அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்/மறைந்து கிடக்கும் மனித சக்தி

விக்கிமூலம் இலிருந்து
13. மறைந்து கிடக்கும் மனித சக்தி!

மனிதனுக்குள் மறைந்திருக்கும் மகாசக்தியைப் போல் மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லை.

அவ்வாறு இல்லையென்றால், காட்டிலே மிருகங்களுக்கு ஆதிகாலத்தில் இரையாகிப் போனவர்கள், இன்று அவைகளை ஆட்டிப் படைத்து, அடிமையாக்கி, அரசாண்டு கொண்டி ருப்பார்களா?

வெறும் வாயுடன், விரிந்து கிடக்கும் சமுத்திரம் போன்ற ஒருவயிற்றுடன் மட்டும் ஒரு மனித உயிர் பிறந்துவிடவில்லை. உள்ளுக்குள்ளே ஓராயிரம் சக்திகளை உருவாக்கி, உருட்டித் திரட்டிக் கொண்டுதான், ஜெகத்திலே ஜனித்திருக்கின்றது

ஆனால், அந்த அபாரமான அறிவாற்றலை அற்பத்தனமான சுகத்திற்கும்; அழிந்து போகும் பணத்திற்கும் வீணாக செலவழித்துக் கொண்டு மிருகங்களாய் அலைகின்றார்கள் மனிதர்கள்.

ஒரு மனிதன் தனக்குள்ளே தேங்கிக் கிடக்கும் சக்திகளையும் சாமர்த்தியங்களையும், திறமைகளையும் பெருமைகளையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. முயல்வதுமில்லை. விரும்புவதுமில்லை.

சோற்று சுகம், தேக சுகம் இவைகள் தான் 'ராஜ சுகம் என்று அறியாமைச் சேற்றிலே அறிவில்லாப் பன்றிகளாகப் புரண்டு மெய்மறந்து கிடக்கின்றார்கள் பலர். பாவம்! சக்தியை சகதியாக்கிக் கொண்டு சாய்ந்து போகின்றார்கள்.

"தன்னை அறிந்து கொள்கிறவன் தான் தலைவனா கிறான்" என்பது ஒரு பழமொழி.

தன் சக்தியை, தனது திறமையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற ஆக்க பூர்வமான காரியங்களை மேற் கொள்கிற மனிதனே, மற்றவர்கள் மதித்துப் போற்றும் மகாமனிதனாக மாறுகிறான். மாபெரும் வரலாற்றையே படைத்துக் கொள் கிறான்.

அப்படிப்பட்ட ஓர் அரிய வாய்ப்பினை மற்ற துறைகள் வழங்கினாலும், அவற்றிலே தலையாய இடம் வகிப்பது விளையாட்டுத் துறைதான்.

உழைக்க உழைக்கத் தான் உடல் உறுதி பெறுகிறது அழகாக மாறுகிறது. பொலிவும் பூரணத்துவமும் பெறுகிறது.

குறிப்பிட்ட நோக்கத்துடன் குன்றாத இலட்சியத்துடன் உடலால் உணர்வால் உழைக்கும் பொழுது, அவனது தேக சக்தி அளவிலா சக்தியாகப் பரிணமித்து, அற்புதமான சக்தியாகவும் பெருக்கெடுத்து, பெரும் பிரளயமாகவே பொங்கி ஓடுகிறது.

அப்படிப் பட்ட சில சான்றுகளை இங்கே நாம் காண்போம்.

1968 ம் ஆண்டு மெக்சிகோ நகரத்தில், ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. மெக்சிகோ நகரமோ கடல் மட்டத்திலிருந்து 2240 மீட்டர் உயரத்தில் அமைந்திருப் பதாகும்.

உலகில் இருந்த உயிரியல் அறிஞர்கள், உளவியல் வல்லுநர்கள், ஆராய்ச்சி விற்பன்னர்கள், மருத்துவ மேதை கள் எல்லோரும் பயந்து போய், பதறியடித்துக் கொண்டு ஒரு கருத்தினைத் தெரிவித்தார்கள். அவர்கள் கவலைப்பட்ட விஷயமானது பிராணவாயுவைப் பற்றித்தான்.

உயரமான இடத்தில் பிராண வாயுவின் அளவு குறை வாகத் தானே கிடைக்கும்! பங்கு பெறுகின்ற போட்டியாளர் கள் அனைவரும் பிராணவாயு பற்றாக் குறையினால், பெரிதும் சிக்கித் திணறிப் போகப் போகிறார்கள். அதனால் போட்டி நிகழ்ச்சிகளில் சாதாரண சாதனை கூட நிகழாமல் போகப் போகிறது என்பது தான் அவர்கள் ஊதிய அபாயச் சங்கு!

ஆனால் என்ன ஆச்சரியம்! அவர்கள் அபாய அறிவிப்பு அணுவளவு கூட உண்மை இல்லாமல் போய் விட்டது.

போட்டிகளில் பெரும் வல்லமையுடன் வீரர்களும் வீராங் கனைகளும் கலந்து கொண்டனர். பல ஒட்ட நிகழ்ச்சிகளில், போட்டி நிகழ்ச்சிகளில் பல புதிய சாதனைகள் படைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று, பாப்பீமன் என்ற அமெரிக்க வீரம் 8.90 மீட்டர் தூரம் நீளம் தாண்டலில் புதிய சாதனை யைப் படைத்தார். அது 20ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாக அமைந்து விட்டது.

பிராணவாயு போதிய அளவு இல்லாத இடத்தில், இத்தகைய பெரும் சக்தி அந்த வீரர்களுக்கும் வீராங்கனை களுக்கும் எப்படி வந்தது? அதுதான் மனித தேகத்தில் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்தியாகும்,

இன்னுமொரு உதாரணத்தை இங்கே படியுங்கள். ஆர்க்டிக் பகுதியில் விமானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு விமானி, விமானக்கோளாறின் காரணமாக, கீழே இறங்க நேர்ந்தது. பிறகு, அவர் விமானத்தைப் பழுது பார்த்துக்

கொண்டிருந்த பொழுது, திடீரென்று கரடி ஒன்று வந்து, அவரது கழுத்துப் பகுதியில் தனது காலினை ஊன்றியது.

ஆபத்தை உணர்ந்து கொண்ட அந்த விமானி, உடனே தாவிக்குதித்து, விமானத்தின் இறக்கையின் மேல் ஏறிக் கொண்டு தப்பித்தார். இதில் நாம் கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்பு என்னவென்றால், அவர் உடனே உயரமாகத் தாவியது 2 மீட்டர் உயரம். அவர் அணிந்திருந்த உடை களோ, கடும் குளிரைத் தாங்கக கூடிய கனமான உடைகள்.

இந்த இரண்டுவிதமான சான்றுகளும், மனிதர்களுக் குள்ளே மறைந்திருந்து வெளிப்படும் மகத்தான சக்தியையே வலியுறுத்திக் காட்டுகின்றன.

சாதாரண நேரங்களில் மனித சக்தி அவவளவாக வெளிப்படுவதில்லை.

வேண்டியபொழுது, தேவையான தருணங்களில், ஆபத்து சூழ் நிலைகளில், தற்காப்புக்குரிய நேரங்களில் மனித சக்தி மிகுதியாக வெளிப்படுகிறது.

இந்த சோதனை நேரங்கள் விளையாட்டுக்களிலும் ஒடுகளப் போட்டிகளிலும் நிறையவே நேர்கின்றன.

குறிப்பாக உடல் நலம் உள்ளவர்கள், அதிலும் உடல் பலம், வளம் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களிடையே இப்படிப் பட்ட சக்திகள் ஏராளமாகவே வெளிப்படுகின்றன. அதற்காகத் தான் விளையாட்டுப் போட்டிகள் மனித குலத்திற்கு மகிமை மிகுந்த துணையாக இருந்து உதவுகின்றன என்று மருத்துவ வல்லுநர்கள் விளக்குகின்றார்கள் .

எப்படி இது ஏற்படுகிறது என்பதை ஆய்வு பூர்வமாகக் காண்போம். ஓர் உலக சாதனை செய்யும் ஓடுகளப் போட்டி யாளர் ஒருவர், குறிப்பிட்ட அந்தப் போட்டி சமயத்தில்,

உடலா லும் உள் ளத்தாலும் உணர்வாலும் உச்சக் கட்டத்திலே உலா வருகின்றார் என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பாகும்,

அத்தகைய உச்சக்கட்ட உணர்வுகள் உண்டாக்கும் உந்துதல்களுக் கேற்ப உடல் உறுப்புக்கள் ஒத்துழைத்து உழைப்பதுதான் உண்மையான ரகசியமாகும்.

சாதாரண மனித tசளால் சிறிதளவு கூட சமாளிக்க முடியாத அந்த சக்தி, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு எப்படி கிடைக்கிறது? அது என்ன தந்திரமா? மந்திரமா?

இத்தகைய எழுச்சி மிக்க சக்தி எப்படி கிடைக்கிறது என்றால், அதை ஆராய்ந்த அறிஞர்கள், ஒரு புதியபெயரையே சூட்டியிருக்கின்றார்கள். அதற்குப் பெயர் அறிவார்ந்த விதி. (The Law of Rationalitv) என்பகாகும்.

நன்கு பயிற்சிப் பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்க ஏற்படுகின்ற இக்கட்டான சூழ்நிலைகளை ஏற்றமுடன் வெற்றி காண, உடலில் உள்ள சில தற்காப்புவால்வுகள் திறத்து கொண்டு, திறமையுடன் செயல்படத் தூண்டுகின்றன. இப்படிப்பட்ட மறைமுகமான செயல் திறன்களை மிகுதிப் படுத்திக் காட்டுவது தான் அறிவசர்ந்த விதியின் அப்பட்ட மான முயற்சியாகும்.

இன்னும் விரிவாக இந்த விதியினை அறிந்து கொள் வோம்.

அதிக உச்சக்கட்ட சூழ்நிலைகளில் உண்டாகும் உணர்வு நிலை (Super Tension)க்கு ஈடு கொடுப்பது போல, நரம்பு களும், தசைகளும் அதிவேகமாக ஈடுபட்டு, அதிஅற்புதமான ஆற்றலை உண்டு பண்ணி விடுகின்றன.

இதில் என்ன விஷேம் என்றால், ஒவ்வொரு இயக்கமும் அடிப்புடைத் தேவை ச்கு ஏற்பவே நடைபெறுவது தான்.

ஒரு மனிதன் அல்லது விளையாட்டு வீரன், ஒரு காரியக் தில் ஈடுபடும் பொழுது, அவனது உடல் பலத்தை முழுவதும் பய்ன்படுத்தியே முனைகிறான். ஆனால், நன்கு பயிற்சி செய்து, பழக்கப்பட்ட மனிதன் அல்லது விளையாட்டு வீரன் மற்றவர் செய்வதைவிட, இன்னும் சிறப்பாக செயல்படுகிறான். அதற்குக் காரணம், அவன் தனக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்தியை தனது பயிற்சியின் மூலமாக வெளிக் கொண்டு வந்து விடுவதுதான்.

இது எப்படி முடியும் என்ற வினா எழும்புவது எனக்குப் புரிகிறது.

ஒரு வேலெறியும். நிகழ்ச்சியை (Javelin) இங்கு உதராணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

வேலெறிவது என்பது மனிதர்களுக்குரிய சாதாரண எறியும் உணர்வின் வெளிப்பாடுதான்.

இந்த வேலெறியும் தூரம், மனிதர்க்கு மனிதர் வித்தியாசப் படும். காரணம், அந்தந்த மனிதர்களின் உடல் பலம் தான்.

இந்த எறியும் நிகழ்ச்சியில் கொஞ்சம் பழக்கப்பட்ட வீரன், உடல்பலம் உள்ளவர்களைவிட, இன்னும் அதிகமாக எறிய முடியும். எறியும் ஒவ்வொருவருக்கும் எறியும் திறன் நுணுக்கம் என்று பல முறைகள் உண்டு,

85 மீட்டர் துாரம் எறிவது என்றால் அது உலக சாதனை தான். இப்பொழுது 100 மீட்டர் தூரம் வரை வேலெறிகிறாசி கள் என்றால், அது எப்படி முடிகிறது?

சாதாரண வீரனை விட சாதனை புரியும் வீரன் எப்படி இதை சாதிக்கிறான்?

சாதாரண மனிதன் ஒருவன் வேலைப்பிடித்து தூக்கி எறிகிறான் என்றால், அவனது கைபலம், கால்பலம்

இவற்றுடன் தான் எறிகிறான். அதாவது அவனது எறியும் வேலைக்குப் பயன்படுவன 5 முதல் 7 தசைகள் தான் ஒத்துழைக்கின்றன.

ஆனால், சிறந்த சாதனை புரிபவன் எறியும்பொழுது,கை தோள்பகுதிகள், கால்கள், முதுகு பின்புறப் பகுதிகள் ஒத்துழைக்க, ஏறத்தாழ 70 தசைகள் பயன்படுகின்றன என்று விளையாட்டு ஆராய்ச்சி வல்லுநர்கள் கண்டுபிடித் திருக்கின்றார்கள்.

அத்தனை தசைகளும் அற்புதமாக ஒத்துழைத்து, உச்சக்கட்ட எழுச்சி மிக்க சக்தியை படைத்துவிடுவதால் தான் இப்படிப்பட்ட சாதனைகள் நிகழ்ந்து விடுகின்றன.

மேலும் ஒரு அற்புதமான குறிப்பைப் பார்க்கலாம்.

ஒருவர் உயரம் தாண்டும் போது, காலினை அவர் தரையில் எவ்வளவு வேகமாக அழுத்தி, ஊன்றுகிறாரோ அந்த அளவுக்குத் தான் மேலே எழும்பித் தாண்ட முடியும்.

இப்பொழுதெல்லாம் 2.35 மீட்டர் உயரம் தாண்டும் சாதனை இருக்கிறது. அதற்கு எவ்வளவு கால் உதை சக்தி வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்.

உயரம் தாண்டும் ஒரு ஒப்பற்ற வீரன், கீழே தரையை உதைக்கும் வேகத்தையும் நேரத்தையும் அளந்து கண்டு பிடித்துக் கூறியிருக்கின்றார்கள்.

அதாவது 0.139 நொடி நேரத்தில் விளாதிமார் யாஷ் செஸ்கோ என்னும் அந்த உயரம் தாண்டும்வீரன், உதைத்து மேலே எழும்பிய சக்தியானது. 730 கிலோ கிராம் எடையைப் அப்புறம் தள்ளியதற்கு இணையாக இருந்ததாம்.

780 கிலோ எடையை உதைத்துத்தள்ளும் ஆற்றல் அந்த வீரனது காலுக்கு எப்படி வந்தது? பயிற்சிதான்.

உடற்பயிற்சியும், ஒரு முகப்படுத்திய உணர்வுகளும். உள்ளத்தை உணர்வு மயமாக்கி உற்சாகப்படுத்தும் இலட்சிய வேட்கைகளும் தாம், ஒருவரை மிகுந்த சக்தி படைத்த மகா வீரராக மாற்றி விடுகிறது.

பழக்கமும் பயிற்சியுமிருந்தும் சிலரால் ஏன் சாதிக்க முடிய வில்லை என்றால், அவர்கள் மனதால் தயாராகாமல் இருப்பது தான். உடலில்சக்தி இருந்தாலும், பயிற்சி நிறைந்திருந்தாலும், மனதால் அவர்கள் பக்குவப்படவில்லை என்றால், 100ல் 70 அல்லது 80 சதவிகிதம் தான் செயல் பட முடிகின்றது. மீதி 30 சதவிகிதம் வீணாகித்தானே போகிறது.

ஆகவே, சந்தர்ப்பங்கள் தாம் சராசரியான மனிதர்களை, சாதனை வீரர்களாக மாற்றி வைக்கின்றன. அப்படிப்பட்ட அருமையான சூழ்நிலைகளை விளையாட்டுத் துறைகளே வழங்குகின்றன.

சாதனை படைத்து சரித்திரம் படைக்க விரும்பும் இளைஞர்கள், பெண்கள் எல்லாம் விளையாட்டுக்களில் (மனமும் உடலும்) விரும்பி பங்கு பெற்றால், வியத்தற்கரிய சாதனைகளைப் படைத்து விடலாம்.

அப்படிப்பட்ட மறைந்திருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் வெளிக் கொணர்ந்து விட்டால், இந்த உலகம் இனியதோர் உலகமாக அல்லவா விளங்கி ஒளி வீசும்! இத்தகைய இலட்சிய நோக்கத்துடன் உதவும் விளையாட்டுக்களை நமது இளைஞர் உலகம் பயன்படுத்தி நிறை வாழ்வு வாழ வேண்டும் என்பது தான் நமது ஆசை. ஆமாம்! பேராசையுங்கூட.