அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/097-383

விக்கிமூலம் இலிருந்து

93. வங்காளப் பத்திராதிபரே கேண்மின்

வடநாட்டு பெங்கால்பத்திராதிபரே தென்னாட்டார் திகைப்பை நோக்காததென்னோ ?

இந்தியர்களுக்குத் தற்காலங் கொடுத்துள்ள கௌன்சல் மெம்பர்களை யாங்கள் கேட்கவில்லை. ஐரோப்பியர்கள் இந்தியர்களை சமமாக நடத்தாமல் அதி கேவலமாக நடத்துகின்றார்களே அதை நீக்கும்படி கேட்டுள்ளோம்.

அவற்றை இராஜாங்கத்தோர் சீர்திருத்தாது கௌன்சல் மெம்பரை அதிகப்படுத்தினாலும் படுத்திக்கொள்ளட்டும் இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்தவேண்டுமென்று கேட்கின்றீர். அவ்வகை சமரசங் கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும், பறையனென்றும் வகுத்துள்ள பொய் சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. பார்ப்பானென்பவனும் இந்துதேச மனிதவகுப்பைச் சார்ந்தவன் பறையனென்பவனும், இந்துதேச மனிதவகுப்பைச் சார்ந்தவன். இவ்விருவரும் ஒரு தேசக் குடிகளாக இருந்து கொண்டு ஒருவர் சுகமடைவதுபோல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகலவிஷயங்களிலுந் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும் வருவதையும் உணராது ஐரோப்பியர் மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ.

புத்ததன்மத்தின்படி அவனவன் செய்த கன்மங்களை அவனவன் அநுபவிக்கவேண்டுமென்னுங் கன்மபலனை தாங்கள் அறிந்திருந்தும் ஐரோப்பியர்கள் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்பது நீதியாமோ பார்ப்பானுக்குள்ள சமரச சுதந்திரம் பறையனுக்கு எப்போது ஏற்படுகின்றதோ அப்போதே ஐரோப்பியர்களுக்குள்ள சமரச சுதந்திரம் மற்றவர்களுக்குங் களங்கமற ஏற்படும்.

சொற்ப சுதந்திரம் இந்தியர்களுக்குக் கொடுத்துள்ளவிடத்தில் இந்திய ஏழைகள் படும் கஷ்டங்களை சற்று நோக்குவீராக. ஓர் பார்ப்பான் இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராயிருந்து மற்றோர் பார்ப்பான் இனிஸ்பெக்ட்டராக வாயினும், தாசில்தாராகவாயினும் இருந்து தன் குடும்பத்தோரை ரயிலிலேற்ற வந்தபோது தங்களுக்கிடங்கிடையாமற் போமாயின் ஏழை இந்துக்கள் யாவரையும் வெளியில் இழுத்துவிட்டு தவிக்கச் செய்து தங்கள் குடும்பத்தோரை ஏற்றிவிடுகிறார்கள்.

ஏழைகள் அநுபவித்துவரும் குளங்குட்டை தங்களுக்கு வசதியாகத் தோன்றுமாயின் சாதித்தலைவர்களாம் அதிகார உத்தியோகஸ்தர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு ஏழைகளை ஊரைவிட்டே ஓட்டி குளங்குட்டைகளைத் தங்கள் வசப்படுத்திக் கொள்ளுகின்றார்கள்.

ஏழைகள் பார்ப்பார்கள் பூமியை இலவசமாக உழுது பயிர் செய்யாமல் தங்கள் பூமிகளை மட்டிலும் சீர்படுத்திக் கொண்டிருப்பார்களாயின் அதிகாரப் பார்ப்பார் ஆதரவைக்கொண்டு உள்ள பூமியையும் விட்டோட்டி விடுகின்றார்கள்.

இவ்வகையாய் பார்ப்பான் வீட்டு பல்லிமுட்டை , பறையன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும் அதிகாரத்திலிருப்பதை பெங்கால் பத்திராதிபர் கண்ணோக்கி சீர்திருத்தாது ஐரோப்பியரை நிந்திப்பதால் யாதுபயன். தாங்கள் ஐரோப்பியர்களின் மீது கூறியுள்ள குறைகளில் பதின்மடங்கு குறை சாதித்தலைவர்களால் தாழ்த்தப்பட்ட சாதியோர்களை நடத்தி வருகின்றார்கள்.

இத்தகையக் கன்மத்துக்கீடாய் பெரிய சாதிகளென்போர் பிரிதிபலன் பெருவதைப் பத்திராதிபர் அறியாது ஐரோப்பியரை நிந்திப்பது அழகின்மெயேயாம்.

இத்தேசத்தோருக்குள்ள சுவாபம் யாதெனில், சாதித்தலைவர்களாய் ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு சகல சாதியோரும் அடங்கி வாழ்வார்களாயின் அதிக சந்தோஷம். இராஜாங்கத்தோரும் அதை அநுசரித்தே நடந்துக்கொள்ளவார்களாயின் அதனினு மிக்கசந்தோஷம்.

அலைகள் யாவற்றையும் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் கவனியாது தாழ்ந்தசாதியோனும் மனிதனே, உயர்ந்த சாதியோனும் மனிதனேயென்று சமரசமாக நடாத்தி வருவதில் முன்னிருந்ததுபோல் தங்களை சற்று உயர்த்திக்கொள்ள வழிதேடுகின்றார்கள்.

அத்தகைய வழி தங்களால் தாழ்த்தப்பட்டவர்களை எக்காலத்து உயர்த்துகின்றார்களோ அக்காலத்தில் தான் அவ்வழி திரந்து சமரசுகத்தைக் கொடுக்கும். இதன் மத்தியில் அதன் சுகங் கிடைக்காதென்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 3:24: நவம்பர் 24, 1909 -