அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/167-383

விக்கிமூலம் இலிருந்து

163. இந்திய அரசர்களின் சூட்சி

கருணை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ராட்சியதாரஞ் செய்துவரும் அரசர்களுக்குள் பரோடா தேசத்து அரசரவர்களே மிக்கமேலாய் சூட்சியும் நீதிநெறி அமைந்த காட்சியும் பெற்றவரென விளங்குகின்றது.

காரணமோ வென்னில், உலகமெங்கும் இராது இவ்விந்து தேசத்தில் மட்டுமுள்ள மநுக்களில் பெரியசாதி சிறியசாதியென்றும், உயர்ந்த சாதி தாழ்ந்தசாதியென்றும் வகுத்துள்ளக் கட்டுக்கதைகள் யாவும் பெரும் பொய்யென்றும் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காக ஏற்படுத்திக் கொண்ட மாறுபாடுகளென்றும் கண்டறிந்துக்கொண்டதுடன் தனது ராட்சியத்திலுள்ள சகல குடிகளும் உயர்வு தாழ்வின்றி சகல சுகமும் அநுபவிக்கும்படியான யேதுக்களைச் செய்துவிட்டார்.

இத்தகைய அநுபவத்தைக் கண்டுணர்ந்த கருணை வள்ளல் கல்கத்தா கவர்னர்ஜெனரல் மிண்டோபிரபு அவர்களும் தனது ஆட்சியின் ஆலோசனை சங்கத்தில் இத்தேசத்தோர் சாதிபேதக் கோட்பாடுகளை அகற்றியே அங்காதிபர்களை நியமித்திருக்கின்றார். அதுபோலவே தென்னிந்தியாவிலும் ஆலோசனை அங்காதிபர்களை நியமித்தேலோரென்று நம்புகிறோம்.

நமது கனந்தங்கிய பரோடா மகாராஜனவர்களின் நீதிநெறி ஒழுக்கங்களை அநுசரித்து கனந்தங்கிய மைசூர் மகாராஜனவர்களும், தங்களுடைய தேசங்களை சீர்திருத்துவார்களாயின் இவர்களைக் காணும் மற்றுமுள்ள ஜமீன்தாரர்களும் தங்கள் தங்கள் தேசங்களை சீர்திருத்தி சகல குடிகளையும் சுகம்பெறச் செய்விப்பார்கள். குடிகள் எப்போது சகல சுகமும் பெற்று ஆனந்தத்திலிருக்கின்றார்களோ அத்தேச அரசனும் அதியானந்தத்தில் இருப்பாரென்பது சான்றாம்.

- 4:20; அக்டோபர் 26, 1910 -