அலை ஓசை/எரிமலை/இதயம் நின்றது

விக்கிமூலம் இலிருந்து


ஒன்பதாம் அத்தியாயம் இதயம் நின்றது

தாரிணி கண்ணுக்கு மறைந்ததும் சூரியா அங்கிருந்து எழுந்து செல்லலாம் என்று நினைத்தான். அச்சமயம் இத்தனை நேரமும் சற்றுத் தூரத்தில் உட்கார்ந்திருந்த மூன்று மனிதர்கள் தன்னை நோக்கி வருவதைச் சூரியா பார்த்தான். அவர்கள் அருகில் வரட்டும் என்று காத்திருந்தான். மூன்று மனிதர்களும் வந்து சூரியாவைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். "தம்பி! உனக்கு எந்த ஊர்?" என்று அவர்களில் ஒருவன் கேட்டான். "எனக்கு மதராஸ்!" என்றான் சூரியா. "ஆ! மதராஸ்!" என்று மூன்று பேரும் சேர்ந்து சொன்னார்கள். சற்றுப் பொறுத்து, "இங்கு ஒரு பெண் உட்கார்ந்திருந்தாளே, அவள் உனக்கு என்னமாக வேணும்?" என்று ஒருவன் கேட்டான். "அவள் என் சிநேகிதி!" என்றான் சூரியா. "ஆகா! அவள் உன் சிநேகிதி!" என்றார்கள் மூன்று பேரும் சேர்ந்தாற்போல். அதற்குப் பிறகு சற்று நேரம் சம்பாஷணை நகரவில்லை. சூரியா பொறுத்துப் பார்த்துவிட்டு, "உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றான். "பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்" என்றான் ஒருவன். "பஹுத் அச்சா! அப்படிக் கேள் சொல்கிறோம்" என்றார்கள் மற்ற இருவரும். அவர்கள் ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம் என்று ஏற்கனவே சந்தேகித்தான். இப்போது அவர்கள் பல்லவி, அனுபல்லவி முறையில் பேசுவதிலிருந்து அந்தச் சந்தேகம் உறுதிப்பட்டது. "சொல்லுங்கள்; கேட்பதற்குத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் சூரியா. "அந்தப் பெண்ணின் சிநேகம் உனக்கு வேண்டாம்!" என்று ஒருவன் சொன்னான். மற்ற இருவரும் அதையே திருப்பிச் சொன்னார்கள். "ஏன் அந்தப் பெண்ணிடம் என்ன கெடுதல்? அவளிடம் சிநேகம் செய்தால் என்ன?" என்று சூரியா கேட்டான். "பெரிய இடத்துச் சமாசாரம்!" என்றான் ஒருவன். "ஆமாம் ரொம்பப் பெரிய இடத்துச் சமாசாரம்" என்றார்கள் மற்ற இருவரும். "அப்படியானால் அந்த ரொம்பப் பெரிய இடத்திலே போய்ச் சொல்லுங்கள் என்னிடம் ஏன் சொல்லவேண்டும்?" என்றான் சூரியா. மூன்று பேரில் ஒருவருடைய முகத்தை ஒருவர் பார்த்தார்கள். "எனக்கு நேரமாகிறது; நான் போய் வருகிறேன்" என்றான் சூரியா. மூன்று பேரில் ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, "சொல்லி விடலாமா?" என்று கேட்டான். "சொல்லிவிடலாமா?" என்று அவர்களும் கேட்டார்கள். முதல் மனிதன் சூரியாவைப் பார்த்து, "தம்பி! உனக்குப் பணம் வேணுமா?" என்றான். "எவ்வளவு?" என்று சூரியா கேட்டான். முதல் மனிதன் மற்றவர்களைப் பார்த்து, "எவ்வளவு என்று கேட்கிறான்; சொல்லட்டுமா?" என்றான். "சொல்லு!" என்றார்கள். "தம்பி! உனக்கு லட்சம் ரூபாய் பணம் வேண்டுமா? ஒரு லட்சம் ரூபாய்!" என்றான் முதல் மனிதன். சூரியா கொஞ்சம் திகைத்துப் போனான். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, "கள்ள நோட்டா? நிஜப் பணமா?" என்றான். "ஆகா! கள்ளநோட்டு!" என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள். பிறகு முதல் மனிதன், தம்பி! நிஜப் பணம்! ஒரு லட்சம் ரூபாய் நோட்டு வேண்டாமென்றால் தங்கமாகத் தருகிறோம்!" என்றான். "ஆமாம் தங்கமாகத் தருகிறோம்!" என்றார்கள் மற்றவர்கள். "கொடுங்கள்" என்று சூரியா கையை நீட்டினான். "கெட்டிக்காரப் பையன்; பணத்துக்குக் கையை நீட்டுகிறான்!" என்று சொல்லிவிட்டு மூவரும் சிரித்தார்கள். கடைசியில் ஒருவன் மென்று விழுங்கிக்கொண்டு, "ஒரு லட்சம் ரூபாய் சும்மாக் கிடைக்குமா? எங்களுக்கு ஒரு உதவி செய்தால் கிடைக்கும்!" என்றான். "என்ன உதவி?" என்றான் சூரியா. "சற்று முன்னால் நீ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாயே? அவளைக் கொண்டு வரும்படி எங்களுக்குப் பெரிய இடத்து உத்தரவு கிடைத்திருக்கிறது. அதற்கு நீ உதவி செய்தால் லட்சம் ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்!" சூரியா இம்மாதிரி ஏதோ வரப்போகிறது என்று எதிர் பார்த்தான். ஆயினும் அதைக் காதால் கேட்டதும் சொல்ல முடியாத கோபம் வந்தது. கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டான். இப்போது கோபித்துக்கொண்டு என்ன பயன்? அவர்கள் மூன்று பேர்; முரட்டுத் தடியர்கள். அவர்களுடன் சண்டை பிடிப்பதால் பல காரியங்கள் கெட்டுப் போகும். மேலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன என்று அவனுக்கு இன்னும் சந்தேகமாயிருந்தது. கொஞ்ச நேரம் யோசிப்பதுபோலப் பாசாங்கு செய்துவிட்டு, "இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்; யோசித்துப் பதில் சொல் கிறேன்" என்றான். "எப்போது எங்கே சந்திக்கலாம்!" என்று முதல் மனிதன் கேட்டான். "இதே இடத்தில் இதே நேரத்தில் நாளை மறுநாள் சந்திக்கலாம்!" என்றான் சூரியா. "உன்னுடைய ஜாகை எங்கே?" என்று ஒருவன் கேட்டான். "ஜாகை எங்கே?" என்று மற்ற இருவரும் கேட்டார்கள். "தற்போது எனக்கு ஜாகை எதுவும் இல்லை; இனிமேல் தான் தேட வேண்டும்!" என்று சொல்லிக்கொண்டு சூரியா எழுந்தான் அவர்களும் எழுந்தார்கள். சூரியா எங்கே போனாலும் அவர்களும் சற்றுத் தூரத்தில் பின் தொடர்ந்து வந்தார்கள். காரியம் இல்லாத இடங்களுக்கெல்லாம் சூரியா சென்று அந்த மூன்று பேருடைய பார்வையிலிருந்து தப்புவதற்கு இரவு வெகுநேரமாக ஢விட்டது. ஆயினும் சீதாவை அன்று இரவு எப்படியும் பார்த்துவிடுவது என்ற தீர்மானத்துடன் நடந்தான். சீதா தன்னுடைய வீட்டில் அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தாள். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் 'டிக் டிக், டிக், டிக்' என்று அடித்துக் கொண்டி ருந்தது. சீதாவின் இதயம் கடிகாரத்தின் 'டிக்' சத்தத்தோடு ஒத்து அடித்துக் கொண்டிருந்தது. கடிகாரத்தின் ஒவ்வொரு 'டிக்'கும் தன்னுடைய வாழ்நாளின் இறுதியை அருகில் கொண்டுவந்து கொண்டிருக்கிறது என்பது சீதாவுக்குத் தெரிந்துதானிருந்தது. கடிகார முள் நள்ளிரவின் பன்னிரண்டு மணியை நெருங்க நெருங்க, சீதாவின் இதயத்தில் குத்தியிருந்த துன்ப முள்ளின் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மணி பதினொன்றரை ஆகிவிட்டது, அவளுடைய ஆயுளில் இன்னும் அரை மணி நேரந்தான் பாக்கியிருக்கிறது. அதற்குள் எத்தனையோ காரியங்கள் செய்தாக வேண்டும். குழந்தைக்குக் கடிதம் எழுத வேண்டும்; இவருக்கும் நாலு வரி எழுதத்தான் வேண்டும். ஆனால் எத்தனை முயன்றாலும் ஒன்றும் எழுத வரவில்லையே, என்ன செய்கிறது. சரியாக மணி பன்னிரண்டுக்குக் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு செத்துப் போவது என்று சீதா முடிவு செய்திருந்தாள். அதற்குத் தயாராவதற்காக ஒன்பது மணிக்கே ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டாள். சாகிறபோது அவலட்சணமாக எதற்குச் சாகவேண்டும்? நாலு பேர் வந்து பார்க்கிறவர்கள், "அடடா! இப்பேர்ப்பட்ட அழகியை மனைவியாகப் படைத்தும் இந்த ராகவனுக்கு அவளை வைத்துக்கொண்டு வாழக் கொடுத்து வைக்கவில்லையே?" என்று சொல்ல வேண்டாமா? அதற்காகவே ஆடை ஆபரணங்களைப் பூண்டு அழகு செய்துகொண்டு வந்து எழுதுவதற்கு உட்கார்ந்தாள். வஸந்திக்கு முதலில் கடிதம் எழுதி வைக்க எண்ணினாள். ஆனால் குழந்தையை நினைத்துக் கொண்டதும் அழுகை அழுகையாக வந்தது. அவளைப் பார்க்காமல் செத்துப் போகிறோமே என்ற எண்ணத்தினால் நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. குழந்தைக்கு என்ன எழுதுவது? "உன் அப்பா என்னைக் கொன்று விட்டார்! அவரை நீ எனக்காகப் பழி வாங்கு" என்று எழுதலாமா? சீச்சீ! இது என்னை பைத்தியக்கார எண்ணம்? முதலில் லலிதாவுக்குக் கடிதம் எழுதலாம் என்று ஆரம்பித்தாள். "என் ஆருயிர்த் தோழி லலிதாவுக்கு..." என்பதற்கு மேல் ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. லலிதாவை நினைத்ததும் பழைய ஞாபகங்கள் எல்லாம் பொங்கிக்கொண்டு வந்தன. ஆகா! ராஜம்பேட்டையில் கலியாணத்துக்கு முன்னால் லலிதாவும் தானும் கூடிக் குலாவி அந்தரங்கம் பேசிய நாட்கள் எவ்வளவு ஆனந்தமாக இருந்தன? அப்புறம் இவர் பெண் பார்க்க வந்த போதும், லலிதாவுக்குப் பதிலாகத் தன்னை மணப்பேன் என்று சொன்னபோதும் தான் அடைந்த களிப்பு என்ன? இப்போது அனுபவிக்கும் நரக வேதனை என்ன? தான் அப்போது லலிதாவுக்குச் செய்த துரோகந்தான் இப்போது தன்னை வந்து இப்படிப் பீடித்திருக்கிறதோ? லலிதாவுக்கு என்ன எழுதுவது? "என்னை மன்னித்துவிடு!" என்று எழுதுவதா? அப்படி எழுதினால் அவளுக்கு அர்த்தமே ஆகாதே! எதற்காக மன்னிப்பு என்று கேட்பாளே? தன்னுடைய துயரத்தைச் சொன்னால் கூட அவளுக்கு விளங்காது. அவள் ஆனந்தமான இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். சந்தோஷமாய் இருக்கிறவர்களுக்குத் துக்கப்படுபவர்களின் துக்கத்தை அறிந்து கொள்ளக் கூட முடியாது. "என் புருஷன் என்னைக் கஷ்டப்படுத்துகிறான்!" என்றால், "வெறுமனே ஒரு புருஷன் கஷ்டப்படுத்துவானா? உன்னுடைய நடத்தையில் ஏதாவது கெடுதல் இருக்கும்!" என்று சொல்வார்கள். அதிலும் இல்வாழ்க்கையில் சந்தோஷமாயிருப்பவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். லலிதாவுக்கு இப்போது என்ன எழுதி என்ன பிரயோஜனம்? சந்தோஷமாயிருக்கிறவளிடம் போய்த் தன்னுடைய துக்கத்தைச் சொல்லிக் கொள்வானேன்? அப்படிச் சொல்லிக்கொண்டு அவள் பரிதாபப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். அதனால் சாகப் போகிற தனக்கு என்ன உபயோகம் ஏற்படப் போகிறது? இவருக்குக் கடிதம் எழுதலாம் என்றால், அதைப் பற்றி நினைக்கும்போதே அவளுடைய இதயம் வெடித்து விடும் போலிருந்தது; என்னத்தை எழுதுவது? "இந்த உலகத்தில் தங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை. தாங்களே என்னை வெறுத்து விட்டீர்கள் இனி இந்தப் பூமியில் இருந்து தான் என்ன பயன்!" என்று எழுதலாமா? "ஓயாமல் 'தொலைந்து போ!' 'தொலைந்து போ!' என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே? அதன்படி இதோ தொலைந்து போகிறேன்" என்று எழுதி வைக்கலாமா? இவ்விதம் எண்ணியதும் சீதாவின் கண்களிலிருந்து பொல பொலவென்று கண்ணீர் உதிர்ந்தது. ராகவன் தன்னை எத்தனையோ விதத்தில் கொடுமைப்படுத்தியதெல்லாம் சீதாவின் மனதை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. ஆனால் 'தொலைந்து போ!' 'தொலைந்து போ!' என்று சில காலமாக அவன் அடிக்கடி சொல்லி வந்தது அவளை எல்லையில்லாத துன்பத்துக்கு ஆளாக்கியது. எங்கே தொலைந்து போகிறது? தன்னை அழைத்துக் கொள்ள யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? தாயில்லை; தகப்பனாரைப் பற்றித் தகவல் இல்லை; வேறு எங்கே தொலைந்து போகிறது? ஒரு வழியாகச் செத்து தொலைந்து போக வேண்டியது தான்! ஆகா! சீதையைப் பூமாதேவி அழைத்துக் கொண்டது போல் தன்னையும் அழைத்துக் கொள்ளக்கூடாதா? சகுந்தலையை அவள் தாயார் அழைத்துக்கொண்டு போனது போல் தன்னைத் தன்னுடைய தாயார் அழைத்துக் கொண்டு போகக்கூடாதா? அப்படியெல்லாம் கதைகளிலே தான் நடக்கும், உண்மை வாழ்க்கையில் நடைபெறாது. தானே சுட்டுக்கொண்டு செத்துப் போனால் தான் போனது! நல்ல வேளையாக இவர் கைத் துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறார்! அதற்காகத் தன் கணவருக்கும் நன்றி செலுத்த வேண்டியது தான். கடிதத்தில் அவ்விதம் நன்றி செலுத்துவதாக எழுதி வைக்கலாமா? ஐயோ! இந்தக் கடிகாரத்துக்கு என்ன இத்தனை அவசரம்? ஏன் இவ்வளவு வேகமாக இது ஓடுகிறது? ஏன் இவ்வளவு துரிதமாக இருதயம் அடித்துக் கொள்கிறது. இதோ மணி பன்னிரண்டுக்கு நெருங்கி வந்துவிட்டதே இன்னும் சில நிமிஷந்தானே பாக்கி இருக்கிறது? பன்னிரண்டு மணி அடித்ததும் தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாகச் சீதா தீர்மானம் செய்திருந்தாள். பன்னிரெண்டரை மணிக்கு அவர் வருவார். வருவதற்குள்ளே காரியம் முடிந்து போய்விட வேண்டும். அவர் வீட்டிலிருக்கும்போது இந்தக் காரியம் தான் செய்தால், வீணாக அவர் பேரில் பழி விழுந்தாலும் விழும். "இருந்தும் கெடுத்தாள்; இறந்தும் கெடுத்தாள்!" என்ற அபகீர்த்தி தனக்கு ஏன் ஏற்பட வேண்டும். குழந்தை வஸந்தி தாயில்லாப் பெண்ணானால், தகப்பனாராவது அவளுக்கு இருக்க வேண்டாமா? அந்த இரண்டு நிமிஷமும் ஆகிவிட்டது கடிகாரம் டிங், டிங், டிங் என்று பன்னிரண்டு மணி அடித்தது. மணியை மனதில் எண்ணிக்கொண்டே வந்த சீதா, பன்னிரண்டு மணி அடித்து முடிந்ததும் கைத் துப்பாக்கியைக் கையில் எடுக்க எண்ணினாள். அந்தச் சமயத்தில் அறையில் அருகில் யாரோ வரும் காலடிச் சத்தம் கேட்டது. சீதாவின் இதயத்தின் துடிப்புச் சட்டென்று நின்றது; அவளுடைய கை செயலற்றுப் போயிற்று. வருகிறவர் யார்? அவர்தானா? சீக்கிரம் வந்துவிட்டாரா? மனத்துக்கு மனது விஷயம் தெரிந்து போய்த் தன்னைக் காப்பாற்றுவதற்காக வருகிறாரா? கைத் துப்பாக்கியைப் பார்த்ததும் தான் செய்ய எண்ணிய காரியத்தை ஊகித்து அறிந்து கொள்வாரா? தன்னுடைய மனவேதனையைத் தெரிந்து கொள்வாரா? தன்னிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்வாரா?