அலை ஓசை/எரிமலை/ஊதுவத்தி வியாபாரி

விக்கிமூலம் இலிருந்து


ஊதுவத்தி வியாபாரி

தேவபட்டணத்துத் தேரோடும் வீதியில் ஒரு குதிரை வண்டி கடகடவென்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. வண்டிக் குள்ளே ஒரு இளம் பிரயாணி உட்கார்ந்திருந்தான். அவன் தலையிலே பல வர்ணக் கோடுகள் போட்ட உருமாலையைத் தலைப் பாகையாகக் கட்டிக் குஞ்சம் தொங்கவிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தால், மத்திய இந்தியாவிலிருந்து வரும் வியாபாரியைப் போல் காணப்பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்த தகரப் பெட்டியும் துணி மூட்டையும் மேற்கூறிய ஊகத்தை உறுதிப்படுத்தின. அட்வகேட் ஆத்மநாதய்யரின் வீட்டு வாசலில் வந்து வண்டி நின்றது. இளைஞன் வண்டிக்குள்ளிருந்தபடியே வண்டிக்காரனுக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டு ஒரு கையில் பெட்டியையும் ஒரு கையில் துணி மூட்டையையும் எடுத்துக்கொண்டு வண்டியி லிருந்து இறங்கினான். "நிற்கட்டுமா, சேட்; ஜல்தி வருவீர்களா?" என்று வண்டிக்காரன் கேட்டதற்கு, "நை! தும் ஜாவ்!" என்றான் அந்த வாலிபன். ஜட்கா வண்டி புறப்பட்டுச் சென்றது. "ஆத்மநாதய்யர் வீட்டு வாசலில் இரும்புக் கம்பிக் கதவண்டை அந்த வாலிபன் நின்று உள்ளே எட்டிப் பார்த்தான். ஒரு இளம் பெண்மணியின் முகம் தெரிந்தது. "ஊதுவத்தி வேண்டுமா, அம்மா! அத்தர் புனுகு ஜவ்வாது வேண்டுமா? பெனாரிஸ் ஸில்க் வேண்டுமா?" என்று அவ்வாலிபன் கேட்டதற்கு, உள்ளேயிருந்து, "ஒன்றும் வேண்டாம், போ" என்று ஒரு பெண் குரலில் பதில் வந்தது. "என்னம்மா, இப்படி ஒரேயடியாய் ஒன்றும் வேண்டாம் என்று சொல்றே? இந்த வீட்டில்தானே நாளைக்குக் குழந்தைக்குச் சஷ்டிஅப்த பூர்த்திக் கலியாணம் என்று சொன்னாங்க?" என்று சொல்லிக் கொண்டே அந்த மார்வாரி இளைஞன், பூட்டப்படாமல் வெறுமே சாத்தியிருந்த இரும்புக் கம்பிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். வீட்டுத் தாழ்வாரத்துக்கும் வெளி கேட்டுக்கும் மத்தியில் இருந்த சுமார் பத்து அடி அகலமுள்ள இடத்தில் ஒரு பன்னீர் மரம், ஒரு மனோரஞ்சிதச் செடி, சில அழகிய பல வர்ணக் குரோடன்ஸ் செடிகள் ஆகியவை இருந்தன. வீட்டின் வாசல் திண்ணைக்கு அருகில் ஒரு இளம் பெண்ணும் ஒரு வயதான ஸ்திரீயும் நின்றார்கள். "பார்த்தாயோ இல்லையோ, இவன் சொல்லுகிறதை! குழந்தைக்கு ஒரு வயது ஆகப்போகிறது; சஷ்டிஅப்தபூர்த்திக் கல்யாணமாம்!" என்று சொல்லிவிட்டு கடகடவென்று சிரித்தாள் அந்த இளம் பெண். "திடுதிடுவென்று உள்ளே நுழைந்து வருகிறானே? கேள்வி முறையில்லையா? கதவைப் பூட்டி வைக்கவேண்டும்!" என்றாள் வயதான ஸ்திரீ. உள்ளே நுழைந்த இளைஞன் அவர் களுடைய பேச்சைக் கவனியாதவன் போல், "அரே பாப்ரே! இங்கே இருக்கிற புஷ்பங் களில் வாசனை நம்முடைய ஊதுவத்தி, அத்தர், சவ்வாது வாசனையைத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறதே!" என்றான். பிறகு பெட்டியையும் மூட்டையையும் கொண்டு போய்த் திண்ணையில் வைத்து, "ஏன்! அம்மா! நிஜமாக ஊதுவத்தி, அத்தர், புனுகு, சவ்வாது ஒன்றும் வேண்டாமா?" என்று சொல்லிக்கொண்டே பெட்டியைத் திறந்ததும், உள்ளேயிருந்து ஊதுவத்தியின் மணம் கம் மென்று வீசிற்று. "ஏன், லலிதா! நல்ல ஊதுவத்தியாயிருக்கிறதே! கொஞ்சம் வேணுமானால் வாங்கிவைக்கலாமே?" என்று லலிதாவின் தாயார் சரஸ்வதிஅம்மாள் சொன்னாள். "ஒன்றும் வேண்டாம்! நீ கொண்டு போ, அப்பா!" என்றாள் லலிதா. "அப்படி முகத்திலடித்தது போல் சொல்லாதே, சின்னம்மா! பெரியம்மா சொல்கிறதைக் கேள்!" என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டு, சரஸ்வதிஅம்மாளைப் பார்த்து, "ஊரிலேயிருந்து கிட்டாவய்யர் வந்திருக்கிறார்களா? அவர்களுடைய மூத்தபிள்ளை கங்காதரஐயர் வந்திருக்கிறார்களா?" என்றான். "ஏது, ஏது! உனக்கு எல்லாரையும் தெரியும் போலிருக்கிறதே! நீ யாரப்பா?" என்று கேட்டாள் சரஸ்வதி அம்மாள். "காலம் அப்படி ஆகிவிட்டது! என்ன செய்யலாம்? பெற்ற தாய்க்குப் பிள்ளையை அடையாளம் தெரியாமல் போய்விட்டது!" என்று ஊதுவத்தி வியாபாரி சொல்லிவிட்டுத் தலையில் சுற்றியிருந்த வர்ணக் கோட்டு முண்டாசைக் கையில் எடுத்தான். "அம்மா! நம்ம சூரியாண்ணா?" என்று கூவினாள் லலிதா. "அட என் கண்ணே!" என்று சொல்லிக்கொண்டு சரஸ்வதி அம்மாள் தன்னுடைய குமாரனைக் கட்டிக்கொண்டாள். "ஏன் சூரியா! இது என்ன வேஷம்! சகிக்கவில்லையே?" என்றாள் லலிதா. "சும்மா உங்களை யெல்லாம் ஒரு தமாஷ் செய்யலாம் என்று நினைத்தேன்!" என்றான் சூரியா. உடனே சரஸ்வதி அம்மாள், "தமாஷாவது, மண்ணாங் கட்டியாவது? அழகாயிருக்கிறது! லலிதாவின் மாமனார் இப்போது கோர்ட்டிலேயிருந்து வந்துவிடுவார். உன்னை இந்தக் கோலத்திலே பார்த்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார். உன் அப்பா, அண்ணா எல்லாரும் இராத்திரி ரயிலிலே வருகிறார்கள். இந்த வேஷத்தை கலைத்துவிட்டு மறு காரியம் பார்!" என்றாள் சரஸ்வதி அம்மாள். "ஆகட்டும்! ஆனால் வேஷத்தைக் கலைப்பதற்கு என்னை அரை மணி நேரம் தனியா இருக்க விடவேண்டும். லலிதா! மேலே உன் அகத்துக்காரர் அறை காலியா கத்தானே இருக்கிறது?" என்று சூரியா கேட்டான். லலிதா பதில் சொல்வதற்குள் சரஸ்வதி அம்மாள், "காலியாகத்தான் இருக்கிறது, ஆனால் இந்தப் பெண் அந்த அறையில் யாரும் போவதற்கு விடுவதில்லை. மாப்பிள்ளையின் படத்தை அங்கே மாட்டியிருக்கிறாள். அந்தப் படத்துக்குத் தினம் பூத்தொடுத்து மாலை போடுகிறது இவளுக்கு ஒரு வேலை! சத்தியவானுக்காகச் சாவித்திரி கூட இப்படித் தபசு இருந்திருக்க மாட்டாள்! ஏண்டாப்பா சூரியா? உனக்குச் சமாசாரம் தெரியுமோ, இல்லையோ?" என்றாள். "மாப்பிள்ளை ஜெயிலுக்கு போயிருக்கிறதைத்தானே சொல்கிறாய்? அது எனக்குத் தெரியாமல் இருக்குமா, அம்மா! ஆனால் பத்திரிகையிலே படித்ததும் ஒரே ஆச்சரியமாகத்தான் இருந்தது, நம்ம பட்டாபி இப்படித் துணிந்து இறங்குவான் என்று நான் நினைக்கவே யில்லை" என்றான் சூரியா. "ஆனால் ஒன்று,சூரியா! இவர் மற்றவர்களையெல்லாம் போலக் கோர்ட்டைக் கொளுத்தினார், தண்டவாளத்தைப் பெயர்த்தார், பாலத்தை உடைத்தார் என்றெல்லாம் பெயர் வாங்கிக்கொண்டு ஜெயிலுக்குப் போகவில்லை. போன அக்டோ பர் இரண்டாம் தேதி காந்தி மகான் ஜயந்தியில் காந்திஜியைச் சிறையில் வைத்திருப்பதைக் கண்டித்துப் பொதுக் கூட்டத்தில் பேசினார். அதற்காக இவரைப் பிடித்துப் போட்டுவிட் டார்கள்!" என்றாள் லலிதா. "இந்தக் கஷ்டமெல்லாம் என்னத்திற்காக, எப்போது முடியப் போகிறது என்று தெரியவில்லை. எல்லாம் என்னுடைய துரதிருஷ்டந்தான்! நீயானால் இப்படி அம்மா அப்பாவுக்குப் பிள்ளை யாக இராமல் போய்விட்டாய்! ஊர் ஊராய் அலைந்து கொண்டிருக்கிறார். லலிதாவை எவ்வளவோ நல்ல இடம் என்று பார்த்துக் கொடுத்தேன். அவளுடைய தலையெழுத்து இப்படி இருக்கிறது!" என்று சரஸ்வதி அம்மாள் வருத்தப்பட்டுக் கொண்டு சொன்னாள். "நம்ம ராமாயணத்தை அப்புறம் வைத்துக்கொள்ளலாமே, அம்மா! முதலிலே சூரியா அவன் காரியத்தைப் பார்க்கட்டும், எல்லாரும் வருவதற்குள்ளே!" என்றாள் லலிதா. "உன் அகத்துக்காரரின் அறையை இரண்டுநாள் நான் வைத்துக் கொள்ளலாம் அல்லவா லலிதா?" "பேஷாக வைத்துக் கொள்ளலாம்; நீயும் அவரும் எவ்வளவு சிநேகம் என்று எனக்குத் தெரியாதா? அடிக்கடி உன்னைப்பற்றி அவர் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய அறையிலே உனக்கு இல்லாத பாத்தியதை வேறுயாருக்கு?" என்றாள் லலிதா. ரேழி அறையிலிருந்த மச்சுப்படி வழியாகச் சூரியா பெட்டி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மேலே போய்ப் பட்டாபி ராமனுடைய அறையில் ஆக்கிரமித்துக் கொண்டான். அந்த அறை வெகு சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேஜை, அதன் மேலிருந்த மைக்கூடு, பேனா, புத்தக அலமாரி, கோட் ஸ்டாண்டு எல்லாம் ஒரு தூசி துப்பு இல்லாமலிருந்தன. சுவர் மூலைகளில் ஒரு ஒட்டடை கிடையாது. ஒரு பக்கச் சுவரில், சரஸ்வதி அம்மாள் சொன்னது போல் பட்டாபிராமன் படம் காணப்பட்டது. இன்னொரு பக்கச் சுவரில் மகாத்மா காந்தி படம் இருந்தது. இரண்டு படங்களும் அப்போதுதான் தொடுத்துப் போட்ட பூ மாலைகளுடன் விளங்கின. மல்லிகைப் பூவின் மணம் அறையில் கம்மென்று நிறைந்திருந்தது. பின்னோடு தன்னை அறையிலே கொண்டுவிட வந்த லலிதாவைப் பார்த்து, "என்ன லலிதா! மகாத்மா காந்தியையும் உன் அகத்துக்காரரையும் ஒன்றாக வைத்து விட்டாய் போலிருக்கிறதே! இனிமேல் உன் புருஷனையும் 'மகாத்மா பட்டாபிராமன்' என்று அழைக்க வேண்டியது தான் போலிருக்கிறது!" என்றான் சூர்யா. "மகாத்மா காந்தி உலகத்திலேயே பெரியவர்; ஆகையால் அவரைப் பூஜிக்கிறேன். உன்னுடைய சிநேகிதர் எனக்குத் தெய்வம்; ஆகையால் அவரையும் பூஜை செய்கிறேன்!" என்றாள் லலிதா. "உன்னுடைய பக்தியை ரொம்பப் பாராட்டுகிறேன், லலிதா! உன்னுடைய மாமியார் கூடக் காலமாகி விட்டாளாமே?" "அவர் கண்ணை மூடி இப்போது இரண்டு வருஷம் ஆகிறது. போன வருஷத்தில் உயிரோடிருந்து பிள்ளை ஜெயிலுக்குப் போனதைப் பார்த்திருந்தால் நெஞ்சு உடைந்து போயிருப்பார். என்னுடைய நெஞ்சு கல் நெஞ்சு, அதனால் உயிரோடிருக்கிறேன். அண்ணா! என் மாமியாரைப்பற்றி நான் புகார் கூறியதையெல்லாம் நினைத்தால் எனக்கு இப்போது வெட்கமாயிருக்கிறது. அவரைப் போல் உத்தமி இந்த உலகத்திலேயே கிடைக்க மாட்டார். என் பேரில் அவருக்கிருந்த பிரியம் அப்புறந்தான் எனக்குத் தெரிய வந்தது. என்னைக் குற்றம் கூறியதெல்லாம் என்னுடைய நன்மைக்காகவே என்று தெரிந்து கொண்டேன். கேள், சூரியா! என் மாமியார் சாகும் போது என் கையை அவருடைய கையால் பிடித்துக் கொண்டே செத்துப் போனார். அவருடைய பிள்ளையைப் பற்றிக் கூட அவ்வளவு கவலை காட்டவில்லை." "உலகமே அப்படித்தான் இருக்கிறது, லலிதா! நாம் ரொம்ப நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர் பொல்லா தவர்களாகி விடுகிறார்கள். பொல்லாதவர்கள் நல்லவர்களாகி விடுகிறார்கள். உலகத்தின் இயல்பே மாறுதல்தானே? சீதாவின் புருஷன் சௌந்தர ராகவன் இப்படிப்பட்ட மூர்க்கனாவான் என்று யார் எதிர்பார்த்தார்கள்? உன்னுடைய அதிர்ஷ்டக்கட்டையைப் பற்றி அம்மா சொன்னாளே? பட்டாபிக்குக் கொடுக்காமல் சௌந்தர ராகவனுக்கு உன்னைக் கலியாணம் செய்து கொடுத்திருந்தால் அப்போது தெரிந்திருக்கும். ஐயோ! சீதா படுகிற கஷ்டத்தை நினைத்தால் எனக்கு இதயம் வெடித்து விடும் போலிருக்கிறது. "ஆம் அண்ணா! அதைப்பற்றி நீ எனக்கு விவரமாகச் சொல்ல வேண்டும். டில்லிக்குப் போன புதிதில் எவ்வளவோ உற்சாகமாகக் கடிதம் எழுதியிருந்தாள். வர வரக் கடிதம் வருவதே குறைந்து போய்விட்டது. கடைசியாக அவள் எழுதிய கடிதங்கள் ஒரே துக்கமயமாயிருக்கின்றன. குழந்தையைக் கூட மாமியாருடன் மதராஸுக்கு அனுப்பி விட்டாளாமே? எதற்காக?" "விவரமாகப் பிற்பாடு சொல்லுகிறேன். மொத்தத்தில் சீதாவின் வாழ்க்கை நரக வாழ்க்கையாகிவிட்டது. உன்னுடைய நிலைமை எவ்வளவோ தேவலை உன் மாமனார் எப்படி இருக்கிறார்?" "என் மாமனார் என் பேரில் காற்றும் படக்கூடாது என்கிறார். வீட்டுக்கு நான்தான் எஜமானி, இரும்புப் பெட்டிச் சாவி என்னிடந்தான் இருக்கிறது. குழந்தைக்கு நாளைக்கு ஆண்டு நிறைவுக் கலியாணம் வேண்டாம் என்று சொன்னேன். 'இவர் ஜெயிலில் இருக்கும்போது கலியாணம் எதற்கு?' என்றேன். என் மாமனார், 'அதெல்லாம் கூடாது; வீட்டுக்கு முதல் பிள்ளைக் குழந்தை; கட்டாயம் அப்த பூர்த்திக் கலியாணம் செய்ய வேண்டும்' என்று சொல்லிவிட்டார். அதற்குத் தகுந்தாற்போல் இவரும் சிறைச்சாலையிலிருந்து எழுதியிருந்தார்." "எதிர் வீட்டுக்கும் உங்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் எப்படியிருக்கிறது; போக்கு வரவு நின்றது நின்றதுதானா?" "இது வரையில் அப்படித்தான்! ஆனால் இரண்டு நாளைக்கு முன்பு இவருடைய சிநேகிதர் அமரநாதனும் அவர் மனைவி சித்ராவும் கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறார்கள். நாளைக் காலையில் மாமனாரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவர்களைப் போய் அழைத்துவிட்டு வரலாமென்றிருக்கிறேன். எதிர் வீட்டுக்காரர்கள் வராமல் என்ன கலியாணம் வண்டிக்கிடக்கிறது?" "அப்படியே செய், லலிதா! கட்டாயம் போய் அவர்களை அழைத்துவிட்டு வா! நான் இன்று ராத்திரியே எதிர் வீட்டுக்குப் போய் வரலாம் என்றிருக்கின்றேன். நானும் உன் புருஷனும் அமரநாதனும் எதிர்வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து எத்தனை நாள் குஷியாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம் தெரியுமா? அப்படிச் சிநேகமாயிருந்தவர்கள் திடீரென்று விரோதம் செய்து கொள்ள எப்படித்தான் முடிந்ததோ, தெரியவில்லை!" "இவருக்கு அந்த விஷயம் ஒன்றும் பிடிக்கவேயில்லை. சூரியா! எல்லாம் கிழவர்கள் செய்த வேலை. தகப்பனாரிடம் உள்ள பக்தியினாலே தான் இவர் சும்மா இருந்தார்!" இந்தச் சமயத்தில் சுண்டுப் பயல் இப்போது நன்றாய் வளர்ந்து வாலிபப்பருவத்தை அடைந் திருந்தவன் தடதடவென்று மாடிப்படி ஏறி வந்தான். "சூரியா வந்திருக்கிறானாமே எங்கே?" என்று கேட்டுக் கொண்டே இறைக்க இறைக்க ஓடி வந்தவன், சூரியாவைப்பார்த் துத்திகைத்து நின்று, "ஐயையோ! இவனா சூரியா? முகத்திலே மீசை வைத்துக் கொண்டிருக்கிறானே?" என்றான். "சுண்டு! என் மீசை உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படியானால் அதை எடுத்தெறிந்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்!" என்று சொல்லிவிட்டுச் சூரியா முகஷவரம் செய்து கொள்ள ஆரம்பித்தான். வடநாட்டு உடையை களைந்தெறிந்து விட்டு, வேஷ்டி ஜிப்பா அணிந்ததும் பழைய சூரியாவாகக் காட்சி அளித்தான்.