உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/139-383

விக்கிமூலம் இலிருந்து

135. சாதிபேத மற்ற திராவிடர்களும் பூமியின் சுகங்களும்

பூமியை திருத்தியாளும் சாதிபேதமில்லா வேளாளத் தொழிலுள்ளார்க்கு பறையனென்னுமோர் சாதிப்பெயரைக் கொடுத்து சாதிபேதம் வைத்துள்ளார்க்கு அவனைத் தாழ்ந்த சாதியானென வகுத்து சகல விருத்தியிலும், அவனை தலையெடுக்கவிடாமல் நசித்து குண்டியிற் கோமணமுங் கோலுங் குடுவையுமாக விடுத்து கொல்லாமற் கொன்று வந்தவர்கள் மத்தியில் பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் கிஞ்சித்து பூமிசுகம் அநுபவிக்கவேண்டுமாயின் கொஞ்சத்திற் கைகூடுமோவென்றுவிழிக்கின்றார்கள்.

அதாவது பூமியை உழுது பண்படுத்தி சீருக்குக் கொண்டுவருகிறவர்கள் பறையர்களென்றே ராஜாங்கத்தாருக்குத் தெரிந்துள்ளபடியால் காலிபூமிகள் எங்கிருக்கின்றதோ அவைகளைப் பறையர்களுக்கே கொடுக்கவேண்டுமென்னுங் கருணைதங்கிய ஓர் சட்டமும் வகுத்திருக்கின்றார்கள். அத்தகைய பூமிகளை மிஷநெரி துரை மக்கள் ஏதேனுங் கண்டறிந்து வாங்கிக்கொடுத்து அவர்களது கண்ணோக்கம் கிஞ்சித்திருக்குமாயின் அப்பூமியின் சுகத்தைப் பெறுவார்களன்றி தாங்களேமுயன்று அநுபவிக்கும் பூமிகள் கிடையாவாம்.

காரணமோவென்னில் இத்தேசத்தில் நூதனமாக சாதிகளை உண்டு செய்து கொண்டவர்கள் தங்களுக்கு எதிரிகளாய் இருந்த விவேகிகளை மனிதர்களாக பாவிக்காது மிருகங்களினும் தாழ்ச்சியாக வகுத்து தலையெடுக்காமல் அழித்து வந்தவர்களாதலின் அவர்கள் முன்னிலையில் இவர்கள் சொந்த பூமிகளை வைத்து சுகம் பெற மனஞ்சகியாது எவ்விதத்தானுங் கெடுத்துப் பாடுபடுத்திவருகின்றார்கள்.

இவ்வெழிய மக்களோ கபடமற்றவர்களாதலின் தங்கள் சத்துருக்களின் மத்தியில் பூமியின் சுகம்பார்க்கப்போய் உள்ளசுகமுங்கெட்டு வாழ்ந்த ஊரையும்விட்டு வேறு தேசஞ் சென்று சுகித்துவருகின்றார்கள். சாதிபேதம் வைத்துள்ளவர்கள் பூமிகளை சாதிபேதமில்லார் உழுது பயிர் செய்து சுகமளித்து வந்தபோதிலும் அவருக்கு அரைவயிற்றுக் கஞ்சேனும் சரிவரக்கொடாது அவர்கள் செய்து வருங் கஷ்டவூழியத்திற்கு நன்றி பாராட்டாமலும் இருக்கின்றவர்கள் மத்தியில் சொந்த பூமியின் சுகமனுபவிப்பது மிக்க கஷ்டமேயாம்.

பூர்வக் குடிகளாம் திராவிடர்களை தாழ்த்தி நாசமடையச் செய்வதற்கே சாதிபேதத்தை உண்டு செய்துண்டவர்களாதலின் அவர்கள் சொந்த பூமிகளை வைத்துப் பயிர்செய்யவும் சுகம் பெற்று வாழ்கவும் மனம்பொறார்களென்பது திண்ணம்.

அதற்குப் பகரமாய்க் கருணைதங்கிய மிஷெநரி துரைமக்கள் இவ்வேழைக் குடிகளை சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவருவதைக்கண்டு அவர்கள் மனஞ்சகியாது அன்னோரை பத்திரிகைகளின் வாயிலாகவும், கூட்டங்களிலும் நிந்தித்துவருவதே சான்றாம்.

இப்போதும் சிலபூமிகளைவைத்துவந்தவர்கள் கிணறுகள் வெட்டி பூமியின் சுகம் பெறுவதற்கு கருணைதங்கிய ராஜாங்கத்தோர் பணவுதவி செய்துவருகின்றார்களென்றறிந்து (பாரம்) என்னும் கடிதம்வாங்கி எழுதிக் கொடுப்பது முநிஷிப்பிடமேனும் கணக்கனிடமேனும் போய்க்கேட்பதால் நெறுங்கிப் போகலாகாது. அவ்வகை நெறுங்கி அப்பாரத்தைக் கேட்டபோதும் உடனே கொடுப்பது கிடையாது. அதற்கு நாலைந்துநாளலைந்து அக்கடிதத்தை வாங்கி எழுதிக் கொடுக்கும்போது உத்தியோகஸ்தரை சந்தோஷப்படுத்திக் கேட்டால் மட்டிலும் காரியம் கைகூடும் சந்தோஷஞ் செய்யாவிட்டாலோ பாரம்வாங்கப்போகிறதில்லை. கிணறும் வெட்டப்போகிறதில்லை. அவ்வகை எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பணம் வாங்கினாலோ நூறு ரூபாய் வாங்குவதில் ஐம்பது ரூபாய் வீடு கொண்டுபோய் சேருவது அதிர்ஷ்டமாம். அவ்வைன்பது ரூபாயில் கிணறு வெட்டுவதும், நீர் காண்பதுமில்லாமல் அல்லலடைவதுடன் வாங்கிய பணத்தையும் கொடுப்பதற்கு வழியற்று நசிந்துபோகின்றார்களாம்.

ஆதலின் கருணை தங்கிய ராஜாங்கத்தார் இவ்வேழைக்குடிகளுக்கு பூமிகளை கொடுக்கும்படியான சட்டங்களை வகுத்துங் கஷ்டம். கிணறுவெட்டி நீர்பாய்ச்சி நலனடையப் பணவுதவி செய்தும் வீணாக முடிகிறபடியால் இவ்வெழியக் குடிகளின் மீது கருணைதங்கிய துரைமக்கள் கண்ணோக்கம் வைப்பது காட்சியும் அநுபவமுமாகும். அங்ஙனமின்றி சாதிபேதம் வைத்துள்ள உத்தியோகஸ்தர்களால் சட்டங்கள் சரிவர நிறைவேறுவதும் கஷ்டம் பூமிகள் விருத்தியடைவதுங் கஷ்டம். குடிகள் சுகம்பெறுவதும் கஷ்டம், கஷ்டமேயாம்

- 3:49; மே 18, 1910 -