அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/220-383

விக்கிமூலம் இலிருந்து

216. படுபாவிக்கு பிராமணன் என்னும் பெயர் தகுமோ

தகாவாம். வேஷப்பிராமணன் என்னும் பெயரே பொருந்தும். காரணமோவென்னில், “அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மெய்ப்பூண்டொழுகலால்” என நீதி நூலோர் கூறியப்படி சர்வ உயிர்களையும் தன்னுயிர்போல் பாதுகாக்கும் சாந்தரூபியையன்றோ பிராமணனெனக்கூறத்தகும். அங்ஙனமின்றி பொறாமெயும், பொச்செரிப்பும் கொலைக்குறித்த நோக்கையுடையவனாகவிருந்து ஓர்டிஸ்டிரிக்டுக்கே அரசனாக விளங்கிய கலெக்ட்டர் ஆர்.டபல்யூ.டி.இ. ஆஷ்ஷி அவர்களை இம்மாதம் 18 தேதி காலை 10-மணி 40-நிமிஷத்திற்கு ரிவால்வரால் சுட்டுக் கொன்ற துஷ்டனை பிராமணனெனப் போமோ, இல்லை. இந்த படுபாவின் கேடுண்ட செயலால் மற்றும் இராஜவிசுவாசமுள்ள பிராமணர்களென்போர்களையும், மற்றும் இந்துக்களையும் மனக்கலக்கமுறச் செய்துவிட்டானே. ஈதோர் சாமர்த்தியமாமோ. இத்தகைய செயலால் பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பயந்துவிடுவார்களோ, பல்லாயிரம் உயிரை பறிகொடுத்து இத்தேசத்தைக் கைப்பற்றி ஆண்டு வருகின்றவர்கள் ஓருயிர் போய்விட்டால் விட்டு விடுவார்களோ இல்லை. இத்தகையப் படுபாவச்செயலால் ஒவ்வோர் முநிஷிப்புகள் உத்தியோகங்களுக்குக்கூட ஐரோப்பியர்களே வந்துசேருவார்களென்பது திண்ணம்.

இராஜவிசுவாசிகள் வாழுமிடங்களில் சீருஞ் சிறப்புத் தோன்றும். இராஜதுரோகிகள் வாழுமிடங்களில் துக்கமும் பற்கடிப்புமே தோன்றும். இதற்குப் பகரமாய் கலெக்ட்டர் துரை சுடப்பட்டு பயிரங்க கட்டிடத்தில் மரிக்கவும், சகலசாதி பெரியோர்களுஞ் சூழ்ந்து எடுத்து திருநெல்வேலிக்குச் செல்லவுமாச்சுது. பிராமணனென்னும் பெயர் வைத்துக்கொண்டு கொலைபுரிந்த 25 வயதுடைய படுபாவி பலசாதியோரும் மலங்கழிக்குங் கக்கூசில் தன்னிற்றானே சுட்டுக்கொண்டு செத்தானாம். இதுதான் அவனும் அவனைச்சார்ந்தவர்களுமடையும் பற்பலனாகும்.

அவனவன் துற்கரும்பலனை அவனவனே அநுபவிக்கவேண்டுமென்பது ஆன்றோர் துணிபாதலின் இவன் செய்த படுபாவச்செயலுக்கு படுபாவத்துன்பத்தையே அநுபவிப்பானன்றி இன்பத்தையொருக்காலும் அனுபவிக்கமாட்டான்.

இவன்செய்தப் படுபாவச்செயலால் துரைமக்களும் லேடிகளும் பிராமணனென்னும் வேஷத்துக்குரிய ஒருவன் பூனூலுங் குடிமியும் வைத்து எதிர்வந்தபோதும் சற்று நிதானிப்பார்கள். குடுமிவைத்துக்கொண்டு பட்டைநாமஞ் சாற்றி எதிரில் வந்தபோதும் நிதானிப்பார்கள். குடிமிவைத்து கருப்புப்பல்லும், கருப்புப் பொட்டும் வைத்து எதிரில் வந்தபோதிலும் நிதானிப்பார்கள். இத்தியாதி சந்தேகங்களுக்கும் இப்படுபாவியின் கொலைச் செயலே காரணமாகும்.

சுட்டுக் கொல்லப்பட்ட துரைமகனால் ஆயிரமக்கள் சீர்பெற்று ஆனந்தத்திலிருந்திருப்பார்கள். சுட்டுக்கொன்ற படுபாவியாலோ ஆயிரம் பேர் அல்லலடைந்து சீர்கெட்டிருப்பார்களென்பது அநுபவக்காட்சியாகும். ஆயிரம் பெயரைக் காப்பாற்றிய துரை மகனுக்காகவே சகலசாதி மநுக்களும் துக்கிப்பார்கள். ஆயிரம் பெயரை குடிகெடுப்பவன் செத்தானனென்றாலோ ஆனந்தங்கொண்டாடுவார்கள்.

ஆதலின் துற்குணத்தாலும் துற்செயலாலும், வஞ்சினத்தாலும், குடிகெடுப்பாலும் சுகமாக சிலகாலம் வாழ்ந்துவந்தபடியால் அதையே கையாளுவோமென்று கருதி தங்களது துன்முயற்சியிலிருக்கின்றார்கள். இனியத்தகைய துன்முயற்சிகளுக்காய துக்கங்களையே அநுபவிப்பர்களென்பது சத்தியமாதலின் வஞ்சகுணத்தையும் குடிகெடுப்பையும் ஒழித்து இராஜ விசுவாசத்தில் நிலைத்து சுகம் பெறுவார்களென்று நம்புகிறோம்.

நற்கருமம் நல்ல பலனைத்தரும். துற்கருமம் தீயபலனைத்தருமென்பது சத்தியம்.

- 5:2; சூன் 21, 1911 -