அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/094-383

விக்கிமூலம் இலிருந்து

90. சாதிபேதமற்ற திராவிடர்களே! சற்று கவனியுங்கள்

தற்காலம் (டிப்பிரஸ்கிளாசை) சீர்படுத்தவேண்டுமென்று வெளிவந்துள்ள கனவான்களில் மகாகனந்தங்கிய பரோடா இராஜா அவர்கள் செய்துள்ள சீர்திருத்தப் பாதையானது தன்னுடைய அரசாட்சியினுள் தாழ்ந்த சாதியார் உயர்ந்தசாதியார் என்னும் பேதமின்றி உத்தியோகம் பெறவேண்டிய சீர்திருத்தத்தை முன்பு செய்துவிட்டு தற்காலமுள்ள ஏழைகளுக்கு கல்வியும் கைத்தொழிலும் கொடுக்கவேண்டிய சீர்திருத்தங்களை செய்து வருகின்றார்.

ஆனால் தென்னிந்தியாவிலுள்ளவர்களோ அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட சாதிகளுமிருக்கவேண்டும். (டிப்பிரஸ் கிளாசை) சீர்படுத்தவும் வேண்டுமென வெளிதோன்றியிருக்கின்றார்கள். இவர்களது கருத்து யதார்த்தத்தில் அன்புகொண்டு யேழைகளை சீர்திருத்தப் போகின்றார்களா அன்றேல் தங்கள் சுகத்திற்காக ஏழைகளை சீர்திருத்துகிறோமென்று வெளிதோன்றினராவென்று ஆராயுங்கால் தங்கள் சுகத்தை நாடியே ஏழைகளை சீர்திருத்துகிறோமென்று வெளிதோன்றியிருக்கின்றார்கள்.

எவ்வகையிலென்பீரேல், 1909 வருஷம் நவம்பர் மீ 5உ சனிவாரங்காலை வெளிவந்துள்ள இஸ்டாண்டார்ட் இங்கிலீஷ் பத்திரிகை ஐந்தாம் பக்கம் ஐந்தாவது கலம் தந்திசெய்தியில் மிஸ்டர் அம்பிகாசரன் செய்துள்ளப் பிரசங்கத்தில் (டிப்பிரஸ் கிளாசை) சீர்படுத்துவதினால் நமது சுதேசியத்திற்கு வலுவென்று கூறியிருக்கின்றார். இதற்காதரவாக இம்மாதம் 6உ சல்வாரம் வெளிவந்த சென்னை சுதேசமித்திரன் பத்திரிகை நான்காம் பக்கம் நான்காவது கலத்தில் “கீழ்வகுப்பு சாதியாரை உயர்த்தல்" என்னுங் காப்பிட்டு (ப்ரீத்பூர்) என்னுந் தேசத்துள் கூடியக் கூட்டத்தில் சில பிராமணர்கள் வந்திருந்து அவ்விடமுள்ளோர்களைப் பார்த்து அன்னியதேச சரக்குகளை (பாய்காட்) அதாவது (வர்ஜ்ஜனம்) செய்வோர்களை உயர்த்திவிடுவதாகக் கூறினார்களாம். இதன் ஆதரவைக்கொண்டே சாதிபேதம் வைத்துள்ளக் கூட்டத்தார் தங்கள் சுதேசியக் கூட்டத்தை வலுவுசெய்துக் கொள்ள வேண்டுமென்னுங் கருத்தால் (டிப்பிரஸ்கிளாசை) சீர்படுத்தப்போகின்றோமென வெளிதோன்றியுள்ளார்களென்று கூறியுள்ளோம்.

இதனைக் கண்ணுறும் சாதிபேதமற்ற திராவிடர்கள் ஒவ்வொருவரும் சற்று நிதானித்து மேற்கூறியுள்ள கூட்டத்தோரின் அபிப்பிராயங்களை ஆராய்ந்தறியும்படி வேண்டுகிறோம். அதாவது தற்காலம் பிராமணர்களென்று சொல்லிக்கொள்ளும்படியானவர்களுக்கும், கம்மாளர்கள் என்பவர்களுக்கும் சிலக் கலகங்கள் நேரிட்ட போது பிராமணர்களென்போர் கம்மாளர்களுக்குப் பயந்து பறையர்களென்றழைப்போர்களை தங்கள் வசப்படுத்திக்கொண்டு நீங்கள் வலங்கையர்கள், உங்களுக்கு சகல சுகங்களும் உண்டு, எங்களுடன் வலது கைபக்கம் நீங்களிருக்கவேண்டுமென்று வெறுஞ் சுதந்திரமும், வெறும் உற்சாகமுங் கொடுத்து தங்கள் காரியங்கள் யாவும் கைகூடியவுடன் நீங்கள் பழைய பறையர் பறையகர்களேயென்று பாழ்படுத்தி வருவது அநுபவமேயாகும்.

அதுபோல் ஏழைகளாகிய உங்களெல்லோரையும் சீர்படுத்தி விடுகின்றோம், சீர்படுத்திவிடுகின்றோமென்றே கூட்டங்கள் கூடிய சொற்பப் பிரயோசனத்தைக் காட்டி சுதேசியத்தை வலுவு செய்துக்கொண்டவுடன் பிரிட்டிஷ் அரசாட்சியில் குழாய் நீரை ஏனுங் குண்டிகுளிர குடிக்கவிட்டவர்கள் அக்குழாய்களின் அருகிலேனும் அக்குழாய் வைத்துள்ள வீதிகளிலேனும் வரவிடாமல் துரத்துவார்கள் என்பது சத்தியம். இவைகள் யாவையும் சாதிபேதமற்ற திராவிடர்கள் சீர்தூக்கி காரியாதிகளில் பிரவேசிக்க வேண்டுகிறோம்.

தற்காலம் நமது கருணைதங்கிய பிராட்டிஸ்டென்ட் மிஷநெறி துரைமக்கள் செய்துவரும் சீர்திருத்தங்களைக் கண்ணோக்கிப்பாருங்கள். அவர்களைவிட நம்மெய் அன்புகொண்டு ஆதரிப்பவர்களும், பிரதிபலன் கருதாது சீர்திருத்துகிறவர்களும் இத்தேசத்திலுண்டோ ஆராய்ந்துணருங்கள். சாதிபேதமற்ற திராவிடர்களுக்குப் பிராணபிச்சைக்கொடுத்து ஆதரிப்பது

பிரிட்டிஷ் துரைத்தனம். கல்வி கொடுத்து காப்பாற்றிவருவது பிரோட்டிஸ்டென்ட் பாதிரிகளின் கருணை, இவ்விருதிரத்தோர் செய்துவரும் நன்றியை மறந்து சாண் தண்ணீரில் மல்லாந்து விடுவது போலும், வெல்லமென்னும் வாயை நக்குவது போலும் சத்துருக்களின் சொற்பப் பிரயோசனத்தை நாடியவர்பாற் சேருவதாயின் உள்ள சுகமுங்கெட்டு கூடியசீக்கிரத்தில் நாசமடைவோம் என்பது சத்தியம். இதனை உண்மெய்க்கு உத்தாரமாய் நம்புங்கள், நம்புங்கள். பிரிட்டிஷ் ஆட்சியே என்றும் நிலைக்க வன்புகூறுங்கள் அன்பு கூறுங்கள்.

- 3:22; நவம்ப ர் 10, 1909 -