அயோத்தியா காண்ட ஆழ்கடல்/சத்துருக்கனன் பங்கு

விக்கிமூலம் இலிருந்து



7. சத்துருக்கனன் பங்கு


யரதன் மைந்தர்கள் நால்வருள் சத்துருக்கனனைத் தவிர்த்த மற்ற மூவர்க்கே இராமாயணத்தில் நிறைந்த பங்கு உண்டு; சத்துருக்கனனுக்கு இரண்டோரிடத்தில் மட்டுமே உரை வாய்ப்பு தரப்பட்டுள்ளது- என்றெல்லாம் சத்துருக்கன் சொல்லப்படுகிறான். ஆனால், இந்த அயோத்தியா காண்டத்தில் சத்துருக்கனன் இடம் பெற்றுள்ள சில பகுதிகளைக் காண்போம்:—


ஆறு செல் படலம்

நம்பி கூறல்

இராமனை அழைத்துவரப் படைகளுடன் செல்ல வேண்டும் என எண்ணிய பரதன், தன் தம்பி சத்துருக்கனனை அழைத்து, இராமனை அழைத்துவரப் படைகள் புறப்பட வேண்டும் என முரசறைந்து தெரிவிக்க ஏற்பாடு செய்க என்றான் பரதன்.

பரதன் சொல்லியபடி நம்பி சத்துருக்கனன் படை புறப்பட முரசறையுங்கள் என்று அதற்கு உரியவரிடம் கூறினான். உயிர் நீத்த உடல் அமிழ்தத்தால் மீண்டும் உயிர்த்து எழுவதுபோல, இராமனை அழைத்து வரவேண்டும் என்னும் சொல்லாகிய அமிழ்தத்தைச் அயோத்தியா காண்ட ஆழ் கடல் 153


செவி மடுத்து, நகரில் வருந்திக் கொண்டிருந்த அனைவரும் ஆரவாரித்துக் கொண்டு புறப்பட்டனராம்.

குரிசிலும் தம்பியைக் கூவிக் கொண்டலின் முரசறைந்து இந்நகர் முறைமை வேந்தனைத் தருதும் ஈண்டு என்பது சாற்றித் தானையை விரைவினில் எழுக என விளம்புவாய் என்றான்

(21)

நல்லவன் உரை செய நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மாநகர்
ஒல்லென இரைத்ததால் உயிர்இல் யாக்கை அச் சொல்லெனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே

(22)

நல்லவன் பரதன்; நம்பி சத்துருக்கனன். நம்பி வாய் திறந்து பேசியதாக இப்பாடலால் தெரிகிறது.

அந்தரத்து ஏற்றுவான்

பரதன், சத்துருக்கனன், உறவினர் முதலியோர் இராமனை அழைத்து வரப் புறப்பட்ட போது, கூட்டத்தோடு தானும் கலந்து சென்ற மந்தரைக் கூனியைச் சத்துருக்கனன் கண்டு, அவளை அப்படியே தூக்கி விண்ணிலே எறிவதற்காகப் போய்ப் பிடித்தான். உடனே பரதன் தடுத்து விட்டான்:

மந்தரைக் கூற்றமும் வழிச்செல் வாரொடும் உந்தியே போதல் கண்டு இளவல் ஓடிப்போய் அந்தரத்து ஏற்றுவான் அழன்று பற்றலும்
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்

(54)

மந்தரை கூற்றமாம்- எமனாம்; ஆம் தயரதனைக் கொன்று விட்டாள் அல்லவா? இளவல்=நால்வருள் மிகவும் இளைய சத்துருக்கனன். அந்தரத்து ஏற்றுதல் = விண்ணில் தூக்கி எறிதல். அயோத்தியா காண்டத்தில், சத்துருக்கனன் பேசிய தாகவும் செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளான். இறுதியிலும் இவன் பங்கு இடம் பெற்றுள்ளது.