அலை ஓசை/எரிமலை/குற்றச்சாட்டு

விக்கிமூலம் இலிருந்து

இருபத்தொன்றாம் அத்தியாயம் குற்றச்சாட்டு

ஆக்ரா ரயில்வே ஸ்டேஷன் அமளி துமளி பட்டுக்கொண்டிருந்தது. வருகிற ரயில்களும் போகிற ரயில்களும் ஏகச் சத்தமிட்டன. பிரயாணிகளின் கூட்டம் சொல்லி முடியாது. ரயில்களிலும் சரி, ரயில்வே பிளாட்பாரத்திலும் சரி, காலி இடம் என்பதே கிடையாது. பிரயாணிகளில் பாதிப் பேர் ஆங்கில சோல்ஜர்களும் இந்தியச் சிப்பாய்களுமாவர். அப்போது உலக மகாயுத்தம் மிக நெருக்கடியை அடைந்திருந்த சமயம் அல்லவா? மாஜி சேனாதிபதி வேவல் இந்தியாவின் வைஸ்ராய் பதவியை வகித்து வந்தார். அது வரையில் அவர் சென்றிருந்த போர்க்களங்களிலெல்லாம் பிரிட்டிஷ் படைகள் பின்வாங்க வேண்டி நேர்ந்தது. அந்த அபகீர்த்தியைப் போக்கிக்கொள்ள விரும்பிய வேவல் துரை என்ன வந்தாலும் இந்தியாவிலிருந்து பின்வாங்கு வதில்லையென்று தீர்மானித்துப் பிரமாத ராணுவ முஸ்தீப்புகளைச் செய்து வந்தார். ஆகவே இந்தியாவின் ரயில்கள் எல்லாம் அந்த 1943-ம் வருஷம் பிற்பகுதியில் சிப்பாய்கள் மயமாயிருந்தன. ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் பெரிய பெரிய பீரங்கி குண்டுகளும் அவற்றின் கூடுகளும் கும்பலாக அடுக்கப்பட்டுக் கிடந்தன! பல ரயில் பாதைகள் சந்திக்கும் பெரிய ஜங்ஷன் ஆக்ரா; ஆதலால் அங்கே இடைவிடாமல் ரயில்கள் வந்தவண்ணமும் போனவண்ணமுமாக இருந்தன. இரண்டாவது வகுப்புப் பிரயாணிகளுக்குரிய வெயிட்டிங் ரூமில் ஒரு மூலையில் சீதா உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு சிறிய டிரங்குப் பெட்டி இருந்தது. அதன் மேல் கையை ஊன்றிச் சாய்ந்துகொண்டிருந்தாள். அவளுடைய மனம் எங்கெல்லாமோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஐந்து வருஷத்துக்கு முன்னால் அதே ஆக்ராவுக்குச் சீதா தன் கணவருடனும் சூரியாவுடனும் வந்திருந்தாள். கோட்டையிலிருந்த அரண்மனைகளையும் தாஜ்மகாலையும் பார்த்துப் பரவசமடைந்தாள் பற்பல இன்பக் கனவுகள் கண்டாள்.

அந்தக் கனவுகளையெல்லாம் விட அதிசயமான நிகழ்ச்சி நேற்று நடந்தது. சில மணி நேரம் அவள் தன்னை அரண்மனையில் வாழ்வதற்குரிய அரசகுமாரி என்று எண்ணிப் பெருமித ஆனந்தம் அடைந்திருந்தாள். ஆனால் அந்தப் பெருமித ஆனந்தம் ஒரு நொடியில், ஒரு வார்த்தையில், தகர்ந்து போய்விட்டது. அவள் வெறும் சீதாதான் என்றும் சாதாரண மனுஷி தான் என்றும் ஏற்பட்டது. அவளை அவ்விதம் மதிமயங்கச் செய்வதற்குக் காரணமாயிருந்தவர்கள் ஆக்ரா ஸ்டேஷனில் அவளைக் கொண்டு வந்து விட்டுவிட்டு, டில்லிக்கு ஒரு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டு, மாயமாய் மறைந்து விட்டார்கள். ஆம், வெறும் டிக்கட் மட்டும் கொடுத்துவிட்டுப் போகவில்லை. அந்தச் சிறு டிரங்குப் பெட்டியையும் கொடுத்துவிட்டுப் போனார்கள். அவளுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்குப் பரிகாரமாக அதில் ஏதோ பரிசுப் பொருள் இருக்கிறதாம். ராணி அம்மாளின் பரிசு இங்கே யாருக்கு வேணும்? வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். பெட்டியைத் திறந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று கூடச் சீதா பார்க்கவில்லை. சீதாவின் உள்ளம் அவளுடைய வருங்கால வாழ்வில் ஈடுபட்டிருந்தது. அவளிடம் டில்லிக்கு டிக்கட் இருப்பது உண்மை தான். டில்லிக்குப் போகும் வண்டியும் சீக்கிரத்தில் வந்துவிடும். ஆனால் டில்லிக்குப் போய் என்ன செய்வது? அவருடைய முகத்தில் எப்படி விழிப்பது? "இரண்டு நாளாய் எங்கே போயிருந்தாய்?" என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏற்கெனவே காரணமில்லாமல் தன் மீது எரிந்து விழுந்து கொண்டிருந்தவர், இப்போது தன்னை அடியோடு நிராகரித்து விடலாம் அல்லவா? சூரியாவோடு சேர்ந்து ஏதோ சதி செய்ததாக எண்ணிக் கொண்டிருக்கலாம் அல்லவா?

அப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தன்னை எப்படி அவர் திரும்ப ஏற்றுக் கொள்வார்! நடந்த சம்பவங்களை எல்லாம் சொன்னால் உண்மையென்று நம்புவாரா; கட்டுக்கதை என்று சொல்லமாட்டாரா? எல்லாவற்றையும் அனுபவித்த தனக்கே நடந்ததை நம்புவது கஷ்டமாயிருக்கிறதே! அவர் எப்படி நம்புவார்? அவரை விட்டுப் போய்விடுவது என்று முன்னால் உத்தே சித்திருந்தபடி செய்துவிட்டால் என்ன? அப்படியானால் எங்கே போவது? சென்னைப் பட்டணத்தில் வஸந்தி இருக்கிறாள். ஆனால் அங்கே போய் மாமனார் மாமியார் முகத்தில் எப்படி விழிக்கிறது? திடீரென்று தனியாக வந்ததற்கு என்னகாரணம் சொல்லுகிறது? அதைக்காட்டிலும் சூரியா சொன்னபடி கல்கத்தாவுக்குப் போவது நல்லது... கல்கத்தாவில் லலிதாவின் சிநேகிதி இருக்கிறாள் அல்லவா? அவள் வீட்டுக்குப் போய் அங்கிருந்தபடி யோசித்து முதலில் சென்னைக்குக் கடிதம் எழுத வேண்டும். அங்குள்ள நிலைமையைத் தெரிந்து கொண்டு போவதுதான் உசிதமாயிருக்கும். ஆனால் பிற்பாடு தான் மதராஸுக்கு எதற்காகப் போக வேண்டும்? கல்கத்தாவில் சுதந்திரமாய் வாழ்வதற்கு ஒரு வேலை தேடிக் கொள்வதுதான் சரி. எத்தனையோ ஸ்திரீகள் இந்தக் காலத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்கிறார்கள். அதுபோல் தானும் ஜீவனத்துக்கு ஒரு வேலை தேடிக் கொண்ட பிறகு வஸந்திக்குக் கடிதம் எழுதி வரவழைத்துக் கொண்டால் என்ன!....

அவ்விதம் சீதாவின் உள்ளம் டில்லிக்கும், சென்னைக்கும், கல்கத்தாவுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கை யில், அந்த வெயிட்டிங் ரூம் வாசலில் நின்று கொண்டிருந்த ஒரு முகம் சட்டென்று அவள் கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்தது. அப்படிப் பார்த்தவர் ஒரு முகமதியர், சுமார் ஐம்பது வயதுள்ள மனிதர். அவரை எப்போதோ பார்த்திருந்த ஞாபகம் சீதாவுக்கு வந்தது. அதனால் ஒருவிதப் பயம் உண்டாயிற்று. தன்னை அவர் உற்றுப் பார்க்கிறார் என்று தெரிந்ததும் பீதி அதிகமாயிற்று. முன்னால் இவரை எங்கே பார்த்திருக்கிறோம் என்ற யோசனை முற்றியது. தலைவலி எடுக்கும் வரை யோசித்த பிறகு சட்டென்று ஞாபகம் வரவும் செய்தது. கையில் ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ரஸியாபேகம் என்னும் ஸ்திரீ ஒரு நாள் இரவு ஒருவருக்கும் தெரியாமல் வீட்டில் புகுந்து ஸ்நான அறையில் தண்ணீர்க் குழாயைத் திறந்து விட்டிருந்தாள் அல்லவா? அந்தப் பயங்கரமான இரவில், தான் படுத்துத் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தபோது, பலகணிக்கு வெளியே யிருந்து ஒரு முகம் தன்னையும் தாரிணியையும் உற்றுப் பார்த்ததல்லவா? அந்த மாதிரியல்லவா இருக்கிறது இந்த சாயபுவின் முகம்? ஒருவேளை அவனேதானா? அப்படியானால் எதற்காக இங்கே வந்திருக்கிறான்? தன்னை எதற்காக வெறித்துப் பார்க்கிறான்? ஆக்ரா மிகவும் பொல்லாத ஊர் என்று சீதா அடிக்கடி கேள்விப்பட்டிருந்தாள்.

பாதுகாப்பில்லாமல் அஜாக்கிரதையாயுள்ள ஸ்திரீகளைப் பிடித்துக் கொண்டுபோய் விற்றுவிடக் கூடிய பாதகர்கள் அந்த ஊரில் உண்டு என்றும் கேள்விப்பட்டிருந்தாள். இதற்கு முன்னால் தனக்கு நேர்ந்த கஷ்டமெல்லாம் போதாது என்று இன்னமும் கஷ்டம் ஏதேனும் காத்திருக்கிறதோ? ஆனால் இது இரயில்வே ஸ்டேஷன் இரவும் பகலும் ஆயிரக்கணக்கான ஜனங்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொது ஸ்தலம். இங்கே தன்னை யார் என்ன செய்ய முடியும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? ஸ்திரீகள் தனியாகப் பிரயாணம் செய்வதற்குப் பயந்திருந்த காலம் போய்விட்டது. இப்போது எத்தனையோ பெண்கள் தன்னந்தனியாகப் பிரயாணம் செய்கிறார்கள். மதராஸிலிருந்து டில்லிக்கும் பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கும் தனக்குத் தெரிந்த குடித்தன ஸ்திரீகள் எத்தனையோ பேர் போயிருக்கிறார்கள்? பின்னே எதற்காக பயப்படவேண்டும்? பயப்படக் காரணம் இல்லை தான் ஆனாலும் கல்கத்தாவுக்கோ மதராஸுக்கோ போவதைக் காட்டிலும் கிட்டத்திலுள்ள டில்லிக்குப் போவதே நல்லது. தனக்கு நேர்ந்த அனுபவங்களை இவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சொல்லி விட வேண்டும். சூரியாவின் கதி என்ன ஆயிற்று என்பதையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா?....

ஏதோ ஒரு ரயில் ராட்சத கர்ஜனை செய்துகொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்திற்குள் வந்தது. "டில்லி ரயில் வந்து விட்டது!" என்று சொல்லிக்கொண்டு வெயிட்டிங் ரூமில் இருந்தவர்களில் சிலர் எழுந்து போனார்கள். சீதாவும் அவசரமாக எழுந்து டிரங்குப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள். வாசற்படிக்கருகில் நின்ற சாயபுவைப் பார்க்கக் கூடாது என்ற உறுதியினால் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு சென்றாள். ஆனால் அந்த சாயபுவின் செக்கச் சிவந்த உற்றுப் பார்க்கும் கண்கள் தன் பேரில் பதிந்திருக்கின்றன என்று அவளுடைய உள்ளுணர்ச்சி அறிவித்தது. டில்லி ரயில் இது என்று தெரிந்து கொண்டதும், இரண்டாம் வகுப்பு வண்டிகளில் பெண்கள் வண்டியைத் தேடிப் பிடித்தாள். ஆனால் அந்த வண்டிகளில் பெண்களின் கூட்டம் ஏற்கெனவே அதிகமாயிருந்தது. புதிதாக ஏறப் பார்த்த சீதாவுக்கு அந்த ஸ்திரீகள் இடங்கொடுக்க மறுத்தார்கள். கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு திறக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு சீதா அதிகக் கூட்டமில்லாத வேறொரு இரண்டாம் வகுப்பு வண்டியைத் தேடிப் போனாள். முக்கியமாக, சோல்ஜர்களும் சிப்பாய்களும் இல்லாத வண்டியைத் தேடினாள். அத்தகைய கடகடத்த ஓட்டை உடைசல் வண்டி ஒன்று தென்பட்டது. அதில் அதிக ஜனங்கள் இல்லை என்பதைப் பார்த்து விட்டு ஏறினாள். ஏறி உட்கார்ந்ததும் அதே வண்டியில் ஏற்கனவே அந்த முகம்மதியர் ஏறியிருப்பது தெரிந்து திடுக்கிட்டாள்.

ஐயோ! இது என்ன? போயும் போயும் இதில் ஏறினோமே? யாரைப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தோமோ, அந்த மனிதன் இங்கு உட்கார்ந்திருக்கிறானே? இறங்கி வேறு வண்டி பார்க்கலாமா? இறங்கி ஏறுவதற்கு நேரம் இருக்கிறதோ, என்னமோ, தெரியவில்லையே? இப்படிச் சீதா தத்தளித்துக் கொண்டிருக்கையில் இரண்டு மனிதர்கள் அந்த வண்டியண்டை வந்து நின்றார்கள். ஒருவன் இன்னொருவனுக்குச் சீதாவைச் சுட்டிக் காட்டினான். இரண்டாவது மனிதன் சீதாவை உற்றுப் பார்த்துவிட்டு "அம்மா! உன் பக்கத்தில் இருக்கிற பெட்டி உன்னுடையதா!" என்று கேட்டான். "என்னுடையது தான்; எதற்காகக் கேட்கிறாய்?" என்றாள் சீதா. அவளுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தது; இன்னொரு பக்கம் ஏதோ அபாயம் வரப்போகிறது என்ற உணர்ச்சியினால் மனம் பதைபதைத்தது. "உன்னுடையதா? நிச்சயந்தானா?" "நிச்சயந்தான்!" "அப்படியானால் ரயிலைவிட்டுக் கீழே இறங்கு!" என்றான் அந்த மனிதன். உடனே ஒரு விசிலை எடுத்து ஊதினான்; இரண்டு ரயில்வே போலீஸார்கள் வந்து நின்றார்கள். "உம்; இறங்கு!" என்று அதிகாரத் தொனியில் கட்டளையிட்டான். இச்சமயத்தில் ஒரு ரயில்வே உத்தியோகஸ்தர் அந்தப் பக்கம் வந்தார். சீதா, "ஸார்!" என்று அவரை அழைத்து, "இவர்கள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்; நீங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்றாள். அவர் போலீஸ்காரர்களைப் பார்த்து "என்ன சமாசாரம்!" என்று விசாரித்தார். சாதாரண உடுப்பில் இருந்த போலீஸ்காரன், "இந்த அம்மாள் இவருடைய பெட்டியைத் திருடியிருக்கிறாள், திருடியதோடு தன்னுடையது என்று சாதிக்கிறாள்!" என்றான்.

ரயில்வே உத்தியோகஸ்தர் சீதாவைப் பார்த்து, "இவர்கள் உன் பேரில் குற்றம் சாட்டுகிறார்கள். அம்மா! ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் அதோ பக்கத்தில் தான் இருக்கிறது! நீ அங்கே போய் இன்ஸ்பெக்டரிடம் உண்மையைச் சொல்லு! உனக்குக் கெடுதல் ஒன்றும் வராது! இவர்கள் சாட்டும் குற்றம் பொய் என்றால் இன்ஸ்பெக்டர் உன்னை விட்டு விடுவார். அடுத்த வண்டியில் நானே உன்னை ஏற்றி விடுகிறேன்!" என்றார். போகும் போது அவர், "இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை. பார்வைக்குப் பரம சாதுவாய்த் தோன்றுகிறார்கள். ஆனால் காரியம் நேர் விரோதமாயிருக்கிறது!" என்று சொல்லிக் கொண்டே போனார். வேறு வழியில்லையென்று கண்டு சீதா வண்டியைவிட்டுக் கீழே இறங்கினாள். வெளிப் படையாகத் துணிச்சல் காட்டி, "வாருங்கள்! உங்கள் இன்ஸ்பெக்டரிடமே சொல்கிறேன்; இந்த அநியாயத்துக்குப் பரிகாரம் கேட்கிறேன்!" என்றாள். முன்னும் பின்னும் போலீஸ் புடைசூழச் சென்றபோது சீதாவின் உள்ளம் பதைபதைத்தது. பயத்தினால் அவளுடைய கால்கள் தள்ளாடித் தத்தளித்தன. ஆனாலும் அவள் மனதில் ஒரு சிறு ஆறுதலும் தோன்றியது. நல்லவேளை! அந்தக் கொள்ளிக்கண் சாயபு இருந்த வண்டியிலிருந்து இறங்கித் தப்பித்துக் கொண்டோ மல்லவா? போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் உண்மையைச் சொன்னால் இந்த அதிகப்பிரசங்கிகள் தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியதாகும். அடுத்த வண்டியில் ஏறிக் கொண்டால் போகிறது. சாயபுவிடமிருந்து தப்பினோம் என்ற சந்தோஷமானது சீதாவைத் திரும்பிப் பார்த்து அதை உறுதி செய்து கொள்ளும்படி தூண்டியது; சீதா திரும்பிப் பார்த்தாள். ஆகா! இது என்ன! ஆபத்து இன்னமும் தன்னை விட்டபாடாக இல்லையே? அந்தச் சாயபுவும் ரயிலிலிருந்து இறங்கிச் சற்றுத் தூரத்தில் தொடர்ந்து வருகிறானே? ஐயோ! எதற்காக அவன் வருகிறான்? தன்னை என்ன செய்வதற்காக வருகிறான்?