உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/186-383

விக்கிமூலம் இலிருந்து

182. முநிசபில் கமிஷனர்கள் நியமனம்

இவ்வருஷத்திய முநிசபில் கமிஷனர்கள் நியமனம் நெருங்கிவிட்ட படியால் கனவான்கள் ஒவ்வொருவர் வெளிதோன்றி வீடுவீடாக நுழைந்து வருகின்றார்கள்.

காரணாமோவென்னில், இந்த டிவிஷனுக்கு என் பெயருக்கு (ஒட்டு) கொடுங்கோள் வோட்டு கொடுங்கோளென ஒருவரைக்கொண்டு ஒருவருக்கு சொல்லவைப்பதும், வண்டிகளைக் கொண்டு வந்து ஒவ்வோர் மூலைகளில் நிறுத்திவிட்டு வீடுவீடாக நுழைந்து வருவதுமாகிய வேலைகள் நிறைவேறிவருகின்றது. இவற்றுள் குடிகளே சேர்ந்தாலோசித்து நம்முடைய டிவிஷனுக்கு யாரைக் கமிஷனராக நியமித்துக்கொள்ளலாம், யார் நம்முடையக் குறைவு நிறைவுகளை சங்கத்தில் எடுத்துப் பேசி சுகாதாரம் அளிப்பாரெனக் கண்டுதெளிந்து நியமிக்கவேண்டிய அவசியமாகும். அதற்கு மாறுதலாக சில கனவான்கள் தங்களுக்குத்தாங்களே கமிஷனர்களாகவேண்டுமென வெளிதோன்றி என்னை கமிஷனராக நியமியுங்களென வற்புறுத்துகின்றார்கள்.

இத்தகையச் செயல்களால் குடிகளே சேர்ந்து தங்களுக்கு வேண்டிய கமிஷனர்களை நியமித்துக்கொள்ளவேண்டிய ஏதுக்களற்று தங்களுக்குத் தாங்களே கமிஷனர்களாக வெளிவந்து குடிகளை பலவந்தப்படுத்துவதுமன்றி வீடுகடோரும் வண்டிகளைக் கொண்டுவந்தும் ஏற்றிப்போய் கையெழுத்து வாங்குகின்றார்கள் இவ்வகையான கமிஷனர்கள் நியமனம் பெறுவோரை மறுபடியும் இவ்வீதிகளிற் காண்பதே கிடையாது. குடிகளுக்கு ஜலவசதியுண்டா, தீபவசதியுண்டா, வீதிவசதியுண்டாவென்னும் விசாரிணையுங் கிடையாது. அந்தந்த டிவிஷன் ஓவர்சியர்கள் பியூன்கள் தங்கள் தங்கள் வேலைகளை சரிவர நடாத்திவருக்கின்றார்களா வென்னும் பார்வையேனுமுண்டோ அதுவுங் கிடையாது, உள்ளக் குறைகளை ஐரோப்பிய பிரசிடெண்டுகளே வெளிதோன்றி வீதிசுகங்களையும், தீப சுகங்களையும், ஜல சுகங்களையுங்கண்டு சீர்திருத்துவதைக் காணலாமன்றி சுதேசக் கமிஷனர்களைக் காண்பது அரிதேயாம்.

குடிகளே சேர்ந்து தங்களுக்காய கமிஷனர்களை நியமித்துக் கொள்ளுங்காலமும் ஒற்றுமெயும் எப்போதுண்டாகுமோ அப்போதுதான் குடிகளின் சுகாதாரம் சீர்பெற்று கமிஷனர்களும் கண்ணுற்று பாதுகாப்பார்களென விளங்குகின்றது.

இதன் மத்தியில் கருணைதங்கிய ராஜாங்கத்தோரே அந்தந்த டிவிஷன்களில் மிக்க ஊக்கமும், உழைப்பும், குடிகளைக்கார்க்கும் நோக்கமுமுள்ள கமிஷனர்களை நியமித்துவருவார்களாயின் சுகாதாரம் செவ்வனே விளங்கும். ஈதன்றி நமது கருணை தங்கிய கவர்ன்மெண்டாரவர்களும், கனந்தங்கிய முநிசபில் பிரசிடென்டவர்களும் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்றுண்டு, அதாவது, உயர்ந்த வகுப்பார் உயர்ந்த வகுப்பாரென சொல்லிக்கொள்ளுவோர்கள் மத்தியில் உயர்ந்தவகுப்போர்களென்பவர்களே கமிஷனர்களாகத் தோன்றி அவ்வுயர்ந்த வகுப்போர்களின் சுகாதாரங்களையே பார்த்துக்கொள்ளும் படியானவர்கள் தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரெனத்தூற்றி தலையெடுக்கவிடாமல் நசுக்குண்டிருக்கும் ஏழைக்குடிகள் வாசஞ்செய்துவரும் வீதிகளின் கேடுபாடுகளையும், நீரின் தடைகளையும், தீபக் குறைகளையுங் கண்டறிந்து சுகமளிப்பார்களோ ஒருக்காலுமளிக்கமாட்டார்கள். காரணம் சாதிவிரோதமேயாம்.

இத்தகைய சாதியாசரமுள்ளவர்கள் மத்தியில் சாதியாசாரம் இல்லாதவர்களுங் கலந்து வாசஞ்செய்கின்றபடியால் சாதியாசாரமில்லாதப் பெருங்குடிகளின் குறைகளை நீக்கி சுகம்பெறச் செய்வதற்கு சாதியாசாரமில்லாத ஒருவரைத் தெரிந்தெடுத்து முநிசபில் கமிஷனராக நியமிப்பார்களாயின் அவர்களால் ஏழைக்குடிகள் சீர்பெற்று சுகாதாரம் பெறுவார்கள். அவர்களுக்கு நேரிட்டுவருங் குறைகளையும் அடுத்து சங்கத்தோருக்கு விளக்கி ஆதரிப்பார்கள். மற்றப்படி சாதியாசாரம் வைத்துள்ளக் கமிஷனர்கள் சாதியாசாரமில்லாதோர்களை கனவிலுங் கவனிக்கமாட்டார்கள்.

சாதியாசாரமில்லாதவருள் கனதனவியாபாரிகளுட் சிலரும், கெமிஸ்ட் அண்டு டிறக்கிஸ்ட் வைத்துள்ள பென்ஷன் டிரசர்களும், பென்ஷன் பாரஸ்ட் ரேஞ்சர்களும், பென்ஷன்பெறாத கவர்ன்மெண்டு ஆபீசுகளின் மானேஜர்களும் இருக்கின்றார்கள். கருணை நிறைந்த கவர்ன்மெண்டார் அத்தகைய சாதியாசாரமில்லாதோருள் ஒருவரைத் தெரிந்தெடுத்து கமிஷனரில் நியமித்து ஏழைக் குடிகளை ரட்சிக்கும்படி வேண்டுகிறோம்.

- 4:30; சனவரி 4, 1911 -