உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/274-383

விக்கிமூலம் இலிருந்து

270. அரிசி ரூபாயிற்கு நாலு படியே! அரிசி ரூபாயிற்கு நாலு படியே?

தற்காலம் சென்னை முநிசபில் எல்லைக்குள் ரூபாயிற்கு நாலுபடி அரிசி விற்கும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள். மற்றய தவிடு கலப்பும், பலவகை யரிசி கலப்பும், மண்ணு கலப்பும், சாம்பல் கலப்புமுள்ள அரிசியோ ரூபாயிற்கு ஐந்து படியேயாம். அவற்றை நோக்கி ஏழைகளின் பசியை ஆற்றுவோரைக் காணோம். அதனை விசாரித்து சீர்திருத்துவோரையுங் காணோம். பசி ஏப்பக்காரருக்கும் புளி ஏப்பக்காரருக்குந் தாரதம்மியங் காணாதது போல் பெரிய உத்தியோகஸ்தர்களுக்குப் பெரும்பணமுள்ள படியால் அரிசியின் விலை அறியாது ஆனந்தத்திலிருக்கின்றார்கள். முன்பு இவ்விடந் தங்கியிருந்த பட்டாளங்கள் இவ்விடமிருக்குமாயின் அரிசி மண்டிகளைக் கொள்ளையடிக்குங் கூச்சல் குய்யோமுறையோவென ராஜாங்கத்தோருக் கெட்டிக் கடைக்காரர்கள் தாங்கள் கொள்ளு முதலுக்கு சொற்பலாம் வைத்து விற்கும் படியான விதிகளை உண்டு செய்து விடுவார்கள். அத்தகைய பட்டாளங்களுமில்லை அதனால் மண்டிக்கடைகளை வைத்து அரிசி விற்போர் தங்கள் தங்கள் மனம் போனவாறு பெரும் லாபத்திற்கு ஆசித்து விட்டார்கள். இத்தேசத்துள்ள இதக்கமற்ற குருக்களை பூசிக்கும் இதக்கமற்ற மாணாக்கர்களே மண்டிக்கடைகளின் முதலாளிகளாகி விட்டபடியால் பொன்னின் கம்பியை இழுக்க இழுக்க நீளுவது போல அரிசியின் படியை நாளுக்கு நாள் குறைக்கக் குறைக்க லாபம் உண்டாவது கண்டு தம்மெய் ஒத்த நூறுகுடிகள் பசிபட்டினியால் பதைத்து ஏதுகேடுண்டேனுங் கெடட்டும் நாம் ஒருகுடி சுகமாக வாழ்ந்தால் போதும் என்னும் ஆனந்தத்திலிருக்கின்றார்கள். தானியம் மலிந்திருந்த காலத்தில் சரியான லாபம் வைத்து விற்றவர்கள் தானியங் குறைந்துள்ள காலத்திலும் அத்தகைய லாபம் வைத்து விற்பார்களாயின் குடிகள் கூச்சலிடமாட்டார்களே, தானியங் குறையக் குறைய லாபத்தை மேலும் மேலும் பெருக்குகின்றபடியால் அன்றோ ஏழைக் குடிகள் பரிதவிக்கின்றார்கள். இராஜாங்கத்தோர் பார்வையில் விற்றுவரும் உப்பு ஒன்று தவிற விறகேனும் சகாயத்தில் கிடைக்கின்றதா, மிளகாய், புளி, மசாலைகளேனும் சகாயத்திற் கிடைக்கின்றதா, மற்றும் சோளம், கேழ்வரகு, பயிறு தினுசுகளேனும் சகாயமாகக் கிடைக்கின்றதா, ஏதுங் கிடையாவே. இத்தியாதி குறைவில் அரிசியையும் அதிகக் குறைத்து அதிகலாபம் பெற எண்ணுவாராயின் ஏழைக்குடிகள் எவ்வகையில் சீவித்து எடுக்கும் வேலைகளை களைப்பும் ஆயாசமுமின்றி முடிக்க முயலுவார்கள். ஆகவே உழைக்கும் ஆட்களுக்கு உல்லாசமும், ஊக்கமுமிருந்தாலன்றோ ஊர்க்குடிகள் யாவரும் சுகச்சீர் பெறக்கூடும். “உழைப்பாளிகள் உறம் பெற்றுழைக்கின் பெருக்காளிகள் பெரும்பேர்பெறுவர்” என்னும் பழமொழியும் வீண்போமோ, இத்தியாதி, தானியங்கள் குறைவுபட்டுபோதற்கும், குடிகள் அல்லலடைவதற்கும் காரணம் கருணையும் அன்புங் கனவிலுமில்லா சோம்பேறிகள் பேராசையால் பெரும் பூமிகளை சுவாதீனப்படுத்திக்கொண்டு கலப்பைப் பிடித்தாற் கனங்குலையும் என்றும், மண்வெட்டி பிடித்தால் மானம் போமென்றும், சோம்பலையே மேலும் மேலும் பெருக்கிக்கொண்டு துட்டும் செலவாகக் கூடாது, உழவு மாடுகளும் செலவின்றி மேய்ந்து வந்துவிடவேண்டும், அதற்காக நாளொன்றுக்கு ஓரணாவுக்கு இரண்டாள் அகப்படுவானா எனப் பல்லிளித்துப் பார்த்திருப்பதினால் பூமியுங் கெட்டு பயிறுகளும் நசிந்து உழவு மாடுகளும் குறைந்து பூமிகளும் பாழடைந்து போகின்றது.

ஈதன்றி உழுது பயிரிடும் உழைப்பாளிகள் யாவரையுந் தங்களை ஒத்த மநுக்களென்று பாவிக்காமலும் அரைவயிறு கஞ்சேனும் சரிவரக்கொடுக்காது வாதிப்பதினாலும் சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாத சுகாதாரக்கேட்டினாலும் தென்னிந்திய உழைப்பாளிக் குடிகளில் பெரும்பாலோர் ஊரைவிட்டு ஓடியும் போனார்கள். மற்று மிகுத்துள்ள உழைப்பாளிகள் காலியாயுள்ள பூமிகளுக்கு விண்ணப்பங்கொடுப்பார்களாயின் சாதிகர்வ துவேஷத்தால் தாழ்ந்த சாதியான் பூமிகளைப் பெற்றுக்கொள்ளுவானாயின் தங்களை பெரியசாதிகளென்று மதிக்கமாட்டான் குறைந்த கூலிக்கு வந்து நமக்கு ஊழியமுஞ் செய்ய மாட்டான் என்னும் பொறாமெயால் தங்களை ஒத்த சாதிசம்மந்த உத்தியோகஸ்தர்களைக்கொண்டு அதற்கு அண்டை பாத்தியம் வேறு உண்டென்றும், அஃது மேய்க்கால் பூமியென்றும் ஏதேனும் ஒவ்வோர் தடைகளைச் சொல்லி ஒழித்து விட்டு தாங்களே தங்கள் பூமிகளை விருத்திபெறச் செய்துக் கொள்ளாமலும் செய்யும் உழைப்பாளிகளுக்குக் கொடுக்கவிடாமல் தடுத்து பாழ்படுத்தி வருகின்றார்கள்.

இத்தகையக் கேடுபாடுகளால் பூமிகளின் விருத்திக்கெட்டு ரூபாயிற்கு நாலுபடி அரிசிக்கு வந்துவிட்டது. சோம்பேறிகளே பூமிகளை மிக்க சேகரித்துக் கொண்டு பாழ்படுத்தி வருகின்றார்களென்பதற்குப் பகரமாக பூமிகளின் விருத்தியை நாடி கருணை தங்கிய ராஜாங்கத்தார் எவ்வளவோ முயற்சியும் பணவுதவிகளும் விதை முதலுதவிகளும் விவசாய போதனைகளும் செய்து வந்தும் அவைகள் யாவும் சரிவர விருத்திபெறாததற்குக் காரணம், அதிகபூமிகளைவைத்துள்ளோர் சோம்பலும் சாதி ஊழலுமேயாகும். பெரியசாதிகளென வேஷம் போட்டுள்ளவர்களே இப்பஞ்சத்திற்குக் காரணபீடமாயுள்ளதுமன்றி மண்டிக்கடைகளைவைத்துக்கொண்டு கருணையற்றச் செயலால் பெரும் லாபத்தை ஆசித்து ஏழை எளியோரை வாதித்து வருகின்றார்கள். இத்தகையக் கருணையற்றோர் காலத்தில் பிரிட்டிஷார் துரைத்தன மட்டிலும் இவ்விடம் இல்லாதிருக்குமாயின் ஏழை மக்கள் யாவரும் பசிபட்டினியால் மடிந்து தென்னிந்தியாவே பாழைடைந்துபோம். பிரிட்டிஷ் துரைமக்களுக்குள்ள வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தினால் இரெயில்வே தொழில்களையும், இஸ்டீமர்களுக்கு உண்டாகியத் தொழில்களையும், அனந்தக் கைத்தொழிற்சாலைகளையும், வியாபாரக் கம்பனிகளையும், அச்சியந்திர சாலைகளையும் வைத்து விருத்திசெய்து வருகின்றபடியால் இலட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு வரும் கூலிகளைப்பெற்று அரைவயிற்றுக் கஞ்சேனுங்குடித்து சீவித்து வருகின்றார்கள். அத்தகையத் தொழிற்சாலைகளுமில்லாமற் போமாயின் இந்நாலுபடி அரிசி விற்கும் பஞ்சகாலத்தில் “ஆடுகிடந்தவிடத்தில் மயிருங் கிடையா” தென்னும் பழமொழிபோல் ஏழைமக்கள் கிடந்தவிடத்தில் எலும்புகளுங் காணாமற் போமென்பது சத்தியம்.

ஆதலின் பெரியசாதியென வேஷமிடப் பெரிய பெரிய பணக்காரர்களென வெளிதோன்றுவோர் வானத்தை நோக்கி மழைப் பெய்யவில்லை என்பதினும் ஏழை எளியோரை நோக்கி அவர்களுக்கு இதங்கி அதிக லாபத்தைக் கருதாது சரிவிலைவிற்று ஏழைமக்களை சீவிக்கச் செய்வார்களென்று நம்புகிறோம். கருணை தங்கிய ராஜாங்கத்தோரும், கருணையற்ற வியாபாரிகளின் செயல்களை சற்று கண்ணோக்கும்படி வேண்டுகிறோம்.

- 6:15; செப்டம்பர் 18, 1912 -