அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/187-383

விக்கிமூலம் இலிருந்து

183. காங்கிரஸ் கமிட்டியாரும் லெஜிஸ்லேட்டிவ் மெம்பர்களும்

இதுகாரும் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியாரென வழங்கி இந்திய தேசத்திலுள்ள சகலசாதி குடிகளும் ஒன்றுகூடி தங்கள் தங்கட் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கியுள்ள குறைகளை நிவர்த்திசெய்துக் கொள்ளுவதென்னும் உத்தேசத்தில் நியமித்திருந்தார்கள். அதாவது, குடிகளின் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சுகமளிக்க வேண்டுமென்பதேயாம்.

இத்தேசத்திலுள்ள பல வகுப்பாரின் குறைகளை பலவகுப்பாரும் ஆலோசினை சங்கத்தில் எடுத்துப் பேசுதற்கு ஆளில்லாதிருந்தபடியால் இக்காங்கிரஸ் கமிட்டியோ ரென்பவர்கள் கூட்டங்கூடுவதும் உள்ளக் குறைகளை பேசுவதும் இராஜாங்கத்தோருக்கு எடுத்துக் கூறுவதுமாகிய செயலிலிருந்தார்கள். தற்காலமோ அந்தந்த வகுப்பார்களில் ஒவ்வோர் லெஜிஸ்லேட்டிவ் கமிஷனர்களை நியமித்து அவர்களுக்குள்ளக் குறைகளை ஆலோசனைசங்கத்தி லெடுத்துப்பேசி நியாயவாயலாகப் பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்தை சகல குடிகளுக்குக் கொடுத்து பேசிக்கொண்டுவருங்கால், இக்காங்கிரஸ் கமிட்டியோரும் வெவ்வேறு கூட்டங்களைக்கூட்டி, தங்கள் தங்கட் பிரியம்போல் சிற்சில சீர்திருத்தங்களை பத்திரிகைகளில் வெளியிடவும் இராஜாங்கத்தோருக்கு எழுதவுமாயிருந்தால் இவ்விருதிரத்தோருள் இராஜாங்கத்தார் லெஜிஸ்லெட்டிவ் மெம்பர்களின் ஆலோசினையை ஏற்றுக்கொள்ளுகிறதா, அன்றேல் காங்கிரஸ் கமிட்டியாரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுகிறதா, இவ்விருவர்கள் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பாராயின் அஃது நியாயவிரோதமேயாம்.

எவ்வாறெனில் பலவகுப்பாரும் சேர்ந்துள்ள லெஜிஸ்லேட்டிவ் மெம்பர்களின் ஆலோசனையை இராஜாங்கத்தார் ஏற்றுக் கொள்ளுவதே அழகும் நியாயமுமாகும்.

அங்ஙனமின்றி தென்தேசத்தில் பிராமணர்களெனப் பெயர் வைத்துக் கொண்டுள்ள பெருந்தொகையாரும், வடதேசத்தில் வங்காளிகளிற் சிலருஞ் சேர்ந்துக்கொண்டு செய்யும் ஆலோசினை அழகாமோவென்பதை ஒவ்வொருவரும் நன்குணரவேண்டியதேயாம்.

குடிகள் மீது இராஜாங்கத்தோரே கருணைகொண்டு ஒவ்வொரு வகுப்பாருள்ளும் ஒவ்வோர் ஆலோசினைக் கர்த்தவர்களை நியமித்து அவரவர்களுக்குள்ளக் குறைகளை எடுத்துப் பேசி குடிகளுக்கு சுகமளிக்கலாமென்னும் அதிகாரத்தை ஆனந்தமாகக் கொடுத்திருக்க அவர்கள் மூலமாக இந்த காங்கிரஸ் கமிட்டியோர்களில் முக்கியமாயுள்ள ஐந்தாறு பெயர்களுங்கூடி ஆலோசித்து வேண்டியக் குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கும்படி சொல்லுவார்களாயின் மிக்க மேலாகும். அங்ஙனமின்றி பெருந்தொகையினராக நியமித்துள்ள லெஜிஸ்லேட்டிவ் கமிட்டி மெம்பர்கள் ஒருபுறமும் நின்று இராஜாங்கத்தோருக்கு மிக்க தொந்தரையைக் கொடுப்பதாயின் இருவர்கள் சொல்லையும் அவர்கள் செவியில் ஏற்காது தங்களிஷ்டம்போல் இராஜகீயத்தை நடத்திக்கொள்ள நேரினும் நேரும்.

இக்காங்கிரஸ் கமிட்டியார் இராஜகீய சட்டதிட்டங்களிற் பிரவேசிக்காது உள்சீர்திருத்த விவசாயங்களிலும், கைத்தொழிலிலும் பிரவேசித்து தேசத்திற்கு சிறப்பையும், தேசக் குடிகளுக்கு சுகத்தையும் அளித்து ரட்சிப்பார்களாயின் அதுவே காங்கிரஸ் கமிட்டியார் எடுத்து முடித்தப் பேருபகாரமாகும்.

இம்முறைக் காங்கிரஸ் கமிட்டியார் கூடியக் கூட்டத்தில் மகாகனந்தங்கிய மிஸ்டர் வேட்டர்பர்னவர்கள் எழுந்து இந்துக்கள் எல்லவரும் ஒன்றுசேர்ந்து விட்டார்கள் மகமதியர்கள் மட்டிலும் ஒன்றுசேர வேண்டுமென்று கூறியது என்ன விசாரிணையோ விளங்கவில்லை. மேற்சொன்னபடி துரையவர்கள் சென்னை ராஜதானியிலிருக்குங்காலத்திலேயே கணக்கில்லா ஆயிரத்தெட்டு சாதியும், நூற்றியெட்டு சமயப் பிரிவுமிருந்து ஒருவருக்கொருவர் சேராமலிருந்ததைத் தான் கண்ணாரக் கண்டிருந்தும் தற்காலத்தில் ஒவ்வோர் பிரிவினர் வெவ்வேறு லெஜிஸ்லேட்டிவ் மெம்பர் நியமனம் விதிக்கவேண்டுமென்று கேட்டுள்ளதை வாசித்திருந்தும் இந்துக்கள் எல்லவரும் ஒன்றுகூடிவிட்டார்களென்று கூறியது காரணம் யாதென்று விளங்கவில்லை.

இத்தேசத்தில் சாதிப் பிரிவினைகளை வைத்துள்ளவர்கள் என்ன சுத்திலிருக்கின்றார்கள், சாதிப் பிரிவினையை வைக்காமலிருக்கின்றவர்கள் என்ன துக்கத்தை அநுபவிக்கின்றார்களென்று கண்டறியாமலும் யேழைகளை யீடேற்றும்படியான எண்ணமில்லாமலும் போய்விட்டவரானபடியால் இப்போதும் ஏழைக்குடிகள் அடைத்து வரும் கஷ்ட நஷ்டங்களைக் கண்டறியாது இந்துக்களெல்லாம் ஒன்றாகிவிட்டார்களென்று சாதித்தலைவர்களுக்காய் முகஸ்துதி பேசிவிட்டு போய்விட்டார் போலும். ஐரோப்பாவை விட்டு இந்தியாவிற்கு வந்தும் ஏழைக்குடிகளை நோக்காமற் போயது பரிதாபமேயாம்.

இத்தகையப்போக்கில் இங்கிலாண்டில் சிவில்செர்விஸ் பரிட்சை நிறைவேறுங்கால் இந்தியாவிலும் நடத்தவேண்டிய முயற்சி தேடவேண்டுமென்றும் ஓர் உச்சாகத்தை உண்டு செய்து போயிருக்கின்றாராம். இவ் உச்சாகக் கருத்தை இவர் சென்னை ராஜதானியில் கலெக்ட்டராயிருக்குங்கால் கூறுவரோ.

கலைக்ட்டரென்பது பிரிட்டிஷ் ஆட்சிபிரதம் உத்தியோகத்திலொன்றாவதுடன் கவர்னரது அந்தஸ்துக்கும் வரும் படியான உத்தியோகமாதலால் அதன்பரிட்சையும் அவ்வுத்தியோக நியமனமும் பிரிட்டிஷ் ஆட்சி பீடமாம் இங்கிலாந்திலேயே நடக்கவேண்டியதன்றி இந்தியாவில் நடத்துவது கூடாதகாரியமாகும். காரணமோவென்னில், இந்துதேசத்தை ஆண்டுரட்சித்து வரும் பிரிட்டிஷ் ஆட்சியோருக்கு சாதிபேதமென்னும் நூதனக் கட்டுப்பாடுகளும் பொறாமெ குணமும் அவர்களுக்குக் கிடையாது அத்தகையோர் பிரதம உத்தியோகம் பெறவேண்டியவர்கள் இங்கிலாந்திற்கே சென்று அவர்களுக்குள்ள பேதமற்றச் செயலிலும் தன்னவ ரன்னிய ரென்னும் பட்சபாதமற்ற குணத்திலும் சகல மனிதர்களையும் மனிதர்களாகப் பார்க்கும் நோக்கத்திலும் அடுத்தவர்களை ஆதரிக்கத்தக்கவன்பிலும் அவர்களுடன் பழகி அவர்களது மத்தியில் தங்கள் பரிட்சையிலுந் தேறி கலெக்ட்டர் உத்தியோகமும் பெற்று இந்தியாவிற்கு வந்து தங்களலுவலை நடத்துவார்களாயின் சாதிபேதமுள்ளோர் மத்தியில் சாதிபேத மில்லாமலும், சமயபேதமுள்ளோர் மத்தியில் சமயபேதமில்லாமலும் தங்கள் அலுவலை நடாத்தி பிரிட்டிஷ் ஆட்சியின் பெயருக்கும் கீர்த்திக்கும் வழுவற நிற்பார்கள்.

அங்ஙனமின்றி இந்தியாவில் கலெக்ட்டர் பரிட்சை நிறைவேறுமாயின் பிரிட்டிஷ் ஆட்சியின் சிறப்புக் குன்றி சாதியாசாரத்தின் சிறப்புமேலிட்டு சகல ஏழைமக்களும் சீர்கெட்டு தற்காலங் கூடிவரும் வித்தியா விவசாயங்களும் பட்டு பாழடைந்துபோமென்பது சத்தியமாதலின் பிரிட்டிஷ் ஆட்சியோர் கலெக்ட்டர் பரிட்சையை இந்தியாவில் நடத்தவிடாது இங்கிலாந்திலேயே நடத்தி சீர்பெறச் செய்து வருவார்களென்று நம்புகிறோம்.

- 4:31; சனவரி 17, 1911 -