அலை ஓசை/எரிமலை/சிங்காரப் பூங்காவில்

விக்கிமூலம் இலிருந்து

இருபதாம் அத்தியாயம் சிங்காரப் பூங்காவில்

சீதாவுக்கு உணர்வு வந்தபோது பட்சிகளின் கானம் கலகலவென்று அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது. இடை யிடையே இலைகள் அசைந்தாடும் போது உண்டாகும் சலசலப்புச் சத்தமும் கேட்டது. இவற்றுடன் கண்ணனுடைய இடையில் அணிந்த மணிச் சதங்கைகள் குலுங்குவது போன்ற 'கிண்கிணி'ச் சத்தம் சில சமயம் கலந்து கொண்டிருந்தது. வேறு நினைவே யில்லாமல் அந்த இனிய சப்தங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாள். மூடியிருந்த கண்ணிமைகளைத் திறப்பதற்கு மனம் வரவில்லை. கடிகாரத்தில் மணி அடிக்கும் சத்தம் அவளை அந்த இன்பமயமான நாத உலகத்திலிருந்து பூவுலகத்துக்குக் கொண்டு வந்தது. மணி ஆறு அடித்தது; உடனே அவளுடைய கண் இமைகள் திறந்தன. சுற்றும் முற்றும் மேலும் கீழும் அவள் கண்ட காட்சி அவளைத் திகைப்படையச் செய்தது. தந்தத்தைப் போல வெண்மையும் பளபளப்பும் கொண்ட சலவைக் கல் சுவர்கள் நாலுபுறமும் அவளைச் சூழ்ந்திருந்தன. கீழ்த் தரையும் சலவைக் கல் பதித்தது தான். ஆனால் அதில் பெரும் பகுதியை சித்திர விசித்திரமான இரத்தினக் கம்பளம் மூடியிருந்தது. மேலே இருந்து கண்ணாடிக் குஞ்சலங்களுடன் கூடிய விதவிதமான வேலைப்பாடு அமைந்த 'குளோப்' விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. பளிங்குச் சாளரங்களின் வழியாகச் சில சமயம் உள்ளே புகுந்த இனிய காலை நேரத்துக் காற்று அந்த விளக்குகளை ஆட்டிவிட்ட போது கண்ணாடிக் குஞ்சலங்கள் ஒன்றோடொன்று மோதிக் கிண்கிணிச் சத்தத்தை உண்டாக்கின.

அத்தகைய அறையின் மத்தியில் சப்ரமஞ்சக் கட்டிலில் பட்டு மெத்தை மேல் வெல்வெட் தலையணைகளுக்கிடையில் தான் படுத்திருந்ததைச் சீதா அறிந்தாள். சிறிது நேரம் திகைப்பாயிருந்தது, முதல் நாள் இரவு நடந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவு வந்து, நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மை தான் என்பதை நிரூபித்துக் கொண்டு அவளுடைய முகத்தில் அடிபட்ட இடத்தில் 'விண் விண்' என்று இலேசான வலி உணர்ச்சி இருந்து கொண்டிருந்தது. ஆகையால் அந்தச் சம்பவங்கள் எல்லாம் உண்மையே தான்! தன்னைச் சில வடக்கத்தி மனிதர்கள் பலவந்தமாகக் காரில் ஏற்றிக்கொண்டு வந்ததும், சூரியா இன்னொரு காரில் தன்னைத் தொடர்ந்து வந்ததும், சூரியாவின் வண்டி யமுனைப் பாலத்தின் முனையில் தடுத்து நிறுத்தப் பட்டதும் உண்மை தான். வழியில் ஒரு ஊரில் தான் பசிக்கிறது என்று சொன்னதும், தனக்காகப் பூரி, மிட்டாய், பால் வாங்கிக் கொண்டு வந்ததும் உண்மை தான். பாலைச் சாப்பிட்ட பிறகு அதில் மயக்க மருந்து கலந்திருக்குமோ என்ற சந்தேகம் உண்டானதும் வேறு வண்டிக்கு மாற்றப்பட்டதும் அதில் ஒரு ஸ்திரீ தனக்குத் துணையாக ஏறியதுங்கூட உண்மையாகத் தான் இருக்க வேண்டும். அந்தப் பிரயாணம் இந்த அரண்மனையில் வந்து முடிவடைந்திருக்கிறது. ஆம்; இது யாரோ ஒரு மகாராஜா வின் அரண்மனை என்பதில் சந்தேகம் இல்லை. பலகணியின் வழியாகப் பார்த்தபோது வெளியிலே அழகான பூங்காவனம் தோன்றியது. செடிகளும், கொடிகளும், மரங்களும் பூத்துக் குலுங்கிய அந்தப் பூம்பொழிலில் ஆங்காங்கு பளிங்குக் கல் தடாகங்களும் தடாகங்களின் மத்தியில் முத்துத் துளிகளை வீசி விசிறிய நீர்ப் பொழிவுகளும் தோன்றின. பூங்காவனத்துக்கு அப்பால் அடுக்கடுக்கான மாட கூடங்களுடனும் கலசங்கள் ஸ்தூபிகளுடனும் மாளிகைகள் தென்பட்டன. ஆம்; அது மாமன்னர் வாழும் அரண்மனைத் தான். ஆனால் எந்த மன்னருடைய அரண்மனை? எதற்காகத் தன்னை இந்த அரண்மனைக்குப் பலாத்காரமாகப் பிடித்து வந்திருக்கிறார்கள்!

சுதேச சமஸ்தானங்களின் மகாராஜாக்கள் அந்தக் காலத்திலே கூடச் செய்யும் அக்கிரமமான காரியங்களைப் பற்றிச் சீதா எத்தனையோ கேள்விப்பட்டுத்தானிருந்தாள். பம்பாய் நகரில் மலபார் குன்றில் நடந்த பயங்கரமான கொலையைப் பற்றி அவளுக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரிந்த விஷயம் தான். அப்படி யாரேனும் ஒரு மகாராஜா தன் பேரில் மோகம் கொண்டு தன்னை இங்கே கொண்டுவரச் செய்திருப்பானோ? அவ்விதமானால் எந்த விதத்தில் தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொள்ளுவது என்று சிந்தனை செய்தாள். பற்பல முறைகளைப் பற்றி யோசித்தாள். தப்பித்துக் கொள்ளப் பெரு முயற்சி செய்து பார்க்க வேண்டும்; முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்ள வழி தேட வேண்டும். எந்த முறையைக் கைக்கொள்வதாயிருந்தாலும் ஆரம்பத்தில் நயமாகவும் நல்லதனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்தச் சமயத்தில் சமீபத்தில் காலடிச் சத்தம் கேட்கவே சீதா பீதியடைந்து படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். அந்த அறையின் கதவு இலேசாகத் திறக்கப்பட்டபோது அவளுடைய நெஞ்சத்தின் கதவும் படபடவென்று அடித்துக் கொண்டது. ஆனால் உள்ளே வந்தவள் ஒரு சாதாரண தாதிப் பெண் என்று பார்த்தவுடனே தெரிந்தது. வந்தவள் ஹிந்தி பாஷையில் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசினாள். பக்கத்து அறையில் முகம் கழுவிக் கொள்ளலாம் என்றும் காலைச் சிற்றுண்டி தயாராயிருக்கிற தென்றும் அவள் சொன்னதாகச் சீதா தெரிந்து கொண்டாள். அவளைப் பல கேள்விகள் கேட்கச் சீதா விரும்பினாள்; ஆனால் பேசுவதற்கு நா எழவில்லை; துணிவும் ஏற்படவில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி முகம் கழுவிக் கொள்ளச் சென்றாள்.

காலைச் சிற்றுண்டி அருந்திய பிற்பாடு தூக்க மருந்தினால் ஏற்பட்ட மயக்கம் முழுதும் தெளியவில்லை. மறுபடியும் படுக்கையில் படுத்தாள். அரைத் தூக்கமும் அரை விழிப்புமாய் இருந்த சமயத்தில் இரண்டு மூன்று குரல்கள் பேசிக்கொண்டே வருவது கேட்டது. குரல்களில் ஸ்திரீயின் குரல் ஒன்றும் இருந்தது. அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பித் தூங்குவது போலப்பாசாங்கு செய்து அசையாமலிருந்தாள். வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண் டார்கள். பேசியதெல்லாம் சீதாவுக்கு விளங்கவில்லை, ஆயினும் "மகாராஜா," "மகாராணி" என்னும் சொற்கள் நன்கு விளங்கின. "தூக்க மருந்தின் சக்தி இன்னும் இருக்கிறது!" என்று ஒரு குரல் கூறியது. அந்தக் குரல் முதல் நாள் இரவு தன்னை மோட்டாரில் ஏற்றி அழைத்து வந்தவனின் குரல் என்று சீதா அறிந்து கொண்டாள். "இவள் என் சகோதரிதானா? நிச்சயமா?" சந்தேகமில்லை. ராஜ மாதாவின் கட்டளையை அப்படியே நிறைவேற்றி விட்டேன்!" என்றது இன்னொரு குரல். முதிர்ந்த மாதரசி ஒருத்தியின் குரல், "இந்தப் பெண் இந்த அரண்மனையில் உன்னைப்போலவே வளர்ந்திருக்க வேண்டியவள். விதியானது அவளை இத்தனை காலமும் பிரித்து வைத்திருந்தது" என்று கூறியது. இதைக் கேட்ட சீதாவின் உடம்பு சிலிர்த்தது; உள்ளம் பரவசம் அடைந்தது. ஆயினும் அப்போது கண் விழித்து எழுந்திருக்க அவளுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை இதெல்லாம் கனவோ, என்னமோ? கண்ணை விழித்தால் ஒருவேளை மறைந்து விடுமோ என்னமோ?.. இத்தகைய நெஞ்சக் கலக்கத்தில் மூடிய கண்ணைத் திறவாமல் இருந்தாள் சீதா.

சில நிமிஷத்துக்கெல்லாம் அந்த மூதாட்டியின் குரல் "கொஞ்ச நேரத்துக்குப் பிறகு வரலாம்!" என்று சொல்லியது, இத்துடன், வந்திருந்தவர்கள் திரும்பச் சென்றார்கள். அவர்கள் கொஞ்ச தூரம் போவதற்கு அவகாசம் கொடுத்த பிறகு சீதா விழித்துப் பலகணி வழியாகப் பார்த்தாள். கும்பலாகச் சென்றவர்களில் ராஜ மாதா யார் என்றும் ராஜ குமாரர் யார் என்றும் ஊகித்துத் தெரிந்து கொள்வதில் கஷ்டம் ஒன்றும் ஏற்படவில்லை. தூக்கம் நன்றாகக் கலைந்துவிட்டது; படுத்திருக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தாள் தான் படுத்திருந்த இடம் அரண்மனைப் பூங்காவனத்தின் மத்தியில் இருந்த மாளிகை என்று தெரிந்தது. பூந்தோட்டத்தைச் சுற்றி நாலுபுறத்திலும் இதை விடப் பெரிய பெரிய மாட மாளிகைகள் காணப்பட்டன. மாளிகைகளுக்கு மத்தியில் தோன்றிய இடைவெளி வழியாகப் பார்த்தால் தூரத்தில் நீல நிறத்து ஏரி நீர் படர்ந்திருந்தது. இது எந்த ஊர் அரண்மனை? எந்த ராஜாவின் சிங்கார மாளிகை? யார் வளர்த்த பூந்தோட்டம்? இந்த மகிமையான ராஜரீகச் செல்வங்களில் எல்லாம் தனக்கும் உரிமை உண்டா? விதி வசத்தினால் இத்தனை காலமும் பிரிந்திருக்க நேரிட்டதா? ராஜ குலத்திலே பிறந்த ராஜகுமாரியான நான் விதியின் விளையாட் டினால் ஏழைக் குடும்பத்தில் வளர்ந்து எளிய வாழ்க்கை நடத்தி எல்லையில்லாத கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கும்படி நேரிட்டதா?அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் இப்போது உண்மை யிலேயே முடிவு வந்துவிட்டதா?அந்த மூதாட்டி யார்? தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற அன்னைதானா.பெரிய தாயார் அல்லது சிறிய தாயார் உறவு பூண்டவளா! அந்த அழகிய ராஜகுமாரன் தன்னுடன் பிறந்த சகோதரனா?... ஆகா! இதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? சிறு வயதில் தான் கண்ட கற்பனைக் கனவுகள், கட்டிய ஆகாசக் கோட்டைகள், மனோராஜ் யங்கள் எல்லாவற்றையும் விட இப்போது நடந்திருப்பது அதிசயமா இருக்கிறதே?

அதிசயந்தான்! உலகத்தில் இந்த நாளிலும் எத்தனையோ அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த அதிசயங்களில் ஒன்று தன் வாழ்க்கையிலும் நடந்து விட்டிருக்கிறது. தான் ராஜகுலத்தில் பிறந்த ராஜகுமாரி என்பது உண்மை தான். இல்லாவிட்டால் தன்னை இங்கே கொண்டு வருவதற்கு இவ்வளவு பிரயத்தனம் ஏன் செய்திருக்க வேண்டும்? அந்த மூதாட்டியும் ராஜகுமாரனும் பேசியதிலிருந்து அது நிச்சயம் என்று ஏற்படுகிறது. இந்த விஷயம் எல்லாம் அவருக்குத் தெரியும்போது அவருடைய மனதின் நிலை எப்படியிருக்கும்? ராஜ வம்சத்தில் பிறந்த ராஜகுமாரியைத் தான் மணந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது பற்றிப் பெருமை கொள்வாரா? தன்னை இத்தனை காலமும் இவ்வளவு கொடூரமாக நடத்தியது பற்றி வருத்தப்படுவாரா? இதற்குப் பிறகும் அவரையே கணவர் என்றும் கடவுள் என்றும் கருதித் தான் நடந்துகொள்ளப் போவது குறித்து மகிழ்ச்சியடைவாரா? இனிமேலாவது தன்னை அவமதித்து அலட்சியமாய் நடத்தாமல் அன்புடன் போற்றி அருமையாக வைத்துக் கொள்வாரா? நியாயமாகப் பார்த்தால் தன்னிடம் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும்! தனக்கு இழைத்த அநீதிகளுக்காகவும் கொடுமைகளுக்காகவும் வருந்திப் பச்சாதாபப்பட வேண்டும். இனிமேல் அப்படியெல்லாம் நடந்து கொள்ளுவதில்லையென்று உறுதிமொழியும் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி மன்னிப்புக் கோர வேண்டும் என்று தான் வற்புறுத்தப் போவதில்லை. அந்த மாதிரியெல்லாம் அவரை அவமானப்படுத்தத் தனக்கு ஒரு நாளும் மனம் வராது. அவர் ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் உடனே நிறுத்த அவருடைய வாயைத் தன்னுடைய கையினால் பொத்தி, "வேண்டாம்! வேண்டாம்!" என்று சொல்ல வேண்டும்.

எப்படி இருந்தாலும் அவர் தன்னுடைய கணவர் அல்லவா? ஏழையும் அனாதையுமாயிருந்த தன்னை ஆசைப்பட்டு மணந்த மணவாளர் அல்லவா? செல்வத்திலே பிறந்து செல்வத்திலே வளர்ந்த லலிதாவை வேண்டாம் என்று சொல்லித் தன்னை விரும்பிக் கலியாணம் செய்துகொண்ட பிராணநாதர் அல்லவா? அவர். லலிதாவுக்கு இதெல்லாம் தெரியும்போது என்ன நினைப்பாள்? சந்தோஷப்படுவாளா? அசூயைப்படுவாளா? தன் அருமைத் தோழிக்கு இத்தகைய அதிர்ஷ்டம் கிடைத்தது பற்றிச்ந்தோஷப்படத்தான் செய்வாள். ஆயினும் மனதிற்குள்ளே கொஞ்சம் அசூயையும் இல்லாமற் போகாது. கல்யாணத்துக் கென்று காலணாச் செலவு செய்ய நாதியற்று இரவல் மணப்பந்தலில் மாலையிட்ட அனாதைச் சீதா ஒரு பெரிய சமஸ்தானத் தின் ராஜ குடும்பத்தில் பிறந்த ராஜகுமாரி என்று தெரிந்தால் கொஞ்சமாவது அசூயை உண்டாகாமல் இருக்குமா? மனுஷர்களுக்குச் சாதாரணமாக உள்ள பொறாமை லலிதாவுக்கு மட்டும் எப்படி இல்லாமற் போகும்? அதெல்லாம் இருக்கட்டும், இப்போது இவர்களிடம் தான் எப்படி நடந்து கொள்வது? தன் விஷயத்தில் இவர்களுடைய உத்தேசம் என்னவாக இருக்கும்? எதற்காக இவ்வளவு மர்மமாகவும் பலவந்தமாகவும் தன்னைப் பிடித்துக் கொண்டு வரச் செய்திருக் கிறார்கள்? இவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் பேச வேண்டும். தன்னை இங்கே கொண்டு வருவதற்கு அவர்கள் கையாண்ட முறையைத் தான் விரும்பவில்லையென்று காட்டி விட வேண்டும். மேலே அவர்கள் என்ன சொன்னாலும் சுலபத்தில் இணங்கிவிடக் கூடாது. அவர்களுடைய நோக்கம் இன்னதென்று தெரிந்துகொண்டு அதற்குத் தக்கபடி யோசித்துப் பதில் சொல்ல வேண்டும்.

அடாடா! இந்தமாதிரி சமயத்தில் சூரியாவின் உதவியும் யோசனையும் தனக்குக் கிடைக்குமானால் எவ்வளவு நலமாயிருக்கும்? ஐயோ! பாவம்! சூரியா இப்போது எங்கே எந்த நிலையில் இருக்கிறானோ? ஒருவேளை இன்னமும் என்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறானோ? அல்லது போலீஸார் அவனைப் பிடித்துக் கொண்டு விட்டார்களோ என்னமோ! இந்த அரண்மனையில் தன்னுடைய நிலைமை இன்னதென்று தெரிந்ததும் முதற்காரியமாகச் சூரியாவைப் பற்றி விசாரிக்க வேண்டும். விசாரித்து அவனுக்கு வேண்டிய உதவி செய்ய வேண்டும். பார்க்கப் போனால் அவனைத் தவிர தன்னிடம் உண்மையான அபிமானம் உள்ளவர்கள் வேறு யார்? அவனைப் போல் தனக்காகக் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் அனுபவிக்கத் தயங்காத வர்கள் வேறு யார்? இவ்வாறெல்லாம் சிந்தனை செய்த வண்ணம் சீதா அந்த அழகிய அரண்மனை உத்தியான வனத்தில் உலாவித் திரிந்தாள். ஆங்காங்கு நின்று செடிகளில் பூத்துக் குலுங்கிய புஷ்பக் கொத்துக்களிலிருந்து ஒவ்வொன்றைப் பறித்து முகர்ந்தாள். மரக் கிளையின் மீது அமர்ந்து கீதமிசைத்த பட்சிகளை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். நடந்து அலுத்துக் கால்களும் வலி எடுத்த பிறகு அந்தப் பூங்காவனத்தில் போட்டிருந்த சலவைக் கல் மேடை ஒன்றின் மீது உட்கார்ந்தாள்.

அவளுடைய உள்ளத்தின் கற்பனா சக்தி விசுவரூபம் எடுத்துப் பூமியையும் வானத்தையும் அளாவிக் கொண்டு நின்றது. அவளுடைய சித்தம் மரங்களின் உச்சி மீது உலாவி வானத்துப் பறவைகளுடன் குலாவி மேக மண்டலங்களில் திரிந்து இன்ப ஒளிக் கடலில் நீந்தி விளையாடியது. காலக் கணக்கெல்லாம் குழப்பமடைந்து, ஒரு நிமிஷ நேரம் நூறு வருஷமாக நீடித்தது. ஆயிரம் வருஷம் அரை நிமிஷமாய்ப் பறந்தது. எத்தனை எத்தனையோ மனோராஜ்யங்கள் எழுந்து உடனே சிதைந்து விழுந்தன. மின்னல் நேரத்தில் ஆகாச வெளியில் அற்புதமான கோட்டைகள் தோன்றின. அதே வேகத்தில் அவை மறைந்தன. அன்பும் ஆசையும் இன்பமும் துன்பமும் குரோதமும் குதூகலமும் அலை அலையாகவும் மலை மலையாகவும் கொந்தளித்து மேலெழுந்து நொடிப் பொழுதில் அடங்கின. அவர்கள் மறுபடியும் வந்தார்கள் ராஜமாதா, ராஜகுமாரர், அவர்களுடன் அந்தரங்கப் பணியாள் மூவரும் வந்தார்கள். சீதா அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள் கண் கொட்டாத ஆவலுடன் மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். ராஜமாதாவின் முகத்தில் புன்னகை மலர்ந்திருந்தது. "மகளே! உன்னைச் சிங்கார மாளிகையில் தேடிவிட்டு வருகிறோம். அதற்குள் தோட்டத்தைச் சுற்ற ஆரம்பித்து விட்டாயா? மிகவும் சந்தோஷம். இந்த அரண்மனைத் தோட்டத்திலே உலாவ உனக்குப் பூரண உரிமை உண்டு. இந்த அரண்மனையிலேயே வசிப்பதற்கும் உனக்குப் பாத்தியதை உண்டு. இதையெல்லாம் கேட்க உனக்கு வியப்பாயிருக்கிறதா?" என்று ராஜமாதா கேட்டாள்.

சீதா மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. எத்தனையோ கேள்விகள் கேட்க அவளுடைய உள்ளம் துடித்துக் கொண்டி ருந்தது. ஆனால் பேச முடியாதபடி உணர்ச்சி அவளுடைய தொண்டையை அடைத்தது. மேலும் ராஜமாதாவிடம் ஹிந்தி பாஷையில் பேசுவதற்கு வேண்டிய சக்தி தன்னிடம் இருக்கிறதா என்பது பற்றிச் சந்தேகம் உதித்தது. டில்லியில் வசித்த காலத்தில் வேலைக்காரர் களுடன் பேசிப் பழகியதனால் ஏற்பட்ட ஹிந்தி பாஷை ஞானம் இந்த மகத்தான சந்தர்ப்பத்துக்குப் போதுமானது. "மகளே, ஏன் பேசாமலிருக்கிறாய்? நாங்கள் உனக்கு அன்னியர்கள் அல்ல. நான் உன்னுடைய சிறிய தாயார்; இவன் உன்னுடைய சகோதரன். காலம் செய்த கோலத்தினால் இத்தனை நாளும் நீ வேறு எங்கேயோ வசிக்க நேரிட்டது" என்றாள். சீதாவுக்கு ஒரே பிரமிப்பா யிருந்தது வியப்பும் மகிழ்ச்சியும் போட்டியிட்டுக் கூத்தாடின. தான் எண்ணிய எண்ண மெல்லாம் உண்மைதான்; கனவுமல்ல, கருணையுமல்ல. ஏழைச் சீதா உண்மையில் ராஜ குலத்தில் பிறந்த ராஜகுமாரி! அற்புதம் என்றால் இதுவல்லவா அற்புதம்? அதிர்ஷ்டம் என்றால் இதைப் போன்ற அதிர்ஷ்டம் வேறு என்ன உண்டு.

"மகளே! இன்னும் நீ பேசவில்லை ஒருவேளை உன்னை இங்கே கொண்டு வந்த முறை உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது! அதனால் கோபமாய் இருக்கிறாயாக்கும்! ஆனால் உனக்கு நான் பல தடவை சொல்லி அனுப்பியும் எங்களிடம் வரச் சம்மதிக்கவில்லை. ஆகையினால் தான் உன்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து வருவது அவசியமாயிற்று. நீயே யோசித்துப் பார்! உன் சகோதரனுக்குச் சீக்கிரத்தில் மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. அதற்கு முன்னால் இந்தக் குடும்பத்தில் உனக்குச் செய்யப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்துவிட வேண்டுமென்று இவன் பிடிவாதம் பிடித்தான். அப்படியானால் உன்னைப் பலவந்தமாகக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி என்ன?" என்றாள் ராஜமாதா. இந்தச் சமயத்தில் ராஜகுமாரரும் சம்பாஷணையிலே சேர்ந்து கொண்டார்: "சகோதரி! அம்மா சொல்வது சரிதான் தங்களைப் பலவந்தமாக இங்கே கொண்டு வரச் செய்ததற்குக் காரணம் என் ஆவலே. பிரயாணத்தின் போது ஏதாவது கஷ்டம் ஏற்பட்டி ருந்தால் அதற்காக மன்னிக்க வேண்டும். மேலும் தாங்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பெரு முயற்சி செய்து வருகிறீர்கள் என்று அறிவேன். அதற்குக் குந்தகம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. உண்மையில் எனக்கே இந்தச் சமஸ்தானத்து ராஜாவாக முடிசூட்டிக்கொள்வதில் விருப்பமில்லை. வெள்ளைக்காரர்களைத் துரத்தியடித்துவிட்டு இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது. அதற்கு இந்த யுத்த சமயத்தைக் காட்டிலும் நல்ல சமயம் கிடைப்பது அரிது. ஆனாலும் என் தாயாரின் வற்புறுத்தலுக்காகவே இந்த ராஜ்யப் பொறுப்பை ஒப்புக் கொள்ளப் போகிறேன். தாங்கள் என்னுடன் இருந்து ஒத்தாசை செய்ய வேண்டும் சகோதரியே! ஒத்தாசை செய்வீர்களா?"

சீதாவுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்ட மாதிரி இருந்தது. இது என்ன கூத்து? இவர்கள் என்னென்னமோ சொல்கிறார்களே? ஒருவேளை இவர்கள் பேசுகிற ஹிந்தி பாஷை சரியாகப் புரியாததினால் இப்படியெல்லாம் நமக்குத் தோன்றுகிறதோ? இதற்கு மேல் சும்மா இருக்கக் கூடாதென்று தீர்மானித்து, "நான் ஒரு அபலை ஸ்திரீ; என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்? மேலும் என்னுடைய புருஷரிடம் கேட்க வேண்டாமா? என்னுடைய பதிக்குத் தெரியாமல் என்னை நீங்கள் கொண்டு வந்ததே பிசகு!" என்றாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட ராஜமாதாவும் ராஜகுமாரரும் மலை சரிந்து தலையில் விழுந்தவர் களைப்போல் பிரமித்துப் போய் நின்றார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்; பிறகு சற்று விலகி நின்ற மூன்றாவது ஆளின் முகத்தையும் பார்த்தார்கள். "நன்றாய்ப் படித்திருக்கிறாள் என்று நீர் சொன்னீரே? இந்த மாதிரிக் கொச்சையான ஹிந்தி பேசுகிறாளே?" என்று ராஜமாதா கேட்டாள். "கணவனைப்பற்றிப் பேசுகிறாளே? கல்யாணம் ஆகியிருக்கிறதா, என்ன?" என்று ராஜகுமாரர் கேட்டார். மூன்றாவது ஆசாமி திகைத்த முகத்துடன் சீதாவைப் பார்த்து, "உங்களுக்கு கலியாணம் ஆகியிருக் கிறதா?" என்று கேட்டான். "ஏன் ஆகவில்லை? ரொம்ப காலத்துக்கு முன்பே ஆகிவிட்டது! குழந்தை கூட இருக்கிறது!" என்றாள் சீதா. ராஜகுமாரர், "இதென்ன அதிசயம்? அம்மணி தாங்கள் யார்? எந்த ஊர்?" என்று கேட்டார். சீதாவுக்கு எதனாலோ கோபம் அதிகமாகிக் கொண்டிருந்தது. "நான் யார் என்று தெரியாமலா என்னைப் பிடித்துக் கொண்டுவரச் செய்தீர்கள்?" என்றாள்.

"அம்மணி! தயவு செய்து சொல்லுங்கள் தங்கள் பெயர் என்ன? தங்களுடைய பெற்றோர்களின் பெயர் என்ன?" என்று ராஜகுமாரர் கேட்டார். "தாராளமாகச் சொல்கிறேன் என் பெயர் சீதா! என் தந்தை பெயர் துரைசாமி ஐயர். என் தாயாரின் பெயர் ராஜாம்மாள், என் கணவன் பெயர் சௌந்தரராகவன். என் மாமியாரின் பெயர் காமாட்சி அம்மாள். என் அருமை மாமனாரின் பெயர் பத்மலோசன சாஸ்திரிகள். இன்னும் யார் யாருடைய பெயர் உங்களுக்குத் தெரியவேண்டும்?" "போதும், அம்மணி! போதும்! கியான்தாஸ்! இது என்ன மூடத்தனம்? இது என்ன அசம்பாவிதம்! இந்தத் தவறு எப்படி நேர்ந்தது?" என்று ராஜகுமாரர் பணியாள் மீது எரிந்து விழுந்தார். கியான்தாஸ் தன் சட்டைப் பையிலுள்ள புகைப்படத்தை எடுத்து சீதாவுடன் ஒப்பிட்டு இரண்டு மூன்று தடவை உற்றுப் பார்த்தான். "தவறு நேர்ந்துவிட்டது! ஐயோ! தவறு நேர்ந்து விட்டது. இந்தப் பெண்ணும் அவள் மாதிரியே இருக்கிறாள். ஆனால் அவள் அல்ல! அடடா! எவ்வளவு பெரிய தவறு நேர்ந்து விட்டது? இப்போது என்ன செய்வது?" என்று கியான்தாஸ் கூடச் சேர்ந்து அங்கலாய்த்தான். சீதாவைப் பார்த்து ராஜமாதா, "பெண்ணே! உண்மையாகச் சொல்லிவிடு! உன்னுடைய பெயர் தாரிணி இல்லையா?" என்று கேட்டாள்.

அந்த ஒரே கேள்வியின் மூலம் சீதாவுக்குச் சகல விவரங்களும் தெரிந்துவிட்டன.அவளுடைய ஆகாசக் கோட்டை களும் மனோராஜ்ய மாளிகைகளும் இடிந்து தகர்ந்து பொடிப் பொடியாகிக் காற்றிலே பறந்து மண்ணிலே விழுந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து தொலைந்து போயின! ஆகா! இந்த முழு மூடர்கள் தன்னைத் தாரிணி என்று தவறாக எண்ணி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். இத்தனை நேரம் அது தெரியாமல் நாமும் ஏமாந்து ஏதேதோ கோட்டை கட்டி கொண்டிருந் தோமே? ஆசாபங்கத்தினாலும் அசூயையினாலும் ஆங்காரத்தினாலும் சீதாவின் உள்ளம் எரிமலையாகியது. எரிமலை கக்கும் தீயின் கொழுந்தைப்போல் வார்த்தைகள் சீறிக்கொண்டு வந்தன. "நான் தாரிணி இல்லை; நான் உங்கள் தூர்த்த ராஜ குலத்தில் பிறந்தவளும் இல்லை. தளுக்கினாலும் குலுக்கினாலும் மூடப் புருஷர்களை மயங்க வைக்கும் மாயக்காரியும் அல்ல. நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஏழைப் பெண். தாலி கட்டிய புருஷனோடு மானமாய் ஜீவனம் செய்து வந்தேன். உங்களுடைய முழு மூடத்தனத்தில் இந்த மாதிரி என்னை அலங்கோலப்படுத்தி விட்டீர்கள். இனி என்னுடைய கதி என்ன?" என்று சீதா அலறினாள். "பெண்ணே! வீணாகக் கத்தாதே! நடந்தது நடந்து விட்டது. நீ இருந்த இடத்தில் உன்னைத் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடச் சொல்கிறேன்?" என்றாள் ராஜமாதா. "உங்களுக்கு என்ன? திருப்பிக் கொண்டு போய் விடுகிறேன் என்று சுலபமாய் சொல்லிவிடுகிறீர்கள். இப்படித் தெறிகெட்டு எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்தவளை அவர் திருப்பிச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா?

நீங்கள் மகா பாவிகள்! இரக்கமற்ற சுயநலப் பிண்டங்கள்! உங்களுடைய வம்சம் அடியோடு நாசமாகிப் பூண்டற்றுப் போகும்..."அதற்கு மேல் அங்கே நிற்க விரும்பாமல் ராஜமாதாவும் ராஜகுமாரரும் விரைந்து சென்றார்கள். போகும்போதே அவர்கள் அந்த மூன்றாவது ஆளை ஏதோ பலமாகக் கண்டித்துக் கொண்டு போக அந்த ஆள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டும் சமாதானம் சொல்லிக்கொண்டும் போனான். அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் சீதா விம்மி அழத் தொடங்கினாள். இதயத்தின் அடிவாரத்தில் வெகு காலமாக மறைந்து கிடந்த துக்கம் பொங்கிப் பீறிக்கொண்டு வந்தது. கொதிக்கின்ற கண்ணீர் தாரை தாரையாகப் பெருகி கன்னத்தைச் சுட்டது. பழைய காலத்துக் காவியங்களிலே வரும் கற்புக்கரசிகளைப் போலச் சீதாவுக்கு மட்டும் சக்தியிருந்தால் அந்த மூன்று பேரையும் அந்த க்ஷணமே சுட்டு எரித்துச் சாம்பலாக்கி இருப்பாள். தண்டனை அளிக்கும் அதிகாரம் உடைய அரசியாயிருந்தால் தாரிணியைச் சுண்ணாம்புக் காளவாயில் போடும்படி கட்டளையிட்டிருப் பாள்.ஆகா! எங்கே போனாலும் அந்தப் பாதகியல்லவா தன்னுடைய சத்துருவாக வந்து சேருகிறாள்? தன்னுடைய ஆசை களைப் பங்கமுறச் செய்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்கென்றே தாரிணி பிறந்தவள் போலும்! அடி! மோகன உருவம் கொண்ட பயங்கர ராட்சஸியே! கலிகால சூர்ப்பணகை என்றால் உனக்கல்லவா தகும்? உன்னை மானபங்கம் செய்து புத்தி புகட்ட எந்த வீர புருஷனாவது முன் வரமாட்டானா? சூரியாவிடம் சொன்னால் அவனாவது செய்யமாட்டானா? அப்படி யாரும் உன்னைப் பழிவாங்க முன் வராவிட்டால் அடுத்த முறை உன்னைப் பார்க்கும்போது நானே விஷம் கொடுத்துக் கொன்றுவிடுகிறேன், பார்! அவமானத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளான சீதாவின் மனதில் இது போன்ற பயங்கர எண்ணங்கள் குடிகொண்டன!