அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/066-383

விக்கிமூலம் இலிருந்து

62. இந்தியர்களை இன்னும் இழிவடையச் செய்த மாகொடிய மாணாக்கன்

பஞ்சாப் தேயத்தோனாகும் மதார் லாலென்னும் ஓர் மதம்பிடித்த மாணாக்கன் விருத்தாப்பிய ஐரோப்பியராகும் சர் உல்லியம் கர்ஜன் உவில்லி யென்னும் ஓர் துரைமகனை சுட்டுக் கொன்றுவிட்டானாம்.

இத்தகையக் கொடுங் கோபியும், படும்பாவியுமாயினோனுக்கும் படிப்பு ஒருகேடோ, “பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டாமென்னுந்" தனது மிலேச்சகுணத்தைக் காட்டிவிட்டான் போலும்.

அந்தோ! இப்படுபாவி கொடுங்கோபத்தினால் மற்ற இந்திய மாணாக்கர்களையும் நிந்தைக்கு ஆளாக்கிவிட்டானே.

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கேகி வித்தைக் கற்றுக்கொள்ளும் மாணாக்கர் மீதுள்ள மகிழ்ச்சியைக் கெடுத்து அதிகாரிகளை மாளா சந்தேகத்திற்குள்ளாக்கி விட்டானே.

அன்புடன் கற்பிக்கும் போதனாசிரியர்கட்கும் அகத்துட் சந்தேகத்தை விளைத்து விட்டானே.

இத்தியாதி மித்திரபேத சத்துருக்கள் ஒவ்வொருவர் தோன்றி இந்தியர்களின் மீதுள்ள அன்பையுங் கெடுத்துவருகின்றார்கள்.

இவ்வகைப் படுபாவிகள்மீது இந்தியர்கள் பரிதாபப்படாது மாணாக்கர்களை வித்தையில் விரும்பியிருக்கும்படிச் செய்தல் வேண்டும். வித்தையை விரும்பாமல் இராஜாங்க சத்துருவாக விரும்புவார்களாயின் அவர்கள் கெடுவதுடன் நாமுங் கெடவேண்டியதேயாம். அதாவது இரும்பையடிக்கும் அடிதுரும்பையும் பற்றுமென்பது துணிபு. இத்தகையக்கொரூரச்செயல்கள் தோன்றுங் காரணங்களை கனந்தங்கிய லார்ட் மார்லி அவர்கள் சீர்தூக்கி ஆலோசித்தல் வேண்டும்.

அஃது யாதுக்கென்பீரேல், லார்ட் மார்லியவர்களோ இந்தியர்களுக்குப் பெருத்த உத்தியோகங்களை அளிக்கவேண்டுமென்னும் வீண்வார்த்தைகளை பேசிக்கொண்டு வருகின்றார். அவர்வார்த்தையைத் தடுத்து, உள்ள கெடுதிகளை

விளக்கிவருவோர் மீது இந்தியர்களில் சிலருக்கு பொறாமெ யுண்டாகி அவர்களைக் கொல்லுதற்கு எத்தனிக்கின்றார்கள்.

இத்தியாதிச் செயல்களை நாளுக்குநாள் கண்ணுற்றுவரும் லார்ட் மார்லியவர்கள் தான் பேசும் வார்த்தைகளையும், செயல்களையும் சீர்தூக்கிச்செய்ய வேண்டுகிறோம்.

இந்தியர்களுக்காகப் பரிந்துபேசுவதால் மார்லி நல்லவரென்றும், இந்தியர்களுக்குள்ள சாதி வேற்றுமெகளையும், சமய போராட்டங்களையும் எடுத்துப்பேசுவதால் ஏனைய ஆலோசனை சங்கத்தவர்களை கெட்டவர்களென்றும் எண்ணுதற்கேதுவுண்டாகின்றது. ஆதலின் எண்ணித்துணிவது கருமமாகும்.

தற்காலம் சர்.உல்லியம் கர்ஜன் உவில்லி என்பவரைக் கொலைசெய்த படுபாவியின் (பாக்கட்டில்) இருந்தக் கடிதங்களில் இந்தியாவின் சுவாதீனத்தையடைய அதிகாரிகளைக் கொலைச்செய்வது நியாயந்தானென வரைந்திருந்ததாம். இத்தகையக் கொடூர எண்ணமுள்ளோர் மத்தியில் எரியுங்கொள்ளியை ஏறத்தள்ளுவது போலும், அவியும் விளக்கைத் தூண்டிவிடுதல் போலும் நமது கனந்தங்கிய லார்ட் மார்லியவர்கள் இந்தியர்களுக்கு அந்தஸ்தான உத்தியோகங்களை அளிக்கவேண்டுமென்று கூறவும், அவற்றிற்கு மாறாக சில விவேகிகளெழுந்து தடுக்கவும், சுயராட்சியம் விரும்பும் இந்தியர்களிற் சிலர் அவர்களைக் கெடுக்கவும், கொல்லவும் முயலுகிறார்கள். ஈதன்றி இந்தியப் பத்திராதிபரில் ஒருவராகும் கனந்தங்கிய சுரேந்திரநாத் பானர்ஜியவர்களுக்கு இந்திய மாணாக்கர்கள் விருந்தளித்தவன்று, மிஸ்டர் கேயர் ஆர்டி முதலிய துரைமக்களும் வந்திருந்தார்களாம். அப்போது இந்தியாவில் அரசிறை வருமானக் கண்காணிப்பு இந்தியா உத்தியோகஸ்தர்களிடம் இருக்கவேண்டுமென்று பேசியதாக சிலப்பத்திரிகைகள் கூறுகின்றது.

இத்தியாதி சங்கதிகளையும் லார்ட் மார்லியவர்கள் கவனியாது தனதிஷ்டம்போல் நடத்துவராயின் சொற்ப உத்தியோகஸ்தர் காலத்திலேயே அரசிறை வரவுசிலவு கணக்குகள் தங்களிடமிருக்கவேண்டுமென்று ஆலோசிப்பவர்கள் மற்றும் பெருத்த உத்தியோகங்களைக் கொடுத்து விட்டால் ஆங்கிலேயர்களின் (பூட்சு) களில் பதிந்துள்ள இந்திய தூசுகளையுந் தட்டிவிட்டு ஐரோப்பாவிற்குப் போகும்படிச் செய்துவிடுவார்கள்.

இத்தகையோர் குணாகுணங்களை அறிந்தவர்களும், இந்தியாவிலுள்ளவர்களிடம் நெடுங்காலம் பழகியவர்களுமாகிய துரைமக்கள், சாதிபேதம் நிறைந்துள்ள இந்தியர்களுக்கு பெருத்த உத்தியோகங்களைக் கொடுத்துவிடுவதானால் தங்கள் சுயசாதிகளை சுகப்படுத்திக் கொண்டு மற்ற சாதியோர்களை நாசஞ்செய்துவிடுவார்களென வற்புறுத்தி பேசிவருகின்றார்கள்.

இந்தியாவில் வந்து உத்தியோகம் நடத்தாதவரும், இந்தியர்களின் பெருங்கூட்டத்திற் பழகாதவரும், உள்ள சாதிபேதக் கட்சிகளை உணராதவரும், சமயபேத சண்டைகளைக் காணாதவருமாகிய லார்ட் மார்லி பிரபு அவர்கள் இந்தியாவின் விஷயமாக செய்துவரும் மந்திரங்கள் யாவும் அவரது சுதேச சிறப்பையே கெடுப்பதற்கு ஆதாரமாக விளங்குகின்றது.

ஆதலின் நமது கனம் லார்ட் மார்லி பிரபு இந்தியாவுக்கு ஓர் பிரயாணம் வந்து சாதிபேதத்தாலுள்ள ஊழல்களைக் கண்ணாறக்கண்டு தனது கருத்துக்களை நிறைவேற்றும்படிக் கோருகிறோம்.

- 3:5; சூலை 14, 1909 -