உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/268-383

விக்கிமூலம் இலிருந்து

264. கனந்தங்கிய கார்பரேஷன் கமிட்டியார் கருணை வைத்தல் வேண்டும்

அதாவது அதிகாரிகள் தேச சீர்திருத்தங்களுக்குக் குடிகளை நோக்குவதும், குடிகள் தங்கள் சுகத்திற்கு அதிகாரிகளை தேடுவதும் இயல்பாம். இத்தகைய நோக்கங்களுள் அதிகாரிகளே குடிகளை ஆதரித்து வருவது நீங்கலாகக் குடிகளே சேர்ந்து அதிகாரிகளை நியமித்து தங்கள் தங்கள் சுகாதாரங்களைத் தேடிக் கொள்ளுவதுமுண்டு. அவ்வகைக் குடிகளே தேடிக்கொள்ளுவதுள் முநிசபில் கமிஷனர்களும் ஓர் கூட்டத்தோர்களே யாவர்.

குடிகளால் தெரிந்தெடுத்துக்கொள்ளப்பட்ட கூட்டத்தோர், குடிகளது கஷ்டநஷ்டங்களையே நோக்க வேண்டும். எடுத்துள்ள சீர்திருத்தங்களையும் ஏறத்தாழ நடாத்தல் வேண்டும். நடத்தும் சீர்திருத்தங்களை நாடிக் குடிகளை அதிகமாக வருத்தவும் ஆகாது. தற்காலம் குடிகளுக்கு வீட்டின் வரிகளை அதிகப்படுத்தியிருப்பதினால் எளியக் குடிகள் யாவரும் கண்கலங்கி நிற்கின்றார்கள்.

அத்தகையக் கண்கலக்கம் போறாது கனந்தங்கியக் கமிட்டியார் மற்றும் சில வரிகளை நியமிக்கப்போவதாகத் தெரிந்து மேலும் மேலும் பயப்பிராந்தி கொண்டு தவித்துத் திரிகின்றார்கள். இத்தவிப்பையும், பயத்தையும் கண்கலக்கத்தையும் முநிசபில் கமிஷனரவர்களே தெரிந்து முக்கியமாக விதிக்கவேண்டிய வரிகளை விதித்து தவிர்க்க வேண்டிய வரிகளைத் தவிர்த்துக் குடிகளைக் கார்த்தல் வேண்டும். குடிகள் யாவரும் முநிசபில் அதிகாரிகளை நோக்கி நிற்பவர்களாதலின் முநிசபில் அதிகாரிகளின் அன்பும் நோக்கமும் குடிகள் மீது இறுத்தி சீர்திருத்தத்தில் யாதாமோர் ஆயாசமின்றி நிலைபெறச்செய்தல் வேண்டும். அப்போதே தேசமும் தேசக்குடிகளும் சுகச்சீர்பெற்று ஆனந்த நிலையடைவார்கள். அதுவே முநிசபில் சீர்திருத்தக்காரர்களின் பேருதவியுமாகும்.

தற்காலம் விதிக்க உத்தேசித்திருக்கும் வரிகளில் ஒன்றை சீர்தூக்கி ஆலோசிப்போம். அதாவது நாய்களுக்கென்று ஆறுமாதத்திற்கு நாலணாவென விதித்திருந்த வரியை பனிரண்டணாவாக உயர்த்தி வசூல் செய்துவருகின்றார்கள். அதே வரியை தற்காலம் இரண்டு ரூபாயாக உயர்த்தவேண்டுமென உத்தேசித்திருப்பதாகத் தெரிகின்றோம். இவ்வரியை உயர்த்துவதினால் எச்சீர்திருத்தத்திற்கு ஆதாரம். அல்லது நாய்களையே முநிசபில் எல்லைக்குள் வைக்கப்படாதென்னும் நோக்கமா, யாதும் விளங்கவில்லை. அவ்வகையாக நாய்களை அகற்றி விடுவதாயின் ஒவ்வோர் தோட்டமுள்ள இடங்களிலும், எளியக் குடிகள் வாசஞ்செய்யும் வீடுகளிலுங் கள்ளர்கள் தங்கள் தங்கள் சாவகாசம்போல் நுழைந்து பொருட்களை கொள்ளையடிப்பதுடன் குடிகளுக்கும் உபத்திரவங்கள் நேரிடுமென்றே விளங்குகின்றது.

எவ்வகையில் என்னில் தற்காலமுள்ள சிறு தோட்டங்களிலும், ஏழைக்குடிகள் வாசஞ்செய்யும் சுத்துக்கட்டு அற்ற வீடுகளிலும் ஒவ்வோர் நாய்களிருந்தே சொத்துக்களைக் காபந்து செய்துவருகின்றது. அதனால் ஏழைக்குடிகள் பகலெல்லாம் உழைத்தும் இரவில் அயர்ந்து நித்திரை செய்து வருகின்றார்கள். அவ்வகையோர் இரண்டு ரூபாய் வரிக்கு பயந்து நாய்களை வளர்க்காமல் விட்டுவிடுவார்களாயின் கள்ளர்களுக்கு ஆனந்தமும் குடிகளுக்கு சுகக்கேடும் உண்டாமென்பது சொல்லாமலே விளங்கும்.

ஒவ்வோர் வீடுகளிலும் நாய்களை வளர்ப்பது தங்கள் தங்கள் வீட்டுக் காவலுக்கேயன்றி வேட்டைகளுக்கன்று. அந்நாய்களுக்கென்று சொற்ப வரிகளைவிதித்து ஜாக்கிரதையில் வளர்க்கும்படியான உத்திரவை அளிக்க வேண்டுமேயன்றி பெருந்தொகையான வரிகளை விதித்து நாய்களை வீடுகளில் வளர்க்கவிடாமலே செய்துவிடுவதாயின் உள்ள போலீசு உத்தியோகஸ்தர்களுக்கு மாறாக்கவலையும் ஓயா அலைச்சலும் உண்டாவதுடன் கத்துக்கட்டு இல்லா வீடுகளில் வாசஞ்செய்யும் எளியக் குடிகள் யாவரும் சுகச்சீர் கெட்டு தவிப்பார்களென்பது திண்ணமேயாம்.

அவைபோல் குதிரைவரிகளையும் வண்டிவரிகளையும் உயர்த்துவதினால் சில வண்டிகளையும் குதிரைகளையும் வரிகளுக்கு பயந்தே எடுத்துவிடும்படியாக நேரிடும். அதனால் வண்டிகளை வாடகைகளுக்கு விட்டு சீவிப்பவர்களுக்கும் நஷ்டம், வண்டியிலேறி ஆங்காங்கு செல்லுவோருக்குங் கஷ்டம். ஆதலால் கனமும் கருணையுந்தங்கியக் கார்ப்பரேஷன் கமிட்டியார் ஏழைக்குடிகளின் கஷ்டநஷ்டங்களை சீர்தூக்கி இப்போது இயற்றியுள்ள வரிகளையே இன்னும் குறைக்கத்தக்க முயற்சிகளைச் செய்து சீர்திருத்த செலவுகளையும் ஒடுக்கி ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

- 6:8; சூலை 31, 1912 -