அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/134-383

விக்கிமூலம் இலிருந்து

130. தேசம் சீர்கெடுவதற்கு மதமும் சாதியுமே காரணமோ

அநுபவத்தில் அறிந்துக்கொள்ள வேண்டியதேயாம். அதாவது ஓர் ஜவுளிக்கடை வியாபாரி சீட்டிகளைப் பரப்பிக்கொண்டு என் சரக்கே சரக்கு சீர்மெய்சரக்கு, என் சரக்கே சரக்கு சுதேசி சரக்கெனக் கூறி வியாபாரத்தை விருத்தி செய்துக்கொள்ளுவதுபோல மதக்கடை வியாபாரிகள் கோவில் கோவிலென்னும் பொருளற்றக் கட்டிடம் வகுத்துக்கொண்டு அதனுட்பலவகை விக்கிரகங்களைப் பரப்பி அந்தசாமி இந்த பாடுபட்டார், இந்தசாமி அந்த பாடுபட்டார், இந்தசாமி அவன் தலையை வெட்டி விட்டார், அந்தசாமி இவன் வயிற்றைக் கிழித்துவிட்டார் ஆதலின் எங்கள் மதமே மதம், நேரே மோட்சம் போகும் மதம், எங்கள் மத தேவர்களே தேவர்கள் எல்லோரையும் காப்பாற்றும் தேவர்களெனக்கூறி தங்கடங்கள் மதக்கடைகளை விருத்திசெய்து அதன் ஏதுவால் சீவிப்போர் உங்கள் சிரம்போகும் அபாயம் நேரிடுமானால் எங்கள் சாமிக்கு பொன்முடி கொண்டுவந்து செலுத்துங்கள், வெள்ளிமுடி கொண்டுவந்து செலுத்துங்கள், வியாதிகண்டவர்கள் கண்ணைப்போலக் கண், காலைப்போலக் கால் வெள்ளியிலேனும், பொன்னிலேனும் கொண்டுவந்து செலுத்துங்கள், சாமிக்கு சாப்பாட்டு சிலவாம் அன்னாபிஷேகச் சிலவுக்குப் பணம் கொடுங்கள், அந்த சாமியை வேண்டிக்கொள்ளப் பணம் கொடுங்கள், இந்த சாமிக்குப் பூசைப்போட பணங்கொடுங்கள் எனக் காணிக்கைக் கொண்டு சீவிக்கும் மதக்கடை வியாபாரிகள் அதிகரிக்கவதிகரிக்க அவர்கள் குடும்பத்தில் அனந்த சோம்பேரிகள் சேர்ந்துவிட்டதுடன் அம்மதக்கடையோர் சொற்களை நம்பி மோசம் போனவர்களும் பெருஞ்சோம்பேரிகளாகி பூர்வபூமி விருத்திகளையும் கைத்தொழில் விருத்திகளையும் விவேகவிருத்திகளையும் மறந்து அந்தசாமி காப்பாற்றுவான் இந்த சாமி ஈடேற்றுவானென்னும் பெருஞ் சோம்பேரிகளாய் தங்கள் சுயமுயற்சியும் சுயக்கியானமுமற்று திகைத்து நிற்கின்றார்கள். அங்ஙனம் சிலர் முயன்று பூமிவிருத்தி செய்ய ஆரம்பித்த போதினும் வித்தியா விருத்திசெய்ய ஆரம்பித்தபோதினும் தங்கள் யுக்தியையும் முயற்சியையும் பெருக்குவதை விடுத்து இந்த சாமிக்கு வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கவேண்டும், அந்தசாமிக்கு பூசைசெய்து ஆரம்பிக்கவேண்டுமென்னும் அஞ்ஞானத்தினால் எடுத்த முயற்சிக்குன்றி ஈடேற்ற மற்றுப்போகின்றார்கள்.

சுயநலம் பாராட்டும் மதக்கடை சோம்பேரிகளின் பொய்யை மெய்யென நம்பி நிற்போர் தற்கால பிரிட்டிஷ் ஆட்சியில் விவேகமிகுத்த மேலோர்களாம் ஆங்கிலேயர்களுள் இரயில்வே வித்தையை ஆரம்பிக்குங்கால் எந்தசாமியை வேண்டிக் கொண்டார், எந்தசாமிக்குப் பூசைபோட்டார், டெல்லகிராப் வித்தையை ஆரம்பித்தவர் எந்தசாமியை வேண்டிக்கொண்டார், எந்தசாமிக்குப் பூசைபோட்டார். டிராம்வே வித்தையைக் கண்டுபிடித்தவர் எந்தசாமியை வேண்டிக்கொண்டார், எந்தசாமிக்குப்பூசை போட்டார். யாதுமின்றி தங்கள் தங்கள் அறிவையே மேலுமேலும் விருத்திசெய்து தங்கள் உழைப்பைப் பாராமலும், பசியை நோக்காமலும், கண்டுஞ்சாமலும் எடுத்தவித்தையை முடித்து தாங்கள் குபேரசம்பத்தை அடைவதுடன் அவ்வித்தையைப் பின்பற்றினோரும் சுகமடைந்துவருகின்றார்கள்.

மதக்கடை பரப்பி சீவிக்கும் சந்ததியோரும் அன்னோர் வார்த்தையை நம்பி நடப்போரும் தங்கள் சுயமுயற்சியையும் அறிவின் விருத்தியையும் விடுத்து பூமியைத் தாங்க ஆதிசேஷனை ஆளாக்கிக்கொண்டதுபோல் தங்கள் வித்தியாவிருத்தியையும், விவேக விருத்தியையும் ஒட்டுக் கொடுத்துத் தாங்கவோர் ஆண்டவனைத் தேடுகிறபடியால் அந்த ஆண்டவனும் உய்த்து நோக்கி இந்த சோம்பேரிகளிடம் போனால் எல்லாபாரத்தையும் நம்மெய் சுமக்க விட்டுவிடுவார்கள். ஆண்டவன்தான் எல்லாம் பார்த்துக்கொள்ளுவாரென்று தூரமும் போய்விடுவார்களென்று இவர்கள் சோம்பலை உணர்ந்த ஆண்டவனும் தூரவிலகிநிற்க, முயற்சியில்லாது எடுத்த வித்தைகளும் பாழாகி நாளுக்குநாள் தேசமும் சீர்கெட்டேவருகின்றது. இத்தகைய நூதன மதக்கடை வியாபாரிகளால் இந்துதேசங் கெட்டழிந்துவிடுவதன்றி நூதன சாதிபேதக் கட்டுக்களாலும் அழிந்து சீர்கெட்டு வருகின்றது.

எவ்வகையிலென்னில் பெரியசாதியென்னும் ஓர்பெயரை வைத்துக் கொண்டு அவன் பொய்யனாயிருந்தாலும் பெரியசாதி, திருடனாயிருந்தாலும் பெரியசாதி, குடியனாயிருந்தாலும் பெரியசாதி, விபச்சாரியாயிருந்தாலும் பெரியசாதி, கொலைஞனாயிருந்தாலும் பெரியசாதி, அவன் பஞ்சமாபாதகம் நிறைந்திருந்தாலும் பெரியசாதி பெரியசாதியே என்பர்.

சிறியசாதியென்னும் ஓர் பெயரை வகுத்துவிட்டு பொய்சொல்லா மெய்யனாயிருப்பினும் அவன் சிறிய சாதி, களவு செய்யா யோக்கியனாயிருப்பினும் அவன் சிறியசாதி, கொலை செய்யா சீவகாருண்ணியனாயிருப்பினும் அவன் சிறிய சாதி, கள்ளருந்தா நிதானபுருஷனாயிருப்பினும் அவன் சிறியசாதி, விபசாரமற்ற உத்தமபுருஷனாயிருப்பினும் சிறியசாதி, பஞ்சசீலம் நிறைந்த தேவநிலை வாய்த்தோனாயிருப்பினும் சிறியசாதி, வித்தியாவிருத்தி விவேகவிருத்தி பெற்றவனாயினும் சிறியசாதி, சிறியசாதியென்றே கூறி தாழ்த்தி வரும் பொறாமெய்ச்செயலினால் வித்தியாபுருஷர்களும், விவேகமிகுத்தோர்களும் பெரியசாதியென்னும் பொய்யர்களால் நசிந்து நாளுக்குநாள் சீர்குலைந்து போகின்றபடியால் இந்துதேசமும், சீர்கெட்டு நாளுக்குநாள் சிறப்பழிந்து வருகின்றது.

இதற்குப் பகரமாய் புத்தரது தன்மம் இந்துதேச முழுவதும் நிறைந்திருந்த காலத்தில் வித்தியாவிருத்தியும் கைத்தொழில் விருத்தியும் சிறப்புற்றிருந்ததுபோல் தற்காலம் மதக்கடைபரப்பி சீவிப்போர்காலத்தில் உண்டாவென்பதை உய்ந்துணர்வாராயின் ஒவ்வோர் சீர்கேடும் பரக்க விளங்கும். ஆதலின் இந்துதேச சீர்கேட்டிற்கு மதங்களும் சாதிகளுமே காரணமென்று கூறியுள்ளோம்.

- 3:46; ஏப்ரல் 27, 1910 -