அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/296-383

விக்கிமூலம் இலிருந்து

292. நமது பத்திரிகை

அன்பர்காள்! நமது தமிழன் பத்திரிகையை ஆரம்பித்து ஆறுவருடம் முடித்து ஏழாவது வருடம் நடைபெற்று வருகின்றது. இப்பத்திரிகையை ஆரம்பிக்கும்போதே குருவிசுவாசத்தையும் இராஜ விசுவாசத்தையும் பீடமாகக் கொண்டே நடத்திவருகின்றோம். உள்ளளவும் இனிநடத்தியும் வரப்போகின்றோம் இதனந்தரார்த்தார் அறிந்த குருத் துரோகிகளும் இராஜ துரோகிகளும் இப்பத்திரிகையைப் பரவவிடக் கூடாது என்னும் பொறாமே குணத்தால் பத்திரிகை செல்லுமிடங்களெல்லாஞ் சென்று பத்திரிகையை வாங்கவிடாமல் தடுத்தும் சிலவஞ்சினர்கள் துரைமக்களுக்கு ஏவல்புரியும் உத்தியோகஸ்தர்கள் வாசஞ்செய்யும் வீடுகள் தோருஞ் சென்று 'தமிழன்' பத்திரிகையை வாங்கவிடாமற் கெடுத்தும் சாதிபேதமில்லாமல் சேரிகளில் வாழ்வோர்களிற் சிலர் இராஜாங்க உத்தியோகம் அமர்ந்துகொண்டால், முதலியாரோடு கூடிச்சென்றால் முதலியாரென்று எண்ணுவார்களென்றும், செட்டியாருடன் கூடிச்சென்றால் செட்டியாரென்று எண்ணுவார்களென்றும், நாயுடுவுடன் கூடிச்சென்றால் நாயுடுவென்று எண்ணுவார்கள் என்றும் புலியைக்கண்டு பூனைச் சூடிக்கொள்ளுவது போல் போலி வேஷமிட்டு கசாதியோர் சீர்திருத்தத்திற் சேராமலும் சுசாதி அபிமானங் கொள்ளாமலுமுள்ள அறிவிலிகள் இப்பத்திரிகையை வாங்காமலும் விடுத்துவந்தார்கள். இத்தகைய வஞ்சகக்கூத்தோர் மத்தியில் சுசாதி அபிமானிகளும் சுசாதி விருத்தியை நாடுவோரும் விவேகமிகுத்தவர்களுமாகியப் பரோபகாரிகள் முயன்று பத்திரிகையை நிலைபெறச் செய்தும், அதனைப்பல தேசங்களிற் பரவச்செய்தும் அங்கங்கு சாது சங்கங்களைக் கூடச் செய்தும் எமது உட்கருத்துக்கு இசைந்து குரு விசுவாசத்திலும் இராஜ விசுவாசத்திலும் நிலைபெற்று வருகின்றார்கள். அத்தகைய சத்தியசீலர்களாலும் உத்தமபோதகர்களாலும் நடை பெற்றுவருந் தமிழன் பத்திரிகை இத்தமிழ் நாடெங்கும் பரவுமாயின் அசத்தியர் அதன்மங்களும், அசப்பியர் போதங்களும், துன்மார்க்கர் கூட்டங்களும் நாளுக்குநாள் நசிந்து நற்கீர்த்தியும், நற்சாகமும் பெற்று அவர்களும் குருவிசுவாசம் இராஜவிசுவாசம் இரண்டிலும் நிலைபெறுவார்கள். சகல மக்களுங் குருவிசுவாசத்தில் நிலைக்கவேண்டுமென்னுங் காரணமியாதெனில்: உலகத்திற்கே ஆதி சீர்திருத்தக்காரராகத் தோன்றி உலகரட்சகனென்றும் ஜெகத் குருவென்றும் சங்க அறரென்றும் பெயர்பெற்ற புத்தபிரானால் ஓதியுள்ள ஆதிவேத நீதிபீடத்தை ஆதாரமாகக் கொண்டே அனந்த வேதங்களும் அனந்தமதங்களுந் தோன்றி மாறுகொண்டுள்ளபடியால், நன்மார்க்கத்திற் சென்று, சத்தியத்தில் நிலைத்து, நித்தியாக்கம் பெறவேண்டியவர்கள் உத்தம சற்குருவாம் புத்தரையே விசுவாசிக்க வேண்டுமென்று கூறியுள்ளோம்.

சகல மக்களும் இராஜ விசுவாசத்தில் நிலைக்கவேண்டுமென்னுங் காரணம் யாதென்னில், இந்தியதேசத்துள் இதுகாறும் பிரிட்டிஷ் ராஜரீகம் வந்து நிலைக்காமற்போயிருக்குமாயின் கேடுகெட்ட சாதிபேதத்தால் மக்கள் நாடுகளைவிட்டுக் காடுகளில் ஓடவும், சிறுமீன்களெல்லாம் பெருமீன்களுக்கு இறையென்பதுபோல் வல்லவர் முன்னில் பல்லவர் நசுங்கவும், வீதிகளின்றி கொடிபாதைகொள்ளவும், நகரங்களெங்கும் பகரமற்று ஒழியவும், நாடுகளெங்கும் மாடுகன்று ஒழியவும், உள்ளவர் சொத்தை கள்ளர் கைகொள்ளவும், ஏரிகளின்றி ஊருகள் பாழாகவும், ஓரூரில் தானியம் விளையுமாயின் மறுவருக்கு உதவாமற் போகவும், ஒருவூரில் பஞ்சமுண்டாயின் அத்தேசமே பாழடையவும், ஒருவூரை விட்டு மறுவூருக்குப் போக வேண்டுமாயின் மாடுகள் செத்தும் வண்டிகள் உடைந்தும் மக்கள் திக்கற்றும் தன்னூரைவிட்டு பிறவூர்ச்சென்றவன் சுகாசுகந் தெரியாமலும் நகரங்கள் எங்கும் இருளடைந்து நாடுகளெங்குங் கேடுபாடுற்றும் மக்கள் யாவரும் தங்கவீடின்றியும், படுக்கப் பாயின்றியும், உடுக்க வஸ்திரமின்றியும், குடிக்கக் கூழின்றியும் ஏதோர் சுகமின்றியும் மடிந்தே இருப்பார்கள்

இத்தகையக் கேடடைந்து போகுங்காலத்தில் வித்தையும், புத்தியும். ஈகையும், சன்மார்க்கமும், கருணையும் நிறைந்த பிரிட்டிஷ் ராஜரீகம் வந்து தோன்றி நூதனசாதிபேதக் கோட்பாட்டினால் கெட்டழிந்து வந்த விவசாயங்களும் சாதிபேதக் கோட்பாட்டினால் கெட்டழிந்து வந்த வித்தைகளும் சாதிபேதக் கோட்பாட்டினால் கெட்டழிந்துவந்த ஒற்றுமெகளும் விருத்தி பெறலாயிற்று. நகரங்களெங்கும் மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் உயரலாயிற்று, வீதிகளெங்கும் மேடுபள்ளமின்றி நடக்கலாயிற்று, பாதைகளெங்குந் தீபாலங்கிரதஞ் சொலிக்கலாயிற்று, கலாசாலைகளெங்கும் திறந்து கற்கலாயிற்று. அக்கல்வி கற்றோரெல்லாம் நாகரீகம் பெற்று சுகமுறலாயிற்று, கூரைவீட்டில் வாழ்ந்தோரெல்லாம் மாடமாளிகைக்கட்டி வாழ்க்கை பெறலாயிற்று, பிச்சை இரந்துண்டோ ரெல்லாம் வண்டி குதிரைகளிலேறி உலாவலாயிற்று, சோளச்சோற்றைத் தின்று சுவை தெரியாது இருந்தோரெல்லாம் நெல்லஞ் சோற்றுடன் நெய் பிசைந்து தின்னலாயிற்று, காடா துணிக்கட்டித் திரிந்தோரெல்லாம் மல்லுவேட்டிகளைக் கட்டலாயிற்று, புட்டத்திற்குமேல் கட்டுத் துணியை உடையோர் எல்லாம் நீட்டுக் கோட்டுகளும் பென்டலங்களும் போடலாயிற்று, இட்டலி தோசைத் தின்றோரெல்லாம் ரொட்டி பிஸ்கட் தின்னலாயிற்று, நீச்சத்தண்ணீர் குடித்தோரெல்லாம் காப்பி கோக்கோ குடிக்கலாயிற்று, கட்டைவண்டிகளில் ஏறிப்போவோரெல்லாம் கோச்க வண்டிகளிலும், பீட்டின் வண்டிகளிலும் ஏறலாயிற்று, குளத்துத்தண்ணீர் குட்டைத் தண்ணீர் குடிப்போரெல்லாம் பில்டர் வாட்டர் குடிக்கலாயிற்று, பாசம்பிடித்தச் சொம்பும் பற்றேறியப் பாத்திரங்களை உபயோகித்தவர்களெல்லாம் என்னாமலேட் பிளேட் கிளாஸ்வேர் உபயோகிக்கலாயிற்று, வாழை இலைத் தையலிலையில் புசித்தோரெல்லாம் வெள்ளிக்கிண்ணங்களில் புசிக்கலாயிற்று, தலைமுறை தலைமுறையாகத் தலைகுட்டைக் கட்டாதோரெல்லாம் பெல்ட் காப், இரவுண்ட் காப், மல் தலைகுட்டை, மாவடஞ்சி தலைகுட்டை கட்டலாயிற்று, ஒருதேசம் விட்டு மறுதேசம் போகாதவர்களெல்லாம் இருப்புப்பாதை ரதங்களிலும் புகைக்கப்பல்களிலுமேறி பற்பல தேசங்களுக்கும் போகலாயிற்று, தருப்பைப் புல்லும் சுள்ளி விரகுகளும் கைகளிலேந்தி வீதிவீதியாய்த் திரிந்தோரெல்லாந் தங்கள் கைகளில் வெள்ளி பென்சல், பொன் பேனாக்களைப் பிடிக்கலாயிற்று, அடுத்த வூர் சங்கதியை ஆறுமாதமாகியுந் தெரிந்துக் கொள்ள இயலாதவர்கள் ஆறுமாதத்தியப் பிரையாண ஊர்சங்கதிகளை அரைமணிநேரத்தில் தெரிந்துக் கொள்ளலாயிற்று, நகரங்களிலெல்லாம் நல்ல நீர் கிடையாது உவர் நீரை மொண்டு குடித்தோரெல்லாம் சுத்த நீர் குடித்து சுகிக்கலாயிற்று. மற்றும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரால் குடிகளுக்கு செய்துவரும் நீர்வசதிகளையும், பாதை வசதிகளையும், வைத்தியசாலை வசதிகளையும், வித்தியாசாலை வசதிகளையும் அதனதன் சுகங்களையும் வரையவேண்டின் ஓர் புத்தகரூபமாகிப்போம். தங்களைப்போல் பிறருஞ் சுகம்பெற வேண்டுமென்று கருதி அன்னையைப் போல் ஆதரித்து வருவது இப்பிரிட்டிஷ் ராஜரீகம் ஒன்றேயாதலின் இவ்விராஜரீகம் என்றும் நிலைத்து சகலமக்களும் சுகம்பெறவேண்டுமாயின் இவ்விராஜாங்கத்தின் மீது விசுவாசத்தை வளர்த்த வேண்டுமென்பது முடிபு.

- 7:2; சூன் 18, 1913 -