அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/359-383

விக்கிமூலம் இலிருந்து

30. யதார்த்தவாதி வெகுஜன விரோதி

எனும் பழமொழிக்கிணங்க சாதிவேஷ சமயவேஷக்காரர்களும், சிற்சில பத்திராதிபர்களும் நமது பத்திரிகையின் மீது பழிகூறுவதாக விளங்குகின்றது. காரணமோவென்னில் அவர்களது பொய்யாகியக் கட்டுப்பாட்டின்படி நீங்கள் புறசாதியாரென்று கூறியவுடன் ஆமாம் நாங்கள் புறசாதியாரென்று ஒதுங்கியும், புறசமயத்தாரென்றவுடன் ஆமாம் யாங்கள் புறசமயத்தாரென்று அடங்கியும் பேசுவதாயின் நமது பத்திரிகையைப் போற்றுவார்கள். அங்ஙனமின்றி புறசாதியான் யார் புறசமயத்தான் யாரென்றவுடன் தூற்றுகின்றார்கள்போலும்.

அந்தோ, இத்தேசத்துள் வந்து குடியேறியவர்களும் இத்தேசத்து வகையற்றக் குடிகளும் ஒன்றுசேர்ந்துகொண்டு இத்தேசத்துப் பூர்வக் குடிகளை புறசாதியாரென்றால் பொருந்துமோ. இத்தேசத்துப் பூர்வதன்மத்தைப் புறச்சமயமென்றால் பொருந்துமோ ஒருக்காலும் பொருந்தாவாம். அத்தகையப் பொருந்தாவகைகளை நமது பத்திரிகையில் திருந்த எழுதிவருகிறபடியால் நூதன சாதிபேதத்தோருக்கும், நூதன சமயபேதத்தோருக்கும் அருவெறுப்புண்டாகி நமது பத்திரிகையைத் தூற்றினும் ஓரிழிவாகக் கொள்ளோம். போற்றினும் புகழாகக்கொள்ளோம். அதன் காரணமோவென்னில் இத்தேசத்து மக்கள் சகலரும் சீர்பெற்று சுகமடையவேண்டுமென்னும் அவாவின் மிகுதியால் நமது பத்திரிகை வெளிவந்துலாவுகிறபடியால் தனது சாதியோர் சீர்பெற வேண்டும். ஏனைய சாதியோர் சீர்கெட வேண்டுமென்றும் தனது சமயத்தோர் பெருகவேண்டுமென்றும், ஏனைய சமயத்தோர் குறுக வேண்டுமென்றும் பொறாமெய் மிகுத்தோர் தூற்றுவதும் போற்றுவதும் பயனற்றதென்றெண்ணி அன்னோரிழிவையும் புகழையும் ஏற்காது ஒழித்தோம்.

நமது பத்திரிகையையும் நம்மெயுந் தூற்றுவோர் சாதியாசாரம் மெய்யாயின், சோற்றுக்கடை காப்பிக்கடைகளிலுள்ள சாதிக்கட்டுபாடுகள், சாராயக்கடை, கள்ளுக்கடைகளிலும் உண்டா, (ரிப்ரஷ்மென்ட்ரூம்) தாசிவீடுகளிலும் உண்டா. இல்லையே, தாங்கள் சீவிக்கவேண்டிய இடங்களிலெல்லாம் சாதி யாசாரங் கிடையாது. ஏழைகள் சீவிக்கவேண்டிய இடங்களிலெல்லாம் சாதியாசாரம் உண்டென்பது நியாயமாமோ. விவேகிகள் இவற்றைப் பொதுநலமெனக் கொள்வரோ, ஒருக்காலுங் கொள்ளார்கள். தள்ளுவரேயாம்.

அன்னோர் சமயம் எச்சமயமாகியும் அவர்கள் குருக்கள் மெய்க் குருக்களாகவும் இருந்து தங்கள் சமயத்தைப் பெருகவைப்பது மெய்யாயின், ஓர் மகமதியன் அவர்கள் குருவையடுத்து ஐயா தங்கள் விஷ்ணுசாமி சிவன் சாமியை விசேஷசாமிகளென்றறிந்தேன். அவர்களைத் தொழவேண்டுமென்னும் அவாக் கொண்டு வந்தேன் என்னைப் புறம்பாக்காது உங்களில் ஒருவனாக சேர்த்துக் கோவிலுள்ளே சென்று தொழும்படியான உத்திரவைக் கொடுங்கோளென்று கேட்பானாயின் அவனை சேர்த்துக்கொள்ளுவரோ, இல்லை. ஏனையோரை சேர்க்கா கூட்டம் பெருகுமோ. தங்களைப்போல் சகலரும் முத்திப் பெறவேண்டுமென்னும் பொதுநலச் செயலில்லா சமயமும் ஓர் சமயமாமோ, இத்தகைய ஒற்றுமெயற்ற சமயங்களினாலும் ஒற்றுமெய்க்கேட்டிற்கு உறுதிபீடமாகும் சாதிபேதங்களினாலும் தேசங் கெட்டுப் பாழடைவதுடன் தேசத்தோரும் சீரழிந்து வருவதை விளக்கும் பத்திரிகையை விரோதிப்பதுந் தூற்றுவதும் வீணேயாம்.

- 4:19; அக்டோபர் 19, 1910 -