உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/169-383

விக்கிமூலம் இலிருந்து

165. உள் சீர்திருத்தம் செய்ய இயலாதோர் புறசீர்திருத்தஞ் செய்வார்களோ

இல்லை, “பழயன கழிதலும் புதியன புகுதலும் வழுவலகால வகையினானே” எனக் கூறியுள்ள மேன்மக்கள் வார்தைகளையும், அன்னோர் செயல்களையும் உணராது தங்கள் தங்கள் சாதனங்களையே மேலாகக் கொண்டு ஒற்றுமெய்க் கேட்டை மேலு மேலும் பெருக்கி வருகின்றார்கள்.

அதாவது, வைஷ்ணவ ரென்றால் விஷ்ணுவென்னும் ஒருவரையே தொழுவோர்கள். அவர்களுக்குள் ஒற்றுமெயும் ஆறுதலும், அன்புமின்றி வடகலை வைஷ்ணவரைக் கண்டால் தென்கலையோர் சீறுகிறதும், தென்கலை வைஷ்ணவர்களைக் கண்டால் வடகலையோர் சீறுகிறதும் இவ்விரு வரைக்கண்டால் விசிஷ்டாத்துவிதர் சீறுகிறதும், விசிஷ்டாத்துவிதரைக் கண்டால் மேலிருவருஞ் சீறுகிறதுமாகியச் செயலால் “கடவுளைத் தொழுவதினுங் கலகம், சாமியைத் தொழுவதிலுஞ் சண்டை” என்னும் பழமொழியுறுதிபெற, மண்டையோடு மண்டையுருளுவதும், மாளாத கலகம் பெருகுவதும், நாளோயாது நீதிசங்கமேறுவதுமாகியச் செயலால் ஒருவருக்கொருவர் அன்பு கெட்டு ஆறுதலற்று சீர்கேட்டிற்கு வழி உண்டாகின்றதே அன்றி சீர்திருத்தத்திற்கு ஏதுவில்லாமற் போகின்றது.

இவர்கள் இவ்வாறிருக்க சைவர்களென்போர் சிவனென்னும் ஒருவரையே தொழுவோர்கள். அவர்களுள் கொட்டைக் கட்டி தீட்சை பெற்ற சைவர்கள் ஒன்று; கொட்டைக்கட்டாது தீட்சைபெறா சைவர்கள் ஒன்று; விபூதியைக் குழைத்துப்பூசும் சைவர்கள் ஒன்று, குழைத்துப் பூசா சைவர்கள் ஒன்று; இலிங்கங் கட்டும் சைவர்கள் ஒன்று; மாமிவதம் புசியா சைவர்கள் ஒன்றும் எனும் மற்றும் பதினாறு சைவங்கள் வேறுண்டென்று கூறி ஒருவருக்கொருவர் ஒற்றுமெ யற்றிருப்பதுமன்றி வைஷ்ணவர்களுக்கும் சைவர்களுக்கும் உண்டாகிவரும் கண்டன வாக்குவாதங்களால் ஒருவருக்கொருவர் பத்திரிகைகளில் வைதும், பாடல்களால் வைதும் சீறிச் சினந்து மண்டையோடு மண்டையுருண்டு அதிகாரிகளிடம் அபராதமளித்து தங்களுக்குள்ள நேயத்தையும், அன்பையும், ஆறுதலையுங் கெடுத்துக்கொண்டு எக்காலும் கோபக்குறியில் நின்று தங்களுக்குத்தாங்களே ஒற்றுமெயைக் கெடுத்துக் கொள்ளுகின்றார்கள்.

வேதாந்திகளோ, வேதத்தின் அந்தத்தை விசாரிப்பவர்களென்று பெயர். அவ்வேதத்தையோ, அவர்கள் வாசித்தது கிடையாது. அவ்வேதங்களை அவர்கள் வாசிக்கவுங்கூடாது. இத்தகையோர் வேத அந்த கூட்டத்தோரென வெளி தோன்றியிருக்கின்றார்கள். இவர்களுக்குள் சருவமும் பிரமமயமென்பார் சிலர். சருவமும் மித்தை என்பார் சிலர். சாதியாசாரம் இருக்கவேண்டும் என்பார் சிலர். சாதியாசாரம் கூடாதென்பார் சிலர். விக்கிரகாராதனை செய்து கொண்டே வேதாந்திகளென்பார் சிலர். குறுக்குப்பூச்சு நெடுக்குப்பூச்சு நெற்றிகளில் பூசிக்கொண்டே வேதாந்திகளென்பார் சிலர். சாந்தத்தைப் பெருக்க வேண்டுமென்னும் இவர்கள் தருக்க சாஸ்திரம் படிந்து வித்தியா கர்வத்தால் உறுக்கப் பார்த்துக் கொள்ளுகிறார்கள் சிலர். வேதாந்திகளென்று தோன்றிய இவர்களுக்குள் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையில் ஒன்றையேனும் விட்ட ஒருவரும் கிடையாது. இவர்கள் மற்றவர்களை தூஷிப்பதும், மற்றவர்கள் இவர்களை தூஷிப்பதுமாகிய செயல்களால் ஒருவருக்கொருவர் விரோத கட்சியைப் பெருக்கி வீணே துக்கத்திற்கு ஆளாகின்றார்கள்.

மதசம்மதங்களினால் இத்தியாதி ஒற்றுமெய்க்கேடும் ஆறுதலின்மெயும் பொருள் விரயமும் இருக்குமாயின் இனி சாதி சம்மதங்களில் என்ன சீர்திருத்தமும் யாது சுகமும் உண்டென்பதை விசாரிப்போமாக.

பாப்பானென்னும் வகையில் அனந்த சாதிகள் இருக்கின்றார்கள். இவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பெண் கொடுக்கலும் வாங்கலும் கிடையாது. மற்றய சாதிப்பிரிவிலும் இவ்வகையேயாம். இத்தியாதி ஒற்றுமெய்க் கேட்டிற்கு உறுதிபீடமாகும் சாதியினாலும் இத்தேசத்தோர்க்கு சீர்திருத்தமும் சுகமும் உண்டோ, அதுவும் கிடையாது. இச்சாதியாசாரத்தால் இஸ்திரிகளுக்கு ஏதேனும் சுகமுண்டோ, இல்லை. முற்றும் கேடேயாம்.

அதாவது, ஓர் இஸ்திரீயானவள் விவாகஞ்செய்யப்பட்டு புருஷனுடன் கலந்து வாழினும் கலக்காமல் ஒழியினும் அவள் விருத்தாப்பியமுற்று மரணமடையும் வரையிற் சீர்கெட்டு அலைய வேண்டியதேயாம். புருஷனோ அறுபதுவயது செல்லினும் அவன் பிரியம்போல் மாற்றி மாற்றி பெண்களை விவாகம் செய்துக்கொள்ளலாம். இஸ்திரீகளோ தனது மங்கைப்பருவகாமிய இச்சையால் சாதியாசாரத்தை ஒழித்து கள்ளபுருஷர்களை விழித்து துள்ளி விளையாடப்பெற்றப் பிள்ளைகளை முறித்து வேலிகளிலும், ஆறுகளிலும் விட்டெறிந்து மருளமருள விழிக்குங்கால் அதிகாரிகளால் பிடிபட்டு கடூர தண்டனைக்கு உட்பட்டு வெறுமனே கைம்பெண்ணாயிருந்த கண்கலக்கத்தினும் அதிக கண்கலக்கமுண்டாகி அல்லலடைந்து மடிகின்றார்கள்.

அருமெயாகப் பெற்றெடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தப் பெண் குழந்தைகளுக்கெல்லாம் சதா துக்கத்தை வளர்த்துவரும் சாதியாசாரமும் ஓர் ஆசாரமாமோ. இதைக் கட்டியழுவதும் ஓர் கீர்த்தியாமோ, இல்லை. அல்லது சாதியாசாரம் இருக்கவேண்டுமென்பதில் ஓர் மலமெடுக்கும் தோட்டியை அழைத்து உனக்கு சாதியாசாரம் உண்டா எனில், உண்டென்கின்றான். ஓர் பாப்பானை அழைத்து உனக்கு சாதியாசாரம் உண்டாயெனில் அவனும் உண்டென்கின்றான். இவ்விருதிரத்தோர் சாதியாசாரத்தில் ஏதேனும் கனதன சிறப்புண்டோ, இல்லை. தோட்டிக்கும் சாதியாசாரமில்லை தொண்டமானுக்கும் சாதியாசாரம் இல்லையெனுமிடத்திற் சிறப்புண்டேயன்றி தோட்டிக்கும் சாதியாசாரமுண்டு தொண்டமானுக்கும் சாதியாசார முண்டென்னுமிடத்திற் சிறப்பில்லை யென்பது துணிபு.

ஆதலின் சுதேசியமென்னும் வெறும் ஆசைக்கொண்டுள்ளோர் உள் சீர் திருத்தமாம் மதபேத வூழல்களையும், சாதிபேத ஊழல்களையும் முன்பொழித்து பின்பு புறசீர்திருத்த சுதேசியத்தை நாடுவது அழகாம்.

- 4:21: நவம்பர் 2, 1910 -