அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/155-383

விக்கிமூலம் இலிருந்து

151. தலையாறியும் அவன் தொழிலும்

நாடுகளென்பது நஞ்சை தானியம் புஞ்சை தானியம் இரண்டும் விளையக்கூடிய பூமியின் பெயராம். அத்தகைய பூமியின் விளைவுகளைப் பாதுகாத்தலும், ஏரி முதலிய ஜலவசதிகளைப் பார்வையிடவும், எவ்வகை தானியங்களை எந்தெந்தப் பண்டியில் சேர்க்க வேண்டியதோ அதனிற் சேர்க்கவும், மற்றும் அதைக் கார்க்கவும், ஒருவரிடமிருந்து மற்றோருக்களிக்க வேண்டிய தானியங்களைக் கொண்டுபோய்க்கொடுக்கவும், உள்ளவர்களே நாடுகளின் காவற்காரர்களாகும். அக்காவற்காரர்களுக்கு அறுக்குந் தானியங்களில் முதலறிக்கட்டாகும் தலையறிக்கட்டு தானியத்திற்கு உரியவர்கள் நாட்டுக் காவற்காரர்களே ஆதலின் அவர்களைத் தலையாறிகள் என்னும் அறுப்புக்கட்டுக் காரியப்பெயரால் அழைத்து வருகின்றார்கள்.

தற்காலத் தலையாரிகளாகவும், காவற் காரர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் சாதிபேதமற்ற திராவிடர்களேயாவர். அத்தகைய சாதிபேதமற்ற திராவிடத் தலையாறிகள் நாடுகளுக்குக் காவற்காராய் இருப்பதில் மிக்க ஜாக்கிரதையாகவும் அந்தந்த வேளாள முதலாளிகளின் தானியங்களுக்கு சேதம் வராமலும் மிக்க நாணயமாகத் தங்கட் காவலைக் கார்த்துவருவதுடன் இராஜாங்கத்தோர் ஏவற்றொழிலுக்கும் மிக்க ஜாக்கிரதையுடையவர்களாய்த் தங்கடங்கள் காவல்களை நிறைவேற்றி வருகின்றார்கள்.

இத்தகையக் காவற்காரர்களின் செயல் யாவும் அந்தந்த குடித்ததனக்காரர்களுக்கும் இராஜாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் நன்கு விளங்கியதேயாகும். இத்தலையாறிகளுக்குப் பெரும்பாலுங் கல்வியே கிடையாது. அவ்வகைக் கல்வியற்றிருந்தும் தங்கட் பாதுகாப்புத் தொழிலிலும், ஆயிரம் ஐன்னூறென்னுந் தொகைகளை பயபக்தியுடன்கார்த்து அதிகாரிகளிடம் கொண்டுபோய் செலுத்துவதிலும் மிக்க நாணயமாகவும் ஜாக்கிரதையாகவுமே செய்துவருகின்றார்கள். அதே தலையாறிகளாம் சாதிபேதமற்ற திராவிடர்கள் நகரமாகும் இராஜதானியிற் சேர்ந்து தங்கள் சம்பாத்தியத்திற்குத் தக்கக் கல்வி கற்றுள்ளவர்கள் வேண்டிய வரையிலிருக்கின்றார்கள்.

இவர்களை நகரக் காவற்காரர் என்னும் போலீசு உத்தியோகத்திற் சேர்த்து சீர்திருத்துவதாயின் இராஜாங்கத்தோர் சட்டதிட்டங்களுக்கடங்கி தங்கள் காவல் தொழிலை மிக்கக் கண்ணோக்கமுடன் நடத்துவதுடன் குடிகளையும் மிக்க அன்புடன் பாதுகாத்துவருவார்கள். கல்வியில்லாது நாடுகளைக் காப்பவர்கள் கல்விகற்று நகரத்தைக் கார்ப்பது மிக்க எளிதேயாம். வஞ்சகர்களாங் கள்ளர் கூட்டத்திற்கும், சோம்பேறிகளாம் போக்கிரிகளுக்கும் இவர்கள் அஞ்சமாட்டார்கள். மிக்கத் துணிகரமாய்ச் சென்றுப் பிடித்து அடக்கி வருவார்கள். நகரக் கள்ளர்களையும் நகர துஷ்டர்களையும் நகர சோம்பேறிகளையும் அடக்கி சீர்திருத்துவதற்கும் இவர்களே வல்லவர்களாகும்.

இத்தகைய வல்லவர்களே நகரப் பாதுகாப்புக்கு உரியவர்களாகும். தற்காலம் இச்சாதிபேதமற்ற திராவிடர்களுக்குள் போலீசு உத்தியோகத்திற்குப்போய் சேரும்படியான முயற்சி செய்தபோதினும் அவ்வுத்தியோகத்தில் தலைவர்களாயிருந்து இவர்களை சேர்ப்பவர்களும் அளவிட்டு உத்தியோகத்தில் நியமிப்பவர்களும் சாதித்தலைவர்களாய் இருப்பார்களாயின் சாதிபேதமற்ற திராவிடர்களை சேர்க்கக்கூடாத உபாயங்கள் செய்து தங்களையொத்த சாதியுள்ளவர்களாயின் எவ்வகை தேகிகளாயினும் சேர்த்துக்கொண்டு வருகின்றார்கள்.

இத்தகையப் போலீஸ் நியமனச் சேர்க்கைகளைக் கருணைதங்கிய ஆங்கிலேயே துரைமக்களே முன்னின்று அவரவர்களை நேரிலழைத்துக் கண்ணோக்கமிட்டு நியமிக்கும்படி வேண்டுகிறோம். அங்ஙனமின்றி போலீஸ் நியமன அதிகாரத்தை சாதித்ததலைவர்கள் வசம் விட்டுவிடுவதாயின் சாதிபேதமற்ற திராவிடர்கள் போலீசு உத்தியோகத்தில் விருத்தி பெறுவது மிகக் கஷ்டமேயாகும்.

சாதித்தலைவர்கள் செயலோவென்னில் தாங்கள் உத்தியோகம் அமர்ந்து பணம் சம்பாதிக்கவேண்டியவிடங்களிலும், தொழில்களிலும் சாதியாசாரம் சமயாசாரம் கிடையாது. இந்த சாதிபேதமற்ற திராவிடர்கள் உத்தியோகஞ் செய்யவேண்டிய இடங்களிலும், பணம் சம்பாதிக்கவேண்டிய இடங்களிலுமெல்லாம் சாதியாசாரம் சமயாசாரங்களைக் காட்டி இவர்களை முன்னுக்கு வரவிடாமற் செய்துவருகின்றார்கள். ஆதலின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் சாதிபேதமற்ற திராவிடர் மீது கண்ணோக்கம்வைத்து சகலசாதியோர்களைப்போல் சமரசச்சீரும் சுகமும் அளிக்க வேண்டுகிறோம்.

- 4:12; ஆகஸ்டு 31, 1910 -