அறிவியல் வினா விடை - விலங்கியல்/முதுகு எலும்புள்ள விலங்குகள்

விக்கிமூலம் இலிருந்து

6. முதுகு எலும்புள்ள விலங்குகள்

1. ஆம்பியாக்கஸ் என்பது யாது?

இது ஒரு முனைக்கூர் உயிரி. புழுவிற்கும் மீனுக்கும் இடைப்பட்ட முதுகுத் தண்டுள்ள விலங்கு.

2. மீன்களின் சிறப்பியல்புகள் யாவை?

1 நீரில் மட்டுமே வாழ்பவை.
2. மூச்சுறுப்புகள் செவுள்கள்.
3. செதில்கள் உடலை மூடியுள்ளன.
4. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மாறும்.
5. காற்றுப்பை மிதக்க உதவும் உறுப்பு.

3. நன்னீர் மீன்கள் யாவை?

கெளுத்தி, கெண்டை முதலியவை.

4. மீன்கள் அதிகம் எங்க வாழ்கின்றன?

கடல் நீரில் வாழ்கின்றன.

5. மீன்களின் பொருளாதாரச் சிறப்பென்ன?

1. சிறந்த உணவு.
2. புரதம் மிகுந்துள்ளது.
3. மீன்பிடித்து விற்பனை செய்வது ஆதாயமுள்ள தொழில்.

6. நுரையீரல் மீன்கள் என்பவை யாவை?

நன்னீரில் வாழ்பவை. மூன்று பேரினங்கள் உண்டு. புரடாப்டிரிஸ், லியோசெரட்டோடஸ், லெப்பிடாப்டிரஸ்.

7. பறக்கும் மீன் என்றால் என்ன?

இது ஒர் எலும்பு மீன். தன் இடுப்புத் துடுப்புகள் மூலம் நீரிலிருந்து தாவிக் காற்றில் சிறிது நேரம் இருக்கும்.

8. காட்மீனின் சிறப்பு யாது?

இது ஒரு வகை உணவு மீன். இதன் ஈரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வைட்டமின் D உள்ளது.

9. கடல் குதிரை என்றால் என்ன?

குதிரை ஒத்த தலை இருப்பதால் இதற்கு இப்பெயர். வாலுள்ள சிறிய மீன்.

10. நிலம் நீர் வாழும் விலங்குகளின் சிறப்பியல்புகள் யாவை?

1. இரு நிலை வாழ்விகள்.
2. வால் இல்லை.
3. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கேற்ப மாறுபடும்.
4. கருவுறுதல் வெளியே நீரில் நடைபெறுவது.
5. முன்கால்களில் குறுகலானவை, பின்கால்கள் நீண்டவை.
6. பின் கால் விரல்களில் விரல் இடைத்தோல் உண்டு.
7. தலைப்பரட்டையாக இருக்கும் பொழுது செவுள்களாலும் முதிர்ச்சி நிலையில் நுரையீரல்களாலும், தோலினாலும் மூச்சுவிடுபவை.

11. வால் என்றால் என்ன?

மலப்புழைக்கு பின்னுள்ள நீட்சி. எல்லாத் தண்டு வட உயிர்களுக்கும் வால் உண்டு.

12. விலாங்கு மீன் என்றால் என்ன?

1. நீண்டதும் நொய்ந்ததுமான எலும்புமீன்.

2. கடல் நீரிலும் நன்னீரிலும் வாழ்வது.
3. இடுப்புத்துடுப்புகள் இல்லை. இதைப் பிடிக்க ஈட்டி பயன்படுகிறது.

13. பாம்புகளின் சிறப்பியல்புகள் என்ன?

1. காலற்றவை.
2. உடல் முழுதும் செதில்கள் உண்டு
3. செவி இல்லை.
4. செதில்கள் மூலமே ஒலியை உணர்பவை.
5. மணம் உணரும் நாக்கு.

14. மகுடிக்கு நாகம் கட்டுப்படுகிறது என்பது உண்மையா?

இல்லை. செவி இல்லை. ஆகவே காது மூலம் ஒலியை உணர முடியாது. மகுடி அசைவு பிடாரன் உடல் அசைவு ஆகியவற்றை அறிந்தே அது தலையை ஆட்டுகிறது.

15. நச்சுப்பாம்பு எப்பொழுது கடித்தால் நஞ்சு அதிகம்?

இரவில் கடித்தால் நஞ்ச அதிகம்.

16. தன்னினம் உண்ணல் பாம்புகளிடம் உண்டா?

உண்டு சிறிய பாம்புகளைப் பெரிய பாம்புகள் விழுங்கும்.

17. எலும்புகளையும் செரிக்க வைக்கும் ஆற்றல் பாம்பின் செரித்தல் நீருக்கு உண்டா?

உண்டு. பாம்பின் இரைப்பையில் முழு இரையும் செரிமானமாகிறது.

18. பாம்பியல் என்றால் என்ன?

பாம்புகளை ஆராயுந்துறை.

19.பாம்புப் பண்ணை சென்னையில் எங்குள்ளது?

கிண்டிக் குழந்தைகள் பூங்காவில் உள்ளது.

20. கட்டுவிரியன் என்பது யாது?

கொடிய நஞ்சுள்ள இந்தியப் பாறைப் பாம்பு. வயிற்றுச் செதில்கள் பெரியவை. வால் சுருண்டிருக்கும்.

21. விரியன் என்றால் என்ன?

இது சிறிய நச்சுத்தன்மையுள்ள பாம்பு. கட்டுவிரியன், கண்ணாடி விரியன் எனப் பலவகை.

22. நஞ்சுள்ள பாம்புகளில் பெரியது எது?

அரச நாகம் காடுகளில் வாழ்வது. நீளம் 2 மீட்டர்.
ஓபியாபேகஸ் ஹான்னா இதன் அறிவியல் பெயர்.

23. நச்சற்ற பாம்புகளில் மிகப் பெரியது எது?

மலைப்பாம்பு. காடுகளில் வாழ்வது. நீளம் 3 மீ.

24. நச்சுப்பற்கள் என்பவை யாவை?

நச்சுப்பாம்பின் மேல் தாடையிலுள்ள வளைந்த இரு கோரைப் பற்கள் கடிக்கும் பொழுது நஞ்சைச் செலுத்த ஊசிபோல் பயன்படுவது.

25. தோலுரித்தல் என்றால் என்ன?

பல்லி, பாம்பு, கரப்பான் முதலியவை தங்கள் தோலை உரித்தல். இது பாம்பைப் பொறுத்த வரை சட்டை உரித்தல் ஆகும்.

26. மலைப்பாம்பு என்பது யாது?

பாம்புள்ள மிகப்பெரியது, நச்சற்றது. தன் இரையைச் சுற்றி வளைத்து நெருக்கிக் கொன்று விழுங்கும். விலங்குக் காட்சியகங்களில் பார்வைப் பொருள்.

27. மலைப்பாம்பிற்கு அடுத்த பெரிய பாம்பு எது?

அரசநாகம் இதற்கு அடுத்ததாகச் சொல்லத்தக்கது சாரைப் பாம்பு.

28. அனகோண்டா என்பது யாது?

மலைப்பாம்புக் குடும்பத்தைச் சார்ந்த பெரிய பாம்பு தென் அமெரிக்காவில் நீரில் வாழ்வது.

29 கடற்பாம்பு என்பது யாது?

கடலில் வாழும் சிறிய பாம்பு, நஞ்சுள்ளது.

30. முதலைகளின் சிறப்பியல்புகள் யாவை?

1. பெரும்பாலும் ஆறு, ஏரி முதலிய நீர் நிலைகளில் வாழபவை.
2. உடல் வெப்பநிலை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவை.
3. கடினப் புறத்தோல் செதில்களால் மூடப்பட்டிருக்கும்
4. முட்டையிடுபவை.

31. ஆமையின் சிறப்பென்ன?

ஓட்டிற்குள் வாழும் முதுகெலும்புள்ள விலங்கு. தீங்கு நேரிடும்பொழுது ஒட்டிற்குள் தன் தலையையும் கால்களையும் சுருட்டிக் கொள்ளும்.

32. யாக்கோப்சன் உறுப்புகள் என்றால் என்ன?

மூக்கோடும் வாயோடும் தொடர்புடைய இருபைகள். பாம்புகளில் நன்கு வளர்ந்துள்ளன. வாயில் உணவின் மணமறிவது வேலை.

33. கொடுபல்லி என்றால் என்ன?

அற்றுப்போன மிகப்பழங்காலத்து விலங்கு நீளம் 25 மீ.

34. பறக்கும் பல்லி என்றால் என்ன?

தட்டார் பல்லி. சிறகுப்படலம் முன்புறத்துறுப்புக்களுக்கும் பின்புறத்துறுப்புகளுக்கு இடையே இருப்பதால் இது பறக்க இயலும்.

35. தன்முடமாதல் என்றால் என்ன?

ஓர் உயிரி தன் உடல் பகுதியைத் தானே முறித்துக் கொள்ளுதல். எ-டு. பல்லி வால் முறிதல்.

36.பறவைகள் என்பவை யாவை?

1. பறத்தல் இவற்றிற்கு மட்டுமே உரியது.
2. இச்செயலுக்குச் சிறகுகள் பயன்படுகின்றன.
3. இவற்றின் உடல் வெப்பநிலை மாறாதது.
4. காற்று விரிபைகள் உண்டு. இவை நுரையீரல் நீட்சிகள். மூச்சு விட உதவுபவை.

37. பறக்காத பறவைகள் யாவை?

கோழி, வாத்து, மயில். இவற்றின் இறக்கைகள் பறப்பதற்கு ஏற்றவை அல்ல.

38. வான்கோழியின் சிறப்பென்ன?

சேவல் போன்ற பறவை. நீளம் 95 செ.மீ. நீண்டவால். விளையாட்டுப் பறவை. இதன் கறி உணவாகப் பயன்படுவது.

39. ஆர்க்கியாப்டிரிக்ஸ் என்பது யாது?

அழிந்தொழிந்த புதைபடிவப்பறவை. ஊர்வனவற்றிற்கும் பறவைகளுக்கும் இணைப்பாக அமைவது.

40. எமு என்பது யாது?

பறக்க இயலாத மிகப் பெரிய ஆஸ்திரேலியப்பறவை. உயரம் 1.5 மீட்டர்.
41. கிவி என்பது யாது?

பறக்க இயலாத நியூசிலாந்து பறவை. அந்நாட்டின் இலச்சினை. பகலில் உறங்கி இரவில் இரை தேடுவது.

42. பறவைகளில் மிகப்பெரியது எது?

நெருப்புக் கோழி, ஆப்பிரிக்காவில் வாழ்வது. உயர்வரை உயரம் 3 மீ. எடை 150 கிகி. விரைவாக ஓடுவது. இதன் சிறகுகள் விலைமதிப்புள்ளவை.

43. பறவை வழியறிதல் என்றால் என்ன?

பறவைகள் பறத்தலை உற்று நோக்கி, அவை செல்லும் வழியறிதல்.

44. மாறா வெப்பநிலை விலங்குகள் என்றால் என்ன?

சூழ்நிலைக்கேற்றவாறு மாறாமல் உடல் வெப்பநிலை ஒரே சீராக இருக்கும் விலங்குகள். எ-டு பறவைகள், பாலூட்டிகள்.

45. இறகுகள் என்பவை யாவை?

பறவையின் உடல் முழுதும் அமைந்துள்ள புறத்துறுப்புகள். உடலுக்குக் கதகதப்பு அளிப்பவை.

46. உடல் இறகு என்றால் என்ன?

பறவையின் உடலுக்கு இது உருவத்தை அளிப்பது. உடல் கதகதப்பிற்கும் பறத்தலுக்கும் காரணம்.

47. ஒர் இறகின் கொக்கியமைப்பின் பயன் யாது?

இக்கொக்கியமைப்பு காற்றுத் தடையை உண்டாக்கிப் பறவை பறக்க உதவுகிறது.

48. இறகுத் தின்னிகள் என்பவை யாவை?

இறகுகளைத் தின்னும் இறகிலாப் பூச்சிகளான ஒட்டுண்ணிகள். எ-டு பறவைப்பேன், தலைப்பேன்.

49. சூல்நாண் என்றால் என்ன?

பறவை முட்டையின் மஞ்சள் கருப்பையை நிலை நிறுத்தும் கயிறு.

50. தீனிப்பை என்றால் என்ன?

உட்கொண்ட உணவுப் பொருளைச் சேமித்து வைக்கப் பயன்படுவது. எ-டு பூச்சிகள், பறவைகள்.

51. அரைவைப்பை என்றால் என்ன?

இரண்டாம் இரைப்பை பறவைகள், வளைய உடலிகள் (மண்புழு) முதலியவற்றில் காணப்படுவது.

52. ஆந்தையின் சிறப்பியல்புகள் யாவை?

இரவில் இரைதேடும் பறவை. அலறுவது, கூடு கட்டாதது. தலையைப் பின்பக்கம் திருப்பிப் பார்ப்பது.

53. இரையும் நாரை என்பது யாது?

வட அமெரிக்கப் பறவை, அழியும் நிலையில் உள்ளது. இதன் கொம்பிரைச்சல் குறிப்பிடத்தக்கது. உயிரியலார் இதன் வகைகளைக் காப்பாற்ற முயன்று வருகின்றனர்.

54. விரல்மூடு பறவைக்கு ஒர் எடுத்துக்காட்டு தருக.

நான்கு விரல்களும் விரலிடைத்தோலினால் இணைக்கப்பட்டிருக்கும். எ-டு வாத்து.

55. உப்புச் சுரப்பிகள் பறவைகளுக்கு எவ்வாறு பயன்படு கின்றன?

கடல் பறவைகள் ஊடுபரவலைக் சரி செய்யத் தங்கள் தலையில் கொண்டுள்ள ஓரிணைச் சுரப்பிகள். இவை உப்புகளைச் சுரப்பவை.

56. அடைகாத்தல் என்றால் என்ன?

முட்டையிடும் பறவைகள் தங்கள் முட்டைகளுக்குப் போதிய வெப்பம் அமைத்துப் பொரிய வைத்தல். பெட்டைக்கோழி தன் முட்டை மீது அமர்ந்திருத்தல். இது அடைக்காக்கும் எந்திரத்தின் மூலமும் செய்யப்படுகிறது.

57. பெற்றோர் பாதுகாப்பு என்றால் என்ன?

இளம் உயிர்கள் நன்கு வளர்ந்து தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் நிலையை அடையும் வரை அவை தங்கள் பெற்றோர்களால் பேணப்படும். இது பாலூட்டிகளிடமும், பறவைகளிடமும், மீன்களிடமும் காணப்படுகிறது.

58. பென்குயின் பறவையின் சிறப்பென்ன?

தென் கடல் பகுதி வாழ் பறவை. பறக்கும் திறனற்றது. கூடுகட்டத் தெரியாது. முன் புறத்துறுப்புகள் துடுப்புகளாகியுள்ளதால் அவற்றைக்கொண்டு நீரில் நீந்தும். விரல் இடைத்தோல் உண்டு. முட்டையிடவே கரைக்கு வரும்.

59. பறவைக்குஞ்சுகளில் இரு வகைகள் யாவை?

1. தங்குகுஞ்சுகள்- பறவைகளிள் குஞ்சுகள் முட்டை பொரிந்ததும் நகர இயலா. ஆகவே, கூட்டில் தங்கித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்.எ-டு புறாக் குஞ்சு
2. தங்காக்குஞ்சுகள் முட்டை பொரித்ததும் குஞ்சுகள் அதைவிட்டு வெளியேறித் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். எ-டு கோழிக்குஞ்சு.
60. காதலாட்டம் என்றால் என்ன? புணர்ச்சிக்கு முன் தன் இணையைக் கவர்ந்து தேர்ந்தெடுக்கும் விலங்கு நடத்தை. மென்மையும் வன்மையும் கலந்தது. இது பறவைகளுக்குரிய தனிக் கலை.

61. பாலூட்டிகளின் சிறப்புகள் யாவை?

1. குட்டிப்போட்டு பால் கொடுப்பவை.
2. உடலில் மயிர் உண்டு.
3. குறுக்குத் தசை உண்டு.
4. உடல்வெப்பநிலை மாறா விலங்குகள்.எ-டுஎருமை, மான்.

62. இறுதி இரைப்பை என்றால் என்ன?

பசு முதலிய அசைபோடும் விலங்குகளின் நான்காம் இரைப்பை. இதுவே உண்மை இரைப்பை.

63. அசைபோடுதல் என்றால் என்ன?

விழுங்கப்பட்ட உணவு இரைப்பையிலிருந்து வாய்க்குக் கவளங்களாகக் கொண்டு வரப்படுகிறது. இங்கு உமிழ் நீருடன் கலந்து நன்கு அரைக்கப்படுகிறது, மீண்டும் விழுங்கப்படுகிறது. எ-டு பசு, ஆடு.

64. அசைபை என்றால் என்ன?

பசு முதலிய அசைபோடும் விலங்குகளை முதல் இரைப்பை

அசைபோடும் விலங்குகள் யாவை?

பசு, ஆடு, எருமை.

65. கொறிக்கும் விலங்குகள் யாவை?

அணில், எலி முதலிய பாலூட்டிகள் கொறிக்கும் விலங்குகள் ஆகும்.

67. மரம்வாழ் விலங்கு எது?

அணில்.

68. காயடித்தல் என்றால் என்ன?

பிறப்புறுப்புகளைக் குறிப்பாக விரையை நீக்குதல். இது பொதுவாகக் கால்நடைகளுக்குச் செய்யப்படுவது. எ-டு காளை மாடுகள்.

69. ஓரகப் பல்லமைவு என்றால் என்ன?

எல்லாப் பற்களும் ஒரே வகையாக உள்ள பல்லமைவு. எ-டு தவளை, பல்லி.

70. வேற்றகப் பல்லமைவு என்றால் என்ன?

பற்கள் வேறுபட்டு அமைந்திருத்தல். வெட்டுப்பல், கோரைப் பல், கடைவாய்ப்பல். எ-டு மனிதன்.

71. ஒரக உறுப்புகள் என்றால் என்ன?

தோற்ற ஒற்றுமை மட்டும் உள்ள உறுப்புகள். எ-டு. வெளவால் சிறகுகளும் மீன் துடுப்புகளும்.இவை தோற்ற ஒற்றுமை உடையவை. வேலையில் வேறுபட்டவை.

72. விலங்குகளிலேயே மிக உயரமானது எது

ஒட்டைச்சிவிங்கி, 7 மீட்டர் உயரம் உள்ளது.

73. மூன்றாம் இரைப்பை என்றால் என்ன?

அசைபோடும் விலங்குகளின் இரைப்பையின் மூன்றாம் பிரிவு.

74. திமிங்கிலத்தின் சிறப்பென்ன?

நீரிலுள்ள விலங்குகளில் மிகப்பெரியது, பாலூட்டி, கூரிய செவியுணர்வு மிக்கது. எதிரொலி மூலம் பொருள்களின் இருப்பிடத்தை அறிவது. மூச்சுவிட அடிக்கடி நீருக்கு மேல் வருவது. அதிகம் இது வேட்டையாடப்படுகிறது. இருப்பினும், இதனைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

75. யானையின் சிறப்பென்ன?

நில விலங்குகளில் மிகப் பெரியது, புல் பூண்டுகளை உண்ணுவது. இதன் தந்தங்கள் மதிப்புள்ளவை.

76. ஆப்பிரிக்க யானையைப் பழக்க முடியுமா?

முடியாது.
77. தும்பிக்கையான் என்பது யாது?

அற்றுப்போன துதிக்கை விலங்கு. மிகப் பழங்காலத்தைச் சார்ந்தது.

78. தடிமத்தோல் விலங்குகள் யாவை?

யானை, நீர் யானை.

79. ஒற்றைக் கொம்பன் என்பது யாது?

காண்டாமிருகம். தடித்த தோலுள்ள பெரிய விலங்கு. தாவர உண்ணி. மூக்கிற்கு மேல் நேரான ஒரு கொம்பு இருக்கும். இது ஒரு பாலூட்டி.

80. நீர் யானை என்றால் என்ன?

பெரிய தலை, மூஞ்சி, தடித்த தோல், கன உடல், குறுகிய கால்கள், மயிரற்ற உடல் ஆகியவற்றைக் கொண்ட பாலூட்டி. தாவர உண்ணி நீரில் கிடப்பது. ஒரே அளவுள்ள கால்கள். காட்சிச்சாலை விலங்கு.

81. ஒட்டகத்தின் சிறப்பு யாது?

ஒரு பாலூட்டி. பாலைவனக்கப்பல். சவாரி செய்யவும் பொதி சுமக்கவும் பயன்படுவது.

82. அணில் குரங்கு என்பது யாது?

பொன்னிற மயிருள்ள சிறிய தென்னமரிக்கக் குரங்கு.

83. புதிதாக இரு குரங்குச் சிறப்பினங்களைக் கண்டறிந்தவர் யார்? எப்பொழுது?

டச்சு அறிவியலாரான மார்க் வான் ரூஸ்மாலன். இவற்றை 1990 களில் கண்டறிந்தார்.

84. விலங்குகளில் மனிதன் போல் நடப்பன யாவை?

கரடி, மனிதக்குரங்கு.

85. கடலரிமா என்றால் என்ன?

வட பசிபிக் பெருங்கடலில் வாழும் சீல் என்னும் விலங்கு மீன் உண்ணும் பாலூட்டி. இதன் தோலுக்கும் எண்ணெய்க்கும் வேட்டையாடப்படுகிறது.

86. வௌவால்களின் சிறப்பென்ன?

பறக்கும் பலூட்டிகள். இருட்டில் வாழ்ந்து இரவில் வெளிவருபவை. கேளா ஒலிளைக் கேட்பவை.

87. பறக்கும் நரி என்றால் என்ன?

இது பெரிய பழந்தின்னி வௌவால். இதன் சிறகு மட்டும் 1.5 மீட்டர் அகலமிருக்கும்.

88. பெருங்கரடி என்பது யாது?

கரடி போன்ற பாலூட்டி. கறுப்பும் வெள்ளையும் கலந்தது. 1.8 மீ. உயரம். சீனாவிலும் திபெத்திலும் காணப்படுவது.

89. நம் நாட்டில் சிங்கம் எங்கு வாழ்கிறது?

அஸ்ஸாம் காடுகளில் வாழ்கிறது.

90. புலி என்பது யாது?

பூனைக்குடும்பத்தை சார்ந்த கொடிய ஊன் உண்ணும் விலங்கு. இது அழிந்து வருவதால் இதைப் பாதுகாக்க புலிப் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பயனளித்து வருகிறது. நம் நாட்டிற்கே உரியது.

91. வேங்கை என்பது யாது?

பூனைக்குட்டி குடும்பத்தைச் சார்ந்தது. பெரும் புள்ளிகள் இருக்கும். ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் காணப்படுவது.

92. வேங்கையின் சிறப்பு யாது?

நிலம் வாழ் ஊனுண்ணி. புலியை ஒத்த சீற்றமிகு விலங்கு.

ஏனைய விலங்குகளை வேட்டையாடுவது.

93. மதலைப்பை விலங்குகளுக்கு இரு எடுத்துக்காட்டுகள் கூறுக.

கங்காரு, கோலா.

94. கோலா என்பது யாது?

மதலைப்பையுள்ள ஆஸ்திரேலிய விலங்கு. 1 மீட்டர் நீளமுள்ளது. மரம் ஏறும்.

95. கங்காரு என்பது என்ன?

மதலைப்பை உடைய பெரிய ஆஸ்திரேலிய பாலூட்டி இதன் நீண்ட பின்கால்கள் குதித்தோடப் பயன்படுபவை. மதலைப்பை குட்டிகளைச் சுமந்து செல்ல உதவுகிறது.

96. சின்னாய் என்றால் என்ன?

வட அமெரிக்க விலங்கு. நாய் போன்று குரைக்கும். அணில் போன்று கொறிக்கும்.

97. கடல் முள் எலி என்றால் என்ன?

பாலூட்டியான சிறிய கடல் விலங்கு. கூரிய முட்கள் இதன் உடலை மூடியுள்ளன.

98. தொப்பூழ்க்கொடி என்றால் என்ன?

கருவின் அடிவயிற்றைச் சூல் கொடியோடு இணைக்கும் திகவடம். இதன் வழியே குருதி மூலம் உள்ளே ஊட்டப்பொருள் செல்கிறது. வெளியே கழிவுப்பொருள் வருகிறது.

99. சூல்கொடி என்றால் என்ன?

நஞ்சுக்கொடி வளரும் கருவைக் கருப்பபையோடு இணைத்து ஊட்டம் வழங்கும் கொடி,

100. முதுகுத்தண்டுடை விலங்குகள் யாவை?

இவற்றின் வளர்ச்சியின் ஒரு நிலையில் முதுகுதண்டு, செவுள் பிளவுகள், உட்குழாயுள்ள நரம்பு வடம் ஆகிய மூன்று சிறப்பு உறுப்புகள் காணப்படும். எ-டு ஆம்பி யாக்சஸ்.

101. மயிர் என்பது என்ன?

பாலூட்டிகளின் மேல்தோல் வளர்ச்சி, தாவரப் புறத்தோலின் வளர்ச்சி. உயிர் நின்ற பிறகும் வளர்வது மயிர்.

102. குளம்பு பிளவுபட்ட விலங்குகள் யாவை?

ஆடு, மாடு.

103. குளம்பு பிளவுப்படாத விலங்கு எது?

குதிரை, கழுதை.

104. பனிக்குடம் என்றால் என்ன?

நிலம் வாழ் முதுகெலும்பு விலங்குகளின் கருப்படலம், கருவினைப் பாதுகாப்பது.

105. பூழ்ப்பை என்றால் என்ன?

பறவை, ஊர்வன, பாலூட்டி முதலிய முதுகெலும்புள்ள விலங்குகள் மூச்சு விடுவதற்காகக் கருவில் காணப்படுவது.

106. ஐவிரல் உறுப்பு என்றால் என்ன?

ஐந்துவிரல்களைக் கொண்டது. கை, கால்.

107. முதுகுத்தண்டு என்பது யாது?

உயிரணுக்களான தனிவடம். தண்டுவடம் முன்னோடி முதுகெலும்பு தோன்றியதும் மறைவது, சில கீழனி விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது.

108. நகங்கள் என்பவை யாவை?

உயர் வகை முதுகு எலும்புகளின் விரல் நுனியில் காணப் படும் தட்டையான கடினத்தகடுகள். தேயத்தேய அல்லது நறுக்க நறுக்க வளரக்கூடியவை.

109. நீந்துயிர்கள் என்பவை யாவை?

ஏரி, கடல், பெருங்கடல் ஆகியவற்றில் வீறுடன் நீந்தும்

விலங்குகள். எ-டு மீன், சுறா, திமிங்கிலம்.

110. நாற்கால் விலங்குகள் யாவை?

மான், மாடு, தவளை, ஓணான் முதலியவை.

111. முத்துச்சாரம் என்றால் என்ன?

மீன்செதில்களிலிருந்து பெறப்படும் வெண்ணிறப்பற்கள். செயற்கை முத்துகள் செய்ய பயன்படுவது.

112. முத்து என்றால் என்ன?

முத்துச் சிப்பியினால் உண்டாக்கப்படும் பொருள்.

113. முத்து எவ்வாறு உண்டாகிறது?

சிப்பியின் கூட்டிற்குள் மூடகத்திற்கும் ஓட்டிற்கும் இடையில் மணல், துகள் முதலியவற்றில் ஏதாவது ஒன்று சேரும்பொழுது அதைச் சுற்றி மூடகம் ஓர் உறையை உண்டாக்கும். இதுவே பின் முத்துகளாக வளர்வது.