அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/111-383

விக்கிமூலம் இலிருந்து

107. டாக்டர் டி.எம் நாயர்

டாக்டர் டி.எம். நாயரவர்கள் இந்துக்களுடைய குணங்களைப்பற்றி சென்ற வாரத்திய இங்கிலீஷ் பத்திரிக்கைகளில் வெளிப்படுத்தினதை நாம் கவனிக்கும்போது அவர் உத்தமமாக இவர்களுடைய குணத்தை தெரியப்படித்தினதினால் நாம் சந்தோஷப்பட வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில், இந்துதேசத்திலிருக்கும் ஜனங்கள் தாங்கள் சொன்ன வார்த்தையின் படி நடக்காதிருப்பது சகஜமான குணம். இவ்வகைத்தான குணங்களை உடையவர்களுக்கு நல் அந்தஸ்தும், அதிகாரமுமுள்ள உத்தியோகங்களைக் கொடுப்பதினால் என்ன துன்பம் மற்றவர்களுக்கு லேசாக நேரிடுமென்பதற்கு நாம் கூறவேண்டியதில்லை. ஏனெனில், இவர்களுக்கு மற்றவர்களிடத்தில் அன்பு இல்லாததினால் இம்மாதிரியான குணம் பதியப்பட்டிருக்கின்றன. இப்படி அன்பில்லாதவர்களுக்கு சுயராட்சியம் கொடுத்தால் இவ்வூர் ஜனங்களுக்கும், சுயராட்சியம் கொடுக்கப்பட்ட இங்கிலீஷ் கவர்ன்மெண்டாருக்கும் ஏதுகெடுதி உண்டாகுமோ நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. சில இங்கிலீஷ் கனவான்கள் நாயருக்கு உறுதிவாக்களித்தபடி கடைசி வரையிலும் அவ்வார்த்தையைக் காப்பாற்றி கடையில் ஒட்டிங் சமயத்தில் அவர்களுடைய உறுதிவாக்கை நிறைவேற்றினார்கள். இப்பேர்பட்ட குணமல்லவோ அதிகாரம் செலுத்தும் உத்தியோகஸ்தர்களுக்கு இருக்க வேண்டியது. அப்படியுள்ள குணங்களையுடைய உத்தியோகஸ்தர்களிடத்தில், கவர்ன்மெண்டைக் கொடுத்தாலல்லவோ சீராய் நடைபெறும்.

டி.எம். நாயர் முனிசிபல் விஷயங்களில் அதிகமாக ஊக்கமெடுத்து நுழைந்து சகலவிதமான காரியங்களையும் பார்த்ததில் அவருக்கு நல்லபெயர் கிடைக்காதபோதிலும் அநேக கீழான முனிசிபல் உத்தியோகஸ்தர்களுக்கு அவர் ஒரு நியாயவாதியாயிருந்தார். அவர் நடத்திவந்த முனிசிபாலிட்டிக்காக செய்த வேலையை அநேக ஜனங்கள் அங்கீகரித்து இருக்கிறார்கள். ஆனால் அவரை அநேக முனிசிபல் கவுன்சிலர்கள் பிரியப்படவில்லை. ஏனெனில் அவர் மற்ற சில முனிசிபல் கமிஷனர்களைப் போலத் தங்களுடைய பெருமெயை நாடி தமது ஆசனத்தில் வெறுமனே உழ்க்கார்ந்துவர சேரவில்லை. ஆனால் ஜனங்களுடைய சுகத்தை நாடி சேர்ந்தவர். அவர் இங்கிலாந்துக்குப்போய் அவ்விடத்திலிருந்து வாசித்து ஆங்கிலேயர்களுடைய நடை உடை பாவனைகளைப் பின்பற்றினவரானபடியால் அவருக்கு ஆங்கிலேயர்களுக்குள் உண்டாகும் பொது ஊக்கம் இவருக்கும் உண்டாயிருக்கிறது. நேடிவ் முனிசிபல் கவுன்சிலர்கள் அவர்கள் முனிசிபல் கமிஷனர்களாகிற வரையிலுந்தான் அவர்களுடைய இலாகாவிலுள்ள ஜனங்களைப் பார்ப்பதும் அப்படி இப்படி செய்வோமென பகர்வதும் உண்டு. முனிசிபல் கமிஷனர்களானவுடனே அந்த இடங்களுக்கும் வருவதில்லை, அந்த ஜனங்களையும் பார்ப்பதில்லை. முனிசிபாலிடியாரால் அவர்களுக்கும் அவர்களுக்குப் பிரியமானவர்களுக்கும் வேண்டிய காரியங்களைப் பார்த்துக்கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் ஆங்கிலேயர்களோ முனிசிபல் கமிஷனர்களாக இருந்தால் அவர்களுடைய இலாக்காவில் அடிக்கடி சென்று பார்த்துக்கொண்டும், ஜனங்களை விசாரித்துக்கொண்டும் இருந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம். இம்மாதிரி யாகவே டி.எம். நாயரவர்களும் செய்து வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம்.

டி.எம் நாயர் வெளிப்படுத்திய குணங்களையுடைய லெஜிஸ்லேடிவ் கவுன்சில் நேடிவ் மெம்பர்கள் தங்களுக்கும், தங்கள் பந்துமித்திரர்களுக்கும் உண்டாகும்படியான சுகத்தைச் செய்வார்களேயொழிய ஜனங்களுக்கு பொதுவான சுகத்தைச் செய்விப்பார்களென்று நாம் கிஞ்சித்தும் நினைக்க இடமேயில்லை. இவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயர்களுக்கே லெஜிஸ்லேடிவ் மெம்பர்களாக லார்ட் மார்லி ஸ்கீமில் ஏற்படுத்தியிருப்பாராயின் இந்தியாவுக்கு மிகுந்த சுகமும், ஆறுதலும் உண்டாகுமென்பதற்கு யாதொரு ஆட்சேபனையில்லை.

சாதிபேத மிக்கோர் வசத்திலும், சமயபேத மிக்கோர் வசத்திலும் பிரிட்டிஷ் பிரதம உத்தியோகங்களைக் கொடாமலிருப்பதே குடிகளுக்கு சுகமாகும். ஆதலின் பிரிட்டிஷ் ஆட்சியார் இவற்றைப் பெரும்பாலும் கண்ணோக்கி சாதிபேதமற்றோரை ஆதரிக்கப் பிராத்திக்கின்றோம்.

- 3:32; சனவரி 18, 1910 -