழிவதைக் காண்கின்றோம்.

விருத்தியின்றி வீணேயழியுங் காரணம் சேர்த்த பொருளைக் கைவிடக்கூடாதென்னும் பேரவாவேயாம்.

இத்தகைய அவாவில் மிகுத்தவர்களும், சாதிபேதத்தில் பெருத்தவர்களும், சமய பேதங்களில் உறத்தவர்களுமாயிருப்போர்வசம் சுயராட்சிய பாரத்தைத் தாங்குங்கோள் என்று விடுவதானால் 1. அவாவின் மிகுதியால் உண்டாகும் கலகம் பெருகும். 2. சாதிபேதங்களால் உண்டாகுங் கலகம் பெருகும். 3. சமயபேதங்களால் உண்டாகுங் கலகம் பெருகும்.

இவற்றிற்குப் பகரமாய் ஒருவர் பொருளை மற்றொருவர் அபகரித்து அதினால் அடிதடி நேரிடுவதும், என்சாதி பெரிது, உன்சாதி சிறிதென்று கூறி அதனால் அடிதடி சண்டை நேரிடுவதும், என்சாமிபெரிது, உன்சாமி சிறிது, என்னாமம் வடகலை, உன்னாமம் தென்கலை, என்பூச்சு முன்றுகோடு, உன்பூச்சு குழைப்பூச்சென்று ஒருவருக்கொருவர் அடிதடி சண்டை நேரிடுவதும், அவைகளை விசாரித்து நீதி செலுத்துவதற்கு ஆங்கிலேயே அதிகாரிகளிடம் நீதிபெற்று வருவதுமாகிய கண்காட்சிகள் அமைந்த (ரிகார்டு)களிலும் அநுபவத்திலும் தெரிந்திருக்க, சுயராட்சிய ஆளுகையை அளிப்பதானால் எந்தசாதியாரை உயர்த்திக் கொண்டு எச்சாதியோரை நாசப்படுத்துவார்களென்றும் எந்தசமயத்தோரை உயர்த்திக்கொண்டு எச்சமயத்தோர்களை அழித்துவிடுவார்களென்றும் தீர்க்கவாலோசிக்க வேண்டியதாகும்.

இந்தியருக்குள்ள இத்தியாதி பேதங்களையும் கனந்தங்கிய லார்ட் மார்லியவர்கள் கண்ணோக்கம் வையாது ஐரோப்பியர்களுக்குள்ள அதிகாரத்தை எடுத்துவிட்டு இந்துக்கள் வசம் ஒப்பிவைப்பாராயின் இந்துக்களுக்குள் உண்டாகுங் கலகத்தை நிவர்த்திச் செய்துக்கொள்ளுவதற்கு ஐரோப்பியர்களைக் கோறுவார்களோ, அன்றேல் வேறு ராட்சிய ராஜாங்கத்தோரைக் கோறிக்கொள்ளுவார்களோ அதுவிஷயத்தை நமது பிரிட்டிஷ் ஆட்சியோர் பெரும்பாலும் ஆலோசிக்க வேண்டியதாகும்.

- 3:4; சூலை 7, 1909 -