அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/360-383

விக்கிமூலம் இலிருந்து

31. குரங்கினின்றே மக்கள் தோன்றியுள்ளார்கள்

இஃதே அநுபவம். ஆய்ந்தெழுதும் பெளத்தசாஸ்திரிகளின் சம்மதமன்றி தற்காலம் உலகத்தில் தோன்றியுள்ள மநுக்களில் வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்ககமும் நிறைந்து விவேகமிகுத்த வித்தியாபுருஷர்களாக விளங்கும் ஆங்கில வகுப்பாருக்கு உட்பட்ட டார்வினென்னும் துரைமகனின் சம்மதமும் அதுவேயாம்.

பூர்வ பௌத்த சாஸ்திரி சம்மதம் யாதெனில், உலக தோற்றத்துள் தேவர், மக்கள், நரர் உயர்திணை என்றும்; மற்றவை அஃரிணையென்றும் வகுத்துள்ளவைகளில் வால் நரர் வானரரென்னுங் குரங்கினின்று வாலற்று, கிஞ்சித்து சீலமுண்டாகி நரரென்னும் பெயர்பெற்று மானமுண்டாகி மக்களிற் சேர்ந்து விவேக முதிர்ந்து தேவர்களானார்களென்பதேயாம். இதுவே காட்சிக்கும், அநுபவத்திற்கும் பொருந்தியதாகும்.

வித்தியாபுருடராகிய டார்வினென்னும் துரைமகனின் சம்மதமோ வென்னில், வானின்று மழைபெய்தவுடன் பூமியியின்று புற்பூண்டுகள் தோன்றுவதும், புற்பூண்டுகளினின்று புழுக்கீடாதிகள் தோன்றுவதும், புழுக்கீடாதிகளினின்று மட்சம் பட்சிகள் தோன்றுவதும், மட்சம் பட்சிகளினின்று ஊர்வன மிருகாதிகள் தோன்றுவதுமான காட்சியில் குரங்கென்னும் சீவனுள்சிலதுக்குவாலிருந்தும் ஒராங்கடானென்னும் குரங்கிற்கு வாலற்றும் நாளுக்குநாள் உரோமங்களுதிர்ந்து சருமத்திறந்து நாணமுதிர்ந்து மக்கள் சாயலடைவதுமாய தோற்றங்களை ஆய்ந்து குரங்கினின்றே மக்கள் தோன்றியுள்ளாரென வற்புறுத்திக் கூறியிருக்கின்றார். அதற்குப் பகரமாக வடமேற்கு மாகாணங்களில் வோராங்டன் என்னும் வாலற்றக் குரங்குகளே உரோமங்கள் உதிர்ந்து காட்டுமனிதர்களென உலாவுவதை யாத்திரா சரித்திரங்களிற் காணலாம்.

இத்தகைய அநுபவங்களையும், காட்சிகளையும், கண்டறியாதோர் உலகதோற்றக் காலவரைகளையும், மநுக்கள்தோற்றக் காலவரைகளையும் கணிக்கற்பாலதோ இல்லை. ஐரோப்பிய சாஸ்திரிகளும் அமேரிக்கா சாஸ்திரிகளும் தங்களது கணிதவாராய்ச்சியால் உலகத்தோற்றமுண்டாகி 1,000,000 இப்பத்துலட்சம்போல் எத்தனையோ 10 லட்சவருடமிருக்க வேண்டுமென வரைந்திருக்க உலகமுண்டாகி 6,000 வருடமாயிற்று என்றால் விவேகமிகுத்த தத்துவ சாஸ்திரிகளும் கணிதசாஸ்திரிகளும் ஏற்பார்களோ. அவ்வருடத்தையே ஏற்காதோர் அக்காலந்தோற்றியவர்களையே ஆதிமக்களென்று அங்கீகரிப்பர்களோ, ஒருக்காலும் அங்கீகரிக்கமாட்டார்கள், அங்ஙனம் விவேகமும், பெருந்தகைமெயு மிகுத்த சாஸ்திரிகள் சம்மதிக்காதபோது மற்றவர்கள் சம்மதிப்பது மதிமயக்கேயாகும். அத்தகைய மதிமயக்கத்தால் நரர் இன்னா ரென்றும், மக்கள் இன்னாரென்றும், தேவர் இன்னாரென்றும் ஆய்ந்தறியும் அருளற்று இருளினின்றே தூஷிப்பர்.

அத்தகைய தூஷிப்பிற்கும் பற்பல சேஷ்டைகள் செய்வதற்கும் பெரியோர்களைத் தூற்றி பல்லிளித்து பரிகசிப்பதற்கும் காரணமாயுள்ளது முன்தோன்றியக் குரங்கின் குறைகளேயாகும்.

மக்கள் வகுப்பில் தோன்றியுள்ளதாயினும் அதனதன் விவேகமற்ற சேஷ்டைகளைக் கண்டு ஈதென்ன குரங்கின் குட்டிகளோவென வழங்குவாரும் உண்டு. இத்தகையக் காரியச் செயல்களைக்கொண்டே காரணமாய்க் குரங்கின் தோற்றத்தைக் கண்டுக்கொள்ளலாம். புழுக்களினின்று பறவைகள் தோன்றுவதென்னில் அதன் விவரமறியாதவர்களுக்கு விந்தையாகவே விளங்கும் விவரங் தெரிந்தபின் இயல்பென்றுணர்வர். பாலை ஓர் பாத்திரத்திலும் நெய்யை ஓர் பாத்திரத்திலும் வைத்து இப்பாலில் தான் இன்னெய் யுௗதென்னில் அப்பாகங் கண்டறியாதோர் நம்புவதரிது. அதன் பாகங்களைக் கண்டறிந்த பின்னர் இயல்பென்றுணர்வர். அதுபோல் மக்களது தோற்றத்தில் நரரென்றும், மக்களென்றும், தேவரென்றும் வகுக்கப்பெற்ற காரணங்களைக் கண்டறிவரேல் வால்நரரென்னுங் குரங்கினின்றே நரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பது நன்கு விளங்கும்.

- 4:28; டிசம்பர் 21, 1910 -