அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/194-383

விக்கிமூலம் இலிருந்து

190. நமது இந்தியதேச சக்கிரவர்த்தியாருக்கு முடிசூட்டுங்கால் நடைபெறும் சிறந்தச் செயல்

வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் நிறைந்த நமது ஐந்தாவது ஜார்ஜ் அவர்களுக்கு இந்திய தேசசக்கிரவர்த்தியாக முடிசூட்டுங்கால் ஒருசிறந்த செயலால் அவற்றை நடாத்தும் உத்தேசத்தை முடிவு செய்திருப்பதாக வதந்தி.

அத்தகைய சிறந்த செயல் யாதெனில் இங்கிலாந்து தேசத்தில் ஓரரசருக்கு முடி சூட்டவேண்டுவதாயின் கிறீஸ்துமதப்பாதிரிகளிற் சிலரிருந்து அவற்றை சூட்டுவது வழக்கமாகும். ஆனால் நமது ஐந்தாவது ஜார்ஜ் அவர்களுக்கு இந்திய தேசத்தில் முடிசூட்டுங்கால் யாதொருவர்கள் கையினாலும் சூட்டாமல் சக்கிரவர்த்தியாரும் சக்கிரவர்த்தினியாரும் இருவருமே தங்கட் கரங்களால் முடிகளை எடுத்து தாங்களே தரித்துக்கொள்ளும்படியான முடிவை செய்திருக்கின்றார்களாம்.

இத்தகைய செயலும் கருத்தும் சக்கிரவர்த்தியாருக்கு மிக்க சிறப்பைத் தருவதுமன்றி இந்தியதேசவாசிகளாம் சகலமதஸ்தர்களுக்குங் மிக்க சிறப்பைத் தருமென்பதற்கு ஆட்சேபமில்லை. காரணமோவென்னில், இந்தியாதேசத்தில் பௌத்தர்களும், ஜைனர்களும், இந்துக்களும், ஜோராஸ்டர்களும், மகமதியர்களும், கிறிஸ்தவ பாதிரிகளைக் கொண்டு சக்கிரவர்த்தியாருக்கு முடிதரிப்பதாயின் சகலமதஸ்தர்களும் அவற்றை அன்பாக நோக்கிய போதிலும் கிறிஸ்தவர்களின் ராஜரீகமென அந்தரங்கத்தில் அயிஷ்டங் கொண்டவர்களாகவே கொண்டாடுவார்கள். ஆதலின் நமது கருணைதங்கிய சக்கிரவர்த்தியார் இந்தியக் குடிகள் யாவருக்கும் தங்களைக் கிறிஸ்துமதச் சார்பினரெனக் காட்டிக் கொள்ளாது சகல சாதியோருக்கும், சகல மதஸ்தருக்கும் சமரசச் சக்கிரவர்த்தியென விளங்குவதற்காகத் தாங்கள் இந்திய தேச சக்கிரவர்த்தியாகத் தரித்துக்கொள்ளும் முடியை எம்மத குருக்களும் தங்களுக்குத்தரிக்காது தங்கள் கைகளினால் தாங்களே தரித்துக்கொள்ளப் போகின்றார்கள். இந்திய தேச சகலமத அரசர்களையும், சகலசாதியரசர்களையும் சிறப்பித்து முடிசூட்டிக் கொள்ளும் கொண்டாட்டம் இதுவேயாம்.

கிறீஸ்தவப் பாதிரிகளைக் கொண்டே அவர் முடி சூட்டிக் கொள்ளுவதாயிருந்தாலும் புரோட்டிஸ்டான்ட் பாதிரிகள் அருகினின்று சூட்டுவார்களாயின் கத்தோலிக்குப் பாதிரிகளுக்குக் கனக்கஷ்டமாம். கத்தோலிக்குப் பாதிரிகளைக் கொண்டு சூட்டுவார்களாயின் யூனிட்டேரியன் கிறீஸ்தவர்களுக்கு அதிக கவலையுண்டாம். யூனிட்டேரியன் பாதிரிகளைக் கொண்டு நடத்துவதாயின் சால்வேஷன் கிறிஸ்தவப் பாதிரிகளுக்கு சால துக்கமாம். இவைகள் யாவையும் அநுபவச்காட்சியில் கண்ணுற்று வந்த நமது சக்கிரவர்த்தியாரும், சக்கிரவர்த்தினியாரும் தங்கள் கரத்தினால் தாங்களே தங்கள் முடிகளைத் தரித்துக்கொள்ளப்போகின்றார்கள்.

இத்தகைய சிறந்தச் செயலுக்கு நீதிநெறியற்ற சிலமதவைராக்கிக்கள் அத்தகைய விசேடகாலத்தில் ஓர் தேவனை சிந்தித்து குருக்கள் முடிதரிக்காதது நல்லதல்லவேயென்று வீண் கூச்சலிடினுமிடுவர். அக்கூச்சல் தம்மதமே மதமென்றும் மதக்கடைபரப்பி அதனாற் பொருட்சம்பாதித்து சீவிப்பவர்களின் கூச்சலாயிருக்குமேயன்றி பொதுவாய சீர்திருத்தக்காரர்களின் கூச்சலல்லவென்றே துணிந்து கூறுவாம்.

இதற்குப் பகரமாய்க் கனந்தங்கிய நெப்போலியன் போனப்பார்த்தவர்களின் சரித்திரமே போதுஞ் சான்றாம். அவர் தனக்கு முடிசூட்டிக் கொள்ளுங்கால் யாரிடத்திலும் சூட்டிக்கொள்ளாமல் தானே சூட்டிக்கொண்டு அக்காலத்தில் நேர்ந்திருந்த யுத்தகளங்களில் அவர் காட்டிய வல்லபப்பெருக்கை இன்னும் உலகம் மறவாமலிருக்கின்றது. ஆனால் அவர் தங்கள் பாதிரிகளுக்கு மனத்தாங்கலை உண்டாக்கிவிட்டு முடிசூட்டிக் கொண்டாரென்பது சிலர் கூற்று. அத்தகையத் தாங்கலுக்கும் கூற்றுக்கும் இடந்தராது நமது சக்கிரவர்த்தியார் சூட்டிக்கொள்ளும் மகுடாபிஷேக விவரத்தை சகலருக்கும் விளக்கி எம்மதத்தோர் மனதும் சம்மதிக்கும்படி தமது முடியைத் தரித்துக்கொள்வது மிக்க ஆனந்தம் ஆனந்தமேயாம்.

- 4:36; பிப்ரவரி 15, 1911 -