அலை ஓசை/பிரளயம்/கங்காபாயின் கதை

விக்கிமூலம் இலிருந்து

பதினைந்தாம் அத்தியாயம் கங்காபாயின் கதை

சூரியா சொல்லிய கடைசி விஷயம் ராகவனுடைய எண்ணத்தை வேறு வழியில் செலுத்தியது. பலவித சந்தேகங்கள் அவன் மனதில் உதித்தின. "ரஜினிபூர்ப் பைத்தியம்" என்று சொல்லப்பட்ட ஸ்திரீ தன்னிடம் சீதாவைப் பற்றி எச்சரித்தது நினைவுக்கு வந்தது. இந்த விஷயத்தில் இன்னும் ஏதோ மர்மம் இருக்கிறதென்றும் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எண்ணினான். ஒரு வேளை சீதாதான் உண்மையில் ரஜினிபூர் இளவரசியோ, என்னமோ; இந்தப் போக்கிரி சூரியாவும் அவனுடைய காதலி தாரிணியும் சேர்ந்து ஏதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களோ என்னமோ? இல்லாவிட்டால் சீதா தவறாகச் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தும் இவர்கள் ஏன் அவள் தாரிணி இல்லை என்று சொல்லி அவளை விடுவிக்க முயற்சி எதுவும் செய்யவில்லை? "சூரியா! தாரிணிதேவிதான் காணாமற்போன ரஜினிபூர் இளவரசி என்று ஏதனால் அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்? ஏன் அந்த ராஜகுமாரி சீதாவாக இருக்கக்கூடாது?" என்றான் ராகவன். சூரியாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "சீதா, ரஜினிபூர் ராஜகுமாரி என்று ஏற்பட்டால், எவ்வளவோ நலமாயிருக்கும், மிஸ்டர் ராகவன்! ஏனெனில், தாரிணிக்கு அந்த 'ராஜகுமாரி' என்கிற பட்டமே வேப்பங்காயாக இருக்கிறது. எனக்கும் அப்படித்தான்; ஆனால் சீதா அத்தங்கா ரொம்பவும் 'ரொமாண்டிக்' இயல்பு உள்ளவள். தான் ராஜகுமாரி என்று ஏற்பட்டால் அத்தங்காளுக்கு எவ்வளவோ சந்தோஷமாயிருக்கும். தங்களுக்கும் அது திருப்தியளிக்கும் என்று தெரிகிறது. அத்தங்கா பேரில் தங்களுக்குள்ள கோபத்தையெல்லாம் மறந்து சந்தோஷம் அடைவீர்கள். ஆனால் அப்படியில்லையே, என்ன செய்வது? யாருக்கு ஒரு பொருள் பிரியமாயிருக்கிறதோ அவருக்கு அப்பொருளைக் கடவுள் அளிப்பதில்லை. வேண்டாதவர்களுக்குப் பார்த்துக் கொடுக்கிறார்!" என்று சூரியா சொன்னான்.

"உன்னுடைய வேதாந்தம் அப்புறம் இருக்கட்டும். சீதா டில்லியை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதைச் சொல்லுகிறேன், கேட்கிறாயா?" "பேஷாகக் கேட்கிறேன்; சொல்லுங்கள்!" என்றான் சூரியா. அதன் பேரில் ராகவன், திடீரென்று ஒரு நாள் கையில் கத்தியுடன் தோன்றிச் சீதாவைச் சரியாக நடத்தவேண்டும் என்று தனக்கு எச்சரிக்கை செய்து விட்டுப்போன வெறி கொண்ட ஸ்திரீயைப்பற்றிச் சூரியாவிடம் விவரமாகச் சொன்னான். "அந்த ஸ்திரீ யார்? சீதாவைப் பற்றி அந்த வடநாட்டு ஸ்திரீக்கு ஏன் அவ்வளவு சிரத்தை உண்டாக வேண்டும்? உன்னால் சொல்ல முடியுமா?" என்று ராகவன் கேட்டான். "சொல்ல முடியும்" என்று சூரியா சொன்ன பதில் ராகவனைத் தூக்கி வாரிப் போட்டது. "அந்த ஸ்திரீயின் முதல் பெயர் ரமாமணிபாய். இப்போது அவள் பெயர் ரஸியாபேகம், சீதா அத்தங்காள் மீது அவளுக்கு வாஞ்சை ஏற்படக் காரணம் உண்டு. அது பெரிய கதை, மாப்பிள்ளை ஸார்! கிட்டத்தட்ட முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கும் கதை. எனக்கும் வெகு காலம் வரை தெரியாமல்தானிருந்தது. சில மாதத்துக்கு முன்புதான் தெரிந்து கொண்டேன். அதுவும் ரஸியா பேகம் சொல்லித்தான் தெரிந்தது. அந்தத் துர்ப்பாக்யவதி பெரும்பாலும் வெறி கொண்டு திரிகிறவள். அபூர்வமாகச் சில சமயம் அவளுடைய மனம் தெளிகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் தற்செயலாய் அவளைப் பார்த்த போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். சீதா அத்தங்காளிடங்கூட அதைப்பற்றிச் சொல்லவில்லை. தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாதலால் சொல்கிறேன்!"- இந்தப் பூர்வ பீடிகையுடன் ஆரம்பித்து ரஸியா பேகத்தைப் பற்றிய அபூர்வ வரலாற்றைச் சூரியா கூறினான்.

முப்பது வருஷத்துக்கு முன்னால் ரஜினிபூர் சமஸ்தானத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருந்த மகாராஜா மற்றும் பல சமஸ்தான மன்னர்களைப் போலவே சிற்றின்பப் பிரியனாயிருந்தான். இராஜ்ய காரியங்களைத் திவானும் பிரிட்டிஷ் ரிஸிடெண்டும் பார்க்கும்படி விட்டுவிட்டுத் தான் லீலா விநோதங்களில் காலங்கழித்து வந்தான். அந்த லீலா விநோதங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பல துர்மந்திரிகள் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவன் மதோங்கர். ஒரு சமயம் ரஜினிபூர் மகாராஜாவின் சபைக்கு மகாராஷ்டிர தேசத்திலிருந்து பாடகி ஒருத்தி வந்து பாடினாள்; அவள் பெயர் கங்காபாய். மகாராஜாவுக்கு அவளுடைய பாட்டும் பிடித்திருந்தது; அவளையும் பிடித்திருந்தது. பாடகியுடன் அவளுக்குத் துணையாக அவள் தமக்கையும் வந்திருந்தாள். தமக்கையின் பெயர் ரமாமணி; அவள் நல்ல தைரியசாலி. உலக விவகாரங்களில் தனக்கு மிஞ்சியவள் கிடையாது என்று அவளுக்கு எண்ணம். மகாராஜாவின் முன்னிலையில் மூன்று நாள் இன்னிசைக் கச்சேரி நடந்த பிறகு மதோங்கர் என்பவன் அந்தப் பெண்கள் தங்கியிருந்த ஜாகைக்கு வந்தான்; பாடகியை மகாராஜாவுக்கு ரொம்பவும் பிடித்திருப்பதாகத் தெரியப்படுத்தினான். அதற்கு ரமாமணி, "அப்படியானால் மகாராஜா என் தங்கையைக் கலியாணம் செய்து கொள்ளட்டுமே?" என்றாள். "மகாராஜாவின் உத்தேசமும் அதுதான்!" என்றான் மதோங்கர். ரமாமணி 'கலியாணம்' என்ற வார்த்தையினால் ஏமாந்து போய்விட்டாள். தன் தங்கைக்கு இதோபதேசம் செய்து சம்மதிக்கப் பண்ணினாள். "மகாராஜா எவ்வளவு பெரிய ரஸிகர் என்பதை நீயே பார்த்துத் தெரிந்து கொண்டாய். அவருடைய ராஜ்யமோ ரொம்பக் கீர்த்தி வாய்ந்தது, ஐசுவரியத்துக்கு அளவேயில்லை. இப்படிப்பட்ட அரண்மனையில் மகாராணியாயிருக்கப் பூர்வ ஜன்மத்தில் நீ தவம் செய்திருக்க வேண்டும்" என்றாள். 'கலியாணம்' என்னும் கேலிக்கூத்து நடந்தது. அது கேலிக்கூத்து என்பது அந்தப் பெண்களுக்கு அப்போது தெரியாது. கொஞ்ச நாளைக்குப் பிற்பாடுதான் மகாராஜாவுக்கு ஏற்கெனவே மூன்று கலியாணங்கள் ஆகி அரண்மனையில் மூன்று ராணிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இதையறிந்து ரமாமணி திடுக்கிட்டாலும் ஆசையையும் நம்பிக்கையையும் இழக்கவில்லை. அந்த மூன்று ராணிகளுக்கும் குழந்தை இல்லை என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஒருநாள் மகாராஜா கங்காபாயைப் பார்க்க வந்திருந்தபோது அவரைத் தனியாக ரமாமணி சந்தித்தாள். கத்தியைக் காட்டிப் பயமுறுத்தினாள். தன் தங்கைக்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை ரஜினிபூர் இளவரசனாக்க வேண்டும் என்று வாக்குறுதி பெற்றார். அவ்விதமே மகாராஜாவிடம் ஒரு காகிதத்தில் எழுதி கையெழுத்து வாங்கிக் கொண்டாள். இதெல்லாம் மதோங்கருக்குத் தெரிந்தது. ரஜினிபூர் ராஜ்யம் யாருக்குப் போக வேண்டும் என்பது பற்றி அவனுக்கு வேறு யோசனை இருந்தது. ஆகையால் ரமாமணியின் சூழ்ச்சிக்கு அவன் பதில் சூழ்ச்சி செய்தான். ராணி கங்காபாய்க்குப் பிள்ளைக் குழந்தை பிறந்தால் அதைப் பிறந்த உடனே கொன்று விடவேண்டும் என்று மருத்துவச்சியிடம் ஏற்பாடு செய்தான். மதோங்கர்! மருத்துவச்சியிடம் பேசியதை மூன்றாவது மகாராணி கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் தர்ம சிந்தையும் உதாரகுணமும் படைத்த உத்தமி. ரமாமணியை அழைத்து வரச் செய்து மதோங்கரின் சிசுஹத்தி ஏற்பாட்டைப் பற்றிக் கூறினாள். பிரசவ காலம் நெருங்குவதற்கு முன்பு நாலாவது மகாராணியை பம்பாய்க்கு அழைத்துக்கொண்டு போய்விடும்படியும் அதற்கு வேண்டிய ஒத்தாசை தான் செய்வதாகவும் கூறினாள். மூன்றாவது மகாராணி கூறியது உண்மை என்பதற்கு வேண்டிய ஹேஷ்யங்கள் ரமாமணிக்குக் கிடைத்தன. மகாராஜாவோ அந்தச் சமயம் ஐரோப்பாவுக்குச் சென்றிருந்தார். ஆகவே ரமாமணி மூன்றாவது மகாராணியின் யோசனைப்படியே காரியம் செய்தாள். தங்கை கங்காபாயை அழைத்துக்கொண்டு மதோங்கருடைய காவலாளிகளுக்குத் தெரியாமல் பம்பாய்க்குப் பிரயாணமானாள்.

ராஜபுத்திர நாட்டு வழக்கத்தைக் கங்காபாய் மேற்கொண்டு 'பர்தா' ஸ்திரீகளுக்குரிய முகமுடி அணிந்திருந்தாள். ஆகையால் அவளை அழைத்துக்கொண்டு பிரயாணம் செய்வதில் அதிக கஷ்டம் ஏற்படவில்லை. ஆனால் வேறுவிதமான கஷ்டங்கள் ஏற்பட்டன. கையில் கொண்டு வந்திருந்த பணமும் ரயில் டிக்கட்டுகளும் வழியில் காணாமற் போய்விட்டன. ஆகையால் பம்பாய் நகரையடுத்திருந்த சின்ன ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் டிக்கட் பரிசோதனை செய்த ரயில்வே உத்தியோகஸ்தன் அந்த ஸ்திரீகளிடம் டிக்கட் இல்லையென்று கண்டு அவர்களை இறக்கிவிட்டுவிட்டான். இரண்டு பேரும் பெண்கள், ஒருத்தி ஒன்பது மாதம் கர்ப்பம். கையில் பணம் இல்லை, ஆனால் கங்காபாய் அணிந்து கொண்டிருந்த ஆபரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்றை விற்றால் பணம் கிடைக்கும் எங்கே, எப்படி விற்பது? ரமாமணி நகையை விற்பதற்குப் போனால் ஒன்பது மாதத்துக் கர்ப்பிணி ஸ்திரீயை எங்கே விட்டு விட்டுப் போவது? அல்லது யாரிடம் சென்று உதவி கேட்பது? அதுவோ சின்னஞ்சிறிய ஸ்டேஷன்; வேளையோ இரவு வேளை. பம்பாயை அடுத்துள்ள சிறு ஸ்டேஷன்களில் ரயில் வரும்போது கூட்டம் கசகசவென்று இருக்கும். ரயில் போனதும் ஸ்டேஷன் நிர்மானுஷ்யமாகிவிடும். ரமாமணி தங்கையை அழைத்துக் கொண்டு பிரயாணிகள் தங்கும் வெயிட்டிங் அறைக்குச் சென்றாள். கங்காபாய்க்கு நிலைமை இன்னதென்று ஒருவாறு தெரிந்து விட்டது. முகத்தை மூடியிருந்த பர்தா துணிக்குள்ளேயிருந்து விம்மல் சத்தம் கேட்கத் தொடங்கியது. ரமாமணி அவளுக்கு ஆறுதல் கூற முயன்றாள்.

அந்தச் சமயத்தில், "அது என்ன விம்மல் சத்தம்?" என்று தெரிந்து கொள்வதற்காக இராத்திரி ஸ்டேஷன் மாஸ்டர் வந்து எட்டிப் பார்த்தார். ஒரு பர்தா ஸ்திரீயையும் பர்தா இல்லாத இன்னொரு ஸ்திரீயையும் கண்டார். அவர்கள் மகாராஷ்டிர தேசத்தவர் என்பதை அறிந்துகொண்டு மராத்தி பாஷையில், "என்ன விஷயம்?" என்று விசாரித்தார். அப்படி விசாரித்த ஸ்டேஷன் மாஸ்டர்தான் சீதாவின் தந்தை துரைசாமி ஐயர். ரமாமணிபாய் அறைக்கு வெளியே வந்து அந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் தங்கள் நிலைமையை ஒருவாறு எடுத்துக் கூறினாள். இராத்திரி தங்க இடம் வேண்டும் என்றும் மறுநாள் காலையில் தன் தங்கையை பம்பாயில் ஒரு பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். "உதவி செய்தால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார். துரைசாமிக்கு அப்போது சம்பளம் சொற்பம். அவருடைய மனைவி ராஜம்மாள் அதே சமயத்தில் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு முதல் குழந்தை பேற்றை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆகையால் செலவுக்குச் சம்பளம் போதாமல் மேல் வரும்படி ஏதாவது கிடைத்தால் தேவலை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆகையினால்தான் "எனக்கு என்ன தருவீர்கள்!" என்று கேட்டார். அந்தப் பெண்களின் தோற்றத்தைப் பார்த்ததில் அவர்களிடம் பணம் நிறைய இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ரமாமணி, "நீங்கள் இந்த சமயத்தில் உதவி செய்தால் எங்களிடம் உள்ள எந்தப் பொருளைக் கேட்டாலும் கொடுத்துவிடத் தயார். என்னையே வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறேன்!" என்று சொன்னாள். துரைசாமிக்கு வெட்கமும் வியப்பும் உண்டாயின. இந்த மாதிரி பதிலை அவர் எதிர்ப்பார்க்கவில்லை.

மனதிற்குள், "சிவ சிவா! ஒரு மனைவியைக் காப்பாற்றுவதே என்னால் முடியாத காரியமாயிருக்கிறது. உன்னையும் கட்டிக்கொண்டு என்னத்தைச் செய்வது?" என்று எண்ணிக் கொண்டார். ஆயினும் அந்தப் பெண்களின் பரிதாப நிலை அவருடைய இதயத்தை இளகச் செய்திருந்தது. "அப்படியெல்லாம் சொல்லவேண்டாம், அம்மா! எனக்குப் பிரதி பிரயோஜனம் ஒன்றும் வேண்டியதில்லை. என்னால் முடிந்த உதவியை உங்களுக்குச் செய்கிறேன்!" என்றார். மறுநாள் காலையில் தன்னுடைய மனைவியை எந்தப் பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாரோ, அதே ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் கொண்டுப்போய்ச் சேர்த்தார். ஆனால் இது விஷயத்தை அவருடைய மனைவியிடம் சொல்லவில்லை. சொன்னால் வீண் சந்தேகத்துக்கும் வீண் பேச்சுக்கும் இடமாகும் என்று சொல்லவில்லை. தினந்தோறும் பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தம் மனைவியைப் பார்க்கப் போனபோது ரமாமணியையும் துரைசாமி பார்த்து வந்தார். ரமாமணி துரைசாமியிடம் அளவில்லாத நன்றி பாராட்டினாள். அந்த நன்றி வெகு சீக்கிரத்தில் அத்தியந்த விசுவாசமாகவும் ஆருயிர்க் காதலாகவும் பரிணமித்து வந்தது. ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இராத்திரியில் ஆஸ்பத்திரியில் குழந்தைப் பேறு அடைந்தார்கள். இதற்குள்ளே மதோங்கர் எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு அந்தப் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தான். ரமாமணிக்கு இது தெரிந்தது, மதோங்கரின் கையில் அகப்படாமல் கங்காபாயுடன் வேறு இரகசிய இடத்துக்குப் போய்விட விரும்பினாள். அதற்கும் துரைசாமியின் உதவியைக் கோரினாள். ரமாமணியின் மோக வலையில் முழுவதும் சிக்கிக் கொண்ட துரைசாமி அவளுடைய கோரிக்கைக்கு இணங்கினார். விஸ்தாரமான பம்பாய் நகரில் சுலபமாய்க் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் ஜாகை பிடித்து அவர்களைக் கொண்டு போய் வைத்தார்.

ரமாமணியும் அவள் தங்கை கங்காபாயும் குழந்தை தாரிணியும் அங்கே வசிக்கத் தொடங்கினார்கள். துரைசாமி தன்னுடைய மனைவி ராஜம்மாளுக்குத் தெரியாமல் ரமாமணியின் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தார். தாரிணி பிறந்த வேளையில் பிறந்த ராஜம்மாளின் ஆண் குழந்தை சீக்கிரத்தில் இறந்து போயிற்று. அந்தத் துக்கத்தை மறப்பதற்காகத் துரைசாமி அடிக்கடி ரமாமணியின் வீட்டுக்குப் போய்த் தாரிணியை எடுத்துக் கொண்டு சீராட்டினார். இப்படியாக நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ரஜினிபூர் மகாராஜா ஐரோப்பாவிலிருந்து திரும்பினார். ரமாமணி பம்பாயில் அவர் தங்கியிருந்த ஜாகைக்குச் சென்று பேட்டி காண விரும்பினாள். பேட்டி கிடைப்பதே கஷ்டமாயிருந்தது. சண்டை பிடித்துப் பேட்டி கண்டு மகாராஜாவிடம் நிலைமையை பற்றிச் சொன்னபோது ரஜனிபூர் மகாராஜா தமக்கு அவர்களைத் தெரியவே தெரியாது என்று சாதித்துவிட்டார். ரமாமணிபாய் அவர் கைப்பட எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை எடுத்துக் காட்டினாள். மகாராஜாவின் உத்தரவுப்படி அவருடைய ஆட்கள் பலவந்தமாக அந்தக் கடிதத்தை ரமாமணியிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவளை வெளியே துரத்திவிட்டார்கள். ரமாமணி அளவில்லாத துயரத்துடனும் ஏமாற்றத்துடனும் ஜாகைக்குத் திரும்பிச் சென்றாள். கங்காபாயிடம் எல்லா விவரங்களையும் சொன்னாள். கங்காபாய் மூர்ச்சித்து விழுந்தாள். அப்புறம் அவளுடைய உடல்நிலை நாளுக்கு நாள் சீர்க்கேடு அடைந்து வந்தது. சில மாதத்துக்கெல்லாம் கங்காபாய் இந்த மண்ணுலகை நீத்தாள்.