அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/098-383

விக்கிமூலம் இலிருந்து

94. கல்விகற்றும் மனோகலக்க விருத்தி உண்டாவதென்னோ

தற்காலம் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியினுட்பட்ட லண்டனிலும் இந்தியாவிலும், கல்வி கற்றவர்கள் நூற்றிற்கு ஒருவரிருவர் இருப்பினும் பிரிட்டிஷ் ஆட்சியின் நன்னோக்கத்தால் நூற்றிற்கு பத்து பதினைந்துபேர் கல்வி கற்றவர்களென்று கூறுதற்கு ஆதாரமாயிருக்கின்றது.

கல்வி கற்கக்கற்க கசடறுமென்னும் முதுமொழிக்கு மாறாக கற்கக்கற்க மனோகலக்கவிருத்தி பெற்றுக் கலகவிருத்தி செய்துவருகின்றார்கள்.

அதாவது லண்டனில் முன்பு கற்றறிந்த விவேகிகள் யாவரும் தேச விருத்தியையும், மக்கள் விருத்தியையும் மிக்கக் கருதி தாம்கற்ற பலனை அளித்துவந்தார்கள். தற்காலத்திலோ தாங்கள் கற்றக் கல்வியை வீண்கலகத்தில் உபயோகித்து தங்கள் தேசச்சீரையும் மக்கட்சீரையுங் கெடுக்க ஆரம்பிக்கின்றார்கள்.

அவைகள் யாதெனில், அன்னிய தேசத்தானொருவன் அவ்விடஞ்சென்று எங்கள் தேசத்தோரை ஐரோப்பியர்வந்து சீர்கெடுத்துவிடுகின்றார்களென்று கூறுவானாயின் அவன் வார்த்தைகளை மெய்யென்று நம்பிக்கொண்டு கட்சி பிரிதிகட்சிகளை ஏற்படுத்தி வீண்வாதங்களை வளர்த்து ஒருவருக்கொருவர் மனத்தாங்கலைப் பெருக்கித் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே காலென்று சாதிக்க ஏற்படுகின்றார்கள்.

அத்தகைய சாதனைப் புருஷர்கள் எவனால் எத்தேசம் சீர்கெடுகிறதென்று கேழ்விப்படுகிறார்களோ அத்தேசத்திற்கே நேரிற்சென்று ஐரோப்பியர்களால் நாளுக்கு நாள் அத்தேசம், சீரும் சிறப்பும் பெற்று வருகின்றதா அன்றேல் முன்னிலையினுஞ் சீர்கெட்டுவருகின்றதாவென்று ஆய்வதுடன் அத்தேசக்குடிகளை அத்தேசத்தோரே பாழ்படுத்தி சீர்கெடுக்கின்றார்களா, ஐரோப்பியர்களால் சீர்கெடுகின்றார்களா என்றாராய்ந்து பேசுவார்களாயின் சகலரும் சீர்பெறுவார்கள்.

அங்ஙனமின்றி ஒருவர் சொல்லும் வார்த்தையை ஏற்றுக்கொண்டு ஒருவர் சார்பாய்ப் பேச ஆரம்பிப்பதால் கற்றக் கல்வியினளவும் நில்லாது மனோகலக்கத்தை மேலுமேலும் விருத்தி செய்துக்கொள்ளுகின்றார்கள்.

கல்வியில் மிகுத்தப் புருஷர்கள்தான் இவ்வகை மனோகலக்கத்தில் இருக்கின்றார்களென்னினும் கல்விகற்ற இஸ்திரீகளோ அவர்களினும் மிக்க மனோகலக்கமுற்றிருக்கின்றார்கள். அஃது யாதெனில், ஓட்டுக்கொடுக்கும் விஷயங்களிலும், சங்கங்களில் அங்கங்களாக சேரும் விஷயங்களிலும் கல்லுகளை எடுத்து கண்ணாடி ஜன்னல்களை உடைப்பவர்களும், கதவுகளை உடைத்து உள்ளுக்கு நுழைகிறவர்களுமாகிய மனோகலக்கமுற்றிருக்கின்றார்கள்.

ஐரோப்பாகண்ட புருஷர்களிற் சிலரும் இஸ்திரீகளிற் சிலருந் தாங்கள் கற்றக்கல்வியின் பயனை மனோகலக்கத்தில் விட்டு வாய்வாதங் கைவாதங்களை செய்துவந்தபோதிலும் இந்தியாவிலுள்ளப் புருஷர்களிற் சிலரோ வெடி குண்டின் விஷயத்தில் கற்றக்கல்வியை விடுத்து மனோகலக்கத்திற்குள்ளாகி மற்றுமுள்ளக் குடிகளையும் இராஜவிரோதத்திற்கு உள்ளாக்கி சீர்கெடுக்கப் பார்க்கின்றார்கள்.

இத்தகைய கற்றபலன் கலகத்திற்கேதுவாவதேதெனில், “கண்டுபடிப்பதே படிப்பு மற்றப்படிப்பெல்லாம் தெண்டபடிப்பென்னறி” என விவேகிகள் கூறியுள்ளவாறு நீதிநெறி ஒழுக்கங்களை யூட்டுங் கலைநூற்களைக் கற்றுத் தேறாது ஓர் கடவுளிருந்து உலகத்தைப் படைத்து அதினால் மிக்கக் கவலையும் பட்டார், பாடும் பட்டாரென்னுங் கட்டுக்கதைகளும், ஓர் கடவுள் அறியாதனத்தால் உலகை படைத்து அதிலொருவனைக் கொல்ல ஆமையாய்ப் பிறந்தார், மற்றொருவனைக்கொல்ல ஊமையாய்ப் பிறந்தாரென்னுங் கட்டுக் கதைகளும், மற்றோர் கடவுள் அனாதியாயிருந்து ஆதியாயிருந்த மற்றோர் மனிதனைக் கொல்ல ஆதியாய யானை தலைமகனை அநுப்பினார், பூனைதலை மகனை அநுப்பினாரென்னுங் கட்டுக்கதைகளையும் வாசித்து கலக்கத்திற்குள்ளாயதுடன் ஒருவன் பாகங் கொடுக்காவிட்டால் ஊராரெல்லோரையுங் கொல்லும் கதைகளையும் ஒருவன் மனைவியை மற்றொருவன் எடுத்துப்போய் விட்டால் அவன் ஊராரெல்லோரையுங் கொல்லுங் கதைகளையும், ஊராரெல்லோரும் அக்கிரமஞ்செய்தால் அவர்கள் குற்றத்திற்காக ஒருவரை பிடித்துக்கொல்லுங் கட்டுக்கதைகளையும், சிறுபோதினின்று வாசித்து வருங்கால் சீவகாருண்யமும் நீதிநெறிமாற்று கற்றக் கல்வியால் பொய்யை மெய்யாகச் சொல்லும் வல்லபமும் அவனை வெல்லுவதால் பலனுண்டு, கொல்லுவதால் பலனுண்டென்னும் விதண்டவாத மனோகலக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.

இத்தகையக் கெடுதிகளுக்கெல்லாம் காரணகர்த்தர் யாவரென்பீரேல், மதக்கடைகளைத் திறந்து சாமியென்னுஞ்சரக்குகளைப்பரப்பி எங்கள் தேவனே தேவன் எங்கள் மதமேமதமென வியாபாரஞ்செய்து அதினால் சீவிக்கும் பொய்க்குருக்களேயாகும்.

பொய்க்குருக்கள் யாரென்றும் தேறவிசாரித்தறிந்து பொய்யர்கள் போதகங்களை அகற்றி மெய்யர்களின் நீதிநெறியினின்று கலைநூற்களைக் கற்றுத்தெளிவார்களாயின் இராஜவிசுவாசமும், இராஜ நீதிநெறிகளிலன்பும், இராஜவாட்சியில் ஒடுக்கமும், இராஜவாளுகையில் அமைதியுமுற்று சுகித்திருப்பார்கள். அங்ஙனமின்றி இராஜகீயவதிகாரிகள் யாவரும் நீதிநூற்களை வாசித்து நீதியின் செங்கோலை நடாத்திவருங்கால் அநீதி நூற்களை வாசித்து அநீதிவாக்கியங்களை மெய்யென்றிருப்போருக்கு நீதிநெறியாம் பிரிட்டிஷ் ராட்சியபாரம்மிக்கக் கடினமாகவே விளங்கும்.

எவ்வகையில் என்பீரேல், பொதுவாயுள்ள ஓர்குளத்தில் சில மனுமக்களை சுத்தசல மொண்டு குடிக்கவிடாமற் செய்யுங் கூட்டத்தோர் முன்பு வீதிவீதிக்குக் குழாய் ஜலங்களை விடுத்து சகலருஞ் சுகமாக நீரருந்துங்கோள் என்றால் முன்பு சுத்தஜலமொண்டு குடிக்கவிடாமற் செய்துவந்தவர்களுக்குக் குழாய்ஜலம் விடுத்து சகலரையும் சுகமாக நீரருந்தவைத்த இராஜாங்கம் விரோதமாகத் தோன்றுமா அவிரோதமாகத் தோன்றுமா, கண்டறிந்து கொள்ளுங்கள், கண்டறிந்துகொள்ளுங்கள்.

- 3:25: டிசம்பர் 1, 1909 -