உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/185-383

விக்கிமூலம் இலிருந்து

181. திண்டிவனந் தாலுக்காவைச் சார்ந்த மேல்பாக்கம் பாஞ்சாலம் சாத்தனூர் கிராமங்களுக்குரிய தாசில்தாரர்களுக்கும் முனிஷிப்புகளுக்கும் கணக்கர்களுக்கும் மிக்க வந்தனத்தோடு விடுக்கும் விண்ணப்பம்

மேற் குறித்துள்ள கிராமாதிகாரிகளாகும் தாசில்தாரர்களே, முனிஷிப்புகளே, கணக்கர்களே சற்று கண்ணோக்குவீர்களாக. தற்காலந் தங்களது கணக்கில் அடங்கியுள்ள 1,000 ஏக்கர் பூமி யாதொரு பயனுமின்றி வெறுமனே கிடக்கக் கண்ட மேற்சொன்னபடி கிராம் ஏழைக் குடிகள் அதிகாரிகளுக்கு எழுதிக் கேட்டபோது தாங்கள் யாவருங்கூடி அதை மேய்க்காலுக்கு விடப்பட்ட நிலமென மறுத்துவிட்டீர்களாம். அந்தோ! தாங்கள் யாவரும் அம்மாடுகளின்மீது வைத்தக் கருணை மநுக்கள்மீது வைக்காதொழித்தது அவர்கள் தெளர் பாக்கியம்போலும்.

அவ்வகையாக ஆயிரம் ஏக்கர் பூமியை இராஜாங்கத்தோருக்கும், குடிகளுக்கும், பிரயோசனமின்றி மேய்க்காலுக்கு விட்டிருப்பதாயின் அதைச் சுற்றிலுமுள்ள நூறாயிரம் ஏக்கர் பூமியின்பலனை இராஜாங்கத்தோருக்களித்து வருகின்றீர்களா. அங்ஙனம் இலட்சம் ஏக்கர் பூமியின் பலனை இராஜாங்கத்தோருக்கு அளித்து அப்பூமியில் வாழும் மாடுகளுக்கு ஆயிரம் ஏக்கர் பூமி விடப்பட்டுள்ளது என்பதாயின் ஏழைக்குடிகள் அப்பூமியைக் கேழ்ப்பதிற் பயனில்லை. இராஜாங்கத்தோருக்குப் பயனின்றியும், குடிகளுக்கோர் சுகமின்றியும் இருப்பதாயின் அறுநூறு ஏக்கர் பூமியை மேய்க்காலுக்கு வைத்துக் கொண்டு நானூறு ஏக்கர் பூமியை ஏழை மனுக்களுக்கு ஈய்ந்து ரட்சிப்பீர்களாயின் தங்களுடைய பூமிகளைத் தாங்களே ஏழைகளுக்கீய்ந்து ரட்சித்ததுபோல் பாவித்து சுகம் பெறுவார்கள். அத்தகைய மநுமக்கள்மீது மட்டிலுங் கருணை வையாது விட்டபடியால் ஏழைக்குடிகள் யாவரும் ஒன்றுகூடி தாயற்ற பிள்ளைகள் போல் கருணைமிகுத்த கவர்னரவர்களுக்கு விண்ணப்பம் அநுப்பியிருக்கின்றார்கள்.

ஈதன்றி இத்தேசப் பூர்வக்குடிகளும் தற்காலம் பஞ்சமர்களென்று அழைக்கப்பெற்றோர்களுமாகிய ஏழைக்குடிகள் எங்கு காலிபூமியாயுள்ளதென்று காண்பித்துக் கேட்கின்றார்களோ அவர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்று இராஜாங்கத்தார் தங்களது சட்டத்தில் குறிப்பிட்டே வைத்திருக்கின்றார்கள். அத்தகைய உத்திரவுகளைத் தாங்களறிந்திருந்தும் ஏழைகள் கேட்டுள்ள பூமிகளை அவர்களுக்குக் கொடுத்து ரட்சிக்காது கலெக்ட்டரவர்களுக்கும் கவர்னரவர்களுக்கும் வீண்பிரயாசையாயைக் கொடுப்பது கருணையற்றச் செயலேயாகும்.

சென்னையிலும் மற்றுமுள்ள தேசங்களிலுமுள்ளப் பெரியோர்கள் பெருங்கூட்டங்களிட்டு (டிப்பிரஸ் கிளாசை) முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்று வேணப் பணங்களைச் சேகரிக்கவும் வேணமுயற்சிகள் எடுப்பதுவும் உலகப் பிரசித்தமாயிருக்க தாங்களும் அவ்வகைக் கருணை கொண்டு உள்ள ராஜாங்கத்தோர்க் காலி பூமிகளை ஏழைக்குடிகளுக்கு அளித்து ரட்சிப்பீர்களானால் சென்னையில் டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தி சுகம்பெற செய்விக்கப்போகின்றோம் என்னுங் கூட்டத்தோருடன் தாங்களுஞ் சேர்ந்தவர்களென்றெண்ணி சகலருங் கொண்டாடுவார்கள். அத்தகைய கருணை வையாமல் தங்கள் தங்கட் பிரியமானவர்களும் மிக்க பூமியை உடையவர்களுமானவர்க்குக் கொடுத்துவிட்டு ஆதியிலிருந்துக் கேட்டுக் கொண்டேவரும் ஏழைக் குடிகளுக்குக் கொடாமல் வெறுமனே விட்டுவிடுவீர்களாயின் ஏழைக் குடிகளை முன்னேறவிடாமலும் அவர்கள் சுகமடைய வேண்டுமென்னும் நல்லெண்ணம் இல்லாமலும் காலமெல்லாம் நசித்து அவர்களை நாசப்படுத்திவருவதுபோல் இன்னும் அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசித்துப் பாழ்படச் செய்வதற்கே ஏழைகளின் விண்ணப்பத்திற்கு இதக்கம் வையாது தடுத்துவருகின்றார்களென்னும் வதந்தியுண்டாவதுடன் டிப்பிரஸ் கிளாசை சீர்படுத்தப் போகின்றோமென்பவர்களின் செயலிலும் சந்தேகிப்பதற்கு ஏதுண்டாகிப்போம். காரணமோவென்னில், பண்ணைத்தொழில் புரியும் ஏழைக் குடிகளுக்கு காலிபூமிகளிருக்கின் கட்டாயங் கொடுக்கவேண்டுமென்று கருணைதங்கிய இராஜாங்கத்தோர் சட்டமிருந்தும் ஏழைக்குடிகள் அவற்றைக் கேட்டிருந்தும் அவர்கள் மீது கருணைவையாது விட்டுவிடுவதாயின் டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவரப்போகின்றோமென்பவர்கள் தங்கள் பணங்களை செலவிட்டு தாங்களே முயன்று சீர்திருத்துவார்களென்பதை நம்பப்போமோ. அத்தகைய நம்பிக்கைக் ஆதாரமற்றுப்போவதுடன் காலமெல்லாம் பெருங் கஷ்டத்தை அநுபவித்துவரும் ஏழைக்குடிகளை இந்துக்களினின்று அப்புறப்படுத்தி வேறுவகை சீர்திருத்தஞ் செய்யுங்காலம் வரினும்வரும். ஆதலின் திண்டிவனம் தாலுக்காவைச் சார்ந்த மேல்பாக்கம், பாஞ்சாலம், சாத்தனூர் கிராமாதிகாரிகளை அங்குள்ள ஏழைகள்மீது கருணைவைத்து அவர்கள் கேட்டுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

- 4:29; டிசம்பர் 28, 1910 -