அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/096-383

விக்கிமூலம் இலிருந்து

92. வர்ஜனஞ்செய்தால் வழிவிடும்போலும்

அந்தோ, நம்தேயத்தில் சூத்திரரென்று வழங்கப்படுவோர் (வர்ஜனமென்னும்) அந்நியதேச சரக்குகளை பாய்க்காட் செய்தல் அதாவது அந்நியதேசத்தோர் சரக்குகளை வாங்குவதில்லையென்று நிபந்தனை செய்வதுடன் கண்டிப்பாக வாங்காமலிருப்பார்களானால் அந்த சூத்திர சாதியோரை பிராமண சாதிகளென்போர் உயர்த்திவிடப்போகின்றார்களாம்.

அவ்வகையாய் பிராமணர்கள் என்போர் வார்த்தைக்கு இசைந்து சூத்திரர்கள் என்போர் அந்நியதேச சரக்குகளை பாய்காட் செய்து விடுவார்களாயின் அச்சூத்திரரை வைசியராக்கி விடுவார்களோ, க்ஷத்திரியராக்கி விடுவார்களோ அன்றேல் பிராமணர்களாகத்தான் செய்துவிடுவார்களோ விளங்கவில்லை.

அல்லது பிராமணர்கள் என்போர் யாவருங் கூடிக்கொண்டு வைசியர்களை அழைத்து நீங்கள் சூத்திரர்களை சேர்த்துக்கொள்ளுங் கோள் என்றால் அவர்கள் செத்தாலும் சேர்க்கப்போகிறதில்லை, க்ஷத்திரியர்களை அழைத்து நீங்கள் சூத்திரர்களை சேர்த்துக் கொள்ளுங்கோளென்று கூறுதற்கு பரசுராமன் கதைபடிக்கு க்ஷத்திரியர்கள் இல்லையென்றே விளங்குகின்றது. ஆதலின் சூத்திரர்கள் பிராஹமணர்கள் சொல்லிக் கேட்பார்களாயின் பிராமணர்களின் வார்த்தைபடி சூத்திரர்களை பிராமணர்களாகத்தான் சேர்த்துக் கொள்ளவேண்டும். அங்ஙனம் சூத்திரர்களை பிராமணர்களாக உயர்த்தி விடுவதற்கு எந்தத் தென்னாட்டு ராமையர், வடநாட்டுராமையர் குருவாகத் தோன்றுவரோ அதுவும் விளங்கவில்லை. தற்காலம் உள்ள பிராமணர்களுக்குள்ளாகவே நூற்றியெட்டுக்கிளைகள் பிரிந்து குறுக்குப்பூசு பிராமணனைக் கண்டால் நெடுக்குப்பூசு பிராமணன் மொறுமொறுப்பதுமாகியச் செயல்களுள் சாதியில் சூத்திரனை பிராமணனாக உயர்த்திக் கொண்டால் மதங்களில் அச்சூத்திரனை எம்மதமாக உயர்த்திவிடக்கூடும். சாதிப்பிரிவினை வைத்துள்ளோர்க்கு எம்மதமும் சம்மதந்தான் என்பாராயின் ஒருமதத்துள் வடகலை தென்கலையென்னுஞ் சண்டைகளுண்டாகி மண்டைகள் உருளுமோ. சிவமத விஷ்ணுமதச் சண்டைகளால் அபராதங்கள் நேரிடுமோ. இத்தகைய பேதத்தால் சூத்திரனை பிராமணனாக உயர்த்திக் கொண்டபோதிலும் மதத்தில் உயர்த்திக்கொள்ளுவதற்கு ஆதாரம் ஏதுமில்லையென்பது துணிபு.

தற்காலமுள்ள பிராமணர்களுள் ஒருவர் வீட்டில் ஒருவர் புசியாமலும், ஒருவர் பெண்ணை மற்றொருவர் கொள்ளாமலும் இருக்கின்றபடியால் சூத்திரனை பிராமணனாக உயர்த்தி குடிமியும் பூநூலுங் கொடுத்து விட்டபோதிலும் சூத்திர பிராமணன், சூத்திரபிராமண னென்றே சொல்லிக்கொண்டே வருவார்களாயின் இவர்களை உயர்த்தி விட்டப் பயனென்னை.

சூத்திரரென்று அழைக்கப்பெற்ற சோதரர்களே, சாதிபேதமென்னும் பொய்யாகிய அழுக்கின் மூட்டையை இங்குதான் சற்று அவிழ்த்துப்பார்க்கக் கோறுகிறோம்.

தற்காலம் பிராமணர்களென்று பெயர் வைத்துள்ளவர்கள் ஒன்றுகூடி சூத்திரர்களை உயர்ந்த சாதிகளாக்கிவிடுவதாய் வெளிதோன்றியுள்ளவர்களின் வார்த்தைகளைக் கொண்டே இப்பிராமணர்களென்று வேஷமிட்டுள்ளோர் தந்திரங்களினால்தான் பொய்யாகிய சாதிபேத வரம்புகளை வகுத்துவைத்திருக்கின்றார்களென்பதை எளிதில் அறிந்துக்கொள்ளுங்கள்.

சூத்திரர்களை உயர்த்தும்படியான அதிகாரம் எப்போது அவர்களிடமிருக்கின்றதோ அப்போதே அவர்களுக்கு எதிரிகளாயுள்ளவர்களை சூத்திரனினுங் கடையாகத் தாழ்த்திப் பாழ்படுத்தும் அதிகாரமும் அவர்களிடத்து இருப்பதாக விளங்குகின்றது.

சூத்திரர்களென்று அழைக்கப்படுகிறவர்களே, நம்மெய்ப்போலொத்த மனிதன் ஓர் பயந்திரக் கருவியைப்போல் நம்மெல்லோரையும் உயர்த்தவும் தாழ்த்தவு மிருப்பானான் அவனாக்கினைக்கு உட்பட்டவன் மரக்கருவி, இரும்புக் கருவிக்கு ஒப்பானவனா இருப்பானன்றி மநுரூபியல்லவென்று விளங்குகின்றது.

மநுரூபிகளாயின் சகலதேச மக்களும் எவ்வதை விவேகவிருத்திப்பெற்று தன்னிற்றானோ எவ்வகையால் உயர்ந்துவருகின்றார்களோ அவ்வகையாக உயர்ந்து கீர்த்திப் பெறுவார்கள். அங்ஙனமின்றி ஒருவன்வுயர்த்தவும், மற்றொருவன் உயர்வானென்பதில் சொல்லில் மட்டும் உயர்வு தாழ்வென்னும் பேதம் விளங்குமேயன்றி குணத்திலும் அநுபவத்திலும் வெறும் மொழியேயாகும்.

இச்சமய யுக்த்த கதைகளால் பிராமணர்களென்று பெயர் வைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காகவும், தங்கள் சுகஜீவனத்திற்காகவும், சாதிபேத சமயபேதக் கட்டுக்களை ஏற்படுத்திவைத்துக்

கொண்டு “உப்புமிஞ்சினால் தண்ணீரும், தண்ணீர் மிஞ்சினால் உப்பும்” என்பது போல் கருணை தங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் பிராமணர்களென்போர் மீது சற்று கருணை வைத்து காரியாதிகளை நடத்திவருமளவும் தங்கள் பிராமணசாதியே உயர்ந்த சாதி மற்றசாதிகளெல்லாம் தாழ்ந்த சாதியென்று நீக்கிக்கொண்டு தங்கள் சாதியோர்கள் மட்டிலும் சுகமடையும் வழிகளை ஏற்படுத்தி வந்தார்கள். நாளுக்குநாள் இவர்கள் சுயப்பிரயோசனச்செயலைக் கண்ணுற்றுவந்தக் கருணை தங்கிய ராஜாங்கத்தார் சகலசாதியோரும் முன்னுக்கு வரவேண்டிய ஏதுக்களை செய்ய ஆரம்பித்ததின்பேரில் ஆங்கிலேயர்களுக்கு எதிரடையாய் காரியாதிகளை நடத்துவதற்காக வேண்டி முன்பு தாழ்ந்தவர்களென்று கூறி வந்த சூத்திரர்களென்போரை உயர்ந்தவர்களென்று கூறி தங்களுடன் சேர்த்துக் கொள்ள ஆரம்பிக்கின்றார்கள்.

இத்தகைய சமயபேத தந்திரச்செயல்களைக்கொண்டே சாதிபேதக் கட்டுக்கதா வகுப்புகள் யாவும் பொய்யென்று கருணைதங்கிய ராஜாங்கத்தார் கண்டு ஏழைகளை ஈடேற்றுவார்களென்று எதிர்பார்க்கின்றோம்.

- 3:23: நவம்பர் 17, 1909 -