அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/261-383

விக்கிமூலம் இலிருந்து

257. ஆசாரமென்னும் மொழிக்குப் பொருளறியாதோர் ஓர் மேற்சாதிகளாம் அவர்கள் கூடி கீழ்ச்சாதியோரை உயர்த்தப்போகின்றார்களாம்

அந்தோ! ஆசாரமென்னும் மொழியை சாஸ்திரிகள் எவ்வகைச் செயலுக்கு உபயோகப்படுத்தி வந்திருக்கின்றார்களென்னில் சமயாசாரங்களை விடுதலும், குலாசாரங்களை விடுதலும், இல்வாழ்க்கையை விடுதலுமாகியப் பற்றற்றச் செயலெதுவோ அதையே ஆசாரமென வகுத்திருக்கின்றார்கள்.

தேவிகாலோத்திரம்

ஈமயாசார சங்கற்ப விகற்பமும் / அமையதாங்குல வாசாரமானதும்
இமையாதாரும் விடாத வில்லாழ்க்கையும் / அமையார் தோளாய் விடுத லாசாரமே.

சமயாசாரங் குலாசாரமென்பவற்றை தவிற்குஞ் செயலுக்கே ஆசாரமென்னும் மொழியை வழங்கிவருவதை உணராது மேற்சாதியோர் சிலரிருக்கின்றோம்; அவர்கள் எல்லவருங்கூடி கீழ்ச்சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்பது என்னவாசாரமோ விளங்கவில்லை. இவர்களும் ஆசார சீர்திருத்தக்காரர்களென வெளிதோன்றி ஐயா பிரசங்கித்தார், அம்மா பிரசங்கித்தாரென்பதில் யாதுபயன். கீழ்வகுப்புக்கலையிற்றேறி மேல்வகுப்புக் கேறினானென்னில் அஃது கல்வியின் திரத்தைக் காட்டும். அவைபோற் கீழ்ச்சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்னு மொழி மேற்சாதியாகச் செய்கின்றதா அன்றேல் தங்களை உயர்ந்தசாதியென்றே படாடம்பமடித்துக் கொண்டு தங்கள் எதிரிகளை கீழ்ச்சாதியென்றே காலமெல்லாம் சொல்லி வருகின்றதா அதேனும் விளங்கவில்லை. கீழ்ச்சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்னு மொழி யதார்த்தமாயின் இவர்கள் எல்லவரும் ஓர்கால் கீழ்ச்சாதியாயிருந்து உயர்த்தப்பட்டவர்களாயின் அவர்கள் கூடிய கூட்டங்களும், செய்யுங் செயல்களும் செவ்வனே முடியும். அங்ஙனமின்றி தாங்கள் எக்காலும் உயர்ந்த சாதியோரே என்பாராயின் அவர்கள் சொல்லுமொழியுஞ் செய்யுஞ் செயலும் முக்காலும் முடியாவென்பது துணிபு. அன்னோர் பிரசங்கங்களிற் கீழ்ச்சாதியோருட் சிலர் தங்கள் முயற்சியால் முன்னுக்கு வந்திருக்கின்றார்களென்றும் அதனால் அவர்கள் மேற்சாதியின் சேர்க்கையைப் பெற்றிருக்கின்றார்கள் என்றும் கூறியுள்ளது விசாரிணையற்றக் கூற்றேயாம். விசாரிணையுற்றக்கூற்றேயாயின் முன்னுக்கு வந்துள்ளக் கீழ்ச்சாதியோர்பால் மேற்சாதியோர் சேர்க்கைப் பெற்றிருக்கின்றார்களா அன்றேல் மேற்சாதியோர் பால் முன்னுக்கு வந்துள்ளக் கீழ்ச்சாதியென்போர் சேர்க்கைக்குச் சென்றிருக்கின்றார்களா என்பதை உற்றுணர்ந்து பிரசங்கிக்கவில்லை போலும். மேற்சாதி என்போரே அவர்களது நட்பிற்கும் உதவிக்கும் பின்சேர்க்கைப் பெற்றிருப்பது அநுபவக்காட்சியாயிருக்க மேற்சாதியார் சேர்க்கைப்பெற்று விட்டார்கள் என்று தங்களுக்குத் தாங்களே மெச்சிப்பேசிவிட்டது யாது டம்பமோ அதுவும் விளங்கவில்லை.

யதார்த்தத்தில் ஏழைகளை முன்னுக்குக் கொண்டுவரவேண்டு மென்னும் நல்லெண்ணம் உடையவர்களும், நன்கு வாசித்தவர்களும், கருணை நிறைந்தவர்களுமாயிருப்பார்களாயின் கீழ்ச்சாதியென்னு மொழியை மறந்தும் உபயோகிக்க மாட்டார்கள். கருணையுங் கல்வியும் நல்லெண்ணமும் இல்லாதவர்களாதலின் வித்தையும், புத்தியும், ஈகையும், காருண்யமுமடைந்த பெருங்கூட்டத்தோரை கீழ்ச்சாதி எனக் கூறிக்கொண்டே தங்களை உயர்த்திக்கொள்ளப் பார்க்கின்றார்கள். இத்தகைய மொழியால் ஒருவனை உயர்த்தவும், மற்றொருவனைத் தாழ்த்தவும் இயலா. இயல்வதியாதெனில், கள்ளனைக் கீழ்ச்சாதியோனென்னிற் பொருந்தும், மதுவருந்தும் வெரியனைக் கீழ்ச்சாதியோனென்னிற் பொருந்தும், விபச்சாரியைக் கீழ்ச்சாதியோனென்னிற் பொருந்தும், பொய்யனைக் கீழ்ச்சாதியோனென்னிற் பொருந்தும். கொலைஞனைக் கீழ்ச்சாதியோனென்னிற் பொருந்தும். காரணம் பஞ்சபாதகத் தொழிலைச் சாதிக்கும் படும்பாப சாதனிகளாதலின் பொதுவாகக் கீழ்ச்சாதியென்னும் பெயரவர்களுக்கே பொருந்துமன்றி ஏனைய உழைப்பாளிகளுக்கும் கருணை நிறைந்தவர்களுக்கும் மனிதவகுப்போரை மனித வகுப்போராக பாவிப்பவர்களுக்கும் கீழ்ச்சாதி என்னும் பெயர் பொருந்தாது. சங்கை சுட்டாலும் வெண்மெத் தருவது போல் யாது துன்பத்தில் நசுங்குண்டபோதிலும் மேன்மக்கள் மேன்மக்களாகவே விளங்குவார்கள்.

தங்களை மேற்சாதியோரென உயர்த்திக்கொண்டு ஆறுகோடி மக்களைக் கீழ்ச்சாதியெனத் தாழ்வுபடக்கூறி அவர்களை உயர்த்தப்போகின்றோமெனப் படாடம்பமடித்துக் கூட்டங்கூடி வீண்கூச்சலிடுவதினும் அவர்களது முன்னேற்றத்தைத் தடுக்காமலும் முயற்சிகளைக் கெடுக்காமல் மட்டிலும் இருப்பார்களாயின் அதுவே இவர்கள் செய்யும் பேருபகாரமாகும். ஏழைக்குடிகள் கேழ்க்கும் பூமிகளைக் கொடுக்கவிடாமலும், சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமலும் உள்ளக் கருணையற்றவர்கள் ஏழைகளை முன்னேறச் செய்வார்களென்பதும் நம்பிக்கையேயில்லை. இஃது குழந்தையின் துடையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் பலவகை இடுக்கங்களாலும் ஏழைக்குடிகளை உள்ளுக்குள் பாழ்படுத்தி விட்டு இராஜாங்கத்தோர் மெச்சும்படிக் கீழ்ச்சாதியோரை உயர்த்தப்போகின்ற யாங்களுமோர் மேற்சாதி யாரென அபிநயித்து பத்திரிகைகளின் வாயிலாலும் பிரசங்கங்களின் வாயலாலும் பரக்கக்கூறி படாடோப் மடித்து வருகின்றார்கள். இத்தகையோர் வஞ்சகக்கூற்றில் எஞ்சியவற்றை சமயம் நேர்ந்துழில் அஞ்சாதெழுதுவாம்.

- 5:52; சூன் 5, 1912 -