அலை ஓசை/எரிமலை/மரத்தடியில்

விக்கிமூலம் இலிருந்து


எட்டாம் அத்தியாயம் மரத்தடியில்

இரும்பையொத்த கையினால் தன் கையை அவ்விதம் பிடித்தவன் ஆஜானுபாகுவான ஒரு போலீஸ்காரன் என்பதைக் கண்டான். ஒரு கணநேரத்துக்குள் சூரியாவின் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் பாய்ந்து சென்றன. இத்தனை நாட்கள், இத்தனை தூரம் பிரயாணம் செய்தபோதெல்லாம் பிடிபடாமல் வந்து கடைசியாக இந்த டில்லி நகரின் முழுச் சோம்பேறிப் போலீஸ்கார னிடந்தானா சிக்கிக்கொள்ள வேண்டும்? அதுவும் தான் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்கள் சில பாக்கியிருக்கும் போது? இன்னும் இரண்டு நாள் அவகாசம் தனக்குக் கிடைத்திருக்க கூடாதா? இவ்விதம் ஏற்பட்ட மனக் கலக்கத்தைச் சூரியா வெளியில் காட்டிக்கொள்ளாமல், "யார் நீ? எதற்காக என் கையைப் பிடிக்கிறாய்?" என்று அதட்டலாகக் கேட்டான். போலீஸ்காரன், "இன்ஸ்பெக்டர் சாகிப் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச் சொன்னார்!" என்று சொன்னதும் சூரியாவின் கலக்கம் அதிகமாயிற்று. "உன் இன்ஸ்பெக்டர் சாகிப்பை எனக்குத் தெரியாது, அவரிடம் எனக்கு என்ன வேலை? நான் வர முடியாது!" என்று சொன்னான். அதற்கு அந்தப் போலீஸ்காரன், "இன்ஸ்பெக்டர் சாகிப்பை பார்த்தால் இப்படிச் சொல்ல மாட்டாய் சீக்கிரம் வா" என்று கூறினான். இதை அவன் கூறிய குரல் சூரியாவின் மனதில் ஏதோ ஒரு சந்தேகத்தை உண்டாக்கியது. குரலைக் காட்டிலும் அதிகமாக அந்தப் போலீஸ்காரனுடைய முகத்தில் தோன்றிய புன்னகையும் கண்சிமிட்டலும் சூரியாவின் மனதில் குழப்பத்தை உண்டாக்கின. இதற்குள் ஜும்மா மசூதியின் படிகளில் அவர்கள் நின்ற இடத்துக்கு அருகில் கூட்டம் அதிகமாகச் சேர ஆரம்பித்தது. சிலர் போலீஸ்காரனுக்கும் சூரியாவுக்கும் நடந்த விவாதத்தைக் கவனிக்கவும் தொடங்கியிருந்தார்கள். இதையெல்லாம் ஒரு வினாடி நேரத்துக்குள் எண்ணிப் பார்த்து, எப்படியிருந்தாலும் அந்தப் போலீஸ்காரனுடன் போவதே நல்லது என்று சூரியா தீர்மானித்தான். "சரி; வருகிறேன் இன்ஸ்பெக்டர் சாகிப் எங்கே இருக்கிறார்?" என்று கேட்டான் சூரியா. "பேசாமல் என்னுடன் வா! ஆனால் ரொம்ப நெருங்கி வராதே! கொஞ்ச தூரத்திலேயே என் பின்னால் வந்து கொண்டிரு! இன்ஸ்பெக்டர் சாகிப்பிடம் நான் உன்னை அழைத்துக் கொண்டு போகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் நடந்தான். சூரியாவுக்கு இப்போது தைரியம் அதிகமாயிற்று. தான் தப்பித்துக் கொள்வதற்குச் சௌகரியமாகப் போலீஸ்காரன் முன்னால் சென்றதினாலும், அவன் திரும்பிக் கூடத் தன்னைப் பார்க்காததினாலும் சூரியாவின் மனதில் ஏற்கனவே தோன்றிய எண்ணம் உறுதிப்பட்டது. போலீஸ்காரன் போன வழியே அவனைத் தன் கண் பார்வையிலிருந்து தவற விடாமல், பின்னால் நடந்து சென்றான். போலீஸ்காரன் ஜும்மா மசூதியைச் சுற்றி ஜேஜே என்று நெருங்கி நின்ற ஜனக்கூட்டத்தின் வழியாகப் புகுந்து நடந்து வெள்ளி வீதிக்குச் சென்று மணிக்கூண்டை அடைந்தான். பிறகு டவுன் ஹால் காம்பவுண்டுக்குள் புகுந்து போய் அதன் பின்புறத்தில் கொஞ்ச தூரத்தில் இருந்த விசாலமான மைதானத்தை அடைந்தான். இன்று 'காந்தி மைதானம்' என்ற பெயர் பெற்று விளங்கும் அந்த மைதானத்தில் ஆங்காங்கே சில மரங்களும் செடிகளும் இருந்தன. மைதானத்தின் விளிம்பை அடைந்ததும் போலீஸ்காரன் நின்று திரும்பிப் பார்த்தான். சூரியா சமீபத்தில் வந்த உடனே அவன் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு மரத்தைச் சுட்டிக்காட்டி, "அந்த மரத்துக்குப் பின்னால் இன்ஸ்பெக்டர் சாகிப் இருக்கிறார், போய்ப் பார்த்துக் கொள்! இன்ஸ்பெக்டர் சாகிப்பும் நீயும் பேசும்போது நான் அருகில் இருப்பது நன்றாயிராது. உங்களுக்குள் எத்தனையோ இரகசியங்கள் இருக்கும்!" என்று சொல்லி மறுபடியும் புன்னகை புரிந்தான். சூரியா பொங்கி வந்த வியப்புடனே போலீஸ்காரன் சுட்டிக்காட்டிய மரத்தை நோக்கிச் சென்றான். மரத்தின் அருகில் போகும்போது அதன் பின்னால் ஒரு பெண் உட்கார்ந்து கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தை ஆழ்ந்த கவனத்துடன் படித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. "அவள் யார்?" என்ற எண்ணம் சூரியாவின் உள்ளத்தில் உதயமாவதற்குள், அவனுடைய காலடிச் சத்தத்தைக் கேட்டு அந்தப் பெண் தலை நிமிர்ந்து பார்த்தாள். அவள் தாரிணி என்று கண்டதும் சூரியாவுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. "வருக! வருக! வீரர் சூரியாவின் வரவு நல்வரவாகுக!" என்றாள் தாரிணி. "ஓகோ! இன்ஸ்பெக்டர் சாகிப் நீங்கள்தானா? அந்தப் போலீஸ்காரர் என் கையைப் பிடித்ததும் ஒரு நிமிஷம் திணறிப் போய்விட்டேன்!" என்று சொல்லிக்கொண்டே சூரியா தாரிணிக்கு எதிரில் உட்கார்ந்தான். மேலும் தொடர்ந்து, "உங்களுடைய சாமர்த்தியம் எனக்குத் தெரிந்த விஷயந்தான். ஆயினும் ஒரு போலீஸ்காரனையே உங்கள் வலையில் சிக்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை," என்று சொன்னான். "போலீஸ்காரனைப் பார்த்து எதற்காக அவ்வளவு பயம்? புரட்சி வீரர் சூரியாவே போலீஸ்காரனுக்குப் பயப்பட்டால் மற்றவர்களின் கதி என்ன?" என்று தாரிணி கேட்டாள். "பயம் என்று நான் சொன்னேனா? எத்தனையோ இடங்களில் எவ்வளவோ வேஷம் போட்டு எத்தனையோ தந்திரம் செய்து போலீஸாரிடம் தப்பி வந்தேன். புனிதமான சந்நியாசி வேஷங்கூடப் போட்டுக்கொண்டேன். அப்படியெல்லாம் செய்து இத்தனை தூரம் டில்லிக்கு வந்துவிட்டுத் தங்களைச் சந்திக்காமல், விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல், போலீஸ் 'லாக் - அப்'புக்குப் போகிறதென்றால் திகைப்பாயிராதா?" "போன காரியமெல்லாம் பூர்த்தியாயிற்றா?" என்று தாரிணி கேட்டாள். "எப்படி பூர்த்தியாகும்? அதற்குள்ளே தான் தலை போகிற காரியம் என்று தங்களிடமிருந்து கடிதம் வந்து விட்டதே? அந்தக் கடிதத்தினால் தேவப்பட்டணத்தில் நேர்ந்த விபரீதங்களைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். எதற்காக அப்படிக் கடிதம் எழுதினீர்கள்? சீதாவுக்கு அவ்விதம் என்ன நேர்ந்துவிட்டது? உண்மையில் சீதாவை நினைத்தால் எனக்குக் கோபம் வருகிறது. ஒரு தனிப்பட்ட மனுஷிக்காக எவ்வளவோ முக்கியமான தேசீய காரியங்கள் தடைப்பட்டுப் போகிறதென்றால்?..." "நான் அவ்விதம் நினைக்கவில்லை; கோபுரத்தைப் பொம்மை தாங்குகிறது என்று நினைத்துக்கொள்வது போல நம்மாலேதான் தேசத்தின் காரியங்கள் நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்கிறோம். தெய்வ சித்தம் ஒன்று இருக்கிறது; அதன் சட்டப்படி எல்லாம் நடக்கின்றன. தேசத்தை நாம் காப்பாற்ற முயல்வதைவிட நமக்குத் தெரிந்திருக்கும் ஒருவரின் கஷ்டத்தைப் போக்கினால் கைமேல் பலன் உண்டு" என்றாள் தாரிணி. "கடைசியாக நாம் சந்தித்த பிறகு தத்துவ ஆராய்ச்சி பலமாகச் செய்திருக்கிறீர்கள். முன் தடவை நாம் பேசிய போது தனி மனிதர்களுடைய சுக சௌகரியங்களைக் காட்டிலும் தேச நன்மையே பெரிது என்று முடிவு செய்தோம். இந்த மாறுதலுக்கு காரணம் என்னவோ தெரியவில்லை." "உங்கள் அத்தங்காதான் காரணம் தேசம் எந்தக் கேடாவது கெட்டுப் போகிறது சீதாவின் கஷ்டம் நீங்கினால் போதும் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது." "சீதாவின் பேரில் உங்களுக்கு அளவில்லாத கருணை உண்டாகியிருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை." "ஒருவரிடம் ஒருவர் பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டுமா என்ன?" "வேண்டியதில்லைதான், பிரியம் கொள்ளுவதற்குக் காரணம் வேண்டியதில்லை என்பதினாலேதான் ஸ்திரீகள் முதல் நம்பர் அயோக்கியர்கள் பேரில் காதல் கொள்ளுகிறார்கள்?" "நீங்கள் சொல்வது எனக்கு நன்றாய்ப் புரியவில்லை. ஸ்திரீகள் அயோக்கியர்கள் மீது மட்டுமே காதல் கொள்ளுகிறார்கள் என்றா சொல்லுகிறீர்கள்? அப்படியானால் அதை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஸ்திரீகள் காதல் கொள்ளக்கூடிய யோக்கியர்கள் சிலரும் இருக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட யோக்கியர் ஒருவரைத் தெரியும்" என்று தாரிணி கூறிவிட்டு எங்கேயோ பார்த்தாள். சூரியா எரிச்சலுடன், "அப்பேர்ப்பட்ட தனிப் பெரும் யோக்யன் யார் என்று எனக்கும் தெரியும். அவன் பெயர் சௌந்தரராகவன், இல்லையா?" என்றான். "நான் சௌந்தரராகவனை நினைத்துக் கொண்டு பேசவில்லை. என்றாலும் அவரையும் நான் அயோக்கியர் என்று சொல்ல மாட்டேன். ஏதோ சில தவறுகள் அவர் செய்யக் கூடும். ஆனால் சீதாவிடம் அவருக்கு எவ்வளவோ அன்பு உண்டு என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். சீதா தன்னுடைய வீண் சந்தேகங்களினால் அவருடைய அன்பையெல்லாம் விஷமாகச் செய்து விடுகிறாள்" என்றாள் தாரிணி. "போகட்டும்; ராகவனுடைய அந்தரங்கத்தைச் சீதாவை விட நீங்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?" "சில சமயம் ஒரு பொருளுக்கு மிகவும் சமீபத்திலிருப்பவர்களைக் காட்டிலும் கொஞ்சம் தூரத்திலிருப்பவர்களுக்கு அதன் சொரூபம் நன்றாய்த் தெரிகிறது. அதனால் சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்தை என்னால் நன்றாய் அறிந்து கொள்ள முடிந்தது." "யார் கண்டார்கள்? சீதாவைக் காட்டிலும் ராகவனுடைய உள்ளத்துக்கு நீங்கள் அதிக சமீபத்தில் இருக்கலாமல்லவா?" "சூரியா! நீங்கள் ஏதோ விகல்பமாகப் பேசுகிறீர்கள், இத்தனை நேரமும் அறியாமற் போனேன். இப்படிப் பேசுவதானால் நான் உங்களுடன் பேசுவதற்கே இஷ்டப்படவில்லை, நீங்கள் எழுந்து போகலாம்!" "இந்த மைதானம் உங்களுக்குச் சொந்தமா என்ன?" "சரி; அப்படியானால் நான் எழுந்து போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு தாரிணி எழுந்தாள். "சூரியா பரபரப்புடன், "தாரிணி! நான் சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். நான் கூறியது பிசகு தான்; தயவு செய்து உட்காருங்கள்! சீதா விஷயமாக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போங்கள்" என்றான். தாரிணி மறுபடி உட்கார்ந்து "திடீரென்று உங்களிடம் இந்த மாறுதல் காணப்படுவதன் காரணம் தெரியவில்லை. யாரோ ஏதோ சொல்லி உங்கள் மனதைக் கெடுத்திருக்கிறார்கள். சீதாவைப் பார்த்துவிட்டு இங்கு வந்தீர்களா?" என்றாள். "இல்லை; ஸ்டேஷனில் இறங்கியதும் நேரே இங்கு வந்தேன். என்னுடைய அறைக்குக் கூடப் போகவில்லை சீதா எப்படி இருக்கிறாள்? அவள் விஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்." "அவள் மனதில் ஏதோ ஒரு விஷம் புகுந்திருக்கிறது. ஏதோ ஒரு சந்தேகம் குடிகொண்டிருக்கிறது. அதனாலேயே அவளுடைய குடும்ப வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறது. அவளுடைய ஆயுளுக்கே அபாயம் வந்துவிடும் போலிருக்கிறது. நீங்கள் உடனே போய் விசாரித்து அவளுடைய மனதிலுள்ளதைத் தெரிந்து கொள்ள முயல வேண்டும். சில நாளைக்கு அவளை எங்கேயாவது அனுப்பி வைத்தாலும் நல்லது." "அவள் எந்த ஊருக்குப் போவாள்? போவதற்கு எந்த ஊர் இருக்கிறது? நான் சொல்கிறேன், தாரிணி! சீதா இனிமேல் சுகமடைவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது; அவள் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் ஆனால் ஹிந்து சாஸ்திரமும் பிரிட்டிஷ் சட்டமும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆகையால் துன்பப்பட்டுச் சாகவேண்டியது தான்." "நான் கூடச் சில சமயம் நினைத்ததுண்டு. சீதா விவாகரத்து செய்துவிட்டு உங்களைக் கலியாணம் செய்து கொண்டால் எவ்வளவு சந்தோஷமாயிருப்பாள் என்று." "ஒரு நாளும் இல்லை; நீங்கள் நினைப்பது பெருந்தவறு. சீதாவிடம் என்னுடைய அபிமானம் அந்த விதமானது அன்று. அத்தையிடம் நான் கொண்ட அபிமானம் அவளுடைய பெண்ணின் க்ஷேமத்தில் அக்கறை கொள்ளச் செய்திருக்கிறது. மற்றபடி அவளுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் பொருந்தவே பொருந்தாது. சீதா பட்டுப்பூச்சி இனத்தைச் சேர்ந்தவள். பட்டிலும் பகட்டிலும் பளபளப்பிலும் படாடோ பத்திலும் பிரியம் கொண்டவள். பார்ட்டிகளுக்குப் போவதே ஜன்ம சாபல்யம் என்று எண்ணியிருக்கிறவள்..." "சீதா பிறக்கும்போதே இந்த மாதிரி குணங்களுடனே பிறந்தாளா? எல்லாம் பின்னால் ஏற்பட்ட பழக்க வழக்கங்கள் தானே?" "அது எப்படி இருந்தால் என்ன? உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். தேவப்பட்டணம் போலீஸாரிடமிருந்து தப்புவதற்காக நான் சந்நியாசி வேஷம் பூண்டேன். அந்த வேஷத்திலேயே நான் சில நாள் இருக்க நேர்ந்தது. அப்போது உண்மையாகவே நான் சந்நியாசி ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மதராஸில் காமாட்சி அம்மாளைப் பார்த்துப் பேசிய பிறகு அந்த எண்ணம் பலம் பெற்றுத் தீர்மானம் ஆயிற்று." "தங்களுடைய தீர்மானத்தை நான் மிகவும் மெச்சுகிறேன்." "எல்லா விஷயத்திலும் நம்முடைய கருத்துக்கள் ஒத்திருப்பது பற்றிச் சந்தோஷம்" என்றான் சூரியா. "எனக்கும் சந்தோஷந்தான்; ஆனால் காமாட்சி அம்மாள் தங்களுடைய குருநாதரானது எப்படி?" "சீதாவைப் பற்றி விசாரிப்பதற்காக அந்த அம்மாளிடம் போயிருந்தேன். சீதாவுக்கு டைபாய்ட் சுரம் வந்தது பற்றியும் நீங்கள் அவளுக்குச் சிசுரூஷை செய்து பிழைக்க வைத்தது பற்றியும் தெரிவித்தாள்." "அவ்வளவுதானா! அதிலிருந்து எப்படிச் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும் உறுதி ஏற்பட்டது?" "காமாட்சி அம்மாள் இன்னும் சில விஷயங்களும் சொன்னாள். ராகவனுடைய இளம்பிராயத்தில் அவன் வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ள இஷ்டப்பட்டதைப் பற்றியும் அவளும் அதற்கு ஆவலாயிருந்தது பற்றியும் சாதி வித்தியாசம் காரணமாகத் தான் அதற்குச் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது பற்றியும் சொன்னாள். தாயாருடைய வாக்கை இவ்வளவு பக்தியாக நிறைவேற்றி வைத்த சௌந்தரராகவனை நான் மனதார மெச்சினேன்." "நீங்கள் இன்றைக்கு ஒரு மாதிரி பேசி வந்ததின் காரணம் இப்போது தெரிகிறது. ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணின் இப்போதைய அபிப்பிராயத்தைப் பற்றிக் காமாட்சி அம்மாள் சொன்னாளா?" "இல்லை; அவளுக்கு எப்படி அது தெரியுமா? ஆனால், 'ராகவன் அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒருவேளை சந்தோஷமாயிருந்திருப்பான்' என்று சொன்னாள்." தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டு, "இதற்கும் தங்களுடைய சந்நியாசத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டாள். "நான் எப்போதாவது கலியாணம் செய்து கொள்ளுவதாயிருந்தால், அவள் இன்னொரு ஆசாமியிடம் காதல்கொண்டிருப் பதாகத் தெரிந்தால் நான் சந்நியாசம் வாங்கிக்கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?" "நீங்கள் நினைப்பது முற்றும் தவறு; அந்தப் பெண்ணின் இதயத்தில் ராகவனுக்கு இப்போது கொஞ்சம் கூட இடமில்லை. நீங்கள் சந்நியாசி ஆனதாகத் தெரிந்தால் அவளும் கிறிஸ்துவ மதத்தைத் தழுவி கன்னிகா மடத்தைச் சேர்ந்து விடுவாள்." சூரியா ஆர்வத்துடன் தாரிணியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, "இது உண்மைதானா?" என்று கேட்டான். "தங்களுடைய இருதயத்தையே கேட்டுப் பார்க்கிறதுதானே?" என்று சொன்னாள் தாரிணி. "என் இருதயம் சொல்லியதை நம்புவதற்கு இதுவரை எனக்குப் பயமாயிருந்தது. அவ்வளவு பெரிய பாக்கியம் இந்த துரதிர்ஷ்டசாலிக்கு எப்படிக் கிடைக்கும் என்றும், இருதயம் நம்மை ஏமாற்றுகிறது என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்." "இருதயம் ஏமாற்றவில்லை; சலன சுபாவமுள்ள அறிவு தான் ஏமாற்றிற்று. சீதாவையும் அதே அறிவு தான் ஏமாற்றுகிறது. நீங்கள் உடனே சென்று அவளுடைய நிலையைத் தெரிந்து கொண்டு வாருங்கள். சீதாவை நான் பார்த்து இருபது நாள் ஆகிவிட்டது எப்படியிருக்கிறாளோ என்று கவலையா இருக்கிறது?" "அப்படியே ஆகட்டும், நாளைக்கு நாம் இந்த இடத்திலேயே சந்திக்கலாமா?" "கூடவே கூடாது; சுற்றுமுற்றும் பாருங்கள் நம்மை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். நாளைக்கு ஜாகையில் சந்திக்க வேண்டியது தான். நம்முடைய நண்பர்கள் உங்களுடைய அனுபவங்களைக் கேட்க ஆவலுள்ளவர் களாயிருக்கிறார்கள். நாளைக்கு இதே நேரத்துக்கு மணிக்கூண்டுக்கு அருகில் வாருங்கள். போலீஸ்காரன் இந்துலால் உங்களைச் சந்தித்து ஜாகைக்கு அழைத்துக் கொண்டு வருவான். இப்போது என்னுடன் தொடர்ந்து வரவேண்டாம். நான் அந்தப் போலீஸ்காரன் அருகில் போய்ச் சேரும் வரையில் தாங்கள் அந்த மரத்தடியிலே உட்கார்ந்திருப்பது நல்லது." இவ்விதம் கூறிவிட்டுத் தாரிணி எழுந்து நடந்தாள். சூரியா அங்கேயே உட்கார்ந்து தாரிணியும் போலீஸ்காரனும் மறையும் வரையில் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.