அய்யன் திருவள்ளுவர்/செந்தமிழ் சந்தனாடவி

விக்கிமூலம் இலிருந்து

செந்தமிழ் சந்தனாடவி
பேராசிரியர்
கே.எஸ். சிவராமலிங்கம், எம்.ஏ.


"அய்யன் திருவள்ளுவர்" என்று தலைப்பிட்டு நாற்பத்தைத் தாண்டு கால அருமை நண்பர், திரு. புலவர் என்.வி. கலைமணி எம்.ஏ அவர்கள் படைத்துத் தந்துள்ள இந்தப் பசுந்தமிழ் நூல் அவரது கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது.

அவருடைய கட்டுரைகளின் தமிழ் நடை என்றும் மாறா எழிலோடுதான் விளங்குகிறது. கட்டுரையின் கருப் பொருட்கள் பல்வேறு தலைப்புகளில் கவினுற விளக்கம் பெற்றுள்ளன.

திருப்புகழ் இசை வகுப்பில் ஒன்றாகப் பயின்றதன் அடிப் படையில், இந்நூலுக்கு அணிந்துரை எழுதும் உரிமை இயல் பாகவே உண்டு. பேரறிஞர் அண்ணாவின் கம்பரசத்தைப் பருகி அதன்வழி திருப்புகழ் ரசம் வடித்துத் தந்தவர் திரு. கலைமணி.

அதே போல் 'ஆரிய மாயை' நூலை ஆழ்ந்து கற்று 'வஞ்சக வலை' என்ற நூலை அந்தக் காலத்திலேயே வனைந்த பெருமைக்குரியவர்.

ஐம்பதுகளில் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு திராவிடன் மூலமாக உரமிட்டவர் கலைஞர். அந்தக் காலத்தில் தி.மு.க.வின் ஐம்பெரும் தூண்களில் ஒருவராகிய என்.வி. நடராசன் நடத்திய வார இதழ் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஆக, திராவிட இயக்கப் பாசறையின் தேன் தமிழ்க் கவிஞர் இவர் என்பதனாலோ என்னவோ இவருக்குத் கலைமணி என்னும் பெயர் பொருந்துவதாயிற்று.

நண்பர் கலைமணியின் சொற்சுவையும், பொருட்சுவையும் கலந்த நற்றமிழ் என்னும் கற்கண்டாக இனிக்கும் இயல்புடையது. கற்கண்டை எப்பக்கம் சுவைத்தாலும் எவ்வகையில் உண்டாலும் இனிப்பு மாறாதிருப்பது போல, இவர் எழுதத் தொடங்கிய நாள் தொடங்கி இப்பொழுது வெளிவரும் இந்நூல் வரை என்றும் குன்றா இளமையும் எழிலும் இனிமையும் நிறைந்த தமிழ்வளம் பாய்ந்து பெருகி பரவி வருதல் கண்டு உவந்துள்ளேன்.

தலைப்புக்குரிய தகைசான்ற கருத்துச் செறிவும் சொல்லாட்சித் திறனும் படைத்துப் பறிமாறும் பக்குவமும் இவருக்கு வாய்த்த நற்பேறுகள் என்று துணிந்து கூறலாம். நல்லவகை பயின்று, நாள்தோறும் நற்றமிழ்த் தொண்டு புரிந்து வரும் இவர் தமிழ் உலகில் இன்னும் உயரிய, உரிய இடம் பெறாமைக்கு என்ன காரணம் என்பது சிந்திக்க வேண்டும்.

வண்ணத் தமிழ் பூஞ்சோலையாகவும், உண்ண உண்ண இனிக்கும் தமிழ்க் கனிகளையுடைய பழந்தோப்பாகவும் - குற்றால மலையின் கொட்டும் நீர் வீழ்ச்சியாகவும் - செந் தமிழ்க்காடு முழுதும் மனங்கமழும் சந்தன அடவியாகவும் - அலைக் கொழித்து, அருந்தமிழ் முத்துக்களை வாரி இறைக்கும் அற்புதக் கடலாகவும் - இந்நூல் திகழ்கின்றது என்றால் அது மிகையில்லை.

பொதுமறை அருளிய"அய்யன் திருவள்ளுவர்” பற்றிய முதற் கட்டுரை நல்ல தொடக்கம். கிறிஸ்தவர்கள் நடத்திய திருக்குறள் ஆய்வு மாநாட்டில் இவர் ஆற்றியுள்ள வரவேற்புரை இவர்தம் ஆழ்ந்த ஆய்வுக்கும் அஞ்சா நெஞ்சுக்கும் சான்றாக விளங்கு கின்றது.

'புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசனார் பற்றி இரண்டு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் 'பாரதிதாசன் பேசுகிறேன்' என்ற கட்டுரை பாவேந்தரின் பாடல் தொடர்களைக் கொண்டே நன்கு வேயப்பட்டுள்ளது

'உலக உத்தமர்' காந்தியடிகளும், அமெரிக்க காந்தி மார்ட்டின் லூதர் கிங் அவர்களும், அமரகவி பாரதியாரும், இவர் எழுத்தில் ஏற்றமான தோற்றம் காட்டுகிறார்கள்.

கவியரசு கண்ணதாசன் பற்றி இடம் பெற்றுள்ள கட்டுரை தரமான ஆய்வுரை. ஐந்து இரவுகள் இமை மூடாதிருந்து இவர் எழுப்பியுள்ள கற்பனைச் சிற்பக் கோபுரங்கள் கன்னித் தமிழுக்கும் நமக்கும் நல்விருந்தாகின்றன.

எந்தப் பொருளைப் பற்றியும் இனிது எடுத்து இயம்ப வல்ல இவர்தம் எழுத்தின் மாட்சிக்கு எடுத்துக்காட்டாக இவர்தம் மதிப்புரை, பதிப்புரை, கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பொற்குடத்திற்குப் பொட்டிட்டது போல் இந்நூலில் இவர்தம் கவிதையாற்றலுக்குச் சான்று கூறும் இரண்டு தலைப்புகளும் எழிலூட்டுகினறன.

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பெருமக்களும், அருந்தமிழ்க் கவிஞர்களும் அவ்வப்போது தந்துள்ள மதிப்புரைகள் இவர்தம் மாட்சிக்கு சாட்சி கூறும் வகையில் இந்நூலில் காட்சி தருகின்றன.

சொல் புதிது, பொருள் புதிது, கற்பனை புதிது, கலை நலம்புதிது என்று சொல்லும் வகையில் நூல் முழுதும் செம்மாதுளையை உரித்துப் பார்ப்பதுபோல் கருத்துச் செம்முத்துக்கள் கைக்குக் கிடைத்துள்ளன. சுவைத்து மகிழ்வோம்! நண்பர் மேலும் வாழ்வும் வளமும் பெற வாழ்த்துகிறேன்.


பேராசிரியர்
கே.எஸ். சிவராமலிங்கம்,