அலை ஓசை/பிரளயம்/"மரணமே! வா!"

விக்கிமூலம் இலிருந்து

முப்பதாம் அத்தியாயம் "மரணமே! வா!"

மௌல்வி சாகிபு சுட்ட துப்பாக்கி குண்டு குறி தவறி தப்பிப் போயிருக்க வேண்டும். ஏனெனில் வண்டி போவது அதனால் தடைப்படவில்லை. கோவேறு கழுதை மிரண்டு வேகமாக வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது. ஓடிய வண்டியிலிருந்து பையன் ஏதோ உரத்த சத்தமிட்டுத் திட்டிக் கொண்டு போனது காதில் விழுந்தது. "சீதா! என்னுடைய ஜோசியம் தவறிவிட்டது. சகுனம் கெட்டுவிட்டது, இந்த இடத்தில் இனித் தங்குவதற்கு இல்லை; புறப்படு உடனே!" என்றார் மௌல்வி சாகிபு. அடுத்த ஏழெட்டு தினங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாகவே தோன்றவில்லை. சில சமயம் பல பூர்வ ஜன்மங்களிலே நடந்த சம்பவங்களாகத் தோன்றின. சில சமயம் கனவிலே காணும் தெளிவில்லாச் சம்பவங்களைப் போலத் தோன்றின. பற்பல கதைகளிலும் இதிகாச புராணங்களிலும் படித்த நிகழ்ச்சிகளாகத் தோன்றின. எப்பொழுதோ யாரோ சொல்லிக் கேட்ட சம்பவங்களைப் போலிருந்தன. அந்தச் சம்பவங்களி லெல்லாம் அவளும் ஒரு பாத்திரமாக இருந்த போதிலும், அவளுடைய உடம்பிலிருந்து ஆவியானது தனியே பிரிந்து போய் நின்று அந்த பயங்கர நிகழ்ச்சிகளையெல்லாம் காண்பது போலிருந்தது. வெளியிலே நிகழ்ந்த காரியங்களையும் காட்சி களையும் தவிர சீதாவின் மனதிலும் பல காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. லலிதாவின் காலில் விழுந்து அவள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். சௌந்தரராகவனிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். வஸந்தியைக் கட்டித் தழுவி ஆசி கூறினாள். மாமனாரையும் மாமியாரையும் வணங்கினாள். தாரிணியைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். சூரியாவிடம் கோபித்துக் கொண்டு திட்டினாள். தந்தையின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சினாள். ரஸியா பேகத்தின் முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். காந்திமகானைத் தன் இதய பீடத்தில் அமர்த்திக் கும்பிட்டாள். இடையிடையே அவளுடைய பேதை உள்ளம், "மரணமே! வா!" என்று கூவிக்கொண்டிருந்தது. அவளுடைய காதில் அடிக்கடி அலை ஓசை முழங்கிற்று.

பகல் வேளைகளில் சீதாவும் அவளுடைய தந்தையும் மலை குகைகளிலும் காட்டுப் புதர்களிலும் பாழடைந்த மசூதிகளிலும் மறைந்து கொண்டிருந்தார்கள். இருட்டிய பிறகு பீதி நிறைந்த உள்ளத்துடன் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு பிரயாணம் செய்தார்கள். வழியிலே அவர்கள் தீப்பிடித்து எரிந்த கிராமங்களையும் பட்டணங்களையும் தாண்டிப் போகவேண்டியிருந்தது. எரிந்த வீடுகளிலிருந்து எழுந்த ஜுவாலைகள் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு இரவைப் பகலாக்கின. அந்த ஜுவாலைகளின் வெளிச்சத்தில் கரிய பயங்கர உருவங்கள் யமகிங்கரர்களைப் போல் கையில்கொடிய ஆயுதங்களுடனே ஊளையிட்டுக் கொண்டு அலைந்தன. அம்மாதிரி இடங்களுக்கு அருகிலும் நெருங்காமல் தந்தையும் மகளும் நெடுந்தூரம் சுற்றி வளைத்துக் கொண்டு போனார்கள். இரவு நேரங்களில் சாலையோடு போய்க் கொண்டிருக்கும் போது முன்னால் காலடிச் சத்தம் கேட்டாலும் அவர்கள் நெஞ்சு திடுக்கிடும்; பின்னால் காலடிச் சத்தம் கேட்டால் உள்ளம் பதைக்கும். சில சமயம் திடுதிடுவென்று ஜனங்கள் பெரும் கூட்டமாக ஓடி வரும் சத்தம் கேட்கும். இருவரும் பக்கத்துக் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார்கள். பயந்து ஓடும் ஜனங்களைத் துரத்திக்கொண்டு பின்னால் ராட்சதக் கூட்டத்தினர் ஓடி வருவார்கள். அவர்கள் போடும் பயங்கரமான சத்தத்துடன் ஸ்திரீகள் குழந்தைகளின் பரிதாப ஓலக் குரலும் சேர்ந்து ஒலிக்கும். ஓலக் குரல் அடங்கி வெகு நேரமான பிறகும் சீதாவின் காதில் அலை ஓசை கேட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய நெஞ்சம் "மரணமே! வா!" என்று அழைக்கும். நடந்து நடந்து சீதாவின் கால்களில் வலி எடுத்து இரத்தம் கட்டியது பின்னர் வீக்கமும் கண்டது. "இனி நடக்க முடியாது" என்று அவளுடைய கால்கள் கெஞ்சின. "அப்பா! என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் போய்விடுங்கள்!" என்று சீதா தந்தையிடம் கெஞ்சினாள். "முடியாது, தாயே முடியாது!" என்று மௌல்வி சாகிபு தலையை அசைத்தார். "எப்படியும் நான் சாகப்போகிறேன்; உங்கள் கையினால் சாகிறேனே? எதற்காகச் சித்திரவதை?" என்றாள் சீதா.

அதற்கும் மௌல்வி சாகிபு இணக்கம் காட்டவில்லை. தந்தையின் தோளைப் பிடித்துக்கொண்டு சீதா மெள்ள மெள்ளத் தடுமாறி நடந்தாள். அவளுடைய உள்ளம் "மரணமே! வா!" என்று அழைத்தது. அவளுடைய காதில் அலை ஓசை அதிகமாகிக் கொண்டிருந்தது. சாலையில் அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய புழுதிப் படலம் கிளம்பி ஆகாசத்தை மறைத்தது. ஒரு பெரும் இரைச்சல் கேட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காகச் சீதாவும் அவள் தந்தையும் சாலையைவிட்டு ஒதுங்கி ஒரு பாழடைந்த 'குருத்வார'த்துக்குள் ஒளிந்து கொண்டார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு மாபெருங் கூட்டம் வந்தது. அந்தக் கூட்டத்தாரைக் காப்பதற்குத் துப்பாக்கிப் பிடித்த சீக்கிய சோல்ஜர்கள் உடன் சென்றார்கள். வயோதிகர்கள், குழந்தைகள், ஸ்திரீகள், புருஷர்கள், நோயாளிகள், கர்ப்ப ஸ்திரீகள், ஒட்டகை வண்டிகள், கழுதை வண்டிகள், மாட்டு வண்டிகள், இரண்டொரு லாரிகள், மூட்டை முடிச்சுக்கள், பெட்டி பேழைகள் இவை அடங்கிய நீண்ட ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது. சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள் ஒரு மைல் நீளமுள்ள ஊர்வலம். "இந்தக் கூட்டத்தோடு நாமும் போய்விடலாமா?" என்று மௌல்வி சாகிபு கேட்டார். "வேண்டாம் அப்பா! இந்தப் புழுதியையும் நாற்றத்தையும் கூச்சலையும் என்னால் தாங்க முடியாது! பைத்தியம் பிடித்துவிடும்?" என்றாள் சீதா. ஊர்வலம் சென்ற வழியில் பயங்கரமான துர்நாற்றம் கிளம்பி வான வெளியின் காற்றையெல்லாம் விஷமாக்கி விட்டது. சீதாவும் அவளுடைய தந்தையும் வேறொரு குறுக்குச் சாலையைப் பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷனை அவர்கள் அடைந்தார்கள். வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். யாராவது வந்து வெயிட்டிங் ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் சீதாவுக்குப் 'பகீர்' என்னும். ரயிலுக்காகக் காத்திருந்த நேரம் முடிவில்லாமல் நீண்டு கொண்டேயிருந்தது. சீதா உட்கார்ந்தபடியே சிறிது கண்ணயர்ந்தாள். பெரும் அலை ஓசை கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். கேட்டது ரயில் வரும் சத்தம் என்று தெரிந்து கொண்டாள். இருவரும் பிளாட்பாரத்துக்குள் போனார்கள். ரயிலில் கூட்டம் சொல்லமுடியாது. எல்லா வண்டிகளும் உட்புறம் பூட்டப்பட்டிருந்தன. சீதாவுக்கு அந்த ரயிலில் ஏறுவதற்கே பிடிக்கவில்லை. ஆனால் மௌல்வி சாகிபு வற்புறுத்தினார். வண்டி வண்டியாகச் சென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு கடைசியில் ஒரு வண்டிக் கதவைத் திறக்கச் செய்தார். இரண்டு பேரும் ஏறிக் கொண்டார்கள். வண்டியிலிருந்தவர்கள் தாங்கள் வந்த வழியில் பார்த்த பயங்கரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ரயில் மெள்ள மெள்ளப் போய்க்கொண்டிருந்தது. ரயிலில் சக்கரங்கள் சுழன்ற சத்தம் சீதாவின் காதில் அலை ஓசையைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. "மரணமே! வா!" என்று அவளுடைய உள்ளம் கூவிக் கொண்டிருந்தது. ஒரு ரயில்வே ஜங்ஷனில் ரயில் நின்றது, நின்ற ரயில் மறுபடி லேசில் கிளம்புகிற வழியாக இல்லை. நேரமாக ஆக ரயிலிலிருந்தவர்களின் கவலை அதிகமாயிற்று. ரயில்வே ஸ்டேஷனிலும் வெளியிலும் ஏகக் கூச்சலும் குழப்பமுமாயிருந்தன.

மௌல்வி சாகிபு திடீரென்று "அதோ தாரிணி" என்றார். சீதா ஆவலுடன் அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். ஆம்; கொஞ்ச தூரத்தில் கூட்டத்துக்கு நடுவில் சூரியாவும் தாரிணியும் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருகணம் அவர்களுடைய முகங்கள் தெரிந்தன. மறுகணம் கூட்டத்தில் மறைந்து விட்டன. "சீதா, கொஞ்சம் பொறு! அவர்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன்!" என்று அப்பா சொல்லிவிட்டு வண்டியிலிருந்து இறங்கி ஓடினார். அடுத்த நிமிஷம் அவரும் ஜனக் கூட்டத்தில் மறைந்து விட்டார். பிறகு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாக இருந்தது. சீதாவுக்கு அந்தமாதிரி பல யுகங்களுக்குப் பிறகு ஒரு பயங்கரமான கூச்சல் கேட்டது. அதைக் காட்டிலும் கோரமான காட்சி கண் முன்னால் தென்பட்டது. நூற்றுக்கணக்கான முரட்டு மனிதர்கள் கையில் கத்திகளுடன் பாய்ந்து வந்தார்கள். பிளாட்பாரத்தில் நின்றவர்கள் பலரைக் கொன்றார்கள். எங்கே பார்த்தாலும் இரத்தக்களறி ஆயிற்று. அந்த மனிதர்கள் ரயிலுக்குள்ளும் பாய்ந்து ஏறினார்கள். சீதா இருந்த வண்டியை நோக்கி ஐந்தாறு பேர் ஓடி வந்தார்கள். சீதா பீதியினாலும் அருவருப்பினாலும் கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய மனதில், "கடைசியாக நம்முடைய பிரார்த்தனை நிறைவேறிவிட்டது! மரணம் வந்து விட்டது!" என்ற நினைவு தோன்றியது. தடதடவென்று ரயிலுக்குள் நாலைந்து பேர் ஏறினார்கள். மூடிய கண்களுடனே அடுத்த கணத்தில் தன்னுடைய மார்பில் கத்தி பாயும் என்று சீதா எதிர் பார்த்தாள். ஆனால் கத்தி பாயவில்லை; கண்ணும் திறக்கவில்லை. மறுபடியும் வண்டிக்குள் தனக்கருகில் ஏதோ கலவரம் நடக்கிறதென்பதை உணர்ந்தாள். யாரோ அவளைப் பிடித்துத் தள்ளினார்கள். தொப்பென்று கீழே விழுந்தாள். அவள் மேல் ஏறி மிதித்துக் கொண்டு யாரோ ஓடினார்கள்.

"சீதா! சீதா!" என்ற இனிய குரலுடன் மெல்லிய மிருதுவான கரங்கள் அவளை எடுத்துத் தூக்கின. கண்ணை விழித்துப் பார்த்து அவை தாரிணியின் கரங்கள் என்பதை அறிந்தாள். தன்னைத் தூக்கிய கரங்களில் ஒன்றிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள், "அக்கா" என்று அலறினாள். அந்த மூன்று தினங்கள் சீதாவின் வாழ்க்கையில் மிகவும் ஆனந்தமான நாட்கள். ஏதோ ஒரு ஊரில் யாரோ ஒருவருடைய வீட்டின் மேல் மச்சில் ஜன்னல் கதவுகளையெல்லாம் அடைத்துக்கொண்டு ஒளிந்திருந்த நாட்கள்தான். சாலையிலாவது வெளிச்சம் உண்டு; காற்று உண்டு இங்கே அது கூடக் கிடைக்காது. எனினும் தன்னுடன் பிறந்தவள் என்று தெரியாதபோதே தன் உள்ளத்தின் அன்பையெல்லாம் கவர்ந்து விட்ட தாரிணியுடன் வசித்தபடியால் அந்த நாட்கள் ஆனந்தமாயிருந்தன. ரயிலில் கொலை செய்யப்படாமல் சீதாவைக் காப்பாற்றிய தாரிணி அவளை இந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருந்தாள். சீதா தனக்கும் தாரிணிக்கும் உள்ள உறவைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். "இதெல்லாம் உனக்கு முன்னமே தெரியாதா அக்கா?" என்று கேட்டாள். "இந்தச் சந்தேகம் எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது. ஆனால் நான் எவ்வளவு கேட்டும் அந்தக் கிழவரும் கிழவியும் உண்மையைச் சொல்ல மறுத்து விட்டார்கள்?" என்றாள் தாரிணி. "என்ன அநியாயம்? எதற்காக அப்படிச் செய்தார்கள்? அக்கா என்று தெரியாமலேயே உன்னிடம் என் பிராணனை வைத்திருந்தேனே! தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரியமாயிருந்திருப்பேன்? நாம் எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கலாம்." என்றாள் சீதா.

தன்னிடம் பொறாமை கொண்டு சீதா படுத்திய பாடெல்லாம் தாரிணிக்கு நினைவு வந்தது. ஆனால் அதை இப்போது சீதாவுக்கு ஞாபகப்படுத்தவில்லை. "போனதைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயன் என்ன? அதற்கெல்லாம் சேர்த்து இப்போது வட்டி போட்டு நாம் சந்தோஷமாயிருக்கலாம்!" என்றாள் தாரிணி. "அதற்கென்ன சந்தேகம்? என் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. இனிமேல் எனக்கு சந்தோஷத்துக்கு என்ன குறைவு?" என்றாள் சீதா. எனினும் இருவருடைய இதய அந்தரங்கத்திலும் சந்தேகமும் பயமும் இல்லாமற் போகவில்லை. விழித்துக் கொண்டிருந்தபோதெல்லாம் தாரிணியின் கழுத்தைச் சீதா கட்டிக்கொண்டு அந்தரங்கம் பேசினாள். தூங்கும்போது தாரிணியின் மேலே கையைப் போட்டுக் கொண்டு தூங்கினாள். எங்கே தன்னை விட்டு விட்டுத் தாரிணி போய்விடப் போகிறாளோ என்ற பயம் அவளுடைய மனதின் ஆழத்தில் குடி கொண்டிருந்தது. சீதாவின் பயம் சீக்கிரத்திலேயே உண்மையாயிற்று. தாரிணியிடமிருந்து அவள் பிரிய வேண்டிய சமயம் வந்தது. இதைப்பற்றி அறிந்ததும் சீதா முரண்டு பிடித்தாள். "நான் உன்னைவிட்டுப் போக மாட்டேன். நீ என்னை விட்டுப் போனால் குத்திக் கொண்டு சாவேன்!" என்றாள். தாரிணி பலவிதமாக அவளுக்குச் சமாதானம் கூறினாள். "நான் டில்லியில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன் அதுவரையில் பொறுத்திரு, பெஷாவரில் என்னுடைய சிநேகிதி நிரூபமா இருக்கிறாள். அவளைப் பார்த்து அழைத்துக்கொண்டு வரவேண்டும்!" என்றாள். அந்தச் சகோதரிகளுக்குள் நெடுநேரம் விவாதம் நடந்தது. கடைசியாகச் சீதா, "அக்கா! நீ ஒரு வாக்குறுதி கொடுத்தால் நான் உன்னைப் பிரிந்து போகச் சம்மதிப்பேன்!" என்றாள். "கேள்! அம்மா!" என்றாள் தாரிணி.

"டில்லிக்குப் போகும் வழியில் நான் இறந்துவிட்டால் நீ அவரைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும். அப்படி நீ சத்தியம் செய்து கொடுத்தால் நான் உன்னைப் பிரிவேன்!" என்றாள் சீதா. "இது என்னப் பைத்தியக்காரத்தனம்!" என்று தாரிணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சீதா கேட்கிறதாக இல்லை. தாரிணி மறுக்க மறுக்க சீதாவின் வெறி அதிகமாகி வந்தது! கடைசியில் தாரிணி, "அடியே! நீ செத்து நான் உயிரோடிருந்து உன் புருஷனும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதற்குச் சம்மதித்தால் நான் கலியாணம் பண்ணிக் கொள்கிறேன்" என்றாள். முஸ்லிம் ஸ்திரீகள் பர்தா அணிந்து கொள்வது போன்ற புர்க்கா ஒன்றைச் சீதாவுக்குத் தாரிணி அளித்தாள். அந்த உடையில் கண்களால் பார்ப்பதற்கு மட்டும் துவாரம் இருந்தது. மற்றபடி தலையிலிருந்து கால்வரையில் சீதாவை அந்த அங்கி மூடிவிட்டது. நள்ளிரவில் மௌல்வி சாகிபும் சீதாவும் அந்த வீட்டு மெத்தை அறையிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். வாசலில் தயாராக ஜீப் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை ஓட்டுவதற்கு ஒரு போலீஸ் டிரைவர் காத்திருந்தான். சீதா தாரிணியைக் கட்டிக் கொண்டு, "அக்கா வாக்குறுதியை மறந்துவிடாதே!" என்றாள். அவளுடைய தந்தை தாரிணியின் தலை உச்சியை முகந்து பார்த்துவிட்டு, "அம்மா! என்னுடைய குற்றங்களை மன்னித்துக் கொள்!" என்று சொன்னார். மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் தாரிணியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பிரகாசித்தன. "அப்பா! தங்களுக்கு நான் கொடுத்த தொந்திரவுகளையெல்லாம் மன்னியுங்கள்!அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகத் தங்களுக்கு வாழ்நாளெல்லாம் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்குமோ, என்னமோ?" என்றாள்.

போலீஸ் கான்ஸ்டபிள் ஓட்டிய ஜீப் வண்டி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வழியில் நேர்ந்த பல தடங்கல்களையும் தாண்டிக் கொண்டு சென்றது. சாலைகளில் சில இடங்களில் கூட்டமாக ஜனங்கள் போய்க்கொண்டி ருந்தார்கள். அந்த இடங்களில் ஜனக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஜீப் சென்றது. சில இடங்களில் சாலைகளில் மரங்களை வெட்டித் தள்ளியிருந்தார்கள். அந்த இடங்களில் சாலையிலிருந்து பக்கத்தில் இறங்கிக் கடந்து சென்றது. சில இடங்களில், ஐயோ! என்ன பயங்கரம்; சாலைகளில் கிடந்த மனித உடல்களின்மீது ஏறிச் சென்றது! அந்த உடல்களிலிருந்த உயிர்கள் எப்போதோ போய்விட்டன! இனி அவற்றின் பேரில் ஜீப் வண்டி ஏறினால் என்ன? ரோட் என்ஜின் ஏறினால்தான் என்ன? சாலையில் ஜீப் வண்டி வேகமாகப் போக ஆரம்பித்த புதிதில் சீதாவுக்குத் தான் அபாயங்களையெல்லாம் ஒருவாறு கடந்து விட்டதாகத் தோன்றியது. ஆனால் சீக்கிரத்திலேயே அது பொய் நம்பிக்கை என்று ஏற்பட்டது.ஏனெனில் அவர்களைத் தொடர்ந்து இன்னொரு ஜீப் வண்டி கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அது இந்த வண்டியைத் தொடர்ந்து வருகிறது என்று ஏன் நினைக்க வேண்டும்? தங்களைப் போலவே அபாயத்துக்குத் தப்பித்துச் செல்லும் மனிதர் களாயிருக்கலாமல்லவா? இருக்கலாம். என்றாலும் தங்களைப் பிடிப்பதற்காகவே அந்த வண்டி வருகிறது என்னும் எண்ணத்தைச் சீதாவினால் போக்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வண்டியில் யமன் தன்னைத் தொடர்ந்து ஓடி வருகிறான் என்றே எண்ணினாள். யார் கண்டது? முதலில் நினைத்தபடியே இந்தப் பிரயாணத்தில் தனக்கு மரணம் நேரிடலாமோ, என்னமோ? "மரணமே! வா, சீக்கிரம் வா!" என்று அவள் உள்ளம் ஜபித்து அவளுடைய காதில் அலை ஓசையின் இரைச்சல் அதிகமாயிற்று.

ஒரு நதிக்கரையில் வந்து ஜீப் வண்டி நின்றது. நல்ல வேளை! கொஞ்ச நேரமாகப் பின் தொடர்ந்து வந்த வண்டியின் சத்தம் கேட்க வில்லை அது வெறும் பிரமைதான். என்ன அதிசயம்? இங்கே சூரியா வந்து நிற்கிறானே? நமக்கு முன்னால் எப்படி வந்தான்? அதோடு ஒரு படகையும் அமர்த்தி வைத்துக் கொண்டு தயாராயிருக்கிறானே? சூரியா சூரியாதான்! அம்மாஞ்சிக்கு இணை யாரும் இல்லை. தந்தையையும் மகளையும் சூரியாவிடம் ஒப்படைத்து விட்டுப் போலீஸ்காரன் ஜீப் வண்டியைத் திருப்பினான். அவனும் சூரியாவும் ஏதோ சமிக்ஞை பாஷையில் பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றியெல்லாம் விசாரிக்க அப்போது நேரம் இல்லை. பிற்பாடு கேட்டுக் கொண்டால் போகிறது. சூரியா அவர்களுடைய கையைப் பிடித்துப் படகிலே ஏற்றி விட்டான், தானும் ஏறிக்கொண்டான். படகுக்காரன் படகை நதியில் செலுத்தினான். படகு நகர்ந்ததும் சீதாவின் பயம் அடியோடு நீங்கிற்று. உள்ளத்தில் உற்சாகமே உண்டாகிவிட்டது. அது பாஞ்சால நாட்டின் பஞ்ச நதிகளின் ஒன்றான 'சேனாப்' என்று அறிந்தாள். பிரவாகம் அலை மோதிக் கொண்டு சென்றது; காற்று விர்ரென்று அடித்தது. சீதா தன்னுடைய பர்தா உடையைக் கழற்றிப் படகில் வைத்தாள். மௌல்வி சாகிபுவைப் பார்த்து, "அப்பா! நீங்களும் உங்களுடைய வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பழையபடி ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றாள். "சீதா! இந்த வேஷத்தைப் பற்றிக் குறை சொல்லாதே! இதன் மூலமாய்த்தானே உன்னைக் காப்பாற்ற முடிந்தது?" என்றார் மௌல்வி சாகிபு. "அதுதான் காப்பாற்றியாகிவிட்டதே? இனிமேல் அபாயம் ஒன்றுமில்லையே?" என்றாள் சீதா. "அவசரப்படாதே, அம்மா; டில்லி போய்ச் சேர்ந்ததும் வேஷத்தை மாற்றி விடுகிறேன்!" என்றார் மௌல்வி சாகிபு. ஆனால் உலகத்தில் மனிதர்கள் நினைக்கிறபடியோ, விரும்புகிறபடியோ, என்னதான் நடக்கிறது? அபாயத்துக்குப் பயப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் அது வராமல் போய் விடுகிறது. "இனி ஒரு பயமும் இல்லை" என்று எண்ணியிருக்கும் சமயத்தில் திடீரென்று எங்கிருந்தோ பேரிடி வந்து விழுகிறது.

நதியில் மூன்றில் ஒரு பங்கு தூரம் படகு சென்றிருக்கும். அப்போது அவர்கள் வந்த சாலையில் சற்றுத் தூரத்தில் ஒரு புழுதிப்படலம் தெரிந்தது. புழுதியைக் கிளப்பிய மற்றொரு ஜீப் வண்டி அடுத்த நிமிஷம் நதிக்கரையில் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து மனிதன் கீழே குதித்ததைச் சீதா பார்த்தாள். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. நதியில் சென்று கொண்டிருந்த படகை அவன் உற்றுப் பார்த்தான். அடுத்த நிமிஷம் கையிலிருந்த துப்பாக்கியைத் தூக்கிக் குறிபார்த்துச் சுட்டான். இதையெல்லாம் பார்த்தவண்ணம் பிரமித்துப் போயிருந்த சீதாவின் காதில், "ஐயோ! செத்தேன்!" என்ற கூச்சல் பக்கத்திலிருந்து கேட்டது. சீதா திரும்பிப் பார்த்தாள், தன் தந்தையின் கன்னத்தில் இரத்தம் சொட்டுவதையும் அவர் படகின் ஓரமாகச் சாய்வதையும் பார்த்தாள். ஆற்றில் விழாமல் அவரைப் பிடித்துக் கொள்வதற்காகப் பாய்ந்து ஓடினாள். படகு ஆடிச் சாய்ந்தது; சீதா நதியின் பெருவெள்ளத்தில் விழுந்தாள். முடிவில்லாத நேரம் சீதா தண்ணீருக்குள் கீழே கீழே கீழே போய்க்கொண்டிருந்தாள். பிறகு தன்னுடைய பிரயாசையின்றியே மேலே வருவதை உணர்ந்தாள். முகம் தண்ணீருக்கு மேலே வந்தது, கண்கள் ஒருகணம் திறந்தன. சற்றுத் தூரத்தில் தன் தந்தை கன்னத்தில் இரத்தக் காயத்துடன் தத்தளித்து நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச தூரத்தில் சூரியா அதே மாதிரி நீந்திக் கொண்டிருந்தான். ஆனால் அவர்களில் யாரும் சீதா தலை தூக்கிய பக்கம் பார்க்கவில்லை. படகோ வெகு தூரத்தில் இருந்தது.

அலை ஒன்று சீதாவை நோக்கி வந்தது. அது ஒரு அடி உயர அலைதான். ஆனால் படகையும் மற்ற இருவரையும் மறைத்தபடியால் அது மலை அளவு உயரமாகச் சீதாவுக்குத் தோன்றியது. பொங்கும் கடலைப்போல் ஓசை செய்து கொண்டு அந்த அலை விரைந்து வந்து சீதாவை மோதியது. சீதா பயத்தினால் கண்ணை மூடிக்கொண்டாள். மறுபடியும் தண்ணீரில் முழுகப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. இந்தத் தடவை முழுகினால் முழுகியதுதான்; மறுபடி எழுந்திருக்கப் போவதில்லை. "மரணமே! வா!" என்று அவள் அடிக்கடி ஜபம் செய்து கொண்டிருந்தது பலித்துவிட்டது. இந்தத் தடவை நிச்ச யமான மரணந்தான். அலை வந்து தாக்கியது, நீரில் முழுகும் தறுவாயில் சீதாவின் மனக்கண்ணின் முன்னால் ஒரு காட்சி புலப்பட்டது. தாரிணியும் சௌந்தரராகவனும் கைபிடித்துக் கலியாணம் செய்து கொள்ளும் காட்சிதான் அது. சீதாவின் மனதில் அந்த கண நேரக் காட்சி ஆனந்தத்தையும் அமைதியையும் உண்டு பண்ணியது. "ஆகா! அவர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!" என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் முழுகினாள். குழந்தை வஸந்தியின் பால் வடியும் முகமும், சூரியாவின் ஆர்வம் ததும்பிய முகமும், மௌல்வி சாகிபுவின் முகமும் வரிசையாகப் பவனி வந்தன. சுவரிலிருந்த படத்திலிருந்து காந்தி மகாத்மா வின் முகம் தனியாகத் தோன்றிப் புன்னகை செய்து மறைந்தது. பின்னர் சிறிது நேரம் காதில் 'ஹோ' என்ற அலை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு எல்லா நினைவும் அழிந்தது. ஆழங்காணாத அமைதி; எல்லைகாணாத இருள்; நிசப்தம்.