உள்ளடக்கத்துக்குச் செல்

அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/321-383

விக்கிமூலம் இலிருந்து

317. அரசாங்கத்தோரால் குடி விருத்தியடைகின்றதா அன்றேல் இத்தேச நூதன மதத்தோர்களால் குடி விருத்தியடைகின்றதா

இந்திய தேசத்தில் இந்திரர் தன்மமாம் புத்ததன்மம் பரவியிருந்தவரையில் சமணமுநிவர்களால் குடிகள் யாவருக்கும் மது மாமிஷங்களை அகற்றி சீலத்தில் நிலைக்குமாறு போதித்து அவைகளையே ஓர் விரதமாகக் கொண்டொழுகும் வகையில் விடுத்திருந்தார்கள். அதனால் மனுமக்கள் யாவரும் சுத்த சீலக்கியான விருத்தியினின்று வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் பெருகி, குரு விசுவாசம் இராஜ விசுவாசத்தில் நிலைத்து அவரவர்கள் அறிவின் விருத்தியை கல்வியிலும் கைத்தொழிலிலும் விவசாயத்திலும் வளர்த்து சருவ சீவர்களையும் தங்களைப்போல் கார்க்குங் சீவகாருண்யமும் சுயக்கியானம் உண்டாகி தேசத்தைச் சிறப்புறச் செய்து வந்ததுமன்றி மக்களும் ஒற்றுமெயுள்ள வாழ்க்கையால் சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.

அத்தகையாய சுகவாழ்க்கை காலத்தில் சில நூதன சாதியோர் யாசக சீவனமாகவே இத்தேசத்தில் வந்து குடியேறி தங்களது மித்திரபேத உபாயங்களினால் கல்வியற்றவர்களும் விவேகமற்றவர்களுமாயப் பெருங் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் தங்கள் வயப்படுத்திக் கொண்டு நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் உண்டு செய்துக்கொண்டு கொலையையும் புலையையும் கட்குடியையும் அகற்றி வாழ்ந்திருந்த பௌத்தர்கள் முன்னிலையில் மாமிஷம் புசிப்பதற்கும் மயக்க பானங்களைக் குடிப்பதற்கும் பயந்து தங்கள் நூதன மதசார்பாகவே தங்கள் தேவனுக்குக் கொழுத்தப் பசுக்களும் கொழுத்த குதிரைகளும் கொழுத்த மனிதர்களுமே மிக்க பிரியம், அவைகளை நெருப்பிலிட்டுச் சுட்டுப் புகையை ஆகாயம் அளாவச் செய்தால் தேவனுக்கு ஆனந்தமுண்டாகி கால மழை பெய்யவும் குடிகள் கோறிய வரத்தையும் கொடுப்பாரென்னும் பொய்யுரைகளைப் பரவச்செய்து பேதை மநுக்களை வஞ்சித்து பொருள் பரித்து சுராபானமென்னும் கஞ்சாயிலை மயக்க நீரைக் குடித்து கொழுத்தப் பசுக்களையும் குதிரைகளையும் மனுக்களையும் பதபதைக்க நெருப்பிலிட்டுச் சுட்டு தின்ன ஆரம்பித்தார்கள். இவர்களே இத்தேசத்தில் மயக்க வஸ்துவைக் குடிப்பதற்கும் மாமிஷங்களைத் தின்பதற்கும் முதலாக வழி திறந்தவர்களாவர். அவ்வகைத் தின்பதற்கும் எவ்வகையானப் பெயர்களை உண்டு செய்துக் கொண்டார்களென்னில் பௌத்த மடங்களாம் இந்திரவியாரங்களில் சமண முநிவர்களால் மநுக்களுக்கு உபகாரமாக அக்கினி குண்டம் வளர்த்தி ஓமயாகம் என்றும் இட்டியாகம் என்றும் கிருதயாகம் என்றும் செய்து வந்தப் பெயர்களையே பீடமாகக் கொண்டு பசுயாகம் என்றும், அசுவயாகம் என்றும், புருஷயாகம் என்றும் பெயரைக் கொடுத்து சுராபானங் குடிப்பதையும் மாமிஷந் தின்பதையுமே ஆனந்தமாகக் கொண்டுவந்தார்கள். இத்தேசப்பெளத்தர்களுக்கு பசுவை நெருப்பிலிட்டுப் பதைக்கச் சுட்டுத் தின்னுங் கொடூரக் கொலையும், சுராபான மருந்தி மயக்கமிகுத்து ஆண் பெண் நிலைகுலைந்து திரியும் அசுத்தத்தையும், மிலேச்சச் செயல்களையுங் கண்டு அக்கூட்டத்தோரை மிலேச்சரென்றும், ஆரியரென்றும், மிலைச்சரென்றும், ஈனரென்றும், இன்னனென்றும், ஈனரென்றும், இன்டென்றும் வழங்கி அதுகொண்டே இத்தேசத்தோர் அவர்களை அடித்துத் துரத்தவும் ஆரம்பித்துக் கொண்டார்கள். இதுவே பௌத்தர்களுக்கும் மிலேச்சர்களுக்கும் உண்டாய விரோதமூலம் என்னப்படும். சுராபானமாம் மயக்க வஸ்துவைக் குடித்துத் திரிவோரை சுரர் என்றும், மயக்க வஸ்துவைக் குடிக்காது சுத்த சீலத்திலிருக்கும் பௌத்தர்களை அசுரர்களென்றும் வகுத்து காமியமுற்று சிற்றரசர்களையும் கல்வி அற்றப் பெருங் குடிகளையுங் கொண்டு அவர்களைக் கொல்லவும் துன்பப்படுத்தவும் ஆரம்பித்துக்கொண்டு தங்கள் மிலேச்ச செயல்களுக்கு எதிரடையா இருந்த பௌத்தர்களையும் பௌத்த மடங்களையும் பௌத்த சாஸ்திரங்களையும் மாறுபடுத்தி அழிக்கத்தக்க மித்திரபேதச் செயல்களையே செய்துவந்ததுமன்றி பெளத்த சாஸ்திரங்களில் வரைந்துள்ளப் பெயர்களையும் செயல்களையுமே மூலமாகக் கொண்டு நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் உண்டு செய்துக் கொண்டவற்றுள் சிவமதமென்று தோற்றவைத்து அவற்றிற்கு சத்தி பூசையென்னும் பெயர் கொடுத்து மயக்க வஸ்துக்களையும் மாமிஷத்தையும் தங்கள் தேவனுக்குப் படைத்து சகலருங் குடித்து வெறித்து கற்புடைய ஸ்திரீகளின் நிலைகளையுங் கெடுத்துவந்தார்கள். இன்னோர்வகை நூதன விட்டோ, விட்பா, விட்டுணு என்னும் மதத்தோர் தோட்டங்களுக்குச் சென்று வெறிக்கக் குடித்துக் கூத்தாடும் உச்சவம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். இம்மயக்கக்குட்டிகளும் விபச்சாரத்திற்கு என்றே ஏற்படுத்திவந்த புண்டரீக யாகத்தையும் இரவிக்கை உச்சவத்தையும் விரித்து எழுதுவோமாயின் வீணே பத்திரிகை அசுசியடைந்துபோம். ஆதலின் மயக்கவஸ்துவின் குடிக்கும் மாமிஷ விருத்திக்கும் மதாச்சாரிகளே முதற்காரணமாக விளங்கினவர்களாவர். அம்மயக்க பானத்தையே நாளுக்குநாள் விரும்பி மதுவென்னும் இனிய வஸ்துவை புளிப்பேற்றி அருந்துதற்கு ஆரம்பித்துக் கொண்டதுடன் அவுல் சாராயம், கொட்டாங்குச்சி சாராயம், அரிசி சாராயம் என்னும் மயக்க பானங்களை இறக்கி அதையுங் குடிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். இத்தேசத்திய குடியின் விருத்திக்கு அடிபடையாய் நின்றது நூதனமதங்களே காரணமென்று துணிந்து கூறுவோம்.

ஈதன்றி மற்றுந்தோன்றிய மதங்களோ தங்கள் தேவனுக்குத் தலையீற்று கன்றுக் குட்டிக்கறியும் தலையீற்று புறாக்குஞ்சுக்கறியும் ஆட்டையும் மாட்டையும் எங்கள் தேவன் பெயரைச் சொல்லிக் கொன்றுத்தின்பதில் யாதொரு தோஷமும் இல்லை என்று கூறுவதுடன் எங்கள் தேவன் உதிரத்துக்கு சமான கொஞ்சம் ஒயின் குடியுங்கோளென்ற மதாச்சாரிகளின் போதனையான அற்ப சாதனமானது எங்கு விருத்தியடைந்து விட்டதென்னில் சுவாமிப்பிறந்தார் என்று சாராயக்கடைகளிலும், கர்த்தர் பிறந்தார் என்று கள்ளுக்கடைகளிலும் பூமாலை மாட்டி பேருச்சவங் கொண்டாடும்படியாகிவிட்டது. இவற்றிற்கும் அம்மதாச்சாரிகளின் போதனையின் குறைவே காரணமாகும். அக்காரணம் யாதென்னிலோ அவர்கள் மதபோதனையில் வரைந்துள்ள பஞ்சசீலத்தில் கொலை செய்யாதே, பொய் சொல்லாதே, களவு செய்யாதே, விபச்சாரஞ் செய்யாதே என்னும் நான்கு சீலங்களை மட்டிலும் வரைந்து வைத்துக்கொண்டு மதியை மயக்கும் மதுவை அருந்தாதே என்னும் ஒரு சீலத்தை விட்டிருப்பதேயாம். அச்சீலத்தை விட்டிருப்பதால் சாமிப் பிறந்தார் என்னும் வருஷக் குடியர் மாதக் குடியர்களானதும், மாதக்குடியர் வாரக்குடியர்களானதும், வாரக்குடியர் தினக்குடியர்களாகி தாங்கள் கெடுவதுமின்றி தங்கள் பெண்டு பிள்ளையுங் கெடுத்துக் குடியை விருத்திசெய்துக்கொண்டே வருகின்றார்கள். அஃது எவ்வகை விருத்தி என்னிலோ தங்கள் பெண்டுகளுக்கேனும் பிள்ளைகளுக்கேனும் சொற்ப சளிசுரமோ இருமலோ காணுமாயின் தேவனுடைய உதிரமென்றே எண்ணிக் கொண்டு கொஞ்சம் ஒயின் குடிப்பது போல் மருந்தென்றே எண்ணிக்கொண்டு கொஞ்சம் பிராந்தியையேனும் சாராயத்தையேனும் கொடுத்து பழகச் செய்து வருவதேயாம். இத்தகையக் குடியின் கேடு மதாச்சாரிகளின் சுய நலந்தேடியே வளர்ந்து அவர்கள், கண்டனமின்றியே தழைத்தும் பெருகியும் வருகின்றது. மற்றயப்படி இராஜாங்கத்தோருக்கும் குடியின் விருத்திக்கும் யாதொரு சம்மந்தமுங் கிடையாவாம். இராஜாங்கத்தோர் இக்குடியை அகற்றவேண்டுமென்று அனந்த சாராயக்கடைகளையும் கள்ளுக்கடைகளையும் எடுத்துவிட்டு வரிவகைகளை அதிகப்படுத்தியும் பார்க்கின்றார்கள். அவ்வகையானும் அடங்காமல் குடியர்கள் பெருக பெருக, கள்ளு சாராய விற்பனையும் பெருகிக்கொண்டே வருகின்றது. ஆகலின் குடியின் விருத்திக்கு மூலகாரணம் மதங்களேயன்றி இராஜாங்கத்தாராகார் என்றே துணிந்து கூறுவோம்.

- 7:35; பிப்ரவரி 4, 1914 -