அலை ஓசை/பிரளயம்/சீதாவின் ஆவி

விக்கிமூலம் இலிருந்து

முப்பத்து நான்காம் அத்தியாயம் சீதாவின் ஆவி

தலைக்கு மேலே வெள்ளம் ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே, ஓடிக் கொண்டே இருந்தது. நெற்றியின் மேலே அலை மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே, மோதிக்கொண்டே இருந்தது. காதில் 'ஹோ' என்று இரைந்த அலை ஓசை பல்லாயிரம் மக்களின் சோகம் நிறைந்த ஓலத்தையொத்த அலை ஓசை, மற்ற எல்லா ஓசைகளையும் அமுக்கிக் கொண்டு மேலெழுந்த பேரலையின் பேரோசை கேட்டுக் கொண்டே, கேட்டுக் கொண்டே இருந்தது. தலைக்கு மேல் ஓடிய வெள்ளத்தின் பாரமும் நெற்றியில் மோதிய அலையின் வேகமும் காதில் தாக்கிய அலை ஓசை இரைச்சலும் முடிவில்லாமல், இடைவெளியில்லாமல் நீடித்துக்கொண்டே இருந்தன. இல்லை, இல்லை; முடிவில்லாமல் இல்லை! அப்பாடா! கடைசியாக இதோ வெள்ளம் வடிந்து வருகிறது. நெற்றியில் அலையின் மோதலும் குறைந்து வருகிறது. இதோ வெள்ளம் வடிந்துவிட்டது. கழுத்துக்குக் கீழே இறங்கிவிட்டது. மூச்சுவிட முடிகிறது; கண்ணால் பார்க்க முடிகிறது. ஆனால் காதிலே அலை ஓசை கேட்பது மட்டும் நின்றபாடில்லை. வேறு ஒரு சத்தமும் கேட்க முடியவில்லை. இது என்ன? எங்கே இருக்கிறேன்? என்னத்தைப் பார்க்கிறேன்? இங்கே எப்படி வந்தேன்? படகிலிருந்து நதியில் விழுந்து முழுகியவள் இங்கே எப்படி வந்தேன்? செத்துப் போன பிறகு இங்கே வந்து சேர்ந்தேனா? இதுதான் மறு உலகமா? மறு உலகமாயிருந்தால் இருட்டும் குப்பையும் நிறைந்து துர்நாற்றம் அடிக்கும். இந்த இடம் நரக வீடாகத்தான் இருக்க வேண்டும்! நான் செய்திருக்கும் பாவங்களுக்கு நரகத்தைத் தவிர வேறு என்ன இடம் கிடைக்கும்? பதியை விட்டுவிட்டு ஓடிப்போனவளுக்கு வேறு என்ன கதி கிடைக்கும்? அருமைச் சிநேகிதி லலிதாவுக்குத் துரோகம் செய்தவளுக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! சொற்ப பாவம் செய்தவர்கள் கொஞ்சநாள் நரகத்திலிருந்துவிட்டு அப்புறம் சொர்க்கத்துக்குப் போவார்கள் என்று கேட்டதுண்டு? ஆனால் எனக்குச் சொர்க்கத்தின் ஆசையே வேண்டியதில்லை. என்றென்றைக்கும் இந்த நரகத்தில் கிடந்து உழல வேண்டியதுதான்?

இதோ என் தலைமாட்டில் நிற்கிறது யார்? யமனா? யமதூதனா? இல்லை தெரிந்த முகமாயிருக்கிறதே? எப்போதோ பார்த்த மாதிரி இருக்கிறதே?... கையில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார்? இல்லை; தண்டாயுதமில்லை. வேறு எந்த ஆயுதமும் இல்லை. அது ஒரு கிண்டி; மண்ணால் செய்த கிண்டி. அதன் நீண்ட குறுகிய மூக்கு வழியாகத் தண்ணீர் சொட்டுகிறது. எதற்காக நம்முடைய நெற்றியில் ஜில் என்று குளிர்ந்த தண்ணீரை விடுகிறார்? ஆகா எத்தனை இதமாயிருக்கிறது? இந்த மனிதர் யார்...... சீதா சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். படுக்கை என்பதும் தரையில் விரித்திருந்த ஒரு பழைய கம்பளிதான். அது உடம்பின் மேல் பட்ட இடங்களில் சொர சொரவென்று குத்தியது. அதைப் பொருட்படுத்தாமல் தன் நெற்றியில் சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை விட்ட ஆசாமி யார் என்று நன்றாகத் திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதரின் மெலிந்த சுருங்கிய முகத்தில் அப்போது புன்னகை மலர்ந்தது. ஆகா இந்த மனிதர் என் அப்பா அல்லவா; பழைய அப்பா துரைசாமி ஐயர் அல்லவா? அந்தத் தாடியுள்ள மௌல்வி சாகிபு அல்ல. இளைத்து மெலிந்து கறுத்துப் போயிருக்கிறார். கன்னங்களின் எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு தெரிகிறது; கண்கள் குழி விழுந்திருக்கின்றன. ஆயினும் பழைய அப்பாதான்; சந்தேகமில்லை. அந்த மௌல்வி சாகிபு என் தந்தை என்று சொல்லி என்னை அழைத்துக்கொண்டு வந்தது ஏதோ வஞ்சகம் போலிருக்கிறது. அவரிடமிருந்து நிஜமான அப்பா என்னைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு வந்திருக்கிறார். ஒருவேளை அதெல்லாம் அந்தப் பயங்கர நிகழ்ச்சிகள் எல்லாம் கனவுதானோ, என்னமோ? - எல்லாவற்றுக்கும் அப்பாவைக் கேட்டுப் பார்க்கலாம்!

சீதா பேச முயன்றாள், தகப்பனாரிடம் தன் மனதிலெழுந்த சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றாள். "நீங்கள் என் அப்பா துரைசாமி ஐயர்தானே? எதற்காகக் கிண்டியிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீரை என் நெற்றியில் விடுகிறீர்கள்? நாம் எங்கே இருக்கிறோம்? சூரியா எங்கே?" குழந்தை வஸந்தி எங்கே? இவர் - என் அகத்துக்காரர் எங்கே?" என்று இவ்வளவு கேள்விகளையும் கேட்க அவள் மனம் விரைந்தது; நாக்குத் துடித்தது; உதடுகள் திறந்தன; மூடின ஆனால் வார்த்தை ஒன்றும் வரவில்லை. முயன்று முயன்று பார்த்ததும் வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. அப்பா ஏதோ சொல்லுவது போலிருந்தது. வாயைத் திறந்து திறந்து மூடினார். பேச்சில்லாத சினிமாப் படங்களில் பாத்திரங்கள் வாயைத் திறந்து மூடுவது போலிருந்தது. பேசியது ஒன்றும் அவள் காதில் விழவில்லை; காதில் விழவேயில்லை. எப்படிக் காதில் விழும்? வேறு சத்தம் எதுவும் காதில் விழ முடியாதபடிதான் இந்தப் பயங்கரமான அலை ஓசை ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறதே! இதுதான் என்னைப் பைத்தியமாக அடித்துக்கொண்டு வருகிறது. "எதற்காகத் தப்பிப் பிழைத்தோம்; நதியில் முழுகிச் செத்துத் தொலைந்து போயிருக்கக் கூடாதா?" என்ற எண்ணத்தை உண்டாக்கி வருகிறதே! ஒரு நிமிஷத்துக்குள்ளே சென்ற சில மாதத்து அநுபவங்கள் எல்லாம் சட், சட்டென்று ஞாபகம் வந்தன. குருக்ஷேத்திரம் முகாமில் கண்ணுக்கெட்டிய தூரம் போட்டிருந்த ஆயிரக்கணக்கான அகதி முகாம் கூடாரங்கள் கண் முன்னால் வந்தன. உடுக்க ஒரு துணிக்கு மேல் இல்லாத லட்சக்கணக்கான அகதி ஸ்திரீகளும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள். சில நாள் குடி தண்ணீருக்குப் பட்ட கஷ்டம் நினைவு வந்தது.

இன்னும் சில நாள் பெருமழை பெய்து கூடாரத்துக்குள் முழங்கால் ஆழம் தண்ணீர் நின்ற காட்சி நினைவுக்கு வந்தது. தனக்குக் கடுமையான சுரம் வந்ததும் அப்பாவும் சூரியாவும் தனக்குச் செய்த சிசுருஷைகளும் நினைவுக்கு வந்தன. ஒரே ஒரு நாள் அகதி முகாமில் ஓரிடத்தில் பெருங்கூட்டத்தைக் கண்டு தான் அங்கே சென்று பார்த்ததும் காந்தி மகாத்மா கூட்டத்தின் நடுவில் நின்று ஏதோ பேசியதும் நினைவுக்கு வந்தன. துரதிர்ஷ்டம், அந்த அவதார புருஷர் பேசிய பொன் மொழியைத் தன் காதுகள் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை! காந்திமகான் ஏறியிருந்த காருக்குப் பின்னால் சென்ற பெரும் ஜனக் கூட்டத்தோடு அவளும் சென்றாள். அகதி முகாமிலிருந்து அவர் புறப்பட்டபோது தானும் அவருடன் போய்விடப் பிரயத்தனம் செய்தாள் அந்த முயற்சி பலிக்கவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கடுங்குளிர் காலம் வந்தது. அந்தக் குளிரிலும் பனியிலும் கூடாரத்தில் வசித்தால் தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று அப்பாவும் சூரியாவும் எண்ணினார்கள். ஆகையால் ஒரு மச்சுக் கட்டிடத்துக்கு அழைத்துப்போக வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ரொம்பவும் சிரமப்பட்டு அகதி முகாம் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொண்டு குருக்ஷேத்திரத்திலிருந்து பிரயாணமானார்கள். பானிபத் என்னும் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே அதிர்ஷ்டவசமாக ஒரு பழைய காலத்து முஸ்லிம் பக்கிரியின் சமாதி மண்டபம் காலியாயிருந்தது. அந்த இடத்தை இவர்கள் பிடித்துக் கொண்டார்கள், அதில் வசித்து வந்தார்கள். அடிக்கடி சீதாவுக்குத் திடீர் என்று பிரக்ஞை தவறிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமயங்களில் அவளைக் கட்டை மாதிரி போட்டுவிட்டது. குளிர்ந்த தண்ணீரைக் கிண்டி மூக்கு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாய் நெற்றியில் விட்டுக் கொண்டிருந்தால் பிரக்ஞை திரும்ப வந்தது. அப்பா இன்றைக்கும் அம்மாதிரி செய்துதான் உணர்வு வரப் பண்ணியிருக்கிறார்.

சூரியா டில்லிக்குப் போயிருக்கிறான், ஆம்; டில்லியிலேயே ஜாகை கிடைக்குமா என்று பார்த்து வரப் போயிருக் கிறான். தாரிணியையும் வஸந்தியையும் இவரையும் பற்றிக்கூட ஏதாவது தகவல் கிடைக்குமா என்று விசாரித்து வருவதற்குப் போயிருக்கிறான். அது மட்டுமல்ல; காந்தி மகாத்மாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வருவதற்கும் போயிருக்கிறான். சீதாவின் மனதிற்குள் அடிக்கடி தான் இனி வெகுகாலம் பிழைத்திருப்பது துர்லபம் என்று தோன்றிக் கொண்டிருந்தது. பிழைத்திருக்க அவள் விரும்பவும் இல்லை. பேசும் சக்தியை வாய் இழந்து விட்டது. பேச முயன்றால், தாடைகள் வலிப்பதைத் தவிர வேறு பயன் ஒன்றுமில்லை. காதோ கேட்கும் சக்தியை அடியோடு இழந்துவிட்டது. ஒரு பயங்கரமான அலை ஓசை காதில் சதா சர்வகாலமும் கேட்டுக் கொண்டிருந்தது. எப்படியும் சீக்கிரம் தன் உயிர் போவது நிச்சயம். அதற்குள் தன் அருமைக் குழந்தை வஸந்தியை ஒரு தடவை பார்த்துக் கட்டி முத்தமிடவேண்டும். அப்புறம் வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் விழிப்பிலும் தூக்கத்திலும் நன்மையிலும் தீமையிலும் தன்னுடைய வழிபடு தெய்வமாகக் கொண்டு போற்றி வந்த காந்தி மகாத்மாவை இன்னொரு தடவை தரிசிக்க வேண்டும். அவருடைய புனிதமான திருமேனியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும். அவருடைய மனோரதம் இவ்வளவு தான். இதையெல்லாம் பற்றிச் சீதா மின்னல் மின்னும் வேகத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அப்பா துரைசாமி ஐயர் சூடான டீ போட்டுக்கொண்டு வந்தார். சீதா வாங்கிக் சாப்பிட்டாள்; பிறகு அப்பாவைத் தொட்டுக் கூப்பிட்டு, சமிக்ஞையினால், "சூரியா எங்கே? இன்னும் வரவில்லையா?" என்று விசாரித்தாள். அப்பாவும் சமிக்ஞையினால் "இன்னும் வரவில்லை!" என்று தெரிவித்தார்.சீதாவின் முகம் முன்னைக் காட்டிலும் அதிகமாக வாடியது. டில்லியில் இன்னும் கலகம் நின்றபாடில்லை என்று சொன்னார்களே, ஒருவேளை சூரியாவுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று எண்ணினாள். ஆமாம்; இந்த துரதிர்ஷ்டக்காரிக்கு உதவி செய்தவர்களோ, சிநேகமாயிருந்தவர்களோ, யார்தான் கஷ்ட நஷ்டங்களை அடையாமலிருந்தார்கள்? நான் இந்த உலகத்தை விட்டுத் தொலைந்து போனால் எத்தனையோ பேர் சுகமடைவார்கள். ஆனாலும் எனக்கு இன்னும் முடிவு காலம் வரவில்லையே? பஞ்சாப் பயங்கரத்தில் எத்தனையோ லட்சம் பேர் செத்துப் போனார்கள்; நான் மட்டும் சாகவில்லையே? எல்லா ஆபத்துக் களுக்கும் பிழைத்து உட்கார்ந்திருக்கிறேனே? சீதா தன் தலைமாட்டில் பத்திரமாய் வைத்திருந்த காந்தி மகாத்மாவின் படத்தை எடுத்துப் பார்த்தாள். "பாபுஜீ! என்னைத் தங்கள் சிஷ்ய கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளக்கூடாதா? என்னாலான பணிகள் செய்து கொண்டிருக்க மாட்டேனா?" என்று இரங்கி வேண்டினாள்.